திரு மங்கலக்குடி





திரு மங்கலக்குடி

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் சென்று இவ்வூரை அடையலாம்.


இறைவர்                  : பிராணவரதேசுவரர்.

இறைவியார்               : மங்கள நாயகி.

தல மரம்                   : வெள்ளெருக்கு

தீர்த்தம்                    : காவிரி.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - சீரி னார்மணி யும்மகில்.
                                               2. அப்பர்   - தங்க லப்பிய தக்கன்.

          முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளாள் அவன் உயிர் பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக் காப்பு தந்தருளி ஆட்கொண்டாள். அது முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக அம்பிகை அருளினாள் என்பது வரலாறு.

          இத்திருத்தலம் மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று புகழப்படும் சிறப்புடையது.

          தல வரலாறு தொடர்பால் - திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். மேலும், இவ்வரலாற்றையொட்டி "பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை" என்னும் மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகிறது.

          நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்; அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேசுவரரே ஆவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

          உள் சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

          மூலவர் - சிவலிங்கத் திருமேனி; நீண்டுயர்ந்த பாணம்.

          உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெறுவர் என்பது வரலாறு. இன்றும் அவ்வாறு பலர் குணமடைந்து வருகிறார்கள்.

     வள்ளல் பெருமானு தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓடிக் கருமங்கலக் குடியில் காண்டும் என ஓதும் திருமங்கலக் குடியில் தேனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 293
கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
         கண்ணுற்று இறைஞ்சிமுன் போந்து,
மஞ்சுஅணை மாமதில் சூழும்
         மாந்துறை வந்து வணங்கி,
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி,
         அங்குஅகன்று அன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
         திருமங் கலக்குடி சேர்ந்தார்.

         பொழிப்புரை : திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த `திருமாந்துறை\' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற `திருமங்கலக்குடியை\' அடைந்தார்.

         குறிப்புரை : திருக்கஞ்சனூர், திருமாந்துறை ஆகிய பதிகளுக்குரிய திருப்பதிகங்கள் கிடைத்தில. திருமங்கலக்குடியில் அருளிய பதிகம் `சீரினார் மணியும்' (தி.2 ப.10) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


2.010 திருமங்கலக்குடி                    பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சீரின் ஆர்மணி யும்அகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டிஅர்ச் சிக்க இருந்த புராணனே.

         பொழிப்புரை :மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டுவரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்டகையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான்.


பாடல் எண் : 2
பணங்கொள் ஆடுஅரவு அல்கல் நல் லார்பயின்று ஏத்தவே
மணங்கொள் மாமயில் ஆலும் பொழில்மங் கலக்குடி
இணங்குஇ லாமறை யோர்இமை யோர்தொழுது ஏத்திட
அணங்கி னோடுஇருந் தான் அடியேசரண் ஆகுமே.

         பொழிப்புரை :ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.


பாடல் எண் : 3
கருங்கை யானையின் ஈர்உரி போர்த்திடு கள்வனார்,
மருங்கு எலாம்மணம் ஆர்பொழில் சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னான்அடி அன்பொடு
விரும்பி ஏத்தவல் லார்வினை ஆயின வீடுமே.

         பொழிப்புரை :கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 4
பறையி னோடுஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையி னோடுஇயல் மல்கிடு வார்மங் கலக்குடிக்
குறைவு இலாநிறைவே, குணம் இல்குணமே என்று
முறையி னால்வணங் கும்அவர் முன்னெறி காண்பரே.

         பொழிப்புரை :பறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள்.


பாடல் எண் : 5
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர்முடி ஆடிஓர்
மான் நில்அம்கையி னான், மணம் ஆர்மங் கலக்குடி,
ஊன்இல் வெண்தலைக் கையுடை யான்உயர் பாதமே
ஞான மாகநின்று ஏத்தவல் லார்வினை நாசமே.

         பொழிப்புரை :பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.


பாடல் எண் : 6
தேனும் ஆய்அமுது ஆகிநின் றான், தெளி சிந்தையுள்
வானும் ஆய்,மதி சூடவல் லான், மங் கலக்குடி
கோனை நாள்தொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய்அறும் உய்யும் வகைஅதே.

         பொழிப்புரை :தேனும் அமுதமும் போல இனியவனும், தெளிந்த சிந்தையில் ஞானவெளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூட வல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவேயாகும்.


பாடல் எண் : 7
வேள்ப டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள் அரக்கர் புரம்எரித் தான்மங் கலக்குடி
ஆளும் ஆதிப் பிரான்அடி கள்அடைந்து ஏத்தவே
கோளும் நாள்அவை போய்அறும் குற்றம்இல் லார்களே.

         பொழிப்புரை :மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர்.


பாடல் எண் : 8
பொலியு மால்வரை புக்குஎடுத் தான்புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்,மங் கலக்குடிப்
புலியின் ஆடையி னான்அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

         பொழிப்புரை :விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப்பெறுவர். சிவலோகம் சேரவல்லவர் ஆவர். காண்மின்.


பாடல் எண் : 9
ஞால முன்படைத் தான்நளிர் மாமலர் மேல்அயன்
மாலும் காண ஒணாஎரி யான், மங் கலக்குடி
ஏல வார்குழ லாள்ஆரு பாகம் இடங்கொடு
கோலம் ஆகிநின் றான்குணம் கூறும் குணம்அதே.

         பொழிப்புரை :உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உருவானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகிய சிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும்.


பாடல் எண் : 10
மெய்யின் மாசினர், மேனி விரிதுவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும், புண்ணியர் சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனல் கங்கை செறிசடை
ஐயன் சேவடி ஏத்தவல் லார்க்குஅழகு ஆகுமே.

         பொழிப்புரை :அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவசமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.


பாடல் எண் : 11
மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய
எந்தை யைஎழில் ஆர்பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்துஅடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி ஏத்தவல் லார்இமை யோர்முதல் ஆவரே.

         பொழிப்புரை :தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திரு மங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.

                                             திருச்சிற்றம்பலம்



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சித்
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.




திருநாவுக்கரசர் திருப்பதிகம்

5. 073    திருமங்கலக்குடி        திருக்குறுந்தொகை
                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித்து ஆர்அருள் செய்தவன்
கொங்கு அலர்க்குழல் கொம்புஅனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.

         பொழிப்புரை : மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன் , தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன் .


பாடல் எண் : 2
காவி ரியின் வடகரைத் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தே அரியும்பி ரமனும் தேடஒணொத்
தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே.

         பொழிப்புரை : காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் , திருமாலாகிய தேவும் , பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன் .

  
பாடல் எண் : 3
மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்கு அகத்திய னும்அர்ச்சித் தார்அன்றே.

         பொழிப்புரை : மங்கலக்குடி இறைவனை மாகாளியும் , சூரியனும் , விண்ணும் மண்ணும் நிகராய சங்கு , சக்கரதாரியாகிய திருமாலும் , பிரமனும் , அகத்தியனும் அருச்சித்தார்கள் .


பாடல் எண் : 4
மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்சம் ஆர்அமு தாக நயந்துகொண்டு,
அஞ்சும் ஆடல் அமர்ந்து,அடி யேனுடை
நெஞ்சம் ஆலய மாக்கொண்டு நின்றதே.

         பொழிப்புரை : நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய ( பெருவீரனாகிய ) பெருமான் , ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு , பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான் .


பாடல் எண் : 5
செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.

         பொழிப்புரை : செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில் , அருட் செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும் .


பாடல் எண் : 6
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரும் உரைக்கவல் லார்களும்
துன்னு வார்நல் நெறிதொடர்வு எய்தவே.

         பொழிப்புரை : நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும் , சொல்லும் வல்லமை உடையாரும் , நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர் .


பாடல் எண் : 7
மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

         பொழிப்புரை : பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன் , தேவர்கள் தலைவன் ; வேதநாயகன் ; வேதியர்நாயகன் ; பூதநாயகன் ; புண்ணியமூர்த்தி ஆவன் .

  
பாடல் எண் : 8
வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாள்அற வீசிய
சண்ட நாயக னுக்குஅருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

         பொழிப்புரை : வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான் , மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன் .


பாடல் எண் : 9
கூசு வார்அலர் குண்டர் குணம்இலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்க, உய்ந் தேன்அன்றே.

         பொழிப்புரை : மங்கலக்குடி இறைவன் , தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும் , குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , அன்பு சிறிதும் இல்லாதவர்களும் , கீழானவர்களும் , குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க , உய்ந்தேன் .


பாடல் எண் : 10
மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்துஎடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்து,
அங்க லைத்துஅழுது உய்ந்தனன் தான்அன்றே.

         பொழிப்புரை : மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும் , தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...