"பரியாமல் இடும்சோறும், ஊமைகண்ட
கனவும்,ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
இல்லாதான் அறிவு மேதான்,
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
நெறியாரே! கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு
குறித்ததெனச் செப்ப லாமே."
இதன் பொருள் ---
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள் நெறியாரே - கரிகாற்சோழன் வழிபாடு செய்த, திருத் தண்டலைநீள் நெறியில் எழுந்தருளிய சிவபரம்பொருளே!
பரியாமல் இடும் சோறும் - அன்பு இன்றிப் படைக்கும் உணவும்,
ஊமை கண்ட கனவும் - ஊமையன் கண்ட கனவும்,
பரிசில் ஒன்றும் ஈயான் - புலவருக்குப் பரிசு ஒன்றும் கொடாமல், அரிது ஆன செந்தமிழின் அருள் சிறிதும் இல்லாதான் அறிவும் - அருமையான செந்தமிழின் அருளைச் சற்றும் பெறாதவனுடைய அறிவும்,
(ஆகிய இவை யாவும்)
கதித்த ஓசை தெரியாத செவிடன் காதினில் - பேரொலியை அறியாத செவிடனுடைய காதில், சங்கு குறித்தது எனச் செப்பலாம் - சங்கு முழங்கியது போல் ஆகும் என்று கூறலாம்.
விளக்கம் ---
அன்பொடு பரிமாறப்படும் உணவே உண்ணத் தகுந்தது.
"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி,
உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்.
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே."
என்பது விவேக சிந்தாமணி. "மனம் ஒத்த அன்புடன், முகம் மலர்ந்து, உபசாரங்கள் செய்து, உண்மையான சொற்களைப் பேசி, உப்பு இல்லாத கூழை வார்த்தாலும், அதனை உட்கொள்வது அமுதம் போல இனிமையைத் தரும். உடலுக்கும் நலத்தைச் செய்யும்" என்பது இதன் பொருள்.
முப்பழம் என்று சொல்லக் கூடிய மா, பலா, வாழை என்னும் பழ வகைகளோடு, பால் சோற்றையும், உள்ளத்தில் அன்பு இல்லாமல், முகம் சுளித்து விருந்தாக இடுவார்கள் ஆயின், அன்போடு இடப்படாத அந்த பகட்டான உணவை உண்டால், முன்னே வயிற்றை முட்டிக் கொண்டு இருந்த பசியோடு, முன்பு இருந்ததை விடக் கொடிய பசியானது உண்டாகும். அன்போடு இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத்தகும்.
"அதிதி தேவோ பவ". விருந்தினர்களை இறைவனாகவே எண்ணி, அருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவை, தவிசு அளித்தல், கை கழுவ நீர் அளித்தல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர் தரல், நீராட்டல், ஆடை சாத்தல், முப்புரி நூல் தரல், சந்தனக் குழம்பு தருதல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கு இடல், கருப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படும்.
"உபசரித்து அன்புடன் பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு அன்னம் ஆமோ?" என்பது அறப்பளீசுர சதகம்.
புலவருக்குப் பரிசு கொடுத்துச் செந்தமிழின் நயத்தை அவர்கள் வாயிலாக உணராதவனைச் ‘செந்தமிழின் அருள் சிறிதும் இல்லாதான்' என்றார்.
"ஊமையன் கண்ட கனவு", ‘செவிடன் காதினில் சங்கு" என்பவை மரபு மொழிகள்.
No comments:
Post a Comment