"பூதம்ஓர் ஐந்துடன், புலன்ஐந்தும், ஞானம்
பொருந்தும்இந் திரியம் ஐந்தும்,
பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
புகலரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
உயர்கால நியதி கலையோடு
ஓங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று
உரைசெய்யும் ஓர் ஏழுமே
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்
திகழ்சுத்த வித்தை ஈசன்,
சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
சிவதத்வம் என்று அறைகுவார்;
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே."
இதன் பொருள் ---
ஆதி வடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய் அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் வீற்றிருந்து சனகாதியர் நால்வருக்கு அருள்புரிந்த பெரியோனே!,
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் - (அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம் ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம் ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர் சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்;
உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன் மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம் என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர்;
இவை அலால் - இவையல்லாமல்,
திகழ் சுத்தவித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும் சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய) ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.
விளக்கம் ---
பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான்.
புலன் ஐந்து: சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம்.
ஞான இந்திரியம் (அறிவுப் பொறி) ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி.
கன்ம இந்திரியம் (தொழிற்பொறி) ஐந்து : வாக்கு, பாதம், பாணி(கை), பாயுரு (எருவாய்), உபத்தம் (கருவாய்)
கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
ஆன்மதத்துவம் - உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள். சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள், ஆக தத்துவங்கள் முப்பத்தாறு.
No comments:
Post a Comment