வேண்டுதல் பலித்தது
----
உலகியல் வாழ்வின் மீதும், அதற்கென அமைந்த உடலின் மீதும் பற்று வைத்து வாழுகின்றவர்களுக்கு வேண்டுகோள் எப்போதும் தீராத ஒன்றாகவும், பலப்பல விதமாகவும் இருக்கும். உலகியல் வாழ்வும், உடல் வாழ்வும் நிலையற்றது, நிலைத்த பெருவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கே இறையருளால் கிடைத்தது என்று உணர்ந்த பெருமக்களுக்கு இருக்கப்போவது ஒரே வேண்டுகோள்தான். அந்த வேண்டுகோள் வருமுன்னர் காத்துக் கொள்வதற்காக அமைந்ததும், இறைவன் திருக்குறிப்பை உட்கிடையாகக் கொண்டு அமைந்ததாகவும் இருக்கும்.
உடம்பை எடுத்து வந்த பின், நிச்சயமாக ஒன்று வரப் போகின்றது. அது மரணம். பிறவி என்று வந்துவிட்டாலே பெரும் துன்பம்தான். "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவாதார் உறுவது பெரும் பேரின்பம்" என்பது மணிமேகலை. "பிறவியால் வருவன கேடு உள" என்பார் திருஞானசம்பந்தர். "துயர் இலங்கும் உலகு" என்றும் கூறுவார். நிச்சயமாக வரப் போகின்றை கேட்டினைத் தவிர்த்துக் கொள்வது அறிவுடைமை ஆகும். அதுவே, அருமையான இந்த உடல் உயிர் வாழ்க்கையை நமக்கு அருளிய இறைவனுக்குப் புரியும் கடப்பாடும் ஆகும்.
"வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
வைத் தூறு போலக் கெடும்"
என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
வாழ்க்கையானது நெருப்பின் முன்னர் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல கேடுகெட்டுப் போகக் கூடாது.
பெரியவர்கள், அறிவுடையவர்கள் வரும் முன்னர் காத்துக் கொள்வதேயை விரும்புவர். அருணகிரிநாதப் பெருமான் இதனை உணர்ந்து, தமக்கு வரப் போகின்ற ஒன்றில் இருந்து காத்துக் கொள்வதற்கு, தம்மால் மட்டுமே இயலாது என்பதை உணர்ந்து, ஒரு ஒப்பற்ற துணையைத் தேடுகின்றார். பெருமழை வருவதற்கு முன்பே துணையைப் பெற்றுவிட்டால், நாம் வாழ்ந்து வருகின்ற குடிசை அழியும்போது முருகன் ஆதரவு அளித்துக் காப்பாற்றுவான். குடிசை அழிந்து நடுவீதியில் நாதியற்றுக் கிடக்காமல் முருகப் பெருமானுடைய அரண்மனையில் ஆனந்தமாக வாழலாம்.
"ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி, அதில் இரண்டு கை வைத்த வீடு" இது என்பதை உணர்ந்தவர் அருணகிரிநாதப் பெருமான். நாம் வாழ்ந்திருக்கும் இந்த உடம்பு என்னும் குடிசையானது, ஐம்புலன்களுக்கு இடம் உண்டாகும்படி, இரண்டு கால்களை நிறுத்தி, அதன் இடத்தில் இரண்டு கைகளை அமைத்து வைத்துள்ள வீடு ஆகும். இந்த உடம்பை ஒரு வீடாக உருவகம் பண்ணினார் அடிகளார். கால்கள் தூண்கள். கைகள் கொடுங்கைகள் ஆகும்.
"கால்கொடுத்து,இருகை ஏற்றி, கழிநிரைத்து,இறைச்சி மேய்ந்து
தோல்படுத்து,உதிரநீரால் சுவர் எடுத்து,இரண்டுவாசல்
ஏல்வுடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால்கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே"
என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.
இதன் பொருள் ---
பெருமை மிக்க வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய சிவபெருமான், குடிசையைத் தாங்கும் தூண்களைப் போல, இரண்டு கால்களைக் கொடுத்து, இருபக்கத்திலும் இரண்டு சார்புகளைப் போல இரண்டு கைகளை மேலே ஏற்றி வைத்து, எங்கும் கழிகளைப் போல எலும்புகளை வரிசை வரிசையாகப் பொருத்தி, ஊன் என்னும் கீற்றால் வேய்ந்து, மேலே தோல் பூச்சைப் பூசி, இரத்தம் என்னும் நீரினல் குழைத்துச் சுவர்களாகிய உடம்பின் உறுப்புக்களை அமைத்து, வாய், மலம் கழிக்கும் இடமாகிய இரண்டு வாசல்களைப் பொருத்தம் உடையனவாக அமைத்து, அந்தக் குடிசையில் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, சிறுநீர் கழிக்கும் உறுப்பு ஒன்று ஆகிய ஏழு சாளரங்களை (சன்னல்களை) வைத்து, இந்தக் குடிசையில் வாழவேண்டும் என்ற ஆசையையும் கொடுத்து, இதனுள் உயிரை வைத்தார்.
பாடல் என்பதால், குடிசையைக் கட்டும் முறையில் சொல்லாமல்,முன் பின்னாக வைத்தார். உதிர நீரால் குழைத்து சுவர் எடுத்து,கால் கொடுத்து, இரு கை ஏற்றி, இரண்டு வாசல் ஏல்வுடைத்தா அமைத்து, ஏழு சாலேகம் பண்ணி, இறைச்சி மேய்ந்து ஆவி வைத்தார், என்று பொருள்கோள் செய்து கொள்ளவேண்டும்.
இந்த உடம்பு நிலையானது அல்ல. பொய்யானது. நிலையில்லாத உடம்பில் இருந்து கொண்டு நிலையான பயனைப் பெறவேண்டி உள்ளதால், பொய்யான இந்த உடம்பு, "மெய்" என்று பெயர் பெற்றது. மெய்ப்பொருள் ஆகிய இறைவனை அடையத் துணை புரிவது நாம் வாழ்கின்ற இந்த "மெய்" என்னும் உடம்பு. இந்த உடம்பை நாம் நமது விருப்பப்படி எடுத்து வரவில்லை. நமது வினையின் பயனுக்கு ஏற்ப இறைவன் தந்தது. எப்படியோ மடத்தில் புகுந்து விட்ட நாயானது, அந்த மடமானது தனக்கே உரிமையானது என்று எண்ணிக் கொண்டு, மடத்தில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கும். அதுபோல, இறைவன் தந்த இந்த அருமையான உடம்பை நமது என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். "மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே" என்றார் திருமூல நாயனார். உடம்பிலே வாழ்ந்துகொண்டு இருக்கின்ற உயிரானது, இதை விட்டுவிட்டு ஒரு நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அப்பயணம் நிச்சயமாக உண்டு. தேக அநுபவம் முற்றியிருப்பதனாலே தெய்வத்தை மறந்து விடுகிறோம். உடம்பின் மீது வைத்த அபிமானம் மற்ற எல்லாவற்றையும் மறைக்கிறது. நல்ல உணவைச் சாப்பிட்டு விட்டு, திண்டு தலையணையில் படுத்திருக்கும்போதும்,உடம்பு இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் உயிரை மறந்து விடுகிறோம். உடம்பைப் பற்றிய நினைவு உயிரை மறைக்கிறது. உடம்பை இயக்குவது உயிர் என உணர்ந்தவர்கள், உயிரை இயக்கித் தோன்றாத் துணையாக இருப்பது எது எனச் சிந்திப்பது இல்லை.
செத்துப் போனான் ஒருவன். அவனுடைய உறவினர்கள் எல்லாம் கத்தி அலறி அடித்துக் கொண்டு அழுதார்கள். "ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டால். "உயிர் போய்விட்டது. அதனால் அழுகிறோம்" என்றார்கள். "உயிர் போனதை நீங்கள் பார்த்தீர்களா? அல்லது உடம்பில் வந்து உயிர் பொருந்தியதையாவது பார்த்தீர்களா? இரண்டையும் நீங்கள் பார்க்கவில்லையே! கண்ணாலே காணாத பொருளுக்காக ஏன் அழுகிறீர்கள்? கண்ணால் பார்த்த உடம்புதான் இருக்கிறதே. இதைக் கொண்டு போய்ப் பத்திரமாக வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள்" என்று சொன்னால் எப்படி இருக்கும்?
கண்ணால் காணாவிட்டாலும், உடம்பை இயக்குவது உயிர் என்று நமது பகுத்தறிவுக்குத் தெரியும். உடம்புக்குள் உயிர் இருப்பதனாலே தான் உடம்பு ஆடுகின்றது என்றால், உயிர் இயங்குவதற்கு காரணமாய் இருப்பது எது என்று நுட்பமாகச் சிந்தித்து உணரவேண்டும். நுட்பமான உயிரை, இயக்குவது மிகு நுட்பமான பொருளாக இருக்கவேண்டும். அதனால்தான், உயிரும், அதனை இயக்குகின்ற பொருளும் நமது கண்ணுக்குப் புலனாவதில்லை. மிகு நுண்மையான பொருளுக்கே ஆற்றல் அதிகம் உண்டு. நுட்பமான பொருள் உயிர். மிக நுட்பமான பொருள் இறைவன். "நோக்கு அரிய நோக்கே! நுணுக்க அரிய நுண்ணுணர்வே" என்பது மணிவாசகம். நமக்கு வெளிப்படையாகத் தோன்றாவிட்டாலும், உயிர்க்குத் துணையாகவே இறைவன் இருக்கிறான். அதனால் அவனைத் "தோன்றாத் துணை" என்று சொல்வார்கள். நமக்குத் தோன்றாமல் இருக்கிற உயிர்,உடம்பை இயக்குவது போல நமக்குத் தோன்றாமல் இருக்கும் ஆண்டவன் உயிரை இயங்க வைக்கிறான்.
ஒரு மாதத்திற்கு அரிசி வேண்டுமே என்று சம்பளம் வந்ததும் ஒரு மூட்டை அரிசி வாங்கிப் போட நமக்குத் தெரிகிறது. ஒரு வருடத்திற்கு வேண்டுமே என்று ஒரு பத்து வேட்டி சட்டை வாங்கி வைத்துக் கொள்ளத் தெரிகிறது. நமக்குப் பிறந்திருக்கும் பெண்ணுக்குத் திருமணம் பண்ண வேண்டுமே என்று, அவள் பிறந்த அன்றிலிருந்தே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரிகிறது. இவை எல்லாம் பின்னால் வரும் காரியங்களை நினைந்து செய்கின்றவை அல்லவா? இப்படி எல்லா வகைகளிலும் வருமுன் காப்பவர்களாக இருந்து கொண்டு, மரணம் நிச்சயமாக வந்துவிடுமே என்று எண்ணி, மரணத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு எந்தவிதமான முயற்சியையும் செய்யாமலே இருக்கிறோம்.
"ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்!
அகங்காரப் பேய்பிடித்தீர்! ஆடுதற்கே அறிவீர்!
கூற்று வருங்கால் அதனுக்கு எதுபுரிவீர்,ஐயோ!
கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே!
வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்!
வீண் உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,
சாற்று உவக்க எனதுதனித் தந்தை வருகின்ற
தருணம் இது. சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே".
என்று நமது நிலைக்கு இரங்கி அறிவுரை பகர்ந்து அருளுகின்றார் வள்ளல்பெருமான்.
நமக்கு உடம்புக்கு ஏதவாது வந்துவிட்டால், மருத்துவரை அழைத்து வர விரும்புகின்றோம். மருத்துவரோ, நோயாளியைத் தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து வரச் சொல்கின்றார். மருத்துவர் தமது கௌரவத்தைப் பார்க்கின்றார். நோயாளி எவ்வளவு பெரியவராக இருந்தாலும், அவரது கௌரவம் மருத்துவரிடத்தில் செல்லுபடியாகாது.
உடல் நோயைத் தீர்க்கின்றேன் என்று சொல்லுகின்ற மருத்துவரை விடவும், உடல் நோயோடு, உயிர்க்கு உண்டான பிறிவிப் பெரும்பிணியையும் தீர்க்கின்றவன் ஆன இறைவன் "பவரோக வயித்தியநாதன்" ஆவான். "மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லவன்" அவன். இவ்வளவு பெரிய மருத்துவன் கௌரவம் பார்ப்பது இல்லை. யார் யார் எங்கெங்கு இருந்து தன்னை உளமார அழைக்கின்றார்களோ, அவர்கள் இருக்கும் இடம் தேடி ஓடி வந்து காத்து அருள் புரிகின்ற கருணாமூர்த்தி அவன். கருணையே வடிவமானவன். "ஒ" என்று வாய் ஓயாமல் கூவி அழைக்கவேண்டாம். உளமார உருகி நினைத்தாலே போதும். உள்ளமாகிய கதவைத் திறந்து வைத்தால் போதும். ஓடி வந்து உதவுவான் அவன்.
ஆபத்துக் காலத்தில் மட்டுமல்ல. வாழ்கின்ற காலத்திலும் நமக்கு வேண்டியதை அருள் புரிபவன் அவன்தான். அருணகிரிநாதப் பெருமான் வேண்டியதை எல்லாம் அருள் புரிந்தான் இறைவன். வேண்டிய இடங்களில் எல்லாம் வந்து அருட்காட்சி கொடுத்து, வேண்டியதை அருளினான். "வேண்டியபோது அடியர் வேண்டிய போகம் இதை வேண்ட, வெறாது உதவு பெருமாளே" என்றும், "வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவு பெருமாளே" என்றும் முருகப் பெருமானுடைய அருட்கருணையைப் பலவாறாகப் போற்றி உள்ளார்.
திருச்செங்கோடு என்னும் திருத்தலத்திற்கு வந்து முருகனை வழிபட்ட அருணகிரியார் ஓரு வேண்டுகோளை வைக்கின்றார். கந்தர் அலங்காரத்தில், “இந்த உடம்பு அழிவதற்கு முன்னாலே என்னை வந்து நீ காத்தருள வேண்டும்"என்ற வேண்டுகோளை வைக்கின்றார். எத்தனையோ இடங்களில் எத்தனையோ வகையான விண்ணப்பங்களை வைத்தவர் அருணகிரியார். தாம் உயிரோடு இருக்கும்போதே தம்மை வந்து ஆண்டு கொள்ள வேண்டுமென்று அவர் விண்ணப்பம் போட்ட இடம் திருச்செங்கோடு. அங்குள்ள முருகனைப் பார்த்து, "தெய்வத் தன்மை பொருந்தியதும், அழகிய மலையும் ஆகிய திருச்செங்கோட்டில் வாழுகின்ற செழுமையான சுடரே! கூர்மை பொருந்திய வேலைத் திருக்கையில் தாங்கிய தெய்வமே! அடியேன் தேவரீரை ஒருபோதும் மறக்கமாட்டேன். ஐம்புலன்களுக்கு இடம் உண்டாகும்படி, இரண்டு கால்களை நிறுத்தி, அதனிடத்தில் இரண்டு கைகளை அமைத்துள்ள வீடுபோன்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்பாகவே, தேவரீர் அடியேனுக்குக் காட்சி தந்து காத்து அருள் புரியவேண்டும்" என்று விண்ணப்பிக்கின்றார்.
இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்து, மரணம் அடைந்து, உடம்பு நாற்றமெடுத்து அழியக்கூடாது. அழியும் உடம்பை அழியா உடம்பாய் மாற்றவேண்டும் என்பது அருணகிரிநாதருடைய அவா. முருகப் பெருமானிடம் விண்ணப்பம் செய்தார். அவருடைய விண்ணப்பம் பலித்துவிட்டது. மற்றவர்கள் மரணம் அடைவதைப் போல அல்லாமல், கிளியாக மாறி இறைவன் திருக்கரத்தில் அமர்ந்துவிட்டார். அவருடைய கருவி கரணங்கள் எல்லாம் சிவமயமாக மாறிவிட்டன.
கிளியாக மாறிய நிலையிலிருந்து "கந்தர் அநுபூதி"யைப் பாடினார். கந்தர் அனுபூதியில் உள்ள திருப்பாடல்களில் வேறு எந்தத் திருத்தலமும் குறிக்கப் பெறவில்லை. "நாகாசலம்" என்னும் ஒரே ஒரு திருத்தலம்தான் குறிக்கப் பெறுகின்றது. திருச்செங்கோடு என்னும் திருத்தலம், உரககிரி, நாககிரி. நாகமலை, நாகாசலம் என்றும் வழங்கப் பெறும்.
கந்தர் அனுபூதியைப் பாடும்போது, இறைவன் தமது விண்ணப்பத்தை நிறைவேற்றித் தந்த அருமை நினைவுக்கு வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் சுடரே! வைவைத்த வேற்படை வானவனே! மறவேன் உனை நான்" என்று விண்ணப்பித்துக் கொண்ட அந்த அருமையான திருத்தலத்தை அருணகிரிநாதரால் மறக்க முடியாது. எனவே, கந்தர் அனுபூதியைப் பாடும்போது மற்ற திருத்தலங்கள் நினைவுக்கு வரவில்லை. என்றாலும், திருச்செங்கோட்டை மறக்க முடிவில்லை. அந்த அருள் நினைவில்,
"நாகாசல வேலவ! நாலுகவித்
தியாகா! சுரலோக சிகாமணியே!"
என்று கந்தர் அனுபூதியில், நாகாசல வேலவனை மாத்திரம் மறக்காமல் பாடினார்.
இந்த உடம்பு என்றாவது ஒரு நாள் அழிந்து போகும். அப்போது பெற்றாரும், உற்றாரும் சூழ்ந்துகொண்டு அழுது அழுது ஓய்ந்துபோவார்கள். அந்த நிலை வராதபடிக்கு, மெய்ப்பொருளைத் தனக்கு உபதேசித்துக் காத்து அருளிய அருமையை நினைந்து,
"கூகா என என் கிளை கூடிஅழப்
போகாவகைமெய்ப்பொருள் பேசியவா!"
என்று வியந்து பாடுகின்றார்.
அருணகிரிநாதப் பெருமானாரின் வாழ்க்கையில் திருச்செங்கோடு மறக்க முடியாததொரு அற்புதமான திருத்தலம். அவருடைய விண்ணப்பம் பலித்த திருத்தலம். அவர் போட்ட விண்ணப்பத்தைக் காண்போம்...
"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே!
வைவைத்த வேற்படை வானவனே !மறவேன் உனை நான்;
ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஒட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னேவந்து காத்தருளே".
தெய்வத்தன்மை பொருந்திய அழகிய மலையாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் செழுமை மிக்க சோதியே! கூர்மையை உடைய வேலாயுதத்தையுடைய தேவனே! உன்னை நான் மறக்க மாட்டேன். ஐந்து பொறிகளுக்கு இடம் கிடைக்கும்படியாக இரண்டு காலை நிறுவி அதில் இரண்டு கைகளைப் பொருத்திய உடம்பாகிய வீடு மரணம் அடைந்து குலைவதற்கு முன்பாகவே வந்து அடியேனைக் காத்தருள்வாயாக!
நாமும் விண்ணப்பத்துக் கொள்வோம். நமது கோரிக்கை பலிக்கட்டும்.
1 comment:
Migavum arumaiyana pathivu. Nandri
Post a Comment