பெண்மையைப் போற்றுவோம்
-----
ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்ற எல்லோரும், இவர்களால் எல்லா வகையிலும் அனுபவத்தைப் பெற்றவர்களே, அன்பவத்தைப் பகிர்ந்தவர்களே ஆவர். இந்தக் கொண்டாட்டங்களால் உண்மையிலேயே அறிவு விளங்கி இருந்தால், அன்னை தந்தையர்களைப் புறக்கணிக்கும் நிலை வந்திருக்காது. பெண்களை இன்னமும் போகப் பொருளாகவும், அடிமையாகவும் எண்ணும் நிலை தொலைந்து இருக்கவேண்டும்.
நமது வீட்டுப் பெண்மக்களை, உறவுகளை "வாடி" "போடி" என்று அழைக்காமல், பேசாமல், "அம்மா" என்று வாயார அழைப்போம்.
அறநிலையில் நின்று ஒழுகுவதில் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் உறுதி குலையாதவர்களாக இருந்தார்கள் பெண்கள். எனவேதான், "பெண்ணின் பெருந்தக்க யா உள, கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்" என்று பெண்மையைச் சிறப்பித்துப் போற்றினார் திருவள்ளுவ நாயனார்.
"அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். செல்வர்களின் வளர் செல்வம் நான்" என்று கூறிய கண்ணன், "பெண்மைகளுள் நான் புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கின்றேன்" என்று (பகவத் கீதை, அத்.10 - பாடல் 34) கூறியுள்ளதை எண்ணிப் பார்த்தல் நலம்.
"பார்த்தா! கீழான பிறவியர்களாய் இருக்கின்ற பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்து இருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்" என்று (பகவத் கீதை அத்.9, பாடல். 32) கண்ணன் கூறியதில் இருந்து பெண்களை மட்டுமல்லாது, பிற வருணத்தாரையும், கீழானவர்களாக மதித்து வந்தமை புலனாகின்றது.
உலகில் எந்த நிலையிலும் உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களும் விரவியே இருப்பர். ஏனெனில், இது "மிச்சிர லோகம்" (மிச்சிரம் என்றால் கலப்பு என்று பொருள்) புண்ணியலோகம் ஆகிய சுவர்க்கத்தில், புண்ணியமே செய்தவர்களே இருப்பார்கள். பாவம் செய்தவர்களுக்கு வாழிடமாகிய நரகத்தில் பாவத்தையே பயின்றவர்கள் இருப்பார்கள். பாவம் புண்ணியம் இரண்டும் கலந்து அனுபவிக்க வேண்டியவர்கள் இந்த மண்ணுலகில், அவரவரது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப வந்து பிறப்பார்கள். பிறக்கும்போது எல்லோரும் நல்லவரே. அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் சூழலுக்கும், செயலுக்கும் ஏற்ப வாய்க்கும்.
பெண்ணின் பெருமையைத் திருவள்ளுவ நாயனார் போற்றியதோடு, பெண்ணின் இலக்கணம் குறித்தும் பேசி இருப்பார். பெண்ணின் இலக்கணத்தைப் பேசும் பாடல் ஒன்றை நீதிவெண்பாவில் காணலாம்.
"அன்னை தயையும் அடியாள் பணியும், மலர்ப்
பொன்னின் அழகும், புவிப்பொறையும், — வண்ணமுலை
வேசி துயிலும், விறல் மந்திரி மதியும்,
பேசில் இவை உடையாள் பெண்".
இதன் பொருள் ---
சொல்லப் போனால், தாயைப் போன்ற அன்பும், வேலைக்காரியைப் போலத் தொண்டும், தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற அழகும், நிலத்தைப் போலப் பொறுமையும், அழகிய தனங்களை உடைய வேசியைப் போலத் துயில் இன்பம் தரும் திறனும், வெற்றி மிக்க அமைச்சரைப் போல அறிவும், ஆகிய இந்த ஆறு இயல்புகளையும் உடையவளே பெண் என்று சொல்லத் தக்கவள்.
இதற்கு நேர் மாறான பாடல் ஒன்றும் அதில் உண்டு.
"பெண்ஒருத்தி பேசில் பெரும்பூமி தான் அதிரும்,
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள், – பெண்மூவர்
பேசில் அலைசுவறும், பேதையே! பெண் பாலர்தாம்
பேசில் உலகு என் ஆமோ பின்".
இதன் பொருள் ---
பெண் ஒருத்தி பேசினால் இந்தப் பெரிய நிலவுலகம் நடுங்கும். பெண்மக்கள் இருவர் பேசுவாரானால், விண்மீன்கள் உதிர்ந்து கீழே விழும். பெண்மக்கள் மூவர் பேசினாலோ, கடல் நீர் வற்றி வறண்டு விடும். பெண்மக்கள் பலர் பேசத் தொடங்கி விட்டால், பின்னர் இந்த உலகம் என்ன ஆகுமோ?
இது எதைக் காட்டுகிறது என்றால், உருவத்தில் ஒத்து இருந்தாலும், நல்ல பெண்களும் உண்டு. அல்லாத பெண்களும் உண்டு. விதி ஒன்று உண்டு என்றால், விதிவிலக்கும் இருக்கும். இதற்கும், அந்த நூலில் ஒரு பாடல் உண்டு....
"கற்பூரம் போலக் கடல் உப்பு இருந்தாலும்,
கற்பூரம் ஆமோ கடல் உப்பு; - பொற்பு ஊரும்
புண்ணியரைப் போல இருந்தாலும், புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ புகல்".
இதன் பொருள் ---
கடல் நீரில் உண்டாகும் உப்பு, உருவத்தால் கற்பூரத்தைப் போலவே வெண்மையாக இருக்கும். நிறத்தில் வெண்மையாக இருந்தாலும், அந்த உப்பு, தனது தன்மையில் கற்பூரம் ஆகிவிடுமோ? ஆகாது. அதுபோல, தீவினையாளர் அழகு மிகுந்த நல்வினையாளரைப் போலவே இருந்தாலும், தன்மையிலும் நல்வினையாளராக ஆவாரோ?
இவை எல்லாம் பெண்மக்களுக்கு வைத்துப் பாடப்பட்டு இருந்தாலும், ஆண்மக்களுக்கும் பொருந்தும் என்று கொள்ளவேண்டும். எங்கெல்லாம் அவன் என்று குறிப்பிடப்படுகிறதோ, அங்கே அவள் என்பதையும் கொள்ளவேண்டும். எங்கெல்லாம் அவள் என்று குறிப்பிடப்படுகிறதோ, அங்கே அவன் என்பதையும் கொள்ளவேண்டும். திருக்குறளில் பல இடங்களில் "ஒருவன்" என்ற சொல் வரும். அதனை ஒருத்தி என்பவருக்கும் பொருந்துமாறு கொள்ளவேண்டும். பன்மையில் "ஒருவர்" என்று வருகின்ற இடங்களில், இருபாலருக்கும் பொருந்துவதாகக் கொள்ளவேண்டும்.
பெற்றவர் இறந்தால், கொள்ளி வைப்பதற்கு ஒரு ஆண்மகன் வேண்டும் என்று ஒரு வழக்கம் தமிழ்நாட்டு மக்களை எப்படியோ தொற்றிக் கொண்டுவிட்டது. ஆண்மகன் இருந்து, அவன் கொள்ளி வைத்தால்தான் மோட்சம் என்று ஒரு நம்பிக்கை. இது தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் மாறான கருத்து.
பொறுமைக்கும், அன்புக்கும் இலக்கணமாகத் திகழ்பவர்கள் பெண்கள். பக்குவப்பட்ட உயிர்களே பெண் பிறவிக்கு வரும். பிறந்த வீட்டிலே சர்வ சுதந்திரத்தோடு வாழ்ந்து இருந்த ஒரு பெண், தனக்கு மணமான பிறகு, தனக்கு அதுவரை இருந்து வந்த சுதந்திரம் எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிட்டு, தன்னந் தனியாகப் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கின்றார். புகுந்த வீட்டில் உள்ள எல்லோரையும் புரிந்து கொண்டு, அவரவருக்கு ஏற்ப பக்குவத்தோடு பழகி, புகுந்த வீட்டை விளங்கச் செய்கின்றார். அதனால், தான் பிறந்த வீட்டிற்கும் பெருமையைச் சேர்க்கின்றார். அவருக்குக் கணவனாக வாய்த்தவர், தனது வீட்டில் அதுவரை அனுபவித்து வந்த எதையும் இழக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் மனைமாட்சி ஆகும். "மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்" என்பது திருக்குறள்.
மனையாள் இல்லாத வீடு காடு ஆகும் என்று "நாலடியார்" கூறுகின்றது.
"மழை திளைக்கும் மாடமாய், மாண்பு அமைந்த காப்பாய்,
இழைவிளக்கு நின்று இமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு".
இதன் பொருள் ---
மழைமேகங்கள் வந்து கவியும் அளவுக்கு உயர்ந்து ஓங்கிய மாடங்களும், மிகச் சிறந்த பாதுகாப்பு அமைப்புகளும், ஒளி வீசும் அழகிய விளக்குகள் பலவும் இருந்து என்ன பயன்? அன்பும் நல்ல குணமும் கொண்ட இல்லத்தரசி இல்லாத வீடு ஒரு வீடா? அது எவரும் அண்ட முடியாத காடு போன்றது.
"தாரம் மாணாதது வாழ்க்கை அன்று". என்கின்றது முதுமொழிக் காஞ்சி என்னும் நூல். மனையாள் மாட்சிமைப்படாத மனைவாழ்க்கை மனைவாழ்க்கை அல்ல என்பது இதன் பொருள்.
"வான்தரு கற்பின் மனையுறை மகளிர்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருள் உரை தேறாய்".
என்று "மணிமேகலை" என்னும் காப்பியத்திலும், திருக்குறள் கருத்து எடுத்து ஆளப் பெற்று உள்ளது. மணிமேகலை ஆசிரியர், "வான் தரு கற்பு" என்றார். வான் என்றது, இங்கே வானம் தரும் மழையைக் குறித்து நின்றது. ஆக, கற்பு நெறியில் நின்ற பெண்டிர் வேண்ட மழைபெய்யும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
"கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி,
கொண்டன செய்வகை செய்வான் தவசி, கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன், இவர் மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை".
என்கின்றது "திரிகடுகம்" என்னும் நூல். இதன்படி, தன்னைக் கொண்டவனுடைய குறிப்பினை அறிந்து அதன்படி ஒழுகுகின்ற மனைவி, தான் மேற்கொண்ட விரதங்களை முறைப்படி கடைப்பிடிக்கின்ற தவசி, தீயவற்றை விலக்கி, மக்களைக் காத்து, நன்மை பயக்கும் செயல்களை மேற்கொள்ளுகின்ற அரசன் ஆகிய இந்த மூவரும் பெய் என்றால் மழை பெய்யும் எனப்பட்டது.
"வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை,
நீதி மன்னர் நெறிமுறைக்கு ஓர் மழை,
மாதர் கற்பு உடை மங்கையர்க்கு ஓர் மழை,
மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே".
என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.
கந்தபுராணம் மார்க்கண்டேயப் படலத்தில், பின்வருமாறு ஒரு பாடல் வருகின்றது...
"காண் தகைய தம் கணவரைக் கடவுளார் போல
வேண்டல் உறு கற்பினர் தம் மெய்யுரையில் நிற்கும்,
ஈண்டை உள தெய்வதமும் மாமுகிலும் என்றால்,
ஆண்தகைமை யோர்களும் அவர்க்கு நிகர் அன்றே".
கணவனைக் கடவுள் போல் எண்ணி வழிபடும் கற்பு உடைய மகளிரின் சொல்வழி தெய்வமும், மழைமேகமும் நிற்கும் என்னும்போது, அப் பெண்களுக்கு ஆடவர்கள் நிகர் ஆகார் என்கின்றது இப் பாடல்.
பெரிய புராணத்தில், மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில், தெய்வச் சேக்கிழார் பெருமான், பின் வருமாறு பாடுகின்றார்...
"குழைக்கு அலையும் வ டிகாதில்
கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங் கற்பின்
மனைக் கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த
இப் பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவப்
பெண்கொடியைப் பெற்று எடுத்தார்".
குழையை அணிந்ததால் அசைகின்ற அழகிய திருச்செவியை உடைய கூத்தப்பெருமான் திருவருளால், மழை வேண்டும் பொழுது, அதனை உடன் உதவுதற்கு உரிய பெரும் கற்பினை உடைய தமது மனைவியார் திருவயிற்றில், ஒழிவு இன்றிப் பெருகிவரும் வினைப் பயன்களால் வரும் பிறவி என்னும் கொடிய சுழற்சியில் இருந்து, தப்பிப் பிழைக்கின்ற நல்ல நெறியினைத் தமக்கு உதவ வல்லது ஒரு பூங்கொடி போலும் சாயலை உடைய பெண் குழந்தையை மானக்கஞ்சாற நாயனார் பெற்றெடுத்தார் என்கின்றது இப் பாடல்.
இதனால் மழை வேண்டும் கற்பினை உடையவர் பெண்கள் என்பது மட்டுமல்ல. ஆண்மகனைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வீடுபேறு (மோட்சம்) அடையமுடியும் என்னும் கருத்தும் மறுக்கப்பட்டது. பெண்ணைப் பெற்றால், அவள் தனக்கு நீர்க்கடன் அறிக்கவில்லை என்றாலும், வீடுபேற்றை அடையலாம் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது.
"மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!"
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் இந்தப் பாடல் முதல்கண்ணி மட்டுமே எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. அடுத்த கண்ணி (இரண்டு வரிகள்) இனிமை மிக்கது. அறிந்து தெளியவேண்டிய செய்தி இது. பிச்சை எடுப்பவருக்கு உணவு தந்து அளிப்பவர்கள் எந்த வீட்டிலும் பெண்களாகத் தான் இருப்பார்கள். மணிமேகலை அமுதசுரபியைக் கையில் ஏந்திப் பிச்சைக்குச் சென்றபோது, ஆதிரை என்னும் ஒரு பெண்மணி பிச்சை இடுகிறாள். இதைப் பாட வந்த சீத்தலைச் சாத்தனார் ஒர் அருமையான வாழிவியல் உண்மையை நமக்குக் காட்டுகிறார்.
"மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா ஓவியம் போல நிற்றலும்,
தொழுது வலம்கொண்டு துயர்அறு கிளவியோடு
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை இட்டனள் ஆர்உயிர் மருந்துஎன்."
மணிமேகலை ஆதிரையின் இல்லத்திற்குச் சென்று, அணி செய்யப்படாத ஓவியப் பாவை போல நிற்றலும், அவளை வலம்வந்து வணங்கி, இன்சொற்களோடு, மணிமேகலை கையில் கொண்ட அமுதசுரபியினது அகன்ற உள்ளிடம் நிறையுமாறு, ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை 'நிலவுலகம் முழுவதும் பசிப்பிணி தீர்வதாக' என்று கூறி இட்டனள். தான் இட்ட சோறு கொண்டு இந்த உலகம் முழுதுமே பசி என்னும் நோய் இல்லாமல் வாழவேண்டும் என்று எண்ணுகின்ற பரந்த கருணை உள்ளம் ஆதிரையிடம் இருந்தது.
பெண்கள் கையைப் பார்த்துதான் இந்த உலகில் அறங்கள் வளர்கின்றன என்று சொல்லி, பெண்கள் இல்லாவிட்டால் இந்த உலகில் அறம் எங்கே வளரப் போகிறது? என்று ஒரு வினாவை எழுப்பி, இதன் மூலமாகப் பெண்மக்களின் உயர்வைக் காட்டுகிறார் கவிமணி அவர்கள். இந்தக் கருணையைத்தான் "பால் நினைந்து ஊட்டும் தாய்" என்றார் மணிவாசகப் பெருமான். பெண்மையின் சிறப்பை கவிமணி அவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடித் தந்து உள்ளார்! மேலும் பாடுகிறார், படித்து இன்புறுங்கள்.
"அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
அன்பு ததும்பி எழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்து உருகித் - தெய்வ
கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?
ஊக்கம் உடைந்து அழும் ஏழைகளைக் காணில்
உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி அண்டையிலே - இரு
கண்இமை கொட்டாது இருப்பவர் ஆர்?
சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
சிந்தை அகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
முத்தம் அளிக்க வருபவர் ஆர்?
உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளி எடுத்து மடி இருத்தி - மக்கள்
அன்பைப் பெருக்கி வளர்ப்பவர் ஆர்?
நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?
ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
அன்போடு அகலாது இருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?
ஏங்கிப் புருடனைத் தேடி அழும் - அந்த
ஏழைக்கு இதம்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை இழந்தவரைத் - தினம்
சந்தோஷம் ஊட்டி வளரப்பவர் ஆர்?
சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
சேவடிக்கு அன்பு எழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?
மண்ணக வாழ்வினை விட்டு எழுந்து - மனம்
மாசிலா மாணிக்க மாய்ஒளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
வேண்டிய போதனை செய்பவர் ஆர்?
அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
இன்னகை யால்ஒளி செய்பவர் ஆர்?"
இவ்வாறு பெண்ணின் பெருமையைப் பாடி முடித்து, பெண்மக்களாய் அவதரித்து உள்ளோர்க்கு ஓர் அறிவுரையை அவர் கூறுகின்றார்.
இப்பெரு நற்கரு மக்கள் எல்லாம் - உமக்கு
ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?"
"மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம்
வாடித் தளர்ந்து வருந்துவதேன்?
தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்
தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?"
"செம்மையில் பெற்ற குணங்களெலாம் - நீங்கள்
செய்வினை யாலே திருத்துவீரேல்,
இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி
எய்திச் சுகமாய் இருப்பீரே."
எனவே, பெண்மையைப் போற்றுவோம், தாய்மையைப் போற்றுவோம் --- இன்று மட்டுமல்ல, என்றுமே. வார்த்தைகளால் அல்ல --- உள்ளத்தால்.