77. வறுமை வந்தால்.....

 


"வறுமைதான் வந்திடின், தாய்பழுது சொல்லுவாள்;

     மனையாட்டி சற்றும் எண்ணாள்;

வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

     வசனமாய் வந்துவிளையும்;


சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது

     சிந்தையில் தைரியமில்லை;

செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;

     செல்வரைக் காணில்நாணும்;


உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்

     உயிருடன் செத்தபிணமாம்;

உலகம் பழித்திடும்; பெருமையோர் முன்புசென்று

     ஒருவரொரு செய்திசொன்னால்,


மறுவசன முஞ்சொலார்; துன்பினில் துன்பம்இது

     வந்தணுகி டாதருளுவாய்!

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வறுமை தான் வந்திடில் - (ஒருவனுக்கு) வறுமை வந்து சேருமானால்,

தாய் பழுது சொல்வாள் - புற்ற தாயும் குற்றங் கூறுவாள்; 

மனையாட்டி சற்றும் எண்ணாள் - இல்லாளும் சிறிதும் மதிக்கமாட்டாள்; 

வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் - வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்;  (நல்லவையாய் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)

சிறுமையோடு தொலையா விசாரமே அல்லாது - இழிவும் நீங்காத கவலையுமே அன்றி, சிந்தையில் தைரியம் இல்லை - உள்ளத்தில் துணிவு இருக்காது; 

செய்ய சபைதன்னிலே சென்றுவர வெட்கம்ஆம் - நல்ல சபையிலே போய்வர நாணம் உண்டாகும்; 

செல்வரைக் காணில் நாணும் - செல்வம் படைத்தோரைக்  கண்டால் உள்ளம் வெட்கம் அடையும், 

உறுதிபெறு வீரமும் குன்றிடும் - நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; 

விருந்து வரின் உயிருடன் செத்த பிணம்ஆம் - விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; 

உலகம் பழித்திடும் - உலகத்தார் இகழ்வர்; 

பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் மறுவசனமும் சொல்லார் - பெருமையுடையோர் எதிரில் போய் ஒரு வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னால் மறுமொழி சொல்லமாட்டார்;

துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் - துன்பத்திலே துன்பமான இந்த வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்செய்வாய்.


விளக்கம் ---

அருணகிரிநாதப் பெருமான், வறுமையைப் பாவி என்கிறார். "மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே, வடிவும், தனமும், மனமும், குணமும், குடியும், குலமும் குடிபோகியவா" என்னும் கந்தர் அனுபூதிப் பாடலைக் காண்க. திருவள்ளுவ நாயனாரும், வறுமையைப் பாவி என்று சொல்லி, "இன்மை என ஒரு பாவி" என்று திருக்குறள் பாடி உள்ளார். "கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப் பிராட்டி.

ஒருவனிடம் கல்வி அறிவு, ஒழுக்கம் முதலான எத்தனை நலங்கள் இருந்தாலும், செல்வ வளம் இல்லையானால், அவனைத் தாயும் இகழ்வாள். சுற்றத்தார் மதிக்க மாட்டார்கள். எல்லோரும் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். மனைவியும் இகழ்ந்து பேசுவாள் என்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல். 

"மேலான சாதியில் உதித்தாலும் அதில்என்ன?

     வெகுவித்தை கற்றும் என்ன?

  மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்துஎன்ன?

     மிகுமானி ஆகில் என்ன?


பால்ஆன மொழி உடையன் ஆய்என்ன? ஆசார

     பரனாய் இருந்தும் என்ன?

  பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?

     பாக்கியம் இலாத போது;


வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!

     வந்தசுற் றமும்இ கழுமே!

  மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!

     மனைவியும் தூறு சொல்வாள்!


ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

இதன் பொருள் ---

ஆலாலம் உண்ட கனி வாயனே - ஆலகால விடத்தை உண்ட, கனிபோலச் சிவந்த திருவாயை உடையவனே!  நேயனே - அன்பு வடிவானவனே! அனகனே - குற்றம் இல்லாதவனே!   அருமை மதவேள் - அருமை மதவேள் என்பான்,  அனுதினமும் மனதில் நினைதரு - எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

பாக்கியம் இலாத போது - ஒருவனுக்குச் செல்வப் பேறு இல்லாவிட்டால், அவன், மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன - உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் அதனால் பயன் இல்லை.  வெகுவித்தை கற்றும் என்ன - மிகுதியான கலைகளைப் படித்து உணர்ந்தாலும் பயன் இல்லை,  மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன - பேரழகுடன் நற்பண்புகள் பொருந்தி இருந்தாலும் பயன் இல்லை,  மிகு மானி ஆகில் என்ன - சிறந்த மானம் உடையவன் ஆனாலும் பயன் இல்லை. பால் ஆன மொழி உடையன் ஆய் என்ன -இனிய மொழிகளையே பேசுபவன் ஆனாலும் பயன் இல்லை,  பார் மீது வீரமொடு ஞானவான் ஆய் என்ன - உலகிலே வீரமும் அறிவும் உடையவன் என்றாலும் பயன் இல்லை.  பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் - அவனைப் பெற்றெடுத்த தாயும் இயல்பாகவே வெறுப்பாள்,  வந்த சுற்றமும் இகழும் - வருகின்ற உறவினரும் அவனை இகழ்வர்,  அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் - எல்லோரும் மதிப்பு இல்லாமல் பேசுவார்கள்,  மனைவியும் தூறு சொல்வாள் - இல்லாளும் குறை கூறுவாள்.


"அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்

பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;

பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார்

பண்டம் இருவர் கொளல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

போரிடுகின்ற வேல் போன்ற கண்ணை உடையவளே!,  அருள் உள்ளம் கொண்ட பெரியோர்களும், அல்லாத பொல்லாதவர்களும், யாராக இருந்தாலும், பொருள் உடையவராக இருந்தால், அவரைப் புகழ்ந்து பேசாதவர் ஒருவரும் இல்லை. அது எப்படிப்பட்டது என்றால், புண்ணியம் உடையவர்களின் பொருளை, ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொள்ள முயல்வது போன்றது ஆகும்.

புண்ணியம் உள்ளவர் இடத்தில் பொருள் சேரும். அந்தப் பொருளைப் போட்டி போட்டுக் கொள்ளுதல் போல, பொருள் உடையவரைப் பலரும் போட்டியிட்டுப் புகழ்ந்து பேசுவர்.


இனிய சொல்லைச் சொல்பவன் ஆகவும், பணிவு உடையவனாகவும் இருந்தாலும், அவனிடத்தில் பொருள் இல்லை என்றால் யாரும் வாயைக் கூடத் திறக்கமாட்டார்கள். அப்படியே வாயைத் திறந்தாலும், கடும் சொல்லைக் கொண்டுதான் பேசுவார்கள். என்ன சொன்னாலும், இந்த உலகமானது பொருள் உடையவன் காலின் கீழ்தான் அடங்கி இருக்கும். ஆதலினால், இந்த உலக நிலையானது பையத்தியக்காரத் தனத்தை உடையது அல்லாமல், அறிவு உடையது அல்ல என்கின்றார், குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்....

"இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்

வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்

கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்

பித்து உடைய அல்ல பிற."  --- நீதிநெறி விளக்கம்.  


ஔவையாரைக் கேட்டால், "ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாகவே இருந்தாலும், அவன் கையில் செல்வம் மட்டும் இருக்குமானால், அவனை எல்லாரும் சென்று எதிர்கொண்டு உபசரிப்பார்கள். கல்வி அறிவில் மிக்கவனாக இருந்தாலும், அவனிடத்தில் செல்வம் இல்லையானால், அவனை அவன் மனைவியும் விரும்ப மாட்டாள். அன்பு செலுத்த வேண்டிய, பெற்றெடுத்த தாயும் அவனை விரும்பமாட்டாள். அவனது வாயில் இருந்து பிறக்கும் சொல் எதுவும் எடுபடாது. எல்லாரும் அவனை ஒதுக்கியே வைப்பர்" என்கின்றார்.

"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள், 

செல்லாது அவன்வாயில் சொல்."                       --- நல்வழி.


"நேரா அழுக்குத் துணி ஆகில், உன்தனை நேரில்கண்டும்

பாராதவர் என நிற்பார், உடுத்தது பட்டு எனிலோ,

வாராது இருப்பது என்? வாரும்என்பார், இந்த வஞ்சகர்பால்

சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனைச் சேர் விரைந்தே."     --- திருவருட்பா.

எனது நல்ல நெஞ்சமே, நீ உடுத்தது அழுக்குத் துணியாக இருக்குமானால், உன்னைக் கண்ணார நேரில் கண்டாலும் உன்னைப் பார்க்காதவர் போல் ஒதுங்கி நிற்பர். நீ உடுத்திருப்பது உயர்ந்த பட்டாடையாக இருக்குமானால், நீ ஒதுங்கிச் சென்றாலும், உன்னிடம் தாமே வலிய வந்து "நீங்கள் வாராது இருப்பது ஏன்? வருக" என்று அழைப்பர். இத்தகைய வஞ்ச நெஞ்சையுடைய உலகினரிடத்தில் செல்வதையும், சேர்வதையும் விட்டுவிட்டு, தனியே திருவொற்றியூர்ப் பெருமானை விரைந்து சென்று சேர்வது நன்மையைத் தரும் என்று நீ அறிவாயாக.


"பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார்; நற் பொருட்பயனாம்

"மெய் விரிப்பார்க்கு இரு கைவிரிப்பார்; பெட்டி மேவு பணப்

பை விரிப்பார், அல்குற் பை விரிப்பார்க்கு, அவர் பால் பரவி

மை விரிப்பாய், மனமே! என்கொலோ நின் மதியின்மையே". --- திருவருட்பா.

இதன் பொருள் ---

எனது மனமே! இந்த உலகத்தில் பொய்யை விரித்துப் பேசுவகின்றவர்க்கு, பொருளை நிறையத் தருவார். நல்ல பொருள் பொதிந்த உண்மைப் பொருளை விரித்துச் சொல்பவர்க்கு, இருகைகளை விரித்து இல்லை என்பார். அல்குல் பையை விரிக்கின்ற பரத்தையர்க்கு, பெட்டியில் உள்ள பணப்பையை எடுத்து விரித்து, அதில் உள்ள பொருளைத் தருவார். இப்படிப்பட்டவர்களைப் புகழ்ந்து துன்பப்படுவது உனது அறிவின்மை ஆகும்.


காயார் சரிகைக் கலிங்கம் உண்டேல், இக் கலிங்கம்கண்டால்

நீயார்? நின் பேர்எது? நின்ஊர் எது? நின் நிலை எது? நின்

தாய் யார்? நின் தந்தை எவன்? குலம் ஏது? என்பர்,  சாற்றும் அவ் வல்

வாயார் இடஞ்செலல் நெஞ்சே! விடைதர வல்லை அன்றே". --- திருவருட்பா.

இதன் பொருள் ---

சரிகையோடு கூடிய அழகான துணியை நீ உடுத்து இருந்தால், அந்தத் துணியைக் கண்டு மயங்கி,  "நீ யார், உனது பெயர் என்ன? உனது ஊர் எது? உனது நிலை என்ன? உனது தாய் யார்? உனது தந்தை எவன்?" என்றெல்லாம் உசாவுவார்கள். பேச்சுத் திறமை மட்டுமே உடைய (உள்ளத்தில் அன்பு இல்லாத) இவர்களிடம் செல்லாதே. அவர்களை விட்டு விலகுவாயாக.


திருவொற்றியூர்ப் பெருமானிடம் சென்றால்,

"சீர் தருவார், புகழ்ப் பேர் தருவார், அருள் தேன்தருவார், 

ஊர் தருவார், மதியும் தருவார், கதியும் தருவார், 

ஏர் தருவார், தருவார் ஒற்றியூர் எம் இறைவர், அன்றி 

யார் தருவார் நெஞ்சமே! இங்கும்  அங்கும் இயம்புகவே."   -- திருவருட்பா

     எனது நெஞ்சமே, திருவொற்றியூர் இறைவர் நமக்குச் சீரும் பேரும் புகழும் தருவார். ஊர்களையும் தருவார். திருவருளாகிய தேனும், சீர்த்த மதியும், உயர்ந்த கதியும் அருள்வார். மேன்மேலும் வளர்ச்சியும் உண்டு பண்ணுவார். இவைகளை எல்லாம் இந்தப் பிறவியிலும், மறுபிறவியிலும் இவரைப்போல் தருபவர் யார்? இவற்றை எல்லாம் எண்ணி என்னோடு இசைந்து ஒழுகுவாயாக.


"பொருள்கை உண்டாய்ச் செல்லக் காணில்,

போற்றி என்று ஏற்று எழுவர்;

இருள்கொள் துன்பத்து இன்மை காணில்,

என்னே என்பாரும் இல்லை;

மருள்கொள் செய்கை அசுரர் மங்க

வடமதுரைப் பிறந்தாற்கு

அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால்

இல்லை கண்டீர் அரணே."   --- நம்மாழ்வார்.

இதன் பொருள் ---

உலகத்தவர் ஒருவனுடைய கையிலே பொருள் இருப்பதைக் கண்டால், "வாழ்க, வாழ்க" என்று புகழ்ந்து, அப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் வரை கூட இருப்பர். அறிவின்மையை உண்டாக்கி, வருத்தத்தைத் தரக்கூடிய வறுமை வந்துவிட்டாலோ, "ஐயோ" என்று இரக்கப்படுவதற்கு யாரும் அங்கே இருக்கமாட்டார்கள். ஆகவே, இந்தப் போலி உறவினரை நம்பக் கூடாது. அஞ்சத்தக்க கொடுமை செய்கின்ற அரக்கர்களை அழிப்பதற்கு என்றே வடமதுரையில் வந்து தோன்றிய கண்ணனுக்கு அடியவர்கள் ஆகி, அவன் அருள் பெற்று உய்வு பெறுவதை அன்றி வேறு பாதுகாவல் இல்லை.


"தாங்க ஒணா வறுமை வந்தால்

     சபைதனில் செல்ல நாணும்,

வேங்கை போல் வீரம் குன்றும்,

     விருந்தினர் காண நாணும்,

பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,

     புல்லருக்கு இணங்கச் செய்யும்,

ஓங்கிய அறிவு குன்றும்,

     உலகெலாம் பழிக்கும் தானே".  -- விவேகசிந்தாமணி.   

இதன் பொருள் ---  

     ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும். விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.


"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்

     சரீரத்தை உலர்தர வாட்டும்,

தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,

     சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே

     தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,

தரித்திரம் அவமானம் பொய் பேராசை

     தரும் இதில் கொடியது ஒன்று இலையே".    --குசேலோபாக்கியானம் 

இதன் பொருள் ---

   வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். ஆதலால், இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.


"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,

     சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்

     தக்க பேர் ஆகரம் என்ப,

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்

     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,

தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்

     தகையதை ஒழித்தல் நன்று ஆமே". -- குசேலோபாக்கியானம்.

இதன் பொருள் ---

     வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும். சொல்லப்பட்ட பலவிதான எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும். வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும். வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்; தரித்திரம் கொடிய எவற்றினும் கொடியது. அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

திருமண நிகழ்வு என்றால், ஆணும் பெண்ணும், அவரவர் நிலைக்கு ஏற்பத் தம்மை அலங்கரித்துக் கொண்டுதான் செல்வார்கள். பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணத்துக்கு ஆடை அணிகலன்கள் ஏதும் இன்றி ஔவையார் சென்றார். திருமண நெரிசலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டுத் திரும்புகின்றார். பாண்டியன் வீட்டுத் திருமணத்தில் கலந்துக் கொள்ளவேண்டும், நல்ல உணவு உண்ணவேண்டும், பரிசுப் பொருள்களைப் பெறவேண்டும் என்னும் ஆவலோடு சில புலவர்கள் வருகின்றார்கள். எதிரிலே வருகின்ற ஔவைப் பிராட்டியாரைக் கண்டு, "மூதாட்டியே! பாண்டியன் வீட்டுத் திருமணம் சிறப்பாக நடந்ததா? உயர்ந்த உணவுகளைப் படைப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் இனிது உண்டீர்களா?" என்று கேட்கிறார்கள்.

ஔவையார், அவர்களைப் பார்த்து, "ஆமாம், உண்டேன், உண்டேன், உண்டேன்" என்று மும்முறை கூறினார். மூன்றுமுறை கூறவும், "உணவு பலமா?" என்றார்கள். ஔவையார், "தெளிந்த தமிழிலே வல்ல பாண்டியருடைய திருமணத்திலே நான் உண்டதன் பெருமையைச் சொல்லவும் வேண்டுமா?" என்று சொல்லி, பின்வரும் பாடலைப் பாடினார்.

"வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து

உண்ட பெருக்கம் உரைக்கக் கேள், --- அண்டி,

நெருக்கு உண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே

சுருக்கு உண்டேன், சோறு கண்டிலேன்."

வளமை மிக்க தமிழை ஆராய்ந்த பாண்டியனின் திருமணத்தில் நான் விருந்து உண்ட சிறப்பைச் சொல்லுகின்றேன், கேட்பீர்களாக. விருந்து உண்ண எண்ணி, கூட்டத்தில் அருகில் சென்றபோது நெருக்கப்பட்டேன். இடித்துத் தள்ளப்பட்டேன். நீண்ட நேரம் பசியோடு இருந்த காரணத்தால் வயிறு சுருங்கப் பெற்றேன். உணவை உண்ணவில்லை.

ஆடை, அணிகலன்களுக்கும், செல்வச் சிறப்புக்கும் மிக்க மரியாதையைத் தருகின்ற உலகத்தில், ஔவையார் போன்ற அருந்தமிழ்ப் புலவருக்கு நேர்ந்த கதி, இன்றும் தான் தொடர்கின்றது. எளிமையாக இருந்தால் யாரும் மதிப்பதில்லை. பகட்டு தேவைப்படுகின்றது. அருமைத் தமிழில் பேசினால் போதாது, நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள். எங்கு சென்றாலும், எதற்குச் சென்றாலும், பையில் பணம் இல்லாமல் செல்வதால் பயனில்லை.

செல்வம் இல்லையானால், மதிப்பு இல்லை என்பதற்காக, மதிப்பும் மரியாதையும் வேண்டி, அறம் அல்லாத வழிகளில் பொருளை ஈட்டுதல் கூடாது.


No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...