"வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்
மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை
வேண்டுவ எலாமமைப்பார்;
ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர்; தைலம்இட்டு
உறுதியாய் முழுகுவிப்பார்;
ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்;
உற்றநாள் நாலாகிலோ,
நாட்டம்ஒரு படியிரங் குவதுபோல் மரியாதை
நாளுக்கு நாள்குறைவுறும்;
நகைசெய்வர் மைத்துனர்கள்; அலுவல்பார் போஎன்று
நாணாமல் மாமிசொல்வாள்;
வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பள்; அவன்
மட்டியிலும் மட்டிஅன்றோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே."
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
வேட்ட அகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில் - மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன், மேன்மேலும் உபசரித்து - மேலும் மேலும் ஆதரவு காட்டி, விருந்துகள் சமைத்து - புதிய உணவுகளைச் சமைத்து, நெய்பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் - நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாக விரும்பியவற்றை யெல்லாம் செய்துவைப்பார்கள்;
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்து இடுவர் - உடலுக்கு வலிமை தரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்;
தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் - எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்;
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் - தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும் அளிப்பார்கள்;
உற்ற நாள் நாலாகிலோ - (அங்குத்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால்,
நாட்டம் ஒருபடி இறங்குவதுபோல் நாளுக்கு நாள் மரியாதை குறைவுறும் - அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல, மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்;
மைத்துனர்கள் நகை செய்வர் - மைத்துனர்கள் எல்லோரும் இகழ்ந்து பேசுவர்;
மாமி அலுவல் பார் போ என்று நாணாமல் சொல்வாள் - மனைவியின் தாயானவள், 'சென்று ஏதாவது வேலை செய்' என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்;
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் - அழகு மிக்க மனைவியும் அவனை ஒரு துரும்பு போல நினைப்பள்;
அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? - (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லனோ?
‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.' என்று பெரியோர் கூறுவர்.
No comments:
Post a Comment