திருக் கொட்டையூர்




திருக் கொட்டையூர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது.

     கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

இறைவர்                   : கோடீசுவரர்.

இறைவியார்               : கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.

தல மரம்                    : கொட்டை (ஆமணக்கு)ச் செடி.

தீர்த்தம்                     : அமுததீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - கருமணிபோல் கண்டத்து


         ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச்செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீசுவரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீசுவரர் எனப்பட்டார்.

         கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இறைவன் கோடீசுவரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது.

         இத் தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவம் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமல் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.

         திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது. இக் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி தருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக்கிணறு என்கிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக்கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது. தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் பாடியுள்ளார். உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.

         அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

         காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீசுவரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "அயல் ஆம்பல் மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் கொட்டையூர் உள் கிளரும் கோமளமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 215
நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய், பழையாறை,
பல்ஊர்வெண் தலைக்கரத்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல்ஊர்வண் தமிழ்பாடி, வலஞ்சுழியைத் தொழுதுஏத்தி
அல்ஊர்வெண் பிறைஅணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.

         பொழிப்புரை : திருநல்லூர் இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.

         குறிப்புரை : பழையாறையில் இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. பல இடங்கள் என்றது,

1.    திருவலஞ்சுழி
(அ) `அலையார்` (தி.6 ப.72) - திருத்தாண்டகம்.
(ஆ) `ஓதமார்` (தி.5 ப.66) – திருக்குறுந்தொகை.

2.    திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் -
`கருமணிபோல்` (தி.6 ப.73) - திருத்தாண்டகம்.

3.    திருக்குட மூக்கு - `பூவணத்தவன்` (தி.5 ப.22) - திருக்                   குறுந்தொகை.

4.    குடந்தைக் கீழ்க்கோட்டம் - `சொல்மலிந்த`(தி.6 ப.75) -                                   திருத்தாண்டகம்.


6.073 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும்
                  திருத்தாண்டகம்           
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்,
         கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்,
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்,
         பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்,
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதேவன் கண்டாய், வரதன் கண்டாய்,
குருமணி போல் அழகுஅமரும் கொட்டையூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவ பெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான்.

  
பாடல் எண் : 2
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
         கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
         அண்ட கபாலத்துஅப் பாலான் கண்டாய்
மலைப்பண்டம் கொண்டு வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கம் சோலைசூழ் கொட்டையூரில்
         கோடீச்ச ரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.


பாடல் எண் : 3
செந்தா மரைப்போது அணிந்தான் கண்டாய்,
         சிவன்கண்டாய், தேவர் பெருமான் கண்டாய்,
பந்துஆடு மெல்விரலாள் பாகன் கண்டாய்,
         பாலோடு நெய்தயிர்தேன் ஆடி கண்டாய்,
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்,
கொந்துஆர் பொழில்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும் , சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும் , தேவர்க்குத் தலைவனும் , பந்தாடும் மெல்லியவிரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும் , பால் , தயிர் , நெய் , தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும் , மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான் .


பாடல் எண் : 4
பொடிஆடு மேனிப் புனிதன் கண்டாய்,
         புள்பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்,
இடிஆர் கடுமுழக்கு ஏறுஊர்ந்தான் கண்டாய்,
         எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்,
மடல்ஆர் திரைபுரளும் காவிரி வாய்
         வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்,
கொடிஆடு நெடுமாடக் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும் , கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும் , இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும் , எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும் , பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான் .

  
பாடல் எண் : 5
அக்குஅரவம் அரைக்குஅசைத்த அம்மான் கண்டாய்,
         அருமறைகள் ஆறுஅங்கம் ஆனான் கண்டாய்,
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்,
         சதாசிவன்காண், சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்,
மைக்கொள்மயில் தழைகொண்டு வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியான் கண்டாய், மழுவன் கண்டாய்,
கொக்குஅமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சங்கு மணியையும் , பாம்பையும் இடையில் கட்டியவனாய் , உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய் , தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய் , சதாசிவனாய் , சலந்தரன் உடலைப் பிளந்தவனாய் , நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான் .


பாடல் எண் : 6
சண்டனைநல் அண்டர்தொழச் செய்தான் கண்டாய்,
         சதாசிவன் கண்டாய்,சங் கரன்தான் கண்டாய்,
தொண்டர்பலர் தொழுதுஏத்தும் கழலான் கண்டாய்,
         சுடர்ஒளியாய்த் தொடர்வுஅரிதாய் நின்றான் கண்டாய்,
மண்டுபுனல் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்,
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை : கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.


பாடல் எண் : 7
அணவுஅரியான் கண்டாய், அமலன் கண்டாய்,
         அவிநாசி கண்டாய், அண் டத்தான் கண்டாய்,
பணம்அணிமா நாகம் உடையான் கண்டாய்,
         பண்டரங்கன் கண்டாய், பகவன் கண்டாய்,
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்,
குணம்உடைநல் அடியார்வாழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டை யூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , எட்டுதற்கரியவனாய் , குற்றமற்றவனாய் , அழிவில்லாதவனாய் , மேலுலகத்து உள்ளவனாய் , படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய் , பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய் , ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய் , மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான் .


பாடல் எண் : 8
விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்,
         வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்,
அரையதனில் புள்ளிஅதள் உடையான் கண்டாய்,
         அழல்ஆடி கண்டாய், அழகன் கண்டாய்,
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         வஞ்சமனத் தவர்க்குஅரிய மைந்தன் கண்டாய்,
குரவுஅமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவ பெருமான் . மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும் , வேதங்களால் போற்றப்படும் தலைவனும் , புள்ளிகளை உடைய புலித் தோலை இடையில் உடையாக உடுத்தியவனும் , அழலாடுபவனும் , அழகனும் , தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான் .


பாடல் எண் : 9
தளங்கிளருந் தாமரை ஆதனத்தான் கண்டாய்,
         தசரதன்தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்,
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்,
         எட்டுஎட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்,
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாமுனிகள் தொழுதுஎழு பொற்கழலான் கண்டாய்,
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும் தன் பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான்.


பாடல் எண் : 10
விண்டார் புரமூன்று எரித்தான் கண்டாய்,
         விலங்கலில்வல் அரக்கன்உடல் அடர்த்தான் கண்டாய்,
தண்தா மரையானும் மாலும் தேடத்
         தழல்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்,
வண்டுஆர்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதேவன் கண்டாய், மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :ஓதிய நான்மறை ஆறங்க , வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான்.
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...