"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
எளியோர்க்கு எலாம் அமுதமே - ஆற்றல் அற்றவர்கள் எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
அஞ்சு கணை மார வேட்கு - ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங் கழை - கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்,
நாரி கருவண்டு இனம் - அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்).
மேல் விடும் கணைகள் அலர் ஆம் - (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்,
தேர் வீசிடும் தென்றல் - தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்),
பரிகள் பைங்கிள்ளையே - குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்).
வேழம் கெடாத இருள் ஆம் - யானை அழியாத இருளாகும்.
பெருஞ்சேனை வஞ்சியர் - மிகுபடை பெண்கள் (ஆவர்),
உடைவாள் கைதை - உடைவாள் தாழை மடல் (ஆகும்),
முரசம் நெடிய வண்மைபெறு கடல் ஆம் - போர் முரசு நீண்ட கொடைத் தன்மை பொருந்திய கடலாகும்,
பதாகை மகரம் - கொடி மகர மீன் ஆகும்,
காகளம் வரு கோகிலம் - சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும்,
பெரும் போர்க்களம் மனதே - பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,
பாடல் சஞ்சரிக இசை - பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்,
கவிகை குமுதம் நேயன் - குடை சந்திரன் (ஆவான்);
மனைவி சார் இரதியே ஆம் - காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள்,
மகுடம் தறுகண் மடமாதர் இளமுலை ஆம் - அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்,
தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் - எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும்,
என்பர் - என்று அறிஞர் கூறுவர்.
(வி-ரை.) சஞ்சரிகம் - வண்டு. குமுதம் - அல்லி. அல்லியின் காதலன் சந்திரன் என்பர். சந்திரனைக் கண்டால் அல்லி மலரும். வெம்மை+சிலை - வெஞ்சிலை. பசுமை+கிள்ளை - பைங்கிள்ளை. செழுமை+கழை - செழுங் கழை. பெருமை + சேனை - பெருஞ்சேனை. உடைவாள் - அரையில் கட்டப்படும் வாள்.
No comments:
Post a Comment