"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து
நல்லவன்என் றுலகம் எல்லாம்
போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து
வாழ்பவனே புருடன், அல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த
பூதமென இருந்தால் என்ன?
காதவழி பேரில்லான் கழுதையோடு
ஒக்கும்எனக் காண லாமே!"
இதன் பொருள் ---
ஓத அரிய தண்டலையார் அடிபணிந்து - புகழுக்கு எட்டாத திருத்தண்டலை இறைவரின் திருவடிகளை வணங்கி, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - உலகமெங்கும் ‘இவன் நல்லவன்' என்று கூறும் அறிவுமிக்க பெயருடன் புகழும் பெற்றும் வாழ்வோனே ஆண்மகன்,
அல்லால் - (அவ்வாறு) இன்றி,
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன - ஈகைப் பண்பும், உயிர்கள்பால் இரக்கமும் இல்லாமல், பொன்னைக் காக்கும் பூதம்போல இருப்பதால் என்ன பயன்? (ஒரு பயனும் இல்லை)
காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காதவழியேனும் புகழ் இல்லாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று (உலககோர் சொல்லுவதை) அறியலாம்.
ஓதுதல் - சொல்லுதல். இறைவரைப் பற்றி ஓதுதலாவது புகழ்தல். "பூமிமேல் புகழ்தக்க பொருளே" என்பார் அப்பர் பெருமான். உலகில் புகழும்மு உரிய பொருள் இறைவன் ஒருவனே. அதுவே "பொருள்சேர் புகழ்" என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, ‘ஓத அரிய' என்பது ‘புகழ்தற்கரிய' எனப் பொருள் தந்தது.
No comments:
Post a Comment