திரு வேள்விக்குடி





திரு வேள்விக்குடி

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     குத்தாலத்திற்குப் பக்கதில் உள்ளது. மயிலாடுதுறை - மகாராஜபுரம் சாலையில் உள்ளது.

இறைவர்              : கௌதகேசுவரர், கல்யாணசுந்தரேசுவரர்மணவாளேசுவரர்.

இறைவியார்           : பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி.

தீர்த்தம்               : கௌதகாபந்தன தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. ஓங்கிமேல் உழிதரும்,

                                               2. சுந்தரர்  -  1. மின்னுமா மேகங்கள்,
                                                                          2. மூப்பதும் இல்லை.


          சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் "கௌதுகாபந்தன க்ஷேத்திரம் " என்றும் பெயர்.

          அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனை நோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து, அவனுக்குத் திருமணவேள்வி செய்தருளியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

          நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலச் சிறப்பு.

          மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார்.

          கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.

     வள்ளல் பெருமான் தாமு பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மன்னர் சுக வாழ்வு இக் குடிகள் அடிமண் பூசலால் என்னும் வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே" என்று போற்றி உள்ளார்.

திருத்துருத்தி

     சோழ நாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம்.

         இது, மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பக்கோணம் இடங்கலிருந்து பஸ் வசதி உள்ளது. குத்தாலம் என வழங்கப்படுகின்றது.


இறைவர்         : உத்தரவேதீசுவரர், சொன்னவாறு அறிவார்கற்றளி மகாதேவர்

இறைவியார்      : மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி,
                                             அரும்பன்ன வனமுலையாள்

தல மரம்          : குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)

தீர்த்தம்           : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம்,                                                                                    வடகுளம்

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - 1. வரைத்தலைப் பசும்,
                                                       2. ஓங்கிமேல் உழிதரும்.

                                      2. அப்பர்  -   1. பொருத்திய குரம்பை தன்னை.

                                      3. சுந்தரர்  -  1. மின்னுமா மேகங்கள்,
                                                            2. மூப்பதும் இல்லை பிறப்பதும்

          தல மரத்தின் பெயரால், இது வழங்கப்படுகிறது. சுந்தரரின் உடற் பிணி நீங்கிய திருத்தலம் .

          இத் தலம், தருமை ஆதீன அருளாட்சியில் உள்ளது சோழர், விஜய நகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 290
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும் சென்று தொழுதுஇசை பாடி
எப்பொரு ளும்தரும் ஈசர் எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்புஇல் பதிகங்கள் பாடி ஓங்குவேள் விக்குடி உற்றார்.

         பொழிப்புரை : அத்திருப்பதியைப் போற்றி மேற்செல்பவராய், இறைவரின் `திருமணஞ்சேரியைச்' சொலற்கரிய திருத்தொண்டர்கள் உடன்வரச் சென்று வழிபட்டுத் திருப்பதிகத்தைப் பாடி, உயிர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வழங்கும் இறைவரின் `திரு எதிர்கொள்பாடி\' என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங்களைப் பாடி, உயர்ந்த `வேள்விக்குடியை\' அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 291
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நல் கோலம்,
பொழிந்த புனல்பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத் தண்தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார் கோடி காவில்சென்று அடைந்தார்.

         பொழிப்புரை : அம்மையப்பராகிய பெருமான், வளம் மிக்க `திருவேள்விக்குடியில்' வீற்றிருக்கும் மணவாளத் திருக்கோலத்தை, பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய `திருத்துருத்தியில்' பகலில் காணக்காட்டி, இரவில் இவ்வேள்விக்குடியில் அக்கோலத்துடனேயே எழுந்தருளிய தன்மையையும் சேர்த்துக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் `திருக்கோடிகா' என்ற திருப்பதிக்குச் சென்று அடைந்தார்.

         குறிப்புரை : திருத்துருத்தியையும் திருவேள்விக்குடியையும் இணைத்து ஒரே பதிகத்தில் பாடப் பெற்றுள்ளன. காரணம், இறைவன் உமையம்மையாருக்குப் பகலில் திருத்துருத்தியிலும், இரவில் திருவேள்விக்குடியிலுமாக வீற்றிருந்தருளிக் காட்சி கொடுத்தருளியமையாகும். இவ்வகையில் அமைந்த திருப்பதிகம், `ஓங்கி மேலுழிதரு' (தி.3 ப.90) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.

ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

எனவரும் முதல்பாடல், இவ்வீரிடங்களிலும் உறையுமாற்றை விளக்கி நிற்றலும் காண்க. தழும்பிய தன்மை - விளங்க வெளிப்பட்டிருக்கும் நிலை.



3. 090 திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்     பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்
         கங்கையை  ஒருசடைமேல்
தாங்கினார் இடுபலி தலைகல
         னாக்கொண்ட  தம்அடிகள்,
பாங்கினால் உமையொடு பகல்இடம்
         புகலிடம்  பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 2
தூறுசேர் சுடலையில் சுடர்எரி
         ஆடுவர், துளங்குஒளிசேர்
நீறுசாந்து எனஉகந்து அணிவர்,வெண்
         பிறைபுல்கு சடைமுடியார்,
நாறுசாந்து இளமுலை அரிவையோடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் .


பாடல் எண் : 3
மழைவளர் இளமதி மலரொடு
         தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டஎம்
         கண்ணுதல் கபாலியார்தாம்,
இழைவளர் துகில்அல்குல் அரிவையோடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்,
விழைவளர் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் .


பாடல் எண் : 4
கரும்புஅன வரிசிலைப் பெருந்தகைக்
         காமனைக் கவின்அழித்த,
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
         கொன்றைஅம் சுடர்ச்சடையார்,
அரும்புஅன வனமுலை அரிவையொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்,
விரும்புஇடம் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே

         பொழிப்புரை : இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
வளங்கிளர் மதியமும், பொன்மலர்க்
         கொன்றையும், வாள்அரவும்,
களங்கொளச் சடைஇடை வைத்தஎம்
         கண்ணுதல், கபாலியார்தாம்,
துளங்குநூன் மார்பினப், அரிவையொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்,
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .


பாடல் எண் : 6
பொறிஉலாம் அடுபுலி உரிவையர்,
         வரிஅராப் பூண்டுஇலங்கும்
நெறிஉலாம் பலிகொளும் நீர்மையர்,
         சீர்மையை நினைப்புஅரியார்,
மறிஉலாம் கையினர், மங்கையொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்,
வெறிஉலாம் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர். மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 7
புரிதரு சடையினர், புலிஉரி
         அரையினர், பொடிஅணிந்து
திரிதரும் இயல்பினர், திரிபுரம்
         மூன்றையும் தீவளைத்தார்,
வரிதரு வனமுலை மங்கையொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார்.


பாடல் எண் : 8
நீண்டுஇலங்கு அவிர்ஒளி நெடுமுடி
         அரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டுஇடந் திடுவனெ்என்று எழுந்தவன்
         ஆள்வினை கீழ்ப்படுத்தார்,
பூண்டநூன் மார்பினர் அரிவையொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்
வேண்டுஇடம் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார்.


பாடல் எண் : 9
கரைகடல் அரவுஅணைக் கடவுளும்
         தாமரை நான்முகனும்
குரைகழல் அடிதொழக் கூர்எரி
         எனநிறம் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகல்உடம்
         புகல்இடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 10
அயமுக வெயில்நிலை அமணரும்
         குண்டரும் சாக்கியரும்
நயமுக உரையினர் நகுவன
         சரிதைகள் செய்துஉழல்வார்,
கயல்அன வரிநெடும் கண்ணியொடு
         ஒருபகல் அமர்ந்தபிரான்
வியன்நகர்த் துருத்தியார் இரவிடத்து
         உறைவர்வேள் விக்குடியே.

         பொழிப்புரை : பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக .


பாடல் எண் : 11
விண்உலாம் விரிபொழில் விரைமணல்
         துருத்திவேள் விக்குடியும்
ஒண்உலாம் ஒலிகழல் ஆடுவார்
         அரிவையொடு உறைபதியை
நண்உலாம் புகலியுள் அருமறை
         ஞானசம் பந்தன்சொன்ன
பண்உலாம் அருந்தமிழ் பாடுவார்
         ஆடுவார் பழியிலரே.

         பொழிப்புரை : ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு

         வன்தொண்டர் திருஎதிர்கொள்பாடியைத் தொழுது திருவேள்விக்குடியை எய்திப் பெருமானைப் பணிந்து, திருத்துருத்திப் பெருமானையும் உடன் வைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 121)


பெரிய புராணப் பாடல் எண் : 121
எத்திசையும் தொழுதுஏத்த "மத்த யானை"
         எடுத்து "எதிர்கொள் பாடியினை அடைவோம்" என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
         செல்வமிகு செழுங்கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
         அருள்பெற்றுத் திருவேள்விக் குடியில் எய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
         "மூப்பதுஇலை" எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.

         பொழிப்புரை : சேர்ந்திடும்பொழுது, எத்திசையும் தொழுது போற்றி `மத்தயானை\' எனத் தொடங்கி, திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்னும் கருத்தினை நிலைகொள்ளுமாறு வைத்திடும் திருவுடைய பதிகத்தைப் பாடி வந்து, செல்வமிகுந்த செழுமையான கோயிலினை வணங்கி, அங்குச் சில நாள்கள் தங்கி அருள்பெற்று, திருவேள்விக்குடியைச் சென்றடைந்து, வீடுபேற்றைத் தருகின்ற பெருமானைத் திருத்துருத்தி என்னும் பதியும் சேர்ந்திட `மூப்பதில்லை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி அங்கிருந் தருளினார்.

         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருஎதிர்கொள்பாடி: மத்தயானை - இந்தளம் (தி.7 ப.7) 2. திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும்: மூப்பதுமில்லை - நட்டராகம் (தி.7 ப.18) `திருவேள்விக்குடியில் எய்தி ...... துருத்திகூடி மூப்பதிலை\' எனும் பதிகம் மொழிந்து என்பதால், இவ்விரு பதிகளையும் இணைத்துப் பாடியமை புலனாகும்.

         குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரை, இழிபும் உயர்பும் உடனிலை வகையான் ஒருங்கு தோன்றக் கூறி, அவர்க்கு ஆட்படுதலை மறுத்தலும், உடன்படுதலும் அவ்வாறே தோன்ற, அன்பினால் அருளிச் செய்தது. இழிபு பொருளும், மறுத்தற் பொருளும் தரும்வழி, உயர்பும் உடன்படுதலும் குறிப்பிற் றோன்றும் என்க.

         இது திருவேள்விக்குடிக்கும், திருத்துருத்திக்கும் உரித்தாக அருளிச் செய்யப்பட்டதாயினும், அத்தலங்கள் முதல் திருப்பாடல் தவிர ஏனைய திருப்பாடல்களில் வாராமையின், இதனை, ‘மூப்பது மில்லைத் திருப்பதிகம்’ என்று, முதனினைப்புப் பெயரானே வழங்குவர்.


7. 018  திருவேள்விக்குடி-திருத்துருத்தி     பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மூப்பதும் இல்லை, பிறப்பதும்
         இல்லை, இறப்பதுஇல்லை,
சேர்ப்பது காட்டகத்து ஊரினும்
         ஆகச்சிந் திக்கின்அல்லால்,
காப்பது வேள்விக் குடி,தண்
         துருத்தி,எங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்,
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : ஆராயுங்கால் எங்கள் தலைவர் , பிறத்தலும் இல்லை ; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை ; முடிவில் இறந்தொழிதலுமில்லை ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் , அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ !


பாடல் எண் : 2
கட்டக்காட்டில் நடம் ஆடுவர்,
         யாவர்க்கும் காட்சிஒண்ணார்,
சுட்டவெண் நீறுஅணிந்து ஆடுவர்,
         பாடுவர், தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்து
         ஓம்பி மறைபயில்வார்
அட்டக்கொண்டு உண்பது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர் , இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார் ; யாராலும் காண்பதற்கு அரியவர் . சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார் ; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள் , வட்டமாகிய குழியில் , தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி , அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார் ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!


பாடல் எண் : 3
பேரும்ஓர் ஆயிரம் பேர்உடை
         யார், பெண்ணோடு ஆணும்அல்லர்,
ஊரும் அதுஒற்றியூர், மற்றைஊர்
         பெற்றவா நாம்அறியோம்,
காருங் கருங்கடல் நஞ்சுஅமுது
         உண்டுகண் டம் கறுத்தார்க்கு
ஆரம்பாம்பு ஆவது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர் , பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர்; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார்; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

  
பாடல் எண் : 4
ஏனக்கொம் பும்இள ஆமையும்
         பூண்டுஅங்குஓர் ஏறும்எறிக்
கானக்காட் டில்தொண்டர் கண்டன
         சொல்லியும் காமுறவே,
மானைத்தோல் ஒன்றுஉடுத் து,புலித்
         தோஒல் பியற்கும்இட்டு,
யானைத்தோல் போர்ப்பது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும் , இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து , ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய் , தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும் , விருப்பம் உண்டாக , மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து , தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு , உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 5
ஊட்டிக்கொண்டு உண்பதுஓர் ஊண்இலர்,
         ஊரிடு பிச்சைஅல்லால்,
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர்,
         ஏறிஒர் பூதம்தம்பால்
பாட்டிக்கொண்டு உண்பவர், பாழிதொ
         றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு , ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர் . ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு , அதன் மேல் ஏறிச் செல்வர் . சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர் . புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 6
குறவனார் தம்மகள் தம்மக
         னார்மண வாட்டி,கொல்லை
மறவனா ராய்அங்குஓர் பன்றிப்பின்
         போவது மாயம்கண்டீர்,
இறைவனார், ஆதியார், சோதியார்
         ஆய்அங்குஓர் சோர்வுபடா
அறவனார் ஆவது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி , ஒரு குறவர் மகள் ; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார் ; இவை மாயமாம் . இவர் இப் பெற்றியரான இறைவரும் , முன்னவரும் , ஒளி வடிவினரும், அறவரும் ஆவதை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 7
பித்தரை ஒத்துஒரு பெற்றியர்
         நல்தவை என்னைப்பெற்ற
முற்றுஅவை தம்அனை தந்தைக்குந்
         தவ்வைக்கும் தம்பிரானார்,
செத்தவர் தம்தலை யில்பலி
         கொள்வதே செல்வம்ஆகி
அத்தவம் ஆவது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : என்னைப் பெற்ற நற்றாயும் , வயது முதிர்ந்த அவள் தாயும் , இவ் விருவர்க்கும் அன்னை , தந்தை , தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் . பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார் ; அன்றியும் , இறந்தவர் தலை யோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக , அன்னதொரு தவமுடைய ராதலை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 8
உம்பரான், ஊழியான், ஆழியான்
         ஓங்கி மலர்உறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்
         பவர்தடு மாற்றுஅறுப்பார்,
எம்பரம் அல்லவர் என்நெஞ்சத்து
         உள்ளும் இருப்பதுஆகி
அம்பரம் ஆவது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : ` இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 9
இந்திர னுக்கும் இராவண
         னுக்கும் அருள்புரிந்தார்,
மந்திரம் ஓதுவர், மாமறை
         பாடுவர், மான்மறியர்,
சிந்துரக் கண்ணனும் நான்முக
         னும்உட னாய்த்தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல்
         நாம்இவர்க்கு ஆட்படோமே.

         பொழிப்புரை : எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும் , அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார் . அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் , மறைபாடுதல் என்பவற்றையும் , வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர் . ` மால் , அயன் ` என்னும் இருவரும் உடனாயிருப்ப , அவரொடு நிற்றலேயன்றி , தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !


பாடல் எண் : 10
கூடலர் மன்னன், குலநாவ
         லூர்க்கோன், நலத்தமிழைப்
பாடவல் லபர மன்அடி
         யார்க்குஅடி மைவழுவா
நாடவல் லதொண்டன், ஆரூரன்,
         ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்து
         இருப்பது பண்டம்அன்றே.

         பொழிப்புரை : பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும் , மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று . ( மிக எளிதாம் )

                                             திருச்சிற்றம்பலம்


 சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், திருவாவடுதுறையை வணங்கித் திருத் துருத்தியை அடைந்து, ''அடியேன் உற்றபிணி வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும்'' என்று வணங்குவாராய்ப் பணிய, 'இப்பிணி நீங்க இவ்வட குளத்துக்குளி' என்று பெருமான் கூற, அங்ஙனமே அத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பிணி நீங்கி ஒளிசேர் திருமேனியராகி மிக்க பேரன்பினால் திருக்கோயிலை யடைந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 300)

பெரிய புராணப் பாடல் எண் : 296
அங்கு அணைவார் தமைஅடியார் எதிர்கொள்ளப் புக்குஅருளிப்
பொங்குதிருக் கோயிலினைப் புடைவலங்கொண்டு ,உள்ளணைந்து,
"கங்கைவாழ் சடையாய்! ஓர் கண்ணிலேன்" எனக் கவல்வார்
"இங்குஎனக்கு ஆர்உறவு" என்னும் திருப்பதிகம் எடுத்துஇசைத்தார்.

         பொழிப்புரை : அத்திருப்பதியை அணைய வரும் நம்பிகளை, அடியவர்கள் வந்து எதிர்கொண்டிட, அவர்களுடன் புகுந்தருளி, பெருகிநிற்கும் அருளின் சிறப்புடைய திருக்கோயிலினை வலம் வந்து, உள்ளே சென்று, எம்பிரானை நினைந்து, `கங்கை வார் சடையாய் ஓர் கண்ணிலேன்' எனக் கவல்பவர், `இங்கு எனக்கு ஆர் உறவு\' என்று சிறந்ததொரு திருப்பதிகத்தை எடுத்துப் பாடி அருளினார்.

         குறிப்புரை : `கங்கைவார் சடையாய்' (தி.7 ப. 70) எனும் முதற்குறிப்புடைய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பதிகப் பாடல் தொறும் `யார் எனக்கு உறவு அமரர்கள் ஏறே' எனவரும் நிறைவுத் தொடரை ஆசிரியர் முகந்தெடுத்து மொழிந்துள்ளார். திருக்கடைக் காப்பில் `சிங்கடியப்பன்' எனத் தம்மைக் குறித்திருப்பது, வரலாற்றிற்கு அரணாயுள்ளது. இப்பதிகத்து வரும் இரண்டாவது பாடலில், `கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்' எனவரும் முறைப்பாட்டால், கண்ணிழந்ததோடு உடம்பை வருத்தும் மேக நோயும் நம்பிகளுக்கு இருந்தமை விளங்குகின்றது.


பெ. பு. பாடல் எண் : 297
திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்து, திரு வருளால்போய்,
விருப்பினொடும் திருத்துருத்தி தனைமேவி, விமலர்கழல்
அருத்தியினால் புக்குஇறைஞ்சி, "அடியேன்மேல் உற்றபிணி
வருத்தம்எனை ஒழித்துஅருள வேண்டும்"என வணங்குவார்.

         பொழிப்புரை : திருப்பதிகம் கொண்டு போற்றி செய்து, பணிந்து, திருவருளால் விருப்பத்துடன் திருத்துருத்தி என்னும் கோயிலை அடைந்து, பெருமானின் திருவடிகளை அன்பினால் வணங்கி, `எம்பிரானே! அடியேனுக்குற்ற மேக நோயினை நீக்கியருள வேண்டும்\' என வணங்குவாராய்,

         குறிப்புரை : பிணி நீங்க வேண்டிப் பாடிய திருப்பதிகம் கிடைத்திலது.

பெ. பு. பாடல் எண் : 298
பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு வருள்புரிவார்
"விரவியஇப் பிணிஅடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண்டு அறைதீர்த்த வடகுளத்துக் குளி"என்னக்
கரவில்திருத் தொண்டர்தாம் கைதொழுது புறப்பட்டார்.

         பொழிப்புரை : இவ்வாறு வேண்டிப் போற்றிய நம்பிகளுக்குப் பெருமான் திருவருள் புரிவாராய், `பொருந்திய இப்பிணி முழுவதும் தீர்தற்கு இக்கோயிலின் அருகேயுள்ள நல்ல மலர்களில் வண்டுகள் மொய்த்துப்பாட விளங்கும் புனித நீரையுடைய வடகுளத்தில் குளிப்பாயாக' என அருளிட, அதுகேட்ட வஞ்சனையற்ற நம்பிகள் கைதொழுது, புறப்பட்டுச் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 299
மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதம்எலாம்
தொக்கவடி வாய்இருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்குஅதனில் மூழ்குதலும் புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணிஒளிசேர் திருமேனி ஆயினார்.

         பொழிப்புரை : பெருகிய நீருடைய வடகுளத்துப் புனித நீர் முன் அணுகி நான்மறைகளும் திரண்டதொரு வடிவென இருந்தருளும் திருத்துருத்திப் பெருமானாரைத் தொழுது, மூழ்குதலும், அக்கணமே அவர் உடம்பில் இருந்ததொரு புதிய நோய் நீங்க, முத்தின் ஒளியையுடைய திருமேனியை உடையராயினார்.


பெ. பு. பாடல் எண் : 300
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி, உடைபுனைந்து,
மண்டுபெரும் காதலினால் கோயிலினை வந்துஅடைந்து,
தொண்டர்எதிர் "மின்னுமா மேகம்" எனும் சொற்பதிகம்,
எண்திசையும் அறிந்துஉய்ய, ஏழிசையால் எடுத்திசைத்தார்.

         பொழிப்புரை : கண்டவர்கள் வியந்திடக் கரையேறி, உடை அணிந்து, உள்ளத்துப் பெருகும் காதலினால் கோயிலை அடைந்து, அடியவர்கள் திருமுன்பாக நின்று, `மின்னுமா மேகம்' எனத் தொடங்கி எடுத்த திருப்பதிகத்தை எட்டுத் திக்கில் உள்ளாரும் இறைவனது அற்புதத்தை அறிந்து உய்ய, ஏழிசையும் பொருந்தப் பாடினார்.

         குறிப்புரை : `மின்னுமா மேகம்' எனத் தொடங்கும் பதிகம், காந்தாரப்பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.74). `என்னை நான் மறக்குமாறு எம்பெருமானை என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை' என இப்பதிக முதற்பாடலில் வரும் தொடர், இவ்வரலாற்றிற்கு அரணாகின்றது. எம் பெருமானை, இடர்கெடுத்தானை மறக்குமாறு என்னை? எனக் கூட்டுக.



7. 074 திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்     பண்-காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மின்னுமா மேகங்கள் பொழிந்துஇழிந்து அருவி
         வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன்கரை உறைவார்
         அடியிணை தொழுதுஎழும் அன்பராம் அடியார்
சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
         குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானை
         என்உடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை

         பொழிப்புரை : மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !


பாடல் எண் : 2
கூடுமாறு உள்ளன கூடியும் கோத்தும்
         கொய்புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
         மலைஎனக் குலைகளை மறிக்குமாறு உந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமாறு அறிகிலேன் எம்பெரு மானைப்
         பழவினை உள்ளன பற்றுஅறுத் தானை

         பொழிப்புரை : கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும் , அவை வேறு காணப்படாதவாறு கோத்தும் , கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் , மலைநெற் கதிர்களை யும் சிதறியும் , இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும் , கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தி யிலும் , திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும் , எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , பாடும் வகையை அறிகின்றிலேன் !


பாடல் எண் : 3
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
         கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட்டு எய்திப்
புல்கியும் தாழ்ந்தும்போந் துதவம் செய்யும்
         போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமாறு அறிகிலேன் எம்பெரு மானைத்
         தொடர்ந்துஅடும் கடும்பிணித் தொடர்வுஅறுத் தானை.

         பொழிப்புரை : கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களையும் , மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு , அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும் , வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும் , வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலுங் கடை யேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன் !


பாடல் எண் : 4
பொறியுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
         பொழிந்துஇழிந்து அருவிகள் புன்புலம் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
         கடல்உற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
அறியுமாறு அறிகிலேன் எம்பெரு மானை,
         அருவினை உள்ளன ஆசுஅறுத் தானை

         பொழிப்புரை : அருவிகள் , பொரிந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள , பின்பு , கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும் , வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு , தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன் !


பாடல் எண் : 5
பொழிந்துஇழி மும்மதக் களிற்றுஇன மருப்பும்
         பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்துஇழிந்து அருவிகள் கடும்புனல் ஈண்டி
         எண்திசை யோர்களும் ஆடவந்து இங்கே
சுழிந்துஇழி காவிரித் துருத்தியார், வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
ஒழிந்திலேன் பிதற்றுமாறு எம்பெரு மானை
         உற்றநோய் இற்றையே உறஒழித் தானை

         பொழிப்புரை : பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களை யுடைய யானையது தந்தங்களையும் , பொன்னைப்போல மலர்கின்ற , வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி, எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு , இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைப் பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன் .


பாடல் எண் : 6
புகழுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
         பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
         ஆடுவார் பாவந்தீர்த்து அஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார், வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
இகழுமாறு அறிகிலேன் எம்பெரு மானை
         இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை

         பொழிப்புரை : புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் , பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும் , நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் , தன்னால் அகழப்படுகின்ற , பெரிய , அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி , முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி , கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றம் உடை யேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , இகழுமாற்றை நினையமாட்டேன் !


பாடல் எண் : 7
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
         வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்,
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
         காம்பீலி சுமந்துஒளிர் நித்திலம் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
உரையுமாறு அறிகிலேன் எம்பெரு மானை
         உலகுஅறி பழவினை அறஒழித் தானை

         பொழிப்புரை : அளவில்லாத மாம்பழங்களையும் , வாழைப் பழங்களையும் வீழ்த்தியும் , கிளைகளோடு சாய்த்தும் , மராமரத்தை முரித்தும் , கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு , மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து , ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க , விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலை வரும் , எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன் !


பாடல் எண் : 8
ஊருமா தேசமே மனம்உகந்து உள்ளிப்
         புள்ளினம் பலபடிந்து ஒண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
         கவரிமா மயிர்சுமந்து ஒண்பளிங்கு இடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
ஆருமாறு அறிகிலேன் எம்பெரு மானை,
         அம்மைநோய் இம்மையே ஆசுஅறுத் தானை

         பொழிப்புரை : அணியவான ஊர்களில் உள்ளவர்களும் , பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும் , மனம் விரும்பி நினைக்கு மாறு , பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து , அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் திரிய , நீர் நிறைந்த , பெரிய , கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து , ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து , நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற , பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் , துய்க்குமாற்றை அறிகின்றிலேன் !


பாடல் எண் : 9
புலங்களை வளம்படப் போக்குஅறப் பெருகிப்
         பொன்களே சுமந்துஎங்கும் பூசல்செய்து ஆர்ப்ப
இலங்குமா முத்தினோடு இனமணி இடறி
         இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண்டு எற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் செடியனேன் நாயேன்,
விலங்குமாறு அறிகிலேன் எம்பெரு மானை,
         மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.

         பொழிப்புரை : வயல்கள் வளம்படவும் , அதனால் எல்லாக் குற்றங் களும் நீங்கவும் , நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு , ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும் , மற்றும் பலவகை மணிகளையும் எறிந்து , இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி , எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க , கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன் !


பாடல் எண் : 10
மங்கைஓர் கூறுஉகந்து ஏறுஉகந்து ஏறி
         மாறுஅலார் திரிபுரம் நீறுஎழச் செற்ற
அங்கையான் கழல்அடி அன்றிமற்று அறியான்
         அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன்,
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
         குடிஉளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுது,தம் நாவின்மேல் கொள்வார்
         தவநெறி சென்று,அமர் உலகம்ஆள் பவரே.

         பொழிப்புரை : மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடியவனாகிய நம்பியாரூரன், கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை, தங்கள் கையால் தொழுது, தங்கள் நாவிற் கொள்பவர்கள், தவநெறிக் கண் சென்று, பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...