16. சற்புருடர்
செய்ந்நன்றி
மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேல்
சித்தம்வை யாத பேரும்,
கைகண்டு
எடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையில்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்ஒன்று
நிதிகோடி வரினும் வழக்குஅழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மைஉரை யாத பேரும்,
ஐய, இங்கு இவரெலாம்
சற்புருடர் என்று உலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
ஐய --- தலைவனே!
அருமை மதவேள் --- அருமையான மதவேள் என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
செய்ந்நன்றி மறவாத பேர்களும் --- ஒருவர் தமக்குச்
செய்த உதவியை மறவாதவர்களும்,
ஒருவர் செய் தீமையை மறந்த பேரும் --- ஒருவர் தமக்குச்
செய்த தீமையை மறந்தவர்களும்,
திரவியம் தர வரினும் ஒருவர் மனையாட்டி மேல்
சித்தம் வையாத பேரும் --- பொருள் வரும் என்றாலும், பிறர் மனைவியின்பால் மனத்தை வைக்காதவர்களும்,
கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்
பொருளாளர் கையில் கொடுத்தபேரும் ---- கண்ணால் கண்ட ஒரு பொருளை எடுத்து, அதை உரியவரிடம்
கொண்டுபோய்க் கொடுத்தவர்களும்,
காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி காத்து
அருள் செய்கின்ற பேரும் --- உலகத்தில் ஒருவர் செய்த அறமானது சிதையாதபடி காப்பாற்றுகின்றவர்களும்,
பொய் ஒன்று நிதி கோடி வரினும் வழக்கு அழிவு
புகலாத நிலைகொள் பேரும் --- நிலையாமையைப் பொருந்திய செல்வத்தைக் கோடிக்கணக்காக
ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத நிலையை உடையவர்களும்,
புவி மீது தலை போகும் எனினும் கனவிலும்
பொய்ம்மை உரையாத பேரும் --- உலகத்திலே தன்னுடைய தலையானது போகும் நிலை வரும் என்றாலும்
கனவிலும் கூடப் பொய்யினைச்
சொல்லாதவர்களும்,
இங்கு இவர் எலாம் சற்புருடர் என்று உலகர் அகம்
மகிழ்வர் --- இந்த உலகில் இவர்கள் எல்லாம் நன்மக்கள் என்று உலகமாந்தர்கள் மனம் மகிழ்வார்கள்.
பொய் என்னும் சொல்லுக்கு இருபொருள் உண்டு. இல்லாததைக் கூறுவது. நிலையில்லாதது.
No comments:
Post a Comment