திருப் பனந்தாள்





திருப் பனந்தாள்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

இறைவர்         : செஞ்சடையப்பர், தாலவனேசுவரர், ஜடாதரர்,அருணஜடேசுவரர்.

இறைவியார்      : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேசுவரி.

தல மரம்          : பனை.

தீர்த்தம்           : பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம் முதலியன.


தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - கண்பொலி நெற்றியினான்.


          பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீசுவரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

          தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்திருத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த சுவாமியின் திருமுடியைப் பின்னால் குங்குலிய நாயனார் மாற்றினார்.

          தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்து உள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

          இத்தலத்திற்கு தாலவனம் (தாலம் - பனை) என்றும் பெயருண்டு. பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன.

          மூலவர் சுயம்பு மூர்த்தி. சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று தூபிகளுடன் விளங்குகிறது.

          பதினாறுகால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள்ளன.

          இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.

          திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

          இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

          கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தரும மனந்தான் மலரை மருவுவிப்போர் வாழும் பனந்தாளில் பால் உகந்த பாகே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 248
வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலில் பணிந்து, அவர் கருணை போற்றுவார்,
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.

         பொழிப்புரை : அந்தணர் வாழ்தற்கு இடமான சேய்ஞலூரில் எழுந்தருளியிருக்கும், இயல்பாகவே வினையின் நீங்கியவராய இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் அருள் திறத்தைப் போற்றுபவராய பிள்ளையார், தம் தந்தையின் காலை வெட்டிய சண்டீசப் பிள்ளையார், கொடுஞ்செயலான அதற்குப் பயனாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார்.


பெ. பு. பாடல் எண் : 249
இன்னிசை வண்தமிழ் பாடி ஏத்தியே,
நல்நெடும் பதியுளோர் நயக்க வைகிய,
பின்னர்வெண் பிறைஅணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.

         பொழிப்புரை : பிள்ளையார், இனிய இசையமைப்புடைய இவ் வண்டமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றினார்; மிகுந்த பழைமை யுடைய அத்திருப்பதியில் உள்ளவர்கள் விரும்பியதால் அங்குத் தங்கினார்; பின்பு வெண்மையான பிறையைச் சூடிய செஞ்சடையார் எழுந்தருளியிருக்கும் திருப்பனந்தாளுக்குச் சென்று வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 250
ஆங்குஅணி சொல்மலர் மாலை சாத்தி,அப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்,
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந்து உற்றனர்.

         பொழிப்புரை : அத்திருப்பதியில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள `திருப்பந்தணை நல்லூரைப்\' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான `திரு ஓமாம்புலியூரினில்' வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : திருப்பனந்தாளில் இறைவர் திருமுன்பு அருளியது, `கண்பொலி நெற்றியினான்' (தி.3 ப.62) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். தாடகையீச்சரம் என்றது அப்பெயருடைய பெருமாட்டி வழிபட்டமையால் ஏற்பட்ட கோயில் பெயர் ஆகும்.

         பந்தணைநல்லூரில் பாடியது, `இடரினார் கூற்றை\'(தி.3 ப.121) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


3.    062    திருப்பனந்தாள்               பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

கண்பொலி நெற்றியினான்,
         திகழ் கையில்ஒர் வெண்மழுவான்,
பெண்புணர் கூறுஉடையான்,
         மிகு பீடுஉடை மால்விடையான்,
விண்பொலி மாமதிசேர்
         தரு செஞ்சடை வேதியன்ஊர்
தண்பொழில் சூழ்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை :சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன் . தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன் . மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன் . விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய , வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .


பாடல் எண் : 2
விரித்தவன் நான்மறையை,
         மிக்க விண்ணவர் வந்துஇறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள்,
         இயல் ஏழ்உல கில்உயிரும்
பிரித்தவன், செஞ்சடைமேல்
         நிறை பேர்ஒலிவெள்ளம் தன்னைத்
தரித்தவன், ஊர்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை :சிவபெருமான் நான்கு வேதங்களின் பொருளை விரித்து ஓதியவன் . தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன் . ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன் . சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .


பாடல் எண் : 3
உடுத்தவன் மான்உரிதோல்,
         கழல் உள்கவல் லார்வினைகள்
கெடுத்துஅருள் செய்யவல்லான்,
         கிளர் கீதம்ஒர் நான்மறையான்,
மடுத்தவன் நஞ்சுஅமுதா,
         மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன்ஊர் பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை :சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன் . தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன் . இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன் . பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன் . தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் கோயிலாகும் .


பாடல் எண் : 4
சூழ்தரு வல்வினையும்
         உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல்,
         மிக ஏத்துமின், பாய்புனலும்
போழ்இள வெண்மதியும்
         அனல் பொங்குஅரவும் புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை : பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும் , அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும் , பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும் , நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலைப் மிகவும் போற்றி வழிபடுவீர்களாக !


பாடல் எண் : 5
விடம்படு கண்டத்தினான்,
         இருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான்,
         அவன் எம்இறை சேரும்இடம்
படம்புரி நாகமொடு
         திரை பல்மணி யும்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை :சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன் . வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன் . எங்கள் தலைவனான சிவ பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு , அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

  
பாடல் எண் : 6
விடைஉயர் வெல்கொடியான்,
         அடி விண்ணொடு மண்ணும்எல்லாம்
புடைபட ஆடவல்லான்,
         மிகு பூதம்ஆர் பல்படையான்,
தொடைநவில் கொன்றையொடு
         வன்னி துன்எருக்கும் அணிந்த
சடையவன் ஊர்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை :சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன் . விண்ணுலகமும் , மண்ணுலகமும் , மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன் . பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன். கொன்றைமாலையோடு, வன்னி , எருக்கம் இவை அணிந்த சடையுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .
  

பாடல் எண் : 7
மலையவன் முன்பயந்த
         மட மாதையொர் கூறுஉடையான்,
சிலைமலி வெங்கணையால்
         புரம் மூன்றுஅவை செற்றுஉகந்தான்,
அலைமலி தண்புனலும்
         மதி ஆடுஅர வும்அணிந்த
தலையவன் ஊர்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை : சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன். மேரு மலையை வில்லாக்கி , அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன் . அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும் , சந்திரனையும் , பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

  
பாடல் எண் : 8
செற்ற அரக் கன்வலியைத்
         திரு மெல்விர லால்அடர்த்து
முற்றும்வெண் நீறுஅணிந்த
         திரு மேனியன், மும்மையினான்,
புற்றுஅர வம்புலியின்
         உரி தோலொடு கோவணமும்
தற்றவன் ஊர்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை : இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன். முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன். உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளை உடையவன். புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .


பாடல் எண் : 9
வில்மலை நாண்அரவம்
         மிகு வெங்கனல் அம்புஅதனால்
புன்மைசெய் தானவர் தம்
         புரம் பொன்றுவித் தான்புனிதன்,
நன்மலர் மேல்அயனும்
         நண்ணு நாரண னும் அறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை : சிவபெருமான் மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு , தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன் . நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அறியாத தன்மையன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும் . அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான் .


பாடல் எண் : 10
ஆதர் சமணரொடும்
         அடை ஐந்துகில் போர்த்து உழலும்
நீதர் உரைக்கும் மொழி
         அவை கொள்ளன்மின் நின்மலன்ஊர்
போதுஅவிழ் பொய்கைதனுள்
         திகழ் புள்இரி யப்பொழில்வாய்த்
தாதுஅவி ழும்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரமே.

         பொழிப்புரை : பயனிலிகளாகிய சமணர்களும் , அழகிய துணிகளைப் போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .


பாடல் எண் : 11
தண்வயல் சூழ்பனந்தாள்
         திருத் தாடகை ஈச்சரத்துக்
கண்அய லேபிறையான்
         அவன் தன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால்
         மிகு ஞானசம் பந்தன்நல்ல
பண்இயல் பாடல்வல்லார்
         அவர் தம்வினை பற்றுஅறுமே.

         பொழிப்புரை :குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் , வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும்.
                                             திருச்சிற்றம்பலம்





No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...