"கைக்குறுதி வேல்,வில்; மனைக்குறுதி மனையாள்;
கவிக்குறுதி பொருளடக்கம்;
கன்னியர் தமக்குறுதி கற்புடைமை; சொற்குறுதி
கண்டிடில் சத்யவசனம்;
மெய்க்குறுதி முன்பின்; சபைக்குறுதி வித்வசனம்;
வேசையர்க் குறுதிதேடல்;
விரகருக் குறுதிபெண்; மூப்பினுக் குறுதிஊண்;
வீரருக் குறுதிதீரம்;
செய்க்குறுதி நீர்;அரும் பார்க்குறுதி செங்கோல்;
செழும்படைக் குறுதிவேழம்;
செல்வந் தனக்குறுதி பிள்ளைகள்; நகர்க்குறுதி
சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்;
மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர
மங்கைமரு வுந்தலைவனே
மயிலேறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மைக்கு உறுதியாகிய விழி குறமடந்தை சுரமங்கை மருவும் தலைவனே! - மைக்கு அழகு செய்யும் விழிகளை உடைய குறமங்கை (வள்ளியம்மை)யும், தேவயானையும் விரும்பும் மணவாளனே!,
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கைக்கு உறுதி வேல் வில் - (வீரன்) கைக்கு நன்மை தருவன வேலும் வில்லும்;
மனைக்கு உறுதி மனையாள் - இல்லத்திற்கு நலம் தருபவள் இல்லாள்;
கவிக்கு உறுதி பொருள் அடக்கம் - செய்யுளுக்கு நலம் தருவது பொருட்செறிவு;
கன்னியர் தமக்கு உறுதி கற்பு உடைமை - பெண்களுக்கு நன்மை கற்புடன் இருத்தல்;
சொற்கு உறுதி கண்டிடில் சத்திய வசனம் - சொல்லுக்கு நன்மையை ஆராய்ந்தால் உண்மை கூறுதல்;
மெய்க்கு உறுதி முன்பின் - உடம்புக்கு நலம் தருவோர், தமக்கு முன்னர் பிறந்த அண்ணனும், பின்னர் பிறந்த தம்பியும்;
சபைக்கு உறுதி வித்வசனம் - அவைக்களத்திற்கு நன்மை புலவர் பெருமக்கள் இருத்தல்;
வேசையருக்கு உறுதி தேடல் - பரத்தைகளுக்கு நன்மை பொருள் தேடல்;
விரகருக்கு உறுதி பெண் - காமுகருக்கு நலம் பெண்கள்; மூப்பினுக்கு உறுதி ஊண் - முதுமைக்கு நலம் உணவு;
வீரருக்கு உறுதி தீரம் - வீரருக்கு நலம் அஞ்சாமை;
செய்க்கு உறுதி நீர் - நிலத்திற்கு நலம் நீர்;
அரும் பார்க்கு உறுதி செங்கோல் - அரிய உலகிற்கு நன்மை நல்ல ஆட்சி;
செழும் படைக்கு உறுதி வேழம் - வளமிக்க படைக்கு நன்மை யானைப்படை;
செல்வம் தனக்கு உறுதி பிள்ளைகள் - செல்வத்திற்கு நன்மை பிள்ளைகள்;
நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்கள் ஆம் - நகரத்திற்கு நன்மை அங்கு வாழும் நல்லோர்களாகும்.
(சத்தியம் (வடசொல்) - உண்மை. வித்வசனம் (வடசொல்) - புலவர் பெருமக்கள். உறுதி - நன்மை (உறுவது என்று பொருள்) - சர்ச்சனர் (வடசொல்) - நல்லோர்.
No comments:
Post a Comment