75. வேசையர்

 



"தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடின்

     தேகசீ வன்போலவே,

சிநேகித்த உம்மையொரு பொழுதுகா ணாவிடின்

     செல்லுறா தன்னம்என்றே


கூடிச் சுகிப்பர்;என் ஆசைஉன் மேல்என்று

     கூசாமல் ஆணையிடுவார்;

கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்

     கொடுப்பர்,சும் பனம்உகப்பர்;


வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்தபின்,

     வேறுபட நிந்தைசெய்து

விடவிடப் பேசுவர்; தாய்கலகம் மூட்டியே

     விட்டுத் துரத்திவிடுவார்;


வாடிக்கை யாய்இந்த வண்டப் பரத்தையர்

     மயக்கத்தை நம்பலாமோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தம் வீட்டில் பணக்காரர் தேடி வந்திடின் - தம் வீட்டினைத் தேடிச் செல்வர்கள் வந்தால், தேக சீவன் போலவே சினேகித்த உம்மை - உடலும் உயிரும்போல் நட்புக்கொண்ட தங்களை, ஒருபொழுது காணாவிடின் அன்னம் செல்லுறாது - ஒரு வேளை பார்க்கவில்லையானாலும் உணவு ஏற்றுக் கொள்வதில்லை; என்றே - எனவே கூறி, கூடிச் சுகிப்பர் - கலந்து மகிழ்வர்; 

என் ஆசை உன்மேல் என்று கூசாமல் ஆணையிடுவர் - என் காதல் உனக்கே என்று மனம் கூசாமல் பொய்யாக ஆணையிடுவார்கள்; 

கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திடுவர் - மார்பைத் திறந்து  இறுகப் பற்றும்படி கொடுப்பார்கள்; 

இதழ் கொடுப்பர் - வாய் இதழ் பருக அளிப்பர்; 

சும்பனம் உகப்பர் - சும்பனம் என்னும் கரணத்தை விரும்பிச் செய்வர்; 

வேடிக்கை பேசியே கைமுதல் பறித்தபின் - இனிமையாகப் பேசிக் கையிலுள்ள செல்வத்தைப் பற்றிய பிறகு, வேறுபட நிந்தை செய்து - மனம்வெறுக்கப் பழித்து, விடவிடப் பேசுவர் - மாறிமாறித் தூற்றுவர்; 

தாய் கலகம் மூட்டியே விட்டுத் துரத்திவிடுவார்- தாய்க்கிழவியைக் கொண்டு கலகம் உண்டாக்கி வீட்டை விட்டுத் துரத்துவார்கள்; 

இந்த வண்டப் பரத்தையர் மயக்கத்தை வாடிக்கையாய் நம்பலாமோ? - இந்த இழிந்த வேசையரின் மயக்கம் தரும் காமச்செயல்களை வழக்கமாக நிலையென நம்பல் கூடுமோ?

      அன்பை விரும்பாமல் பொருளை விரும்பும் பெண்களை வேசையர் என்பர். வேசையரின் நட்பு வேண்டாம் என்பது சொல்லப்பட்டது.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...