திரு நாரையூர்
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக
காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில்
இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் திருநாரையூர் திருத்தலம்
அமைந்துள்ளது.
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி
குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு
நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு
கி.மீ. நடந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
இறைவர்
: சௌந்தர நாதர்
இறைவியார்
: திரிபுரசுந்தரி
தல
மரம் : புன்னாகம்
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. உரையினில் வந்தபாவம், 2. காம்பினை வென்ற,
3.
கடலிடை
வெங்கடு.
2. அப்பர்
- 1. வீறுதானுடை வெற்பன்,
2.
சொல்லானைப்
பொருளானை.
கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று
கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது
அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த
மகரிஷி, அவனை நாரையாக
பிறக்கும்படி செய்து விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது
இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து
விமோசனம் பெறுக என்று கூறினார். சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம்
வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த
லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய
வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர்
"திருநாரையூர்" எனப்பட்டது.
சாபம் அடைந்த நாரை, ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது, இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை
பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில், அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன.
அப்போது, வாயில் இருந்த
தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது.
இதற்கு "காருண்ய தீர்த்தம்" என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு
வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று
பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு
ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இத்திருத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக
இருந்தாலும், இங்கு விநாயகருக்கே சிறப்பு.
இவர் "பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். "பொள்ளா"
என்றால் "உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார்
செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே நோன்றியவர்.
விநாயகருக்கும்
ஆறுபடை வீடு:
முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை
வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும்.
முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பு..
கோயில் முகப்பு வாயிலுக்கு வெளியே
கிழக்கில் காருண்ய தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக
உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும், நந்தி
மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. அதைத் தொடர்ந்து 78 அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய
கம்பீரமான மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்புடன் ஆலயம்
அமைந்துள்ளது. மூலவர் சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி
தருகிறார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற
பெயரும் உண்டு. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர்
சந்நிதியும், வடமேற்கில்
ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப்
பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன.
வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன.
சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர்
அருள்பாலிக்கின்றார்கள்.அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன்
சன்னதிக்கு வெளியே வெளிபிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில்
அமைந்துள்ளது. இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன்
காணப்படுகிறது. இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள்
ஐக்கியப்படுத்தி இருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள்
அமைத்திருப்பதாகச் சொல்கின்றனர். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி
இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில்
அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு
ஒருவர், பிரகாரத்தில்
தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்
இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர்.
இவர்களது தரிசனம் விசேஷமானது.
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை சிறப்பாகக்
கொண்டாடப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம்
ஸ்ரீநம்பியாண்டர் நம்பி முக்தி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் "நம்பி
குருபூஜை விழா" சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம்
இது. திருஞானசம்பந்தர் தனது "உரையினில் வந்தபாவம் உணர்நோய்கள்" என்று
தொடங்கும் திருப்பதிகத்தில் இத்திருத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள்
தீரும், உடலால் செய்யப்பெறும்
குற்றம் முதலானவும், அவ்வுடலைப் பற்றிய
பிணி நோய்களும் கெடும், தீவினையால் உலகிற்
பிறந்து அடையும் துன்பங்கள் அகலும்,
உடல்
நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் நறுமணமுள்ள
மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக
என்று குறிப்பிடுகிறார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மேல் நாட்டும்
தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும்நாரையூர் மேவு நடுநிலையே"
என்று போற்றி உள்ளார்.
காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நம்பியாண்டார்
நம்பிகள் வரலாறு
திருநாரையூரில் பொல்லாப்
பிள்ளையார்க்குப் பூசனை புரியும் ஆதிசைவக் குடும்பத்தில் தோன்றியவர் இவர். பெற்றோர்
சிவபிரானைச் சுந்தரர் குறித்துப் போற்றும் நம்பி என்னும் பெயரைச் சூட்டி உரிய
பருவத்தில் உபநயனம் செய்வித்து வேத சிவாகமங்களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும்
கற்பித்தனர். ஒருநாள் இவர் தந்தையார் வேற்றூர்க்குச் செல்ல நேரிட்டது. தந்தையார்
தம் மைந்தரை அழைத்து பிள்ளையார்க்குப் பூசை நிவேதனம் செய்து, பள்ளிக்குச் செல்லுமாறு பணித்து
வெளியூர் சென்றார். தந்தை கட்டளைப்படி நம்பிகள் காலையில் எழுந்து நீராடி மலர்
பறித்து மாலை தொடுத்துக்கொண்டு தாயார் தயாரித்து அளித்த நிவேதனத்துடன் ஆலயம்
சென்றார். பிள்ளையார்க்குத் திருமஞ்சனம் முதலாயின செய்து தாயார் அளித்த நிவேதனத்தை
எதிரே வைத்து, பிள்ளையாரை அமுது
செய்தருளுமாறு பலமுறையும் வேண்டி நின்றார்.
நாள்தோறும் தந்தையார் படைக்கும் நிவேதனத்தைப்
பிள்ளையார் உண்டு வருவதாக எண்ணிய நம்பிகள் தன் பூசையில் ஏதேனும் தவறு நேர்ந்ததோ
என்று உளம் நைந்து வருந்தியவராய்ப் பிழை இருப்பின் மன்னித்துத் திருஅமுதை ஏற்றருள
வேண்டும் என வேண்டினார். அதற்கும் பிள்ளையார் வாளா இருத்தலைக் கண்டு மனம்
பொறாதவராய்த் தன் தலையைக் கோயில் சுவரில் மோதிக் கொள்ள முற்பட்டார். அது கண்டு
திருவுளம் இரங்கிய பிள்ளையார் `குழந்தாய் பொறு` எனத் தடுத்து நிவேதனத்தை மகிழ்வோடு
உண்டருளினார்.
இந்நிகழ்ச்சியால் நம்பிகள் பள்ளி
செல்லக் காலம் தாழ்த்தது என்றும், இனிச் சென்றால்
ஆசிரியர் தன்னைத் தண்டிப்பார் என்றும் கூற, பிள்ளையார் நாமே அப்பாடங்களை உனக்கு
கற்பிப்போம் எனக் கூறித் தாமே நம்பிகளுக்குத் தமிழ் கற்பித்தருளினார்.
"நல்குஞ்சரக் கன்று நண்ணில்,
கலைஞானம்
கற்கும்
சரக்கு அன்று காண்" என்பதைப் போல விநாயகர் திருவருளால் நம்பிகள் கலைஞானங்கள்
அனைத்தும் கைவரப் பெற்றார். விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம்
பாடிப் போற்றினார்.
இந்த அற்புத நிகழ்ச்சி நாடெங்கும்
பரவியது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அபயகுலசேகரன் என்னும் இராசராச மன்னன் அப்
பிள்ளையாரை வழிபடுதற் பொருட்டும்,
தன்
உள்ளத்தில் நெடு நாட்களாக இருந்த கவலையைத் தீர்த்துக் கொள்ளற் பொருட்டும், விநாயகருக்கு உகந்த பழ வகைகள், கரும்பு, தேன், அவல், எள்ளுருண்டை முதலான பொருள்களை வண்டியில்
ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தடைந்தான். நம்பிகளை வணங்கி இவற்றைப் பிள்ளையார்
ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டினான். மன்னன் விரும்பிய வண்ணம் நம்பிகள்
பிள்ளையார்க்கு அபிடேக ஆராதனைகள் புரிந்து மன்னன் கொண்டு வந்த நிவேதனப் பொருள்களைப்
படைத்து அமுது செய்தருளுமாறு வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றருளினார்.
அது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் நெடு
நாளைய கவலையை நம்பிகளிடம் தெரிவித்தான். மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ்
மக்களுக்குக் கிடைக்குமாறு செய்தருள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். நம்பிகள்
மன்னனின் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார். அவர் வேண்டுகோளை ஏற்ற
பொல்லாப் பிள்ளையார் `தில்லையில் தேவார
மூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` எனக் கூறியதோடு திருத்தொண்டர் வரலாறுகளையும்
நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்தியருளினார்.
அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகளும்
அபய குலசேகரனாகிய சோழ மன்னனும் மகிழ்ந்து, தில்லையை அடைந்து, அந்த அறையைத் திறக்குமாறு தில்லைவாழ்
அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவார மூவர் கையடையாளம்
இட்டுள்ளதால், அவர்கள் வந்தால்
அன்றி அறைக் கதவைத் திறத்தல் இயலாது எனக் கூறக்கேட்ட மன்னன், மூவர் திருவுருவங்களுக்கும் அபிடேக
ஆராதனைகள் செய்வித்து எழுந்தருளச் செய்து அவ்வறைக்கு எதிரே நிறுத்தி, "மூவரும்
வந்துவிட்டனர். கதவைத் திறக்கலாமே" எனக் கூறத் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு
வழியின்றிக் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருந்த ஏடுகளைக்
கறையான் புற்று மூடியிருக்கக் கண்ட மன்னன் மனம் வருந்தி, எண்ணெய் சொரிந்து புற்றை அகற்றிப்
பார்த்த அளவில், ஏடுகளில் பல
செல்லரித்து இருந்ததை அறிந்து அளவிலாத துயருற்றான். அந்நிலையில் `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு
வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச் செய்தோம்
கவலற்க` என்றொரு வானொலி
அனைவரும் கேட்க எழுந்தது. மன்னன் ஆறுதல் அடைந்து அவ் ஏடுகளைச் சிதையாமல் எடுத்து
அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.
நம்பியாண்டார் நம்பிகள்
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்
திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந்
திருமுறையாகவும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை
எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர்
முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம்
திருமுறையாகவும், திருமூலர் அருளிய
திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய
திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும்
வகுத்தருளினார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகையின் வகை நூலாய்,
பொல்லாப்பிள்ளையார்
தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு "திருத்தொண்டர்
திருவந்தாதி" என்ற வகை நூலையும்,
திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது "திருஏகாதசமாலை" என்னும்
பிரபந்தத்தையும் அருளி மன்னன் விருப்பின்படி அவற்றையும் இத்திருமுறையில்
சேர்த்தருளினார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 253
நம்பரை
நலம்திகழ் நாரை யூரினில்
கும்பிடும்
விருப்பொடு குறுகி, கூடிய
வம்புஅலர்
செந்தமிழ் மாலை பாடிநின்று,
எம்பிரான்
கவுணியர் தலைவர் ஏத்தினார்.
பொழிப்புரை : இறைவரை நன்மை
விளங்கும் திருநாரையூரில் வழிபடும் விருப்புடன் சென்று சேர்ந்து, சிவமணம் கமழ்ந்து விரிகின்ற மாலைகளான
திருப்பதிகங்களைப் பாடி நின்று,
எம்
தலைவரான கவுணியர் குலத்தலைவர் வணங்கினர்.
குறிப்புரை : வம்பு: சிவமணம்.
கூடிய - கமழ்கின்ற. இத்திருப்பதி யில் இதுபொழுது பாடிய பதிகங்கள் பல இருத்தல்
வேண்டும். எனினும் கிடைத்திருக்கும் பதிகங்கள் மூன்றேயாம். இவற்றுள் முன்னர்ப்
பாடியது, பின்னர்ப் பாடியன
எவையெனப் பிரித்தறிய இயலாதுள்ளன. எனினும், `உரையினில் வந்தபாவம்' (தி.2 ப.86) எனத் தொடங்கும் பியந்தைக்காந்தாரப்
பண்ணிலமைந்த பதிகத்தை முன்னர் அருளியதாகக் கொள்ளலாம். அடுத்துப் பாடிய பதிகங்கள்:
1. `காம்பினை வென்ற\' (தி.3 ப.102) - பழம்பஞ்சுரம்
2. `கடலிடை வெங்கடு\' (தி.3 ப.107) - பழம்பஞ்சுரம்
திருஞானசம்பந்தர்
திருப்பதிகங்கள்
2.086 திருநாரையூர் பண் -
பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
உரையினில்
வந்தபாவம், உணர்நோய்கள்,உம்ம
செயல்தீங்கு, குற்றம் உலகில்
வரையின்
நிலாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகஏத்தி நித்தம்
நினைமின்,
வரைசிலை
யாகஅன்று மதின்மூன்று எரித்து
வளர்கங்குல் நங்கை
வெருவ,
திரையொலி
நஞ்சம்உண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :மேருமலையை வில்லாகக்
கொண்டு முப்புரங் களைச் செற்று,
வளரும்
கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக்
கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம்
ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக
ஏத்தி நித்தமும் நினைவீராக.
பாடல்
எண் : 2
ஊன்அடை
கின்றகுற்றம் முதலாகி உற்ற
பிணிநோய் ஒருங்கும், உயரும்
வான்அடை
கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத
விகிர்தன்,
கான்இடை
ஆடி,பூதப் படையான், இயங்கு
விடையான், இலங்கு முடிமேல்
தேன்அடை
வண்டுபாடு சடைஅண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :உயரிய வானத்தில்
விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய
விகிர்தனும், இடுகாட்டில் பூதப்
படையோடு ஆடுபவனும், இயங்கும்
விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது
வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய
திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும்
கெடும்.
பாடல்
எண் : 3
ஊர்இடை
நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயர்உற்ற தீங்கு
விரவிப்
பார்இடை
மெள்ளவந்து பழிஉற்ற வார்த்தை
ஒழிவுஉற்ற வண்ணம்
அகலும்,
போர்இடை
அன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வான் உளோர்கள்
புணரும்
தேர்இடை
நின்றஎந்தை பெருமான் இருந்த
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :திரிபுரத்தசுரரோடு
போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள்
கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால்
தொழுதால், ஊரின் கண் நின்று
வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும்
வார்த்தைகளும் ஒழிவுறும்.
பாடல்
எண் : 4
தீயுற
வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற உற்ற
உலகின்
தாய்உறு
தன்மைஆய தலைவன்தன் நாமம்
நிலையாக நின்று
மருவும்,
பேய்உறவு
ஆயகானில் நடமாடி, கோல
விடம்உண்ட கண்டன், முடிமேல்
தேய்பிறை
வைத்துஉகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :இடுகாட்டில்
பேய்களோடு உறவுகொண்டு நடன மாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல்
தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால்
தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும்
அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.
பாடல்
எண் : 5
வசைய
அராதமாய உவரோதம் நீங்கும்,
தவமாய தன்மை வரும்,வான்
மிசையவர்
ஆதியாய திருமார் பிலங்கு
விரிநூலர், விண்ணு நிலனும்
இசையவர்
ஆசிசொல்ல, இமையோர்கள் ஏத்தி
அமையாத காத லொடுசேர்
திசையவர்
போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :மேலான வீட்டுலகில்
இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும்
முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி
சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய
திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.
பாடல்
எண் : 6
உறைவளர்
ஊன்நிலாய உயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை, உலகில்
குறைவுள
ஆகிநின்ற குறைதீர்க்கும்,
நெஞ்சில்
நிறைவுஆற்றும், நேசம் வளரும்,
மறைவளர்
நாவன்,மாவின் உரிபோர்த்த
மெய்யன்,
அரவுஆர்த்த அண்ணல் கழலே,
திறைவளர்
தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :வேதம் வளரும்
திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன்.
தலைமைத் தன்மை உடையோன் . அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற
தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக
நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப்
போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.
பாடல்
எண் : 7
தனம்வரும், நன்மைஆகும், தகுதிக்கு உழந்து
வருதிக்கு உழன்ற
உடலில்
இனம்வளர்
ஐவர்செய்யும் வினயங்கள் செற்று,
நினைவொன்று சிந்தை
பெருகும்,
முனம்ஒரு
காலமூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் தெரிந்த, அவுணர்
சினம்ஒரு
கால்அழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :முன்னொரு காலத்தில்
முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய
செல்வத் திருநாரையூரைத் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை
பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும்
வஞ்சகங் களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.
பாடல்
எண் : 8
உருவரை
கின்றநாளில் உயிர்கொள்ளும் கூற்றம்
நனிஅஞ்சும் ஆதல்
உறநீர்
மருமலர்
தூவிஎன்றும் வழிபாடு செய்ம்மின்,
இழிபாடு இலாத கடலின்
அருவரை
சூழ்இலங்கை அரையன்தன் வீரம்
அழியத் தடக்கை
முடிகள்
திருவிரல்
வைத்துஉகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :அழிவில்லாத கடலாலும்
அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக்
கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான்.
ஆதலின் நீர் மணமலர் களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.
பாடல்
எண் : 9
வேறுஉயர்
வாழ்வுதன்மை வினைதுக்கம் மிக்க
பகைதீர்க்கும் மேய
உடலில்,
தேறிய
சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து
திகழும்,
சேறுஉயர்
பூவின்மேய பெருமானும் மற்றைத்
திருமாலும் நேட
எரியாய்ச்
சீறிய
செம்மையாகும் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :சேற்றில் உயர்ந்து
தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச்
சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை
கிடைக்கும். வினையாகிய துக்கம்,
மிக்க
பகை இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து
நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.
பாடல்
எண் : 10
மிடைபடு
துன்பம்இன்பம் உளதாக்கும்,
உள்ளம்
வெளியாக்கும், உன்னி உணரும்,
படைஒரு
கையில்ஏந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி ஆடி பெருமை,
உடையினை
விட்டுளோரும் உடல்போர்த்து ளோரும்
உரைமாயும்
வண்ணம் அழியச்
செடிபட
வைத்துஉகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழவே.
பொழிப்புரை :சூலப்படையைக் கையில்
ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை
உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து
காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம்
உளதாகும். உள்ளம் ஒளி யாக்கும். ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.
பாடல்
எண் : 11
எரிஒரு
வண்ணம்ஆய உருவானை, எந்தை
பெருமானை உள்கி
நினையார்,
திரிபுரம்
அன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை
தொழுவான்,
பொருபுனல்
சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்து
மொழிவார்
திருவளர்
செம்மையாகி அருள்பேறு மிக்கது
உளதுஎன்பர் செம்மை
யினரே.
பொழிப்புரை :தீயைப் போலச் சிவந்த
நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய
பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக்
காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி
மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன்
செம்மையினராவர்.
திருச்சிற்றம்பலம்
3. 102 திருநாரையூர் பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
காம்பினை
வென்றமென் தோளி பாகம் கலந்தான், நலந்தாங்கு
தேம்புனல்
சூழ்திகழ் மாமடுவில் திரு நாரையூர் மேய
பூம்புனல்
சேர்புரி புன்சடையான், புலியின்
னுரிதோல்மேல்
பாம்பினை
வீக்கிய பண்டரங்கன், பாதம் பணிவோமே.
பொழிப்புரை : சிவபெருமான் , மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத்
தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . நலம் தரும் இனிய நீர் சூழ்ந்த சிறந்த
நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர் . அழகிய கங்கையையும் , முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர் .
புலித்தோலாடை அணிந்தவர் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . பண்டரங்கன் என்னும்
திருப்பெயர் உடையவர் . அத்தகைய சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக .
பாடல்
எண் : 2
தீவினை
ஆயின தீர்க்க நின்றான், திருநாரை யூர்மேயான்,
பூவினை
மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில்
ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார்
மதின்மூன்றும்
ஏவினை
எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே.
பொழிப்புரை : சிவபெருமான் தம்மை
வழிபடுபவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர் . திருநாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . பூமாலையணிந்த சடைமுடி உடையவர் .
பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர் . பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (
பஞ்சகவ்வியம்) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர் . அடங்காது திரிந்த
பகையசுரர்களின் மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர் . அப்பெருமானின்
திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக !.
பாடல்
எண் : 3
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடஞ்சேரும்
மைமிடற்றன்,
ஆயவன்
ஆகியொர் அந்தரமும் அவன் என்று
வரை ஆகம்
தீயவன், நீரவன், பூமியவன்,திரு நாரை
யூர்தன்னில்
மேயவ
னைத்தொழு வார்அவர் மேல்வினை ஆயின
வீடுமே.
பொழிப்புரை : கருநிறமுடைய திருமால்
, செந்நிறமுடைய
உருத்திரன் , வெள்ளைத் தாமரைப்
பூவில் வீற்றிருக்கும் பிரமன் விடமுண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி
பேதங்களும் , மற்றும் பல வேறுபாடான
மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர் . மலைபோன்ற திருமேனி உடையவர் . நெருப்பு , நீர் , பூமி ( உப லட்சணத்தால் காற்று , ஆகாயம் , சூரியன் , சந்திரன் , உயிர் ) இவற்றையும் உடம்பாக உடையவர் .
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் .
அப்பெருமானைத் தொழுவாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும் .
பாடல்
எண் : 4
துஞ்சிருள்
ஆடுவர் தூமுறுவல் துளங்கும்
உடம்பினராய்,
அஞ்சுடர்
ஆர்எரி ஆடு வர், ஆர் அழலார் விழிக்கண்
நஞ்சு உமிழ்
நாகம் அரைக்கு அசைப்பர், நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப் படுவார்க்கு, இனி இல்லை ஏதமே.
பொழிப்புரை : சிவபெருமான்
அனைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக் காலத்தில் திருநடனம் செய்பவர் . தூய புன்சிரிப்போடு
விளங்கும் திருமேனியர் . அழகிய சுடரானது நன்கு எரியும்படி கைகளை வீசி ஆடுவார் .
நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர் . நஞ்சைக் கக்கும் நாகத்தை அரையில் கச்சாகக்
கட்டியவர் . நலம் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி
எந்நாளும் துன்பம் என்பதே இல்லை .
பாடல்
எண் : 5
பொங்கு
இளங்கொன் றையினார், கடலில் விடம்உண்டு, இமையோர்கள்
தங்களை
ஆர்இடர் தீர நின்ற தலைவர், சடைமேலோர்
திங்களை
வைத்து அனல் ஆடலினார், திரு நாரை யூர்மேய
வெங்கனல்
வெண்ணீறு அணிய வல்லார், அவரே விழுமியரே.
பொழிப்புரை : சிவபெருமான் , செழித்து விளங்கும் இளங் கொன்றை மலரைச்
சூடியவர் . பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த
தலைவர் . சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர் .
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . வெங்கனலால்
நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர் .
பாடல்
எண் : 6
பார்
உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்
தார்
உறுமார்பு உடையான், மலையின் லைவன், மலைமகளைச்
சீர்
உறு மா மறுகில் சிறைவண்டு அறையும்
திருநாரை-
யூர்
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று
ஒவ்வாவே.
பொழிப்புரை : சிவபெருமான் , இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும்
மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார் . பசுமைவாய்ந்த
கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர் . கைலைமலையின் தலைவர் . மலைமகளைச் சிறப்புடன்
ஒரு பாகமாகக் கொண்டவர் . வீதிகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர்
அணிந்துள்ள பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம் .
பாடல்
எண் : 7
கள்ளி
இடுதலை ஏந்து கையர், கரி காடர், கண்ணுதலர்,
வெள்ளிய
கோவண ஆடை தன்மேல் மிளிர்
ஆடுஅரவுஆர்த்து
நள்ளிருள்
நட்டமது ஆடுவர் , நல்நலன் ஓங்கு
நாரையூர்
உள்ளிய
போழ்தில், எம்மேல் வரு வல் வினை ஆயின ஓடுமே.
பொழிப்புரை : சிவபெருமான் கள்ளிச்
செடிகள் நிறைந்த சுடு காட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர் .
சுடுகாட்டில் இருப்பவர் . நெற்றிக் கண்ணர் . வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து , அதன்மேல் ஒளிரும் , ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி
நள்ளிருளில் நடனமாடுபவர் . நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை
நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும் ஓடிவிடும் .
பாடல்
எண் : 8
நாமம்
எனைப் பலவும் உடையான்,நலன் ஓங்கு நாரையூர்
தாம்ஒம்
எனப் பறை யாழ் குழல் தாளார்
கழல்பயில,
ஈம
விளக்குஎரி சூழ்சுடலை இயம்பும்
இடுகாட்டில்
சாமம்
உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய
சங்கரனே.
பொழிப்புரை : நலன்களைப் பெருகச்
செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமான் பல திருப்பெயர்களை உடையவர் . பறை , யாழ் , குழல் முதலியன தாம் ஒம் என ஒலிக்க , அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில்
அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க , காட்டில் , கொள்ளி விளக்கு எரிய , சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான்
நெருப்புருவான சங்கரனே ஆவார் .
பாடல்
எண் : 9
ஊன்உடைவெண்
தலைகொண்டு உழல்வான், ஒளிர்புன் சடைமேல் ஓர்
வான்இடைவெண்
மதிவைத்து உகந்தான், வரிவண்டு யாழ்முரலத்
தேன்உடை மா
மலர் அன்னம் வைகும் திருநாரை
யூர்மேய
ஆன்இடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே.
பொழிப்புரை : சிவபெருமான் ஊனுடை
மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு ,
பிச்சையேற்றுத்
திரிபவர் . ஒளிர்கின்ற சடைமேல் ,
வானத்தில்
தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து , மகிழ்பவர்
. வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க , தேன் உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம்
தங்க விளங்கும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்
. பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுதலை
விரும்புபவர். அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற்கதி அடைவோமாக !
பாடல்
எண் : 10
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார்
உடம்பினிலுள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள் தெளிந்து அடைமின், திருநாரை யூர்தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே.
பொழிப்புரை : மஞ்சட் காவி உடை
உடுத்தும் புத்தர்களும் , உடம்பிலும் , உள்ளத்திலும் , அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை
ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள் .
மெய்யறிவுடையவர்களே ! சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து , திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற , திருவெண்ணீறு பூசிய
தலைவராகிய சிவபெருமானின் திருவடிகளையும் , அவர் அடியார்களின் திருவடிகளையும்
வணங்குவதே பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள் .
பாடல்
எண் : 11
தண்மதி
தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி
சேர்சடை யான்உறையும் திருநாரை யூர்தன்மேல்
பண்மதி
யால்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி
யாதுபோய் வான்புகுவர், வானோர் எதிர்கொளவே.
பொழிப்புரை : குளிர்ச்சி பொருந்திய
சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ்
வல்ல ஞானசம்பந்தன் , ஒளி பொருந்திய
சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர்
என்னும் திருத்தலத்தின் மேல் , பயில்வோருக்கு
இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத
வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது , தேவர்கள் எதிர் கொண்டழைக்க வானுலகை
அடைவர் .
திருச்சிற்றம்பலம்
3. 107 திருநாரையூர் பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கடல் இடை
வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடைஏறி,
உடல் இடையில் பொடிப் பூசவல்லான், உமையோடு ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார்மேல்
நடலை வினைத்தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர் தானே.
பொழிப்புரை : கடலில் தோன்றிய
வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி , திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி , உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர்
. முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக்
கணைஎய்த பெருமான் , தம்முடைய அடியார்கள்
மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர் . இத்தகைய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்
.
பாடல்
எண் : 2
விண்ணின்மின்
ஏர்மதி, துத்திநாகம், விரிபூ மலர்க்கொன்றை,
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான், எரியாடி,
நண்ணிய
தன் அடியார்களோடும், திருநாரை யூரான்என்று
எண்ணுமின்,
நும்வினை போகும்வண்ணம், இறைஞ்சும் நிறைவாமே.
பொழிப்புரை : ஆகாயத்தில் விளங்கும்
, மின்னல் போன்ற
ஒளியுடைய சந்திரனையும் , படப்புள்ளிகளையுடைய
பாம்பினையும் , விரிந்த
கொன்றைமலரையும் , கங்காதேவிக்கு முன்னே
சடையிலணிந்து மிகவும் மகிழ்ந்த பெருமான் , நெருப்பேந்தி ஆடுபவர் . திரு நாரையூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம் , வாக்கு , காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள்
கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள் . உங்கள் வினைகள்
தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள் . எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும்.
பாடல்
எண் : 3
தோடுஒரு
காதுஒரு காதுசேர்ந்த குழையான், இழைதோன்றும்
பீடுஒரு
கால் பிரியாது நின்ற பிறையான், மறையோதி,
நாடுஒரு
காலமும் சேரநின்ற,திருநாரை யூரானைப்
பாடுமின்
நீர்பழி போகும்வண்ணம், பயிலும் உயர்வாமே.
பொழிப்புரை : சிவபெருமான் இடக் காதில்
தோடும் , வலக் காதில் குழையும்
அணிந்துள்ளவர் . மார்பில் பூணூல் அணிந்துள்ளவர் . ஒரு காலத்திலும் பெருமை
நீங்காமல் நிலைத்து நிற்பவர் . பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர் . வேதங்களை ஓதுபவர்
. ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி
வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக . உங்கள் பழிகள்
நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள் . உங்கட்கு உயர்வு உண்டாகும் .
பாடல்
எண் : 4
வெண்ணிலவு
அம்சடை சேரவைத்து, விளங்கும் தலைஏந்திப்
பெண்ணில்
அமர்ந்துஒரு கூறதாய பெருமான், அருள்ஆர்ந்த
அண்ணல், மன்னி உறை கோயில் ஆகும் அணிநாரை யூர்தன்னை
நண்ணல்
அமர்ந்து உறவு ஆக்குமின்கள், நடலை கரிசு அறுமே.
பொழிப்புரை : வெண்ணிறப்
பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து ,
விளங்குகின்ற
பிரமகபாலத்தைக் கையிலேந்தி , உமா தேவியைத்
தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும் , அருள் நிறைந்த தலைவனுமாகிய சிவபெருமான்
நிலையாக வீற்றிருந் தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில்
சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள் . உங்கள் துன்பங்கள் நீங்கும்.
பாடல்
எண் : 5
வான்அமர்
தீவளி நீர்நிலனாய் வழங்கும்,
பழியாகும்
ஊன்அமர்
இன்னுயிர் தீங்குகுற்றம் உறைவால் பிறிதின்றி
நான்அம
ரும்பொருள் ஆகிநின்றான்,
திருநாரை
யூர் எந்தை
கோன்அவ
னைக்குறுக, குறுகா கொடுவல்
வினைதானே.
பொழிப்புரை : ஆகாயம் , நெருப்பு , காற்று , நீர் , நிலம் , ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய்
விளங்குகின்ற , பழிக்கு இடமாகிய
தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும்
இயல்பாயுள்ளது . அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி , அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக்
கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான் . அப்பெருமானைச் சரணடையக்
கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா .
பாடல்
எண் : 6
கொக்குஇற
குங்குளிர் சென்னிமத்தம் குலாய மலர்சூடி,
அக்குஅர
வோடு,அரை ஆர்த்துகஉந்த
அழகன், குழகாக
நக்குஅம
ருந்திரு மேனியாளன், திரு நாரை யூர்மேவிப்
புக்குஅம
ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.
பொழிப்புரை : சிவபெருமான் தலையில்
கொக்கின் இறகையும் , குளிர்ந்த
பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர் . எலும்பைப் பாம்போடு சேர்த்து
இடுப்பில் கட்டி மகிழும் அழகர் . இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர்
. அப் பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து , அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்
களிடத்துத் திருவருட்சத்தி பதியும் .
பாடல்
எண் : 7
ஊழியும்
இன்பமும் காலமாகி, உயரும் தவமாகி,
ஏழிசை
இன்பொருள், வாழும்வாழ்க்கை, வினையின் புணர்ப்பாகி,
நாழிகை
யும்பல ஞாயிறுஆகி, நளிர் நாரை
யூர்தன்னில்
வாழியர், மேதகு
மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
பொழிப்புரை : சிவபெருமான்
ஊழிக்காலமும் , இன்பமும் , காலங்களும் ஆகியவர் . உயர்ந்த தவம்
ஆகியவர் . ஏழிசையின் பயனாக விளங்குபவர் . வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள்
செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர் . நாழிகை முதலிய சிறு
காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர் . இவைகளெல்லாம் குளிர்ச்சி
பொருந்திய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின்
அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும் .
பாடல்
எண் : 8
கூசம்இலாது
அரக்கன் வரையைக் குலுங்க,
எடுத்தான்தோள்
நாசமது
ஆகி இறஅடர்த்த விரலான், கரவாதார்
பேசவி
யப்பொடு பேணநின்ற பெரியோன்,
இடம்போலும்
தேசமு
றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.
பொழிப்புரை : கூசுதல் இல்லாது
திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த
திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான் . நெஞ்சில் வஞ்ச மில்லாத உண்மையடியார்கள்
மிகவும் வியப்போடு பேசும்படியும் ,
இடைவிடாது
தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர் . இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் , தேசம் முழுவதும்
புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 9
பூமக
னும்,அவ னைப்பயந்த புயலார்
நிறத்தானும்,
ஆம்அள
வும்திரிந்து ஏத்திக்காண்டல் அறிதற்கு அரியான்ஊர்
பாமரு
வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமரு
வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.
பொழிப்புரை : தாமரைப் பூவில்
வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம்
போன்ற நிறத்தையுடைய திருமாலும் ,
தங்களால்
இயன்ற அளவு திரிந்து தேடியும் ,
ஏத்தியும்
காண்பதற்கு அரியவனாக விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , நீதி நூல்களில் சொல்லிய நற்குண , நற்செய்கை உடையவர்கள் கூடி , திருத்தொண்டுகள் பலவும் செய்யும் , தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த
திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .
பாடல்
எண் : 10
வெற்றுஅரை
ஆகிய வேடங்காட்டித் திரிவார், துவர்ஆடை
உற்றஅரை
யோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழுமின்கள்,
குற்றம்
இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழிலாரப்
பெற்றுஅரவு
ஆட்டிவரும் பெருமான்திரு நாரை யூர்சேர்வே.
பொழிப்புரை : ஆடையற்ற கோலத்துடன்
திரியும் சமணர்களும் , மஞ்சட் காவியாடை
போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா . குற்றமில்லாத
கொள்கை உடைய எம் தலைவரும் , இளமையானவரும் , அடியவர்கட்கு அருள்புரியும்
தொழிலையுடையவரும் , அரவம்
அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும்
திருத்தலத்தைச் சேர்ந்து , வழிபட்டு உய்வீர்களாக
.
பாடல்
எண் : 11
பாடுஇய
லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடுஇய
லும்புகழ் ஓங்குசெம்மைத் திருநாரை யூரான்மேல்
பாடிய
தண்தமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய
சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.
பொழிப்புரை : அலைஓசையுடைய
கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ்
உடையதும் , சிவத்தன்மை உடையதுமான
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய
பத்துப் பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும்
சிந்தையுடைய அடியார்களின் கடல் போன்ற பெருந்துன்பம் நீங்கும் .
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
அப்பர் பெருமானார் திருத்தில்லையில்
அம்பலவாணப் பெருமானை வழிபட்டுத் தங்கியிருந்த காலத்தில், சீகாழிப்பதியில் அவதரித்து, சிவனருளால் ஞானப்பால் உண்டு, சிவஞானசம்பந்தராயின
பெருமானாரின் பெரும்புகழை அன்பர்கள் சொல்லக் கேட்டவுடனே, பிள்ளையாரைக் கண்டு வணங்கி மகிழவேண்டும்
என்னும் ஆவல் மீதூர, தில்லையினின்றும்
புறப்பட்டு வரு வழியில் திருநாரையூர் முதலான திருத்தலங்களையும் வணங்கிப் பாடினார்.
பெரிய
புராணப் பாடல் எண் : 177
கடையுகத்தில்
ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த
செங்கண்
விடைஉகைத்தார்
திருவருளால் வெற்புஅரையன்
பாவைதிரு முலைப்பா
லோடும்
அடையநிறை
சிவம்பெருக வளர்ஞானம்
குழைத்து ஊட்ட அமுது
செய்த
உடையமறைப்
பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக்
கேட்டார்.
பொழிப்புரை : ஊழி முடிவில் பொங்கி
எழும் கடல் வெள்ளத்தில் மிதந்த திருக்கழுமலத்தில் (சீகாழியில்) வீற்றிருக்கின்ற
ஆனேற்றை ஊர்தியாய்க் கொண்ட தோணியப்பரின் திருவருளால், மலையரசனின் மகளாரான உமையம்மையார், திருமுலைப்பாலுடனே நிறைகின்ற சிவம்
பெருகுமாறு வளர்கின்ற ஞானத்தையும் குழைத்து ஊட்ட, அதை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின்
வரலாற்றை அடியவர் உரைப்பக் கேட்டார்.
பெ.
பு. பாடல் எண் : 178
ஆழிவிடம்
உண்டவரை, அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண்
தமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப
வல்ல
காழிவரும்
பெருந்தகைசீர் கேட்டலுமே,
அதிசயமாம் காதல் கூர,
வாழிஅவர்
மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்துஎழுந்த
விருப்பு வாய்ப்ப.
பொழிப்புரை : திருநிலைநாயகி
அம்மையாரின் திருமுலைப் பாலமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்பொழுதே, ஏழிசை பொருந்தும் வளமான தமிழ் மாலையால்
கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை `எமது பெம்மான் இவன்` எனச் சுட்டிக்காட்டிப் பாடியருள வல்ல, சீகாழியில் தோன்றியருளிய
பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புகளைக் கேட்டவுடனே, வியத்தகு உணர்வுடன் கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற
திருவடிகளை வணங்குதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,
பெ.
பு. பாடல் எண் : 179
அப்பொழுதே
அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி, அருள்முன் பெற்று,
பொய்ப்பிறவிப்
பிணிஓட்டுந் திருவீதி
புரண்டு,வலம் கொண்டு போந்தே,
எப்புவனங்
களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி
ஏத்தி,
செப்பரிய
பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச்
செல்வார்.
பொழிப்புரை : அதுபொழுதே
பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும்
இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின் எவ்வுலகங்களிலும் நிறைவுடைய
அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய
பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.
குறிப்புரை : இது பொழுது
திருநாரையூரில் பாடியருளிய பதிகங்கள் இரண்டாம்.
(1) `வீறுதானுடை` (தி.5 ப.55) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப்
பதிகம்.
(2) `சொல்லானைப் பொருளானை` (தி.6 ப.74) எனத் தொடங்கும் திருத்தாண்டகம்.
இத்திருப்பதியிலிருந்து சீகாழிக்குச்
செல்லும் பொழுது இடையில் திருஓமாம்புலியூர், கடம்பூர் ஆகிய திருப்பதிகளுக்கும்
சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பதிகளில் அருளிய பதிகங்கள் மூன்றாம்:
1. திரு ஓமாம்புலியூர்த்
திருப்பதிகம்: `ஆராரும் மூவிலை வேல்` - திருத்தாண்டகம் (தி.6 ப.88).
2. கடம்பூர்த்
திருப்பதிகங்கள் :
அ)`தளரும் கோளரவ` - திருக்குறுந்தொகை (தி.5 ப.19)
(ஆ) `ஒருவராய்` - திருக்குறுந் தொகை (தி.5 ப.20).
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
5. 055 திருநாரையூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வீறு
தான்உடை வெற்பன், மடந்தைஓர்
கூறன்
ஆகிலும், கூன்பிறை சூடிலும்,
நாறு
பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு
சூடலும் அம்ம அழகிதே.
பொழிப்புரை : மணம் வீசுகின்ற
பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர் , பிறிதொன்றற் கில்லாத பெருஞ்சிறப்புடைய
திருக்கயிலாயத்தை உடையவர் . உமையம்மையை ஒருபங்கில் உடையவர் ; வளைந்த பிறை சூடியவர் . ஆயினும்
கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே .
பாடல்
எண் : 2
புள்ளி
கொண்ட புலியுரி ஆடையும்,
வெள்ளி
கொண்டவெண் பூதிமெய் ஆடலும்,
நள்ளி
தெண்திரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி
உண்டலும் அம்ம வழகிதே.
பொழிப்புரை : தெளிந்த நீர்வளம்
உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள பெருமான் , புள்ளிகளை உடைய புலித்தோலாடையும் , வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப்
பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும் , நஞ்சை
அள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .
பாடல்
எண் : 3
வேடு
தங்கிய வேடமும், வெண்தலை
ஓடு
தங்கிய உண்பலி கொள்கையும்,
நாடு
தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு
பைங்கழல் அம்ம வழகிதே.
பொழிப்புரை : நாட்டின்கண் தங்கிய
புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான் , வேடத்தன்மை தங்கிய திருவேடமும் , வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும்
கொள்கையும் உடையவராயினும் , நடம் ஆடுகின்ற
பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .
பாடல்
எண் : 4
கொக்கின்
தூவலும், கூவிளங் கண்ணியும்,
மிக்க
வெண்தலை மாலை விரிசடை
நக்கன்
ஆகிலும், நாரையூர் நம்பனுக்கு
அக்கின்
ஆரமும் அம்ம வழகிதே.
பொழிப்புரை : திருநாரையூரில்
எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும் , கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும் , மிகுந்த வெண்தலைமாலையும் , விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும்
அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .
பாடல்
எண் : 5
வடிகொள்
வெண்மழு மான்அமர் கைகளும்,
பொடிகொள்
செம்பவ ளம்புரை மேனியும்,
நடிகொள்
நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள்
தம்வடிவு அம்ம வழகிதே.
பொழிப்புரை : வடித்தலைக் கொண்ட
ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும் , திருநீற்று வெண் பொடி பூசிய செம்பவளம்
ஒத்த மேனியும் , ஒருபங்கில் இருக்கும்
நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு
மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .
பாடல்
எண் : 6
சூலம்
மல்கிய கையும், சுடரொடு
பாலும்
நெய்தயிர் ஆடிய பான்மையும்,
ஞாலம்
மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல
நீழலும் அம்ம வழகிதே.
பொழிப்புரை : உலகத்தில் புகழ்
நிறைந்த திருநாரையூர் , நம் பெருமான் சுடரொடு
நிறைந்த சூலம் பொருந்திய கையும் ,
பால்
, நெய் , தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய
தன்மையும் உடையவராயினும் , ஆலநிழலில் இருந்து
அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .
பாடல்
எண் : 7
பண்ணின்
நால்மறை பாடலோடு ஆடலும்,
எண்இ
லார்புர மூன்றுஎரி செய்ததும்,
நண்ணி
னார்துயர் தீர்த்தலும், நாரையூர்
அண்ண
லார்செய்கை அம்ம அழகிதே.
பொழிப்புரை : இசையொடு பொருந்திய
நான்மறைகளைப் பாடுதலும் , ஆடுதலும் , நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை
எரித்தலும் , தம்மைப்
பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள்
அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம் .
பாடல்
எண் : 8
என்பு
பூண்டு,எருது ஏறி, இளம்பிறை
மின்பு
ரிந்த சடைமேல் விளங்கவே,
நன்ப
கல்பலி தேரினும், நாரையூர்
அன்ப
னுக்கு,அது அம்ம அழகிதே.
பொழிப்புரை : எலும்புகளைப் பூண்டு , எருதின்மேல் ஏறி , இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த
ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி ,
நல்ல
பகலிலும் பலிதேர்வராயினும் , திருநாரையூரில் உள்ள
அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே .
பாடல்
எண் : 9
முரலும்
கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில்
நின்றுஎரி ஆடலும், நீடுஉலாம்
நரலும்
வாரி,நல் நாரையூர்
நம்பனுக்கு
அரவும்
பூணுதல், அம்ம அழகிதே.
பொழிப்புரை : ஒலிக்கின்ற
கின்னரமும் , மொந்தையும் முழங்க , நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில்
நின்று எரித்து ஆடுதலும் , அரவினைப் பூணுதலும்
ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும்
உடையதேயாகும் .
பாடல்
எண் : 10
கடுக்கை
அம்சடை யன்,கயி லைம்மலை
எடுத்த
வாள்அரக் கன்தலை ஈர்ஐஞ்சும்
நடுக்கம்
வந்துஇற, நாரையூ ரான்விரல்
அடுத்த
தன்மையும் அம்ம அழகிதே.
பொழிப்புரை : கொன்றையினை உடைய
அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய
இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான்
திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும் .
திருச்சிற்றம்பலம்
6. 074 திருநாரையூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சொல்லானை, பொருளானை, சுருதி யானை,
சுடர்ஆழி
நெடுமாலுக்கு அருள் செய்தானை,
அல்லானை, பகலானை, அரியான் தன்னை,
அடியார்கட்கு எளியானை, அரண்மூன்று எய்த
வில்லானை, சரம்விசயற்கு
அருள்செய் தானை,
வெங்கதிரோன்
மாமுனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை, தீஆடு நம்பன் தன்னை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :சொல்லாகவும்
பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக்க
சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லா தார்க்கு அரியனாகவும்
அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய
அம்பு எய்த வில்லினனும், விசயற்குப் பாசுபதம்
அருளிய அருளாளனும், சூரியனும்
பெருந்தவமுனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடுபவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய
சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 2
பஞ்சுஉண்ட
மெல்அடியாள் பங்கன் தன்னை,
பாரொடுநீர்
சுடர்படர்காற்று ஆயி னானை,
மஞ்சுஉண்ட
வான்ஆகி வானம் தன்னில்
மதியாகி மதிசடைமேல்
வைத்தான் தன்னை,
நெஞ்சுஉண்டுஎன்
நினைவுஆகி நின்றான் தன்னை,
நெடுங்கடலைக்
கடைந்தவர்போய் நீங்க, ஓங்கும்
நஞ்சுஉண்டு, தேவர்களுக்கு
அமுதுஈந் தானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :செம்பஞ்சுக்குழம்பு
ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும் வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி
அம்மதியைத் தன் சடைமுடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழி நிறுத்தி அதன்
நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய
கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு
தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 3
மூவாது
யாவர்க்கும் மூத்தான் தன்னை,
முடியாதே முதல்நடுவு
முடிவு ஆனானை,
தேவாதி
தேவர்கட்கும் தேவன் தன்னை,
திசைமுகன்தன்
சிரம்ஒன்று சிதைத்தான் தன்னை,
ஆவாத
அடல்ஏறுஒன்று உடையான் தன்னை,
அடியேற்கு நினைதோறும்
அண்ணிக் கின்ற
நாவானை, நாவினில்நல் உரை
ஆனானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :யாவர்க்கும் முன்னே
தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த்
திகழ்பவனும், நான்முகனுடைய
சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும்,
காற்றெனக்
கடிதியங்குவதும் வெற்றியையுடையதுமாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான்
நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும்
நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 4
செம்பொன்னை, நல்பவளம், திகழும் முத்தை,
செழுமணியை, தொழும்அவர்தம்
சித்தத் தானை,
வம்புஅவிழும்
மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை, மதிற்கச்சி மன்னு
கின்ற
கம்பனை,எம் கயிலாய மலையான்
தன்னை,
கழுகினொடு காகுத்தன்
கருதி ஏத்தும்
நம்பனை,எம் பெருமானை, நாதன் தன்னை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :செம்பொன், நற்பவளம், ஒளிமுத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக்
கூறப்படுபவனும், வணங்குவார்
சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை
கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்த கச்சியில் ஏகம்பனாய்
மன்னுபவனும, கயிலாய மலையில்
வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற
கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மைதருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூர்
நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 5
புரைஉடைய
கரிஉரிவைப் போர்வை யானை,
புரிசடைமேல்
புனல்அடைத்த புனிதன் தன்னை,
விரைஉடைய
வெள்எருக்கம் கண்ணி யானை,
வெண்ணீறு செம்மேனி
விரவி னானை,
வரைஉடைய
மகள்தவஞ்செய் மணாளன் தன்னை,
வருபிணிநோய்
பிரிவிக்கும் மருந்து தன்னை,
நரைவிடைநல்
கொடிஉடைய நாதன் தன்னை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :உட்டொளை பொருந்திய
கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச்
செறித்துவைத்த புனிதனும், மணங் கமழும்
வெள்ளெருக்கம்பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி
விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம்
செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை
உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான்
கண்டேன்.
பாடல்
எண் : 6
பிறவாதும்
இறவாதும் பெருகி னானை,
பேய்பாட நடமாடும்
பித்தன் தன்னை,
மறவாத
மனத்தகத்து மன்னி னானை,
மலையானை, கடலானை, வனத்து உளானை,
உறவானை, பகையானை, உயிர் ஆனானை,
உள்ளானை, புறத்தானை, ஓசை யானை,
நறவுஆரும்
பூங்கொன்றை சூடி னானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும்
பித்தனும், தன்னை மறவாத
மனத்திடத்தே மன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலின்
கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும்
பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்த கொன்றைப் பூவைச் சூடியவனும்
ஆகிய சிவபெருமானை நாரை யூராம் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 7
தக்கனது
வேள்விகெடச் சாடி னானை,
தலைகலனாப் பலிஏற்ற
தலைவன் தன்னை,
கொக்கரைசச்
சரிவீணைப் பாணி யானை,
கோள்நாகம் பூண்ஆகக்
கொண்டான் தன்னை,
அக்கினொடும்
என்புஅணிந்த அழகன் தன்னை,
அறுமுகனோடு
ஆனைமுகற்கு அப்பன் தன்னை,
நக்கனை,வக் கரையானை, நள்ளாற் றானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :தக்கனது வேள்வியை
அதன் பயன் கெடுமாறு அழித்தவனும்,
பிரமனது
தலையைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும்
கரத்தினனும், உயிரைக்
கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த
அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரை நள்ளாறு என்னுந் தலங்களில்
திகழ்பவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 8
அரிபிரமர்
தொழுதுஏத்தும் அத்தன் தன்னை,
அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல்ஆகா
எரிபுரியும்
இலிங்கபுரா ணத்து உளானை,
எண்ஆகிப் பண்ஆர்
எழுத்து ஆனானை,
திரிபுரஞ்செற்று
ஒருமூவர்க்கு அருள்செய் தானை,
சிலந்திக்கும்
அரசுஅளித்த செல்வன் தன்னை,
நரிவிரவு
காட்டகத்தில் ஆட லானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :மாலும் நான்முகனும்
ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை
ஆக்கும் மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத
எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்க புராணத்து விளங்கித்
தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும்
பண்ணும் எழுத்தும் ஆனவனும் , திரிபுரங்களை அழித்து
ஆண்டுத் தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப் புவிபுரக்கும் அரசனாம்
பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில்
ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 9
ஆலாலம்
மிடற்றுஅணியா அடக்கி னானை,
ஆல்அதன்கீழ் அறம்நால்வர்க்கு
அருள்செய் தானை,
பால்ஆகித்
தேன்ஆகிப் பழமும் ஆகிப்
பைங்கரும்பாய்
அங்குஅருந்தும் சுவையா னானை,
மேலாய
வேதியர்க்கு வேள்வி யாகி,
வேள்வியின்இன் பயனாய
விமலன் தன்னை,
நாலாய
மறைக்குஇறைவன் ஆயி னானை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :ஆலால நஞ்சினைத் தன்
கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி
முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும்
தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய்
விளங்குபவனும், வேள்வியின் பயனாய்
விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப்
போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
பாடல்
எண் : 10
மீளாத
ஆள்என்னை உடையான் தன்னை,
வெளிசெய்த வழிபாடு
மேவி னானை,
மாளாமை
மறையவனுக்கு உயிரும் வைத்து
வன்கூற்றின் உயிர்மாள
உதைத்தான் தன்னை,
தோள்ஆண்மை
கருதிவரை எடுத்த தூர்த்தன்
தோள்வலியும்
தாள்வலியும் தொலைவித்து,
ஆங்கே
நாளோடு
வாள்கொடுத்த நம்பன் தன்னை,
நாரையூர் நல்நகரில்
கண்டேன் நானே.
பொழிப்புரை :விட்டுப்பிரியாத
அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்த
வழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய
மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலிய கூற்றின் உயிர் நீங்கும் வண்ணம்
உதைத்தவனும், தன் தோள் வலிமையை
மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்ற காமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி
மிகுதியும் கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த
அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ்நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவ
பெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment