90. மன்மதன் அம்புகள் - அவற்றின் பண்புகள்

 



"வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;


வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;


நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,


அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அத்தனே - தலைவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

வனசம் செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள் கணைகள் ஆம் - தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை செயும் குணம் - இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில் ஆசையை எழுப்பும் - தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும், வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் - வினவுமிடத்துச் சிறப்புடைய மா மலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர் செயும் - அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் - குளிர்ந்த முல்லை மலர் (படுக்கையில்) விழச் செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் - நீலமலர் உயிரை ஒழிக்கும்,

மேவும் இவை செயும் அவத்தை - பொருந்தும் இவை உண்டாக்கும் நிலைகளாவன:- நினைவில் அதுவே நோக்கம் - எண்ணத்தில் அதுவே கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் - மற்றொன்றில் ஆசை நீங்கல், நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் - பெருமூச்சுடன் பிதற்றுதல், நெஞ்சம் திடுக்கிடுதல் - உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் - உணவில் வெறுப்பு, காய்ச்சல் - உடல் வெதும்புதல், நேர்தல் - மெலிதல், மௌனம் புரிகுதல் - பேசாதிருத்தல், அனைய உயிர் உண்டு இல்லை என்னல் - ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் - (ஆகிய இவை) பத்தும் ஆகும்.


No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...