89. தத்துவத் திரயம்.

 


"பூதம்ஓர் ஐந்துடன், புலன்ஐந்தும், ஞானம்

     பொருந்தும்இந் திரியம் ஐந்தும்,

  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்

     புகலரிய கரணம் நான்கும்,


ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;

     உயர்கால நியதி கலையோடு

  ஓங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று

     உரைசெய்யும் ஓர் ஏழுமே


தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்

     திகழ்சுத்த வித்தை ஈசன்,

  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே

     சிவதத்வம் என்று அறைகுவார்;


ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே."


இதன் பொருள் ---

ஆதி வடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்  அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் வீற்றிருந்து சனகாதியர் நால்வருக்கு அருள்புரிந்த பெரியோனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் - (அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம் ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம் ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர் சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்;

உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன் மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம் என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர்;

இவை அலால் - இவையல்லாமல், 

திகழ் சுத்தவித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும் சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய) ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.


விளக்கம் ---

பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். 

புலன் ஐந்து: சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். 

ஞான இந்திரியம் (அறிவுப் பொறி) ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி. 

கன்ம இந்திரியம் (தொழிற்பொறி) ஐந்து : வாக்கு, பாதம், பாணி(கை), பாயுரு (எருவாய்), உபத்தம் (கருவாய்) 

கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம். 

ஆன்மதத்துவம் - உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள். சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள், ஆக தத்துவங்கள் முப்பத்தாறு.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...