76. நன்மை (உறுதி) தருபவை

 

"கைக்குறுதி வேல்,வில்; மனைக்குறுதி மனையாள்;

     கவிக்குறுதி பொருளடக்கம்;

கன்னியர் தமக்குறுதி கற்புடைமை; சொற்குறுதி

     கண்டிடில் சத்யவசனம்;


மெய்க்குறுதி முன்பின்; சபைக்குறுதி வித்வசனம்;

     வேசையர்க் குறுதிதேடல்;

விரகருக் குறுதிபெண்; மூப்பினுக் குறுதிஊண்;

     வீரருக் குறுதிதீரம்;


செய்க்குறுதி நீர்;அரும் பார்க்குறுதி செங்கோல்;

     செழும்படைக் குறுதிவேழம்;

செல்வந் தனக்குறுதி பிள்ளைகள்; நகர்க்குறுதி

     சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்;


மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர

     மங்கைமரு வுந்தலைவனே

மயிலேறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

மைக்கு உறுதியாகிய விழி குறமடந்தை சுரமங்கை மருவும் தலைவனே! - மைக்கு அழகு செய்யும் விழிகளை உடைய குறமங்கை (வள்ளியம்மை)யும், தேவயானையும் விரும்பும் மணவாளனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கைக்கு உறுதி வேல் வில் - (வீரன்) கைக்கு நன்மை தருவன வேலும் வில்லும்; 

மனைக்கு உறுதி மனையாள் - இல்லத்திற்கு நலம் தருபவள் இல்லாள்; 

கவிக்கு உறுதி பொருள் அடக்கம் - செய்யுளுக்கு நலம் தருவது பொருட்செறிவு; 

கன்னியர் தமக்கு உறுதி கற்பு உடைமை - பெண்களுக்கு நன்மை கற்புடன் இருத்தல்; 

சொற்கு உறுதி கண்டிடில் சத்திய வசனம் - சொல்லுக்கு நன்மையை ஆராய்ந்தால் உண்மை கூறுதல்; 

மெய்க்கு உறுதி முன்பின் - உடம்புக்கு நலம் தருவோர், தமக்கு முன்னர் பிறந்த அண்ணனும், பின்னர் பிறந்த தம்பியும்; 

சபைக்கு உறுதி வித்வசனம் - அவைக்களத்திற்கு நன்மை புலவர் பெருமக்கள் இருத்தல்; 

வேசையருக்கு உறுதி தேடல் - பரத்தைகளுக்கு நன்மை பொருள் தேடல்; 

விரகருக்கு உறுதி பெண் - காமுகருக்கு நலம் பெண்கள்; மூப்பினுக்கு உறுதி ஊண் - முதுமைக்கு நலம் உணவு; 

வீரருக்கு உறுதி தீரம் - வீரருக்கு நலம் அஞ்சாமை; 

செய்க்கு உறுதி நீர் - நிலத்திற்கு நலம் நீர்; 

அரும் பார்க்கு உறுதி செங்கோல் - அரிய உலகிற்கு நன்மை நல்ல ஆட்சி; 

செழும் படைக்கு உறுதி வேழம் - வளமிக்க படைக்கு நன்மை யானைப்படை; 

செல்வம் தனக்கு உறுதி பிள்ளைகள் - செல்வத்திற்கு நன்மை பிள்ளைகள்; 

நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்கள் ஆம் - நகரத்திற்கு நன்மை அங்கு வாழும் நல்லோர்களாகும்.


     (சத்தியம் (வடசொல்) - உண்மை. வித்வசனம் (வடசொல்) - புலவர் பெருமக்கள். உறுதி - நன்மை (உறுவது என்று பொருள்) - சர்ச்சனர் (வடசொல்) - நல்லோர்.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...