அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிந்துர கூரம (பழநி)
முருகா!
மாதர் ஆசையை விலக்கி, திருவடியைத் தந்து
அருள்
தந்தன
தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர
கூரம ருப்புச் செஞ்சரி
செங்கைகு லாவந டித்துத் தென்புற
செண்பக மாலைமு டித்துப் பண்புள ......
தெருவூடே
சிந்துகள்
பாடிமு ழக்கிச் செங்கய
லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ......
விலைமாதர்
வந்தவ
ராரென ழைத்துக் கொங்கையை
யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ......
தனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ......
மருள்வாயே
இந்திர
நீலவ னத்திற் செம்புவி
யண்டக டாகம ளித்திட் டண்டர்க
ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு
...... ளொருபேடி
இன்கன
தேரைந டத்திச் செங்குரு
மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு
...... மருகோனே
சந்திர
சூரியர் திக்கெட் டும்புக
ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா
சம்ப்ரம
மானகு றத்திக் கின்புறு
கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சிந்துர
கூர மருப்புச் செஞ்சரி
செங்கை குலாவ நடித்துத், தென்பு உற
செண்பக மாலை முடித்து, பண்புஉள ...... தெருஊடே
சிந்துகள்
பாடி முழக்கி, செங்கயல்
அம்புகள் போல விழித்து, சிங்கியில்
செம்பவள ஆடை துலக்கி, பொன் பறி
...... விலைமாதர்,
வந்தவர்
ஆர் என அழைத்து, கொங்கையை
அன்புற மூடி, நெகிழ்த்தி, கண்பட
மஞ்சள் நிர் ஆடி மினுக்கி, பஞ்சணை ...... தனில்ஏறி
மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட,
முன்தலை வாயில் அடைத்துச் சிங்கிகொள்,
மங்கையர் ஆசை விலக்கிப் பொன்பதம்....அருள்வாயே.
இந்திர
நீல வனத்திற் செம்புவி
அண்ட கடாகம் அளித்திட்டு, அண்டர்கள்
எண்படு சூரை அழித்துக் கொண்டு அருள்
......ஒருபேடி-
யின்
கன தேரை நடத்தி, செங்குரு
மண்டல நாடும் அளித்து, பஞ்சவர்
இன்பு உறு தோழ்மை உடைக் கத்தன் திரு
...... மருகோனே!
சந்திர
சூரியர் திக்கு எட்டும் புகழ்
அந்தம்இல் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கரனார் செவி புக்கப் பண்பு அருள்
...... குருநாதா!
சம்ப்ரமம்
ஆன குறத்திக்கு இன்புறு
கொங்கையின் மேவு சமர்த்த! சுந்தர
தண்தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய
...... பெருமாளே.
பதவுரை
இந்திர நீல வனத்தில் --- இந்திரனது
காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (எரியூட்டியும்),
செம்புவி அண்ட கடாகம் அளித்திட்டு ---
செவ்விய பூதல முதல் அண்ட கோளத்தின் மேலோடு வரையும்,
அண்டர்கள் எண் படு --- தேவர்கள் எண்ணத் தக்கவாறு
இருந்த,
சூரை அழித்து --- துன்பத்தைச் செய்த
அரக்கர்களை அழித்து,
கொண்டு அருள் --- அமரர் நாட்டைத் திருப்பித்
தந்த,
ஒரு பேடி --- ஒப்பற்ற பேடியாகிய
அர்ச்சுனனுடைய,
இன்கன தேரை நடத்தி --- இனிய தேரைச்
சாரதியாகச் செலுத்தி,
செம் குருமண்டல நாடும் அளித்து --- செம்மையான
குரு மண்டல நாட்டினைப் பாண்டவர்க்குத் தந்து,
பஞ்சவர் இன்புறு தோழமை உடை --- அப் பஞ்ச
பாண்டவர்களுடன் நட்பு பூண்டிருந்த,
கத்தன் --- தலைவரான திருமாலின்,
திருமருகரே --- சிறந்த மருகரே!
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் ---
சந்திரன் சூரியன் திசைகள் எட்டும் புகழும்,
அந்தம் இல் --- முடிவு இல்லாத,
வாழ்வு அது பெற்று தங்கிய --- வாழ்வினைப்
பெற்று விளங்கும்,
சங்கரனார் செவி புக்க --- சிவமூர்த்தியின்
திருச்செவியில் புகும்படி,
பண்பு அருள் குகநாதா --- உபதேசத்தை அருளிய
குருநாதரே!
சம்ப்ரமம் ஆன குறத்திக்கு --- சிறப்பு
மிக்க வள்ளி நாயகியின்,
இன்பு உறு கொங்கையில் மேவு --- இன்பம்
நிறைந்த தனபாரங்களை விரும்பியணைந்த,
சமர்த்த --- சமர்த்தரே!
சுந்தர --- அழகரே!
தண் தமிழ் சேர் --- குளிர்ந்த தமிழ்மொழி
வழங்கும்,
பழனிக்குள் தங்கிய --- பழநியம்பதியின்
உறைகின்ற,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
சிந்துர கூர மருப்பு --- யானையின் கூரிய
தந்தம் போன்ற தனங்களும்,
செம் சரி --- செம்மையாகச் சரிந்துள்ள வளைகள்
அணிந்துள்ள,
செம் கை குலாவ நடித்து --- சிவந்த கரங்களும்
குலுங்குமாறு நடித்து,
தென்பு உற செண்பக மாலை முடித்து ---
ஊக்கத்துடன் செண்பகப் பூமாலை சூடி,
பண்புஉள தெருவூடே --- அழகிய தெருவின் நடுவில்,
சிந்துகள் பாடி முழக்கி --- சிந்து என்ற
பாடலைப்பாடி முழக்கஞ் செய்து,
செம் கயல் அம்புகள் போல் விழித்து ---
செவ்விய கயல் மீனும் அம்பு போல் கண்களை விழித்து,
சிங்கியில் செம்பவள ஆடை துவக்கி ---
சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை விளக்கமுற உடுத்து,
பொன் பறி விலைமாதர் --- பொருள் பறிக்கின்ற
விலைமகளிர்,
வந்தவர் ஆர் என அழைத்து --- வந்தவர்கள் ஆர்
என்று விசாரித்து அழைத்து,
கொங்கையை அன்பு உற மூடி --- தனங்களை அன்பு
அதிகப்படுமாறு துகிலால் மூடியும்,
நெகிழ்த்தி --- தளர்த்தியும்,
கண் பட --- கண்களில் தெரியுமாறு,
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி --- மஞ்சள் நீரில்
முழுகி அழகு செய்தும்,
பஞ்ச அணைதனில் ஏறி --- பஞ்சு மெத்தையில் ஏறி,
மந்திரமோகம் எழுப்பி --- மந்திர சக்தி போல்
விரைவில் ஆசையை உண்டாக்கி,
கெஞ்சிட ---- ஆடவர் கெஞ்சும்படி,
முன் தலைவாயில் அடைத்து --- முன்புறத்தில்
உள்ள வாயில் கதவை மூடியும்,
சிங்கி கொள் --- நாணம் இன்மையைக் கொண்ட,
மங்கையர் ஆசை விலக்கி --- மாதர் மீதுள்ள
ஆசையை அகற்றி,
பொன் பதம் அருள்வாயே --- அழகிய திருவடியை
அருள் புரிவீர்.
பொழிப்புரை
இந்திரனுக்குச் சொந்தமான இருண்ட காண்டவ
வனத்தை எரித்தும், செம்மையான பூலோக
முதல் அண்ட கோளம் வரை இருந்த அவுணர்களை அழித்தும், தேவர்களது நினைவில் இருந்த துன்பத்தை
துடைத்தும் உதவிய ஒப்பற்ற பேடி உருவங்கொண்ட அர்ச்சுனனுடைய இனிய தேரைச் செலுத்தி, செவ்விய குருநாட்டினைக் காப்பாற்றிப்
பஞ்சபாண்டவர்க்கு நட்புப் பூண்ட தலைவராம் திருமாலின் திருமருகரே!
சந்திரன் சூரியன் எண் திசைகள் எல்லாம்
புகழுமாறு, இறுதியில்லாத
பெருவாழ்வில் விளங்கும் சிவபெருமானுடைய திருச்செவியில் உபதேசித்த குருநாதரே!
சிறந்த வள்ளி பிராட்டியின் இன்ப மிகுந்த
தனபாரங்களைத் தழுவும் சமர்த்தரே!
அழகரே!
குளிர்ந்த தமிழ்மொழி வழங்கும் பழநி மலைமீது
எழுந்தருளி உள்ள பெருமிதம் உடையவரே!
யானையின் கூர்மையான கொம்பு போன்ற
கொங்கைகளுக்கும், செம்மையுடன் சரிகின்ற
வளைகள் தரித்த கரங்களும் குலுங்க நடனம் புரிந்தும், ஊக்கமுடன் செண்பக மாலை தரித்தும், அழகிய தெருவின் நடுவில், சிந்துகள் பாடி முழக்கம் புரிந்தும், செவ்விய மீன் போலவும், அம்பு போலவும் விளங்கும் கண்களை
விழித்தும், சிங்கத்தின் இடை
போன்ற சிறுத்த இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்தும், பொன்னைக் கவர்கின்ற விலைமாதர்கள், தம்பால் வந்தவர்கள் யார் என்று
கேட்டறிந்து, அழைத்து, தனங்களை அன்பு மிகுமாறு மூடியும்
கண்காணுமாறு தளர்த்தியும், மஞ்சள் நீராடியும், அழகு செய்தும், பஞ்சணை மீதிருந்து மந்திர சக்தி போன்ற
மோகத்தை எழுப்பியும், கெஞ்சிடுமாறு முன்
தலைவாயிலை அடைத்தும், சாகசம் புரியும் நாணமில்லாத
பொது மாதருடைய ஆசையை அகற்றித் தேவரீருடைய அழகிய திருவடியைத் தந்தருள்வீர்.
விரிவுரை
இத்திருப்புகழில்
முதல் நான்கு அடிகளில் காமுகர்களைப் பொதுமகளிர் எந்த வகையில் மயங்கச் செய்வார்கள்
என்றும், அவர்கள் புரியும்
ஆடல் பாடல்களைப் பற்றியும் சுவாமிகள் விளக்கிக் கூறுகின்றார்கள். அம் மாயவலைப்
படாது, முருகன் அருளைப் பெற
வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்கள்.
இந்திர
நீலவனத்தில்
---
காண்டவ
வனம் என்பது இந்திரனுக்குச் சொந்தமானது. வளமையான வனம்; பல அரக்கர்களும் அரவினங்களும் வாழ்கின்ற
வனம்.
அக்கினி
தேவன், சுவேத மன்னன்
நூறாண்டு புரிந்த வேள்வியில் இடையறாது நெய் பருகியதால் மந்தத்தை அடைந்தான்.
அவன்
தன் மந்த நோய் தீரும் பொருட்டு காண்டவ வனத்தைப் பலகாலும் எரிக்க முயன்றான்.
இந்திரன் மேகங்களை ஏவி மழை பொழிந்து தடுத்தான்.
அக்கினிதேவன்
ஓர் அந்தணனாக அர்ச்சுனன்பால் வந்து உணவு கேட்டான். அர்ச்சுனன் தர இசைந்தான், காண்டவ தகனம் பற்றிக் கூறி, காண்டீபம் என்ற பிரம தனுசையும், அழியாததும் வெண்புரவிகள் பூட்டியதும்
ஆகிய தேரையும் தந்தான். கண்ணபிரான் தேர்செலுத்த ஏழு மேகங்களையும் இந்திராதி
இமையவர்களையும் வென்று. அரக்கர்களைக் கொன்று, காண்டவ வனத்தை அக்கினி தேவனுக்கு
உணவாகத் தந்தான்.
செம்புவி
அண்ட கடாகம் அளித்திட்டு ---
அசுரர்கள்
மண்முதல் விண்வரை இருந்து இமையவரை இடுக்கண் புரிந்தார்கள்.
காலகேய
நிவாத கவசர்கள் என்ற அவ்வசுரர்களை அர்ச்சுனன் பாசுபத அத்திரத்தால் வதைத்து
தேவர்கட்கு உதவி புரிந்தான்.
அண்டர்கள்
எண்படு சூரை யழித்துக் கொண்டருள் ---
தேவர்கள்
எண்ணி எண்ணி வருந்திய வருத்தத்தை யகற்றி, இந்திர
நாட்டை இந்திரனுக்கு வழங்கியருளினான் விஜயன்.
ஒரு
பேடி
---
இந்திரன்
நகர் சென்று, இந்திரமுடி
சூடிக்கொண்ட அர்ச்சுனனிடம் ஊர்வசி காதல்கொண்டு, நடு இரவில் அவன்பால் வந்தாள்.
அர்ச்சுனன் அவளை அன்னையென்று கருதி அடிபணிந்தான்.
ஊர்வசி:
”அர்ச்சுனரே! உம்மைக் கரும்பாகக் கருதி,
காதல்
கொண்டு வந்த என்னைத் துரும்பாகக் கருதி உம் நெஞ்சம் இரும்பாக இறுகி, என் காலில் வீழ்ந்து வணங்கினீரே! என்
ஆசையைக் கடலில் கரைத்த பெருங்காயம் ஆக்கினீரே. இரு தருமமா?” என்று கேட்டாள்.
அர்ச்சுனன், “அம்மா! உன்னைப் பொதுமகள் என்றும், என் சபை நடன மாது என்றும், என்னை விரும்பி வந்தாய் என்றும், உன்னைத் தழுவினால் பிழையில்லை
என்பதையும் நான் நன்கு அறிவேன். மற்றவர்க்கு இது பொருந்தும். சிவபெருமானுடைய
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி நினைக்கும் சிவனடியானாகிய நான் உன்னை விரும்ப மாட்டேன்.
ஆதலின் நீ எனக்குத் தாய்” என்று கூறினான்.
நடுநிசியில்
தன்னைக் காதலித்து வந்த ஊர்வசி என்ற தேவமாதைக் கண்டு கலங்காத சித்தத்துடன்
நின்றான். பேராண்மை படைத்த அவன்,
ஆசையை
வென்ற பேராண்மையும் படைத்தான்.
அவள்
சீற்றங்கொண்டு “நீ பேடியாகுக” என்று சபித்தாள். அர்ச்சுனன் அக்கணமே பேடியானான்.
இந்திரன் கட்டளையால் அச்சாபம் நீங்கப்பெற்று, வேண்டு போது பேடி உருவம் ஓராண்டு
அவன்பால் எய்தும் என்ற வரத்தையும் பெற்றான்.
பன்னிரு
வருடம் வனவாசம் முடித்தபின், விராட நகரில் ஓராண்டு
அஞ்ஞாத வாசம் புரிந்த அர்ச்சுனப் பெருமான், பேடி உருவங் கொண்டு வாழ்ந்தான்.
கன
தேரை நடத்திச் செங்குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு தோழ்மை
உடைக்கத்தன்
---
திருமால்
இராமாவதாரத்தில் சூரிய குமாரனாகிய சுக்ரீவனுக்கு உதவி செய்து, இந்திர குமாரனாகிய வாலியை வதைத்தார்.
இதற்கு
நேர்மாறாக, கிருஷ்ணாவதாரத்தில், இந்திர குமாரனாகிய அர்ச்சுனனுக்கு உதவி
செய்து, சூரிய குமாரனான
கர்ணனைக் கொன்றருளினார்.
பார்த்தனுக்குத்
தேர்ப்பாகனாக நின்று உதவி செய்தார். அதனால் பார்த்தசாரதி என்று பேர் பெற்றார்.
குருநாட்டினைக்
காத்தருளினார். பரம பக்தர்களாகிய பாண்டவர்கள் ஐவர்கட்கும் பரிபூரண கருணை
புரிந்தார்.
அந்தமில்
வாழ்வது பெற்று ---
சிவபெருமான்
ஒருவரே இறப்பு பிறப்பில்லாதவர்;
முடிவில்லாதவர்.
“நூறு கோடி பிரமர்கள்
நொந்தினார்
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. --- அப்பர்.
அப்
பரமனே சர்வ சங்கார காரணன். எல்லாம் அவனிடத்தில் ஒடுங்க, அவன் ஒருவனே ஏகனாகி நிற்பன். அதனால்
சர்வசங்காரமான மகா மயானத்தில் அவன் இருக்கிறான் என்று சாத்திரங்கள் முழங்குகின்றன.
தண்
தமிழ்
---
தமிழ்
இனிய மொழி. குளிர்ச்சியும் நீர்மையும் படைத்த மொழி.
“இனிமையும் நீர்மையும்
தமிழ் எனல் ஆகும்”
என்று
நிகண்டு கூறுகின்றது. தமிழ் பயிலும் உள்ளம் குளிர்ந்திருக்கும். அதனால்
"தமிழ் கூறு நல்லுலகம்" என்று பனம்பாரனார் தொல்காப்பியம் பாயிரத்தில்
கூறுகின்றார்.
கருத்துரை
திருமால்
மருகரே! பழநிக் குமாரா! மாதராசையற உன் ஞானக் கழல் தந்தருள்!
No comments:
Post a Comment