91. மன்மதனின் துணைப் பொருள்கள்

 

"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;


வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;


சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;


அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

எளியோர்க்கு எலாம் அமுதமே - ஆற்றல் அற்றவர்கள் எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

அஞ்சு கணை மார வேட்கு - ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங் கழை - கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், 

நாரி கருவண்டு இனம் - அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). 

மேல் விடும் கணைகள் அலர் ஆம் - (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், 

தேர் வீசிடும் தென்றல் - தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்), 

பரிகள் பைங்கிள்ளையே - குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). 

வேழம் கெடாத இருள் ஆம் - யானை அழியாத இருளாகும். 

பெருஞ்சேனை வஞ்சியர் - மிகுபடை பெண்கள் (ஆவர்), 

உடைவாள் கைதை - உடைவாள் தாழை மடல் (ஆகும்), 

முரசம் நெடிய வண்மைபெறு கடல் ஆம் - போர் முரசு நீண்ட கொடைத் தன்மை பொருந்திய கடலாகும், 

பதாகை மகரம் - கொடி மகர மீன் ஆகும், 

காகளம் வரு கோகிலம் - சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், 

பெரும் போர்க்களம் மனதே - பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும், 

பாடல் சஞ்சரிக இசை - பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், 

கவிகை குமுதம் நேயன் - குடை சந்திரன் (ஆவான்); 

மனைவி சார் இரதியே ஆம் - காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், 

மகுடம் தறுகண் மடமாதர் இளமுலை ஆம் - அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும், 

தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் - எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், 

என்பர் - என்று அறிஞர் கூறுவர்.

     (வி-ரை.) சஞ்சரிகம் - வண்டு. குமுதம் - அல்லி. அல்லியின் காதலன் சந்திரன் என்பர். சந்திரனைக் கண்டால் அல்லி மலரும். வெம்மை+சிலை - வெஞ்சிலை. பசுமை+கிள்ளை - பைங்கிள்ளை. செழுமை+கழை - செழுங் கழை. பெருமை + சேனை - பெருஞ்சேனை. உடைவாள் - அரையில் கட்டப்படும் வாள்.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...