அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மலரணை ததும்ப
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
எக்காலத்தும் உனது வடிவழகையும்,
வடிவேலையும் மறவேன்.
தனதன
தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
மலரணை
ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே
வழிபட
இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின்
முலையிணை
ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே
முதுமயல்
கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே
சிலைநுத
லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி
திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா
சிறுநகை
புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான ......முருகோனே
கொலைமிக
பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா
கொடிமின
லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மலர்
அணை ததும்ப, மேக குழல்முடி
சரிந்து வீழ,
மண பரிமளங்கள் வேர்வை ...... அதனோடே
வழிபட, இடம் கண் ஆட, பிறைநுதல் புரண்டு மாழ்க,
வனைகலை நெகிழ்ந்து போக, ...... இளநீரின்
முலை
இணை ததும்ப, நூலின் வகிர் இடை
சுழன்று வாட,
முகம் முகமொடு ஒன்ற, பாயல் ...... அதன்ஊடே,
முதுமயல்
கலந்து மூழ்கி மகிழ்கினும், அலங்கல் ஆடும்
முடிவடிவோடு, அம்கை வேலும் ...... மறவேனே.
சிலை
நுதல் இளம்பெண், மோகி, சடை அழகி, எந்தை பாதி
திகழ் மரகதம் பொன் மேனி ...... உமைபாலா!
சிறு
நகை புரிந்து, சூரர் கிரி, கடல் எரிந்து போக,
திகழ் அயில் எறிந்த ஞான ......முருகோனே!
கொலைமிக
பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள!
குண அலர் கடம்ப மாலை ...... அணிமார்பா!
கொடிமினல்
அடைந்த சோதி, மழகதிர் தவழ்ந்த, ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.
பதவுரை
சிலை நுதல் இளம்பெண் --- வில்லைப்போன்ற
நெற்றியையுடைய இளம்பெண்;
மோகி --- சிவனிடம் மோகத்தை உடையவள்;
சடை அழகி --- அழகிய சடையை உடையவள்;
எந்தை பாதி திகழ் --- எமது பிதாவாகிய
சிவபெருமானுடைய பாதியில் விளங்கும்,
மரகதம் பொன் மேனி --- மரகதம் போன்ற பச்சை நிறத்து
அழகிய உருவையுடையவளாகிய;
உமை பாலா --- உமா தேவியின் திருக்குமாரரே!
சிறு நகை புரிந்து --- புன்னகை செய்து,
சூரர் --- சூராதியசுரர்களும்,
கிரி --- கிரவுஞ்ச மலையும்,
கடல் --- சமுத்திரமும்,
எரிந்து போக --- எரிந்துபோகும்படி,
திகழ் அயில் எறிந்த --- விளங்குகின்ற கூரிய
வேலை விடுத்த
ஞான முருகோனே --- ஞானமே வடிவாய முருகக்
கடவுளே!
கொலைமிக பயின்ற வேடர்மகள் --- கொலைத் தொழிலே
பயின்ற வேடர் குலப்பாவையாகிய,
வளி மணந்த தோள --- வள்ளியம்மையை மணந்தருளிய
தோள்களையுடையவரே! ("வள்ளி" என்னும்சொல் சந்தத்தை நோக்கி "வளி" என வந்தது)
குண --- நற்குணசீலரே!
அலர் கடம்ப மாலை அணிமார்பா --- அலர்ந்த கடப்ப
மலர் மாலையை அணிந்த திருமார்பினரே!
கொடிமினல் அடைந்த சோதி --- மின்னற்கொடி போன்ற சோதியே!
மழ கதிர் தவழ்ந்த ஞான --- இளங்கதிர்
விளங்கும் ஞானமூர்த்தியே!
குலகிரி மகிழ்ந்து மேவு --- சோலைமலையில்
மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
மலர் அணை ததும்ப --- மலருடன் கூடிய படுக்கை
அசைந்து கலையவும்,
மேக குழல் முடி சரிந்து வீழ --- மேகம் போன்ற
கரிய கூந்தலின் முடி சரிந்து விழவும்,
மண பரிமளங்கள் வேர்வை அதனோடே வழிபட --- நலமிக்க
மணங்கள் வேர்வையுடனே ஒன்றுபடவும்,
இடம் கண் ஆட --- விசாலமான கண்கள் அசையவும்,
பிறை நுதல் புரண்டு மாழ்க --- பிறைபோன்ற
நெற்றி புரண்டு கலங்கவும்,
வனை கலை நெகிழ்ந்து போக --- அலங்காரமாய்
உடுத்த உடை நெகிழ்ந்து போகவும்,
இளநீரின் முலை இணை ததும்ப --- இளநீர் போன்ற
இருமுலைகள் அசையவும்,
நூலின் வகிர் இடை சுழன்று வாட --- நூலின்
பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டங் கொள்ளவும்,
முகம் முகமொடு ஒன்ற --- முகம் முகத்தோடு
பொருந்தவும்,
பாயல் அதன் ஊடே --- படுக்கையிலே,
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் --- பெரிய
மோகச் செயலின் மயலில் கலந்து முழுகி அடியேன் களிகூர்ந்திருந்தாலும்,
அலங்கல் ஆடும் --- மாலைகள் அசையும்,
முடி வடிவொடு --- உமது சிரம் முதலிய
திருவுருவத்தையும்,
அம் கை வேலும் --- அழகிய திருக்கரத்தில்
விளங்கும் வேலாயுதத்தையும்,
மறவேனே --- மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
வில்லைப் போன்ற நெற்றியை உடைய இளம்பெண்; சிவ பெருமானிடம் மோகத்தையுடையவள், அழகிய சடையுடையவள்; எமது பிதாவாகிய சிவபெருமானுடைய
இடப்பாகத்தில் திகழ்கின்ற மரகதம் போன்ற அழகிய மேனியையுடையவள் ஆகிய உமாதேவியின்
திருக்குமாரரே!
புன்னகை செய்து, சூரன் முதலிய வீரர்களும், கிரவுஞ்சமலையும், கடலும் எரிந்து போக விளங்குகின்ற வேலை
விடுத்த ஞானமே வடிவாய முருகக் கடவுளே!
கொலைத் தொழிலே பயின்ற வேடர் குலப்பாவையாகிய வள்ளியம்மையை
மணந்த தோள்களையுடையவரே!மின்னல் கொடிபோன்ற ஜோதியே!
இளங்கதிர் விளங்கும் ஞானமூர்த்தியே! சோலை
மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெருமிதம் உடையவரே!
மலர் நிறைந்த படுக்கை அசைந்து கலையவும், மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி
சரிந்து விழவும், நலமிக்க மணங்கள்
வேர்வையுடன் வழியவும், விசாலமான கண்கள்
அசையவும், பிறை போன்ற நெற்றி
புரண்டு கலங்கவும், அலங்காரமாக உடுத்த
உடை நெகிழ்ந்து போகவும், இளநீர் போன்ற
இருதனங்கள் அசையவும், நூலின் பிளவு போன்ற
நுண்ணிய இடை சுழன்று வாட்டங் கொள்ளவும், முகம்
முகத்தோடு பொருந்தவும், படுக்கையிலே பெரிய
மோக மயலின் செயலில் கலந்து முழுகி, மகிழ்ச்சி மிகுந்த
போதும், மாலைகள் அசையும்
உமது சிரம் முதலிய திருவுருவத்தையும், அழகிய
திருக்கரத்திலேயுள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன்.
விரிவுரை
இத்திருப்புகழின்
முதல் மூன்று அடிகளில் மாதரை மருவும் போது ஏற்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகின்றார்.
முதுமயல்
கலந்து மூழ்கி மகழினும் அலங்கலாடு முடி வடிவொடு அங்கை வேலும் மறவேனே ---
“முருகா! மாதர் மயக்கத்தால்
மிகுந்த மகிழ்ச்சிக் கடலில்முழுகினாலும் உனது வடிவையும் வேலையும் மறவேன்” என்று
சுவாமிகள் கூறுகின்றார்.
“கண்டுஉண்ட சொல்லியர்
மெல்லியர் கலவிக்கள்ளை
மொண்டுஉண்டு அயர்கினும்
வேல்மறவேன்” ---
கந்தரலங்காரம்
சிலை
நுதல் இளம்பெண் ---
அம்பிகையின்
நெற்றி வில்லைப்போல் வளைந்து விளங்குகின்றது.
“சிலை நுதல் இமயவல்லி
திருக்கண் நோக்கு உற்றது அன்றே” --- பெரியபுராணம்
கொலைமிக
பயின்ற வேடர் மகள் ---
“கொலையே புரிவேடர் குலப்பிடிதோய்
மலையே” --- கந்தர் அநுபூதி
கருத்துரை
சோலைமலைச்
சோதியே! எக்காலத்தும் உன் வடிவையும் வடிவேலையும் மறவேன்.
No comments:
Post a Comment