நல்லோர்




17.  நல்லோர்

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
     அவனே மகாபுரு டனாம்;
  அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
     அசைவிலன் மகாதீ ரனாம்;

தொடுத்து ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
     தோன்றலே மகரா சனாம்;
  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
     துரையே மகாமே ருவாம்!

அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
     அவனே மகாதியா கியாம்;
  அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
     அவனே மகாஉசி தன்ஆம்;

அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அடர்க்கின்ற முத்தலைச் சூலனே --- தம்மை அடையாதாரைக்  கொல்லுகின்ற முத்தலைச் சூலத்தை ஏந்தியவனே!

     லோலனே --- திருவிளையாடல்கள் புரிகின்றவனே!

     அமலனே --- இயல்பாகவே குற்றம் அற்றவனே!

     அருமை மதவேள் --- அரிய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     அடைக்கலம் எனத் தேடி வருவோர் தமைக் காக்கும் அவனே மகாபுருடன் ஆம் --- அடைக்கலம் என்று தம்மைத் தேடி வருவோர்களைக் காப்பாற்றுவோன் மக்களில் சிறந்தவன் ஆவான்.

     அஞ்சாமல் எது வரினும் எது போகினும், சித்தம் அசைவு இலன் மகா தீரன் ஆம் --- எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம் இல்லாமலும், உள்ளத் தளர்ச்சி இல்லாமலும் இருப்பவன் பெருவீரன் ஆவான்.

     ஒன்று தொடுத்துச் சொன்ன சொல் தப்பாது செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் --- ஒன்றைப் பற்றிக் கூறிய சொல்லைத் தப்பாமல் செய்கின்ற தலைவனே பேரரசன் ஆவான்.

     தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத துரையே மகாமேரு ஆம் --- ஒருவர் மீது வீண்பழி தூற்றி, தனது மனத்தைக் கலைக்க முற்படுபவரின் சொல்லை நம்பாத செல்வனே மகா மேருமலை ஆவான்.

     அடுக்கின்ற பேர்க்குவரும் இடர் தீர்த்து இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் --- தன்னைச் சார்ந்தோர்க்கு வருகின்ற துன்பத்தை நீக்கி, அவரைக் காப்பவனே பெரிய வள்ளல் ஆவான்.

     அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும் அவனே மகா உசிதன் ஆம் --- ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து, தக்க மரியாதையைச் செய்பவனே மதிப்புக் கொடுக்கின்றவனே சிறந்த தகுதி உடையவன் ஆவான்.


No comments:

Post a Comment

26. செவிடன் காதினில் சங்கு

  "பரியாமல் இடும்சோறும், ஊமைகண்ட      கனவும்,ஒன்றும் பரிசில் ஈயான் அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்      இல்லாதான் அறிவு மேதான், கரிகால...