72. மாமனார் வீட்டில் மருமகன் நிலை

 


"வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்

     மேன்மேலும் உபசரித்து

விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை

     வேண்டுவ எலாமமைப்பார்;


ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர்; தைலம்இட்டு

உறுதியாய் முழுகுவிப்பார்;

ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்;

     உற்றநாள் நாலாகிலோ,


நாட்டம்ஒரு படியிரங் குவதுபோல் மரியாதை

     நாளுக்கு நாள்குறைவுறும்;

நகைசெய்வர் மைத்துனர்கள்; அலுவல்பார் போஎன்று

     நாணாமல் மாமிசொல்வாள்;


வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பள்; அவன்

     மட்டியிலும் மட்டிஅன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வேட்ட அகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில் - மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன், மேன்மேலும் உபசரித்து - மேலும் மேலும் ஆதரவு காட்டி, விருந்துகள் சமைத்து - புதிய உணவுகளைச் சமைத்து, நெய்பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் - நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாக விரும்பியவற்றை யெல்லாம் செய்துவைப்பார்கள்; 

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்து இடுவர் - உடலுக்கு வலிமை தரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்; 

தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் - எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்; 

ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் - தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும் அளிப்பார்கள்; 

உற்ற நாள் நாலாகிலோ - (அங்குத்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால், 

நாட்டம் ஒருபடி இறங்குவதுபோல் நாளுக்கு நாள் மரியாதை குறைவுறும் - அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல, மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்; 

மைத்துனர்கள் நகை செய்வர் - மைத்துனர்கள் எல்லோரும் இகழ்ந்து பேசுவர்; 

மாமி அலுவல் பார் போ என்று நாணாமல் சொல்வாள் - மனைவியின் தாயானவள், 'சென்று ஏதாவது வேலை செய்' என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்; 

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் - அழகு மிக்க மனைவியும் அவனை ஒரு துரும்பு போல நினைப்பள்; 

அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? - (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லனோ?

‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.'   என்று பெரியோர் கூறுவர்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...