92. பகை கொள்ளத் தகாதவர்

 


"மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு

     மாறாத மர்மம் உடையோர்,

  வலுவர், கரு ணீகர்,மிகு பாகம்செய்து அன்னம்இடும்

     மடையர்,மந் திரவாதியர்,


சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அதுசெய்வோர்

     சூழ்வயித் தியர், கவிதைகள்

  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்

     சொப்பனந் தனில் ஆகிலும்


நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்

     நானிலத்து என்பர் கண்டாய்!

  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்

     நம்பனே! அன்பர் நிதியே!


அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

நாரி ஓர் பாகனே - உமையொரு பங்கரே! 

வேத ஆகமம் பரவும் நண்பனே - மறையும் ஆகமமும் போற்றும் சிறப்பு உடையவரே!

அன்பர் நிதியே - அன்பரின் சேமப்பொருளே!, 

அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத அண்ணலே - அன்னப் பறவையின் மேல் ஊர்ந்து வரும் நான்முகனும் திருமாலும் (முறை\யே திருமுடியும் திருவடியும்) காண இயலாத பெரியோனே!

அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,  

மன்னர் - அரசர், அமைச்சர் - மந்திரிகள், துர்ச்சனர் - தீயோர், கோளர் - கோள் சொல்லுவோர், தூதரொடு - தூதர்களுடன், மாறாத மர்மம் உடையோர் - நீங்காத செற்றம் கொண்டவர்கள், வலுவர் - வலிமையுடையோர், கருணீகர் - கணக்கர், மிகு பாகம் செய்து அன்னம் இடும் மடையர் - சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர், மந்திர வாதியர் - மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் - செல்வ மிக்கவர்கள், புலையர் - இழிந்தோர், உபதேசமது செய்வோர் - உபதேசியர், சூழ் வயித்தியர் - ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும் புலவர் - செய்யுள் இயற்றும் புலவர்கள், 

இவர் பதினைந்து பேரொடும் சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்த பேர் இந்நானிலத்து பகை செய்திடார் - இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி அறிந்தவர்கள் இவ்வுலகில் பகை கொள்ளார், என்பர் - என்று பெரியோர் கூறுவர்.

      (நன்மை + நெறி - நன்னெறி, மடை - சமையல் வேலை, சோறு. மடையர் - சமையல் செய்வோர். உபதேசம் புரிவோர் - ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...