வயலூர் --- 0910. இகல்கடின முகபட

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இகல்கடின முகபட (வயலூர்)

 

முருகா!

விலைமாதர் பற்றை விடுத்து,

தேவரீரது திருவடிப் பற்றை அருள்.

 

 

தனதனன தனதனன தத்தத்த தத்ததன

     தத்தத்த தத்ததன

தனதனன தனதனன தத்தத்த தத்ததன

     தத்தத்த தத்ததன

தனதனன தனதனன தத்தத்த தத்ததன

     தத்தத்த தத்ததன ...... தந்ததான

 

 

இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத

     மத்தக்க ளிற்றையெதிர்

புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை

     கட்டிப்பி ணித்திறுகி

யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி

     முத்தத்தை யிட்டுநக ......            தந்தமான

 

இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்

     எற்றிக்க லக்கமுற

இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது

     தொட்டுத்தி ரித்துமிக

இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி

     செக்கச்சி வக்கவளை ......            செங்கைசோர

 

அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல

     கொத்துக்கு ழற்குலைய

மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர

     நெக்குக்க ருத்தழிய

அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண

     வர்க்கத்தி னிற்புணரு ......            மின்பவேலை

  

அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர

     கட்டுப்பொ றிச்சியர்கள்

மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை

     யுற்றுத்து திக்கும்வகை

அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்

     ரக்ஷித்த ளித்தருள்வ ......            தெந்தநாளோ

 

திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட

     தத்தித்த ரித்தகுட

செகணசெக சகணசக செக்கச் செகச்செகண

     சத்தச்ச கச்சகண

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி

     தக்குத்த குத்தகுர்த ......              திங்குதீதோ

  

திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி

     தத்தித்த ரித்தரிரி

டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி

     டட்டட்ட குட்டகுட

தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை

     பக்கக்க ணப்பறைத ......              வண்டைபேரி

 

வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை

     பக்கத்தி னிற்சரிய

எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி

     விட்டத்த மித்ததென

வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது

     தொக்குக்கு னிப்புவிட ......           வென்றவேலா

 

வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி

     சித்ரப்ர சித்தமுறு

அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி

     தத்வத்தி றச்சிகர

வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி

     தப்பற்று ரைக்கவல ......             தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இகல்கடின முகபட விசித்ரத் துதிக்கை, மத

     மத்தக் களிற்றை எதிர்,

புளக தனம் இளக, இனிது எட்டிக் கழுத்தொடு கை

     கட்டிப் பிணித்து, றுகி,

இதழ் பொதி இன்அமுது முறை மெத்தப் புசித்து உருகி,

     முத்தத்தை இட்டு, நக ......       தந்தம் ஆன

 

இடுகுறியும் வரையை உற, நெற்றித் தலத்து இடையில்

     எற்றிக் கலக்கம் உற,

இடை துவள, உடைகழல, இட்டத்து அரைப்பை அது

     தொட்டுத் திரித்து, மிக

இரணம் இடு முரணர் விழி, ஒக்கக் கறுத்தவிழி

     செக்கச் சிவக்க, வளை ......           செங்கை சோர,

 

அகரு விடு ம்ருகமதம் மணத்துக் கனத்த, பல

     கொத்துக் குழல் குலைய,

மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர,

     நெக்குக் கருத்து அழிய,

அமளி பெரிது அமளி பட, வக்கிட்டு மெய்க்கரண

     வர்க்கத்தினில் புணரும் ......          இன்பவேலை

  

அலையின், விழி மணியின் வலை இட்டுப் பொருள் கவர

     கட்டுப் பொறிச்சியர்கள்,

மதன கலை விதனம் அறுவித்து, திருப்புகழை

     உற்றுத் துதிக்கும் வகை

அபரிமித சிவ அறிவு சிக்குற்று, உணர்ச்சியினில்

     ரட்சித்து, அளித்து அருள்வது ......    எந்தநாளோ?

 

திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட

     தத்தித்த ரித்தகுட

செகணசெக சகணசக செக்கச் செகச்செகண

     சத்தச்ச கச்சகண

திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி

     தக்குத்த குத்தகுர்த ......              திங்குதீதோ

 

திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி

     தத்தித்த ரித்தரிரி

டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி

     டட்டட்ட குட்டகுட

தென திமிர்த தவில் மிருக டக்கைத் திரட் சலிகை

     பக்கக் கணப்பறை  ......              தவண்டைபேரி

 

வகைவகையின் மிக அதிர, உக்ரத்து அரக்கர்படை

     பக்கத்தினில் சரிய,

எழுது துகில் முழுது உலவி, பட்டப் பகல் பருதி

     விட்டு, த்தமித்தது என,

வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து, ழுது

     தொக்குக் குனிப்பு விட ......      வென்றவேலா!

 

வயலிநகர் பயில் குமர! பத்தர்க்கு அனுக்ரக!

     விசித்ர ப்ரசித்தம் உறு

அரிமருக! அறுமுகவ! முக்கண் கணத்தர் துதி

     தத்வத் திறச் சிகர

வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்திநெறி

     தப்பு அற்று உரைக்கவல ......        தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

     திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடகு என --- என்னும் தாள ஒத்துக்களுடன்,

 

      திமிர்த தவில் --- முழங்குகின்ற தவில்,

 

     மிருக (இ)டக்கை --- வேட்டைக்கு உரிய வாத்தியமாகிய இடக்கை,

 

     திரள் சலிகை பக்கக் கணப் பறை --- திரளாக ஆராவரித்து முழங்குகின்ற பறை வகைகள்,

 

     தவண்டை --- பேருடுக்கைகள்,

 

     பேரி --- பேரிகைகள்,

 

     வகை வகையின் மிக அதிர --- விதவிதமாக மிகுந்த ஒலியினை எழுப்ப,

      உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய --- உக்கிரத்தோடு போருக்கு வந்த அரக்கர்களின் சேனையானது பக்கங்களிலே சரிந்து வி,

 

     எழுது துகில் முழுது உலவி --- ஒவியம் தீட்டப்பட்ட கொடிகள் போர்க்களம் முழுதும் பரந்து இருக்க,

 

     பட்டப் பகல் பருதி விட்டு அத்தமித்தது என --- பட்டப் பகலிலேயே சூரியன் அத்தமித்தான் என்னும்படியாக விளங்க,

 

     வரு குறளி --- போர்க்களத்தில் வந்து சேர்ந்த குண்டைக் குறள் பேய்கள்,

 

     பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட --- போர்க்களத்தில் பெருகி இருந்து குருதியில் குளித்துத் திளைத்து விளையாடி மீண்டு வரும்படியாக,

 

     வென்ற வேலா --- வெற்றி கொண்ட வேலாயுதக் கடவுளே!

 

      வயலி நகர் பயில் குமர --- வயலூர் என்னும் திருத்தலத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

 

     பத்தர்க்கு அனுக்ரக --- அடியார்க்கு அருள் புரிபவரே!

 

     விசித்ர ப்ரசித்தம் உறு அரி மருக --- சிறந்த புகழை உடைய திருமாலின் திருமருகரே!

 

     அறுமுகவ --- ஆறுமுகப் பரம்பொருளே!

 

     முக்கண் கணத்தர் துதி தத்வத் திற --- சிவசாரூபம் பெற்ற அடியார் கணங்கள் துதித்துப் போற்றும் மெய்ப்பொருளே!

 

      சிகர வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு --- சிகரங்களைக் கொண்டு வடகயிலாத்தில் திருநடனம் புரிந்து அருளுகின்ற தந்தையார் ஆகிய சிவபரம்பொருளை அடைவதற்கு உரிய,

 

     முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே --- முத்தி நெறியைத் (திருஞானசம்பந்தராக அவதரித்து) தப்பிதம் இல்லாமல் அருள் செய்த தனிப்பெரும் தலைவரே!

 

         இகல் கடின முகபட விசித்ரத் துதிக்கை மத மத்தக் களிற்றை எதிர் புளக தனம் இளக --- வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும் கொண்டு மத நீர் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் புளகாங்கிதம் உண்டாக்கும் மார்பகங்கள் நெகிழ,

 

      இனிது எட்டி --- இனிமையாகத் தாவி வந்து,

 

     கழுத்தொடு கை கட்டிப் பிணித்து இறுகி --- கழுத்தைக் கைகளால் இறுகக் கட்டிப் பிணித்து

 

     இதழ் பொதியின் அமுது முறை மெத்தப் புசித்து உருகி ---

வாயிதழில் பொருந்தி உள்ள அமுதமாகிய எச்சிலை, காம சாத்திர முறைப்படி நிரம்ப அருந்தி, அதனால் மனம் உருகி,

 

      முத்தத்தை இட்டு --- முத்தங்களைச் சொரிந்து,

 

     நக தந்தமான இடு குறியும் வரையை உற --- நகத்தாலும், பற்களாலும் உண்டான குறிகளைக் கோடுகளாகப் பதித்து,

 

     நெற்றித் தலத்து இடையில் எற்றி --- நெற்றிப் பகுதியில் எட்டி வந்து முகத்தைப் பதித்து வைத்து,

 

     கலக்கம் உற --- மனமானது கலக்கம் கொள்ளும்படியும்,

 

     இடை துவள --- இடை துவண்டு,

 

     உடை கழல --- உடைகள் கழல,

 

      இட்டத்து அரைப் பை அது தொட்டுத் திரித்து --- விருப்பத்துடன் அரையில் உள்ள பாம்புப் படம் போன்ற குறியைத் தொட்டு, அதை மிகவும் அலைத்து,

 

     மிக இரணம் இடு(ம்) முரணர் விழி ஒக்க --- போர் புரியும் பகைவர்களின் கண்கள் சிவப்பதை ஓத்து,

 

     கறுத்த விழி செக்கச் சிவக்க --- (கலவியில் ஈடுபட்டுள்ள விலைமாதரின்) கறுத்த விழிகள் செக்கச் சிவப்பாக மாறவும்,

 

     வளை செம் கை சோர --- அழகிய கைகளில் உள்ள வளையல்கள் நெகிழவும்,

 

      அகரு விடு ம்ருகமத மணத்துக் கனத்த பல கொத்துக் குழல் குலைய --- அகிலின் நறுமணத்தோடு அடர்ந்து, பூங்கொத்துக்களைச் சூடியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழவும்,

 

     மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர --- மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைப் போலக் காட்டி, (காம விளையாடல் புரிய)

 

     நெக்குக் கருத்து அழிய --- (அதனால்) உள்ளம் உருகி, கருத்து அழியவும்,

 

      அமளி பெரிது அமளி பட --- படுக்கையில் பெரிதாக ஆரவாரம் எ,

 

     வக்கிட்டு --- (நெருப்பில் வதக்கப்படுவது போல) காமாக்கினியால் உடல் சூடு உண்டாகி,

 

     மெய்க் கரண வர்க்கத்தினில் கவர --- உடல் கருவிகளால் புரிகின்ற இன்பத்தால் உள்ளம் கரவப்பட்டு,  

 

     புணரும் இன்ப வேலை அலையின் --- புணர்ச்சியால் உண்டான இன்பம் என்னும் கடலின் அலையில்,

 

     விழி மணியின் வலை இட்டு --- தமது கண்கள் என்னும் வலையினை விரித்து,

 

     பொருள் கட்டுப் பொறிச்சியர்கள் --- பொருளைக் கட்டுகின்ற விலைமாதர்களின்,

 

     மதன கலை விதனம் அறுவித்து --- காமசாத்திர அறிவால் உண்டான எனது கவலை அறும்படியாகச் செய்து,

 

      திருப்புகழை உற்றுத் துதிக்கும் வகை --- தேவரீரது திருப்புகழில் விருப்பம் உற்று, உம்மைத் துதிக்கும் வகையில்,

 

     அபரிமித சிவ அறிவு சிக்குற்று --- எல்லை இல்லாத சிவஞானத்தில் அடியேன் சிக்குண்டு,

 

     உணர்ச்சியினில் ரட்சித்து அளித்து அருள்வது எந்த நாளோ --- அந்த உணர்விலேயே என்னைக் காத்து அளித்து, அருள் புரிவது எந்த நாளோ?

 

 

பொழிப்புரை

 

     திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடகு என்னும் தாள ஒத்துக்களுடன் முழங்குகின்ற தவில், வேட்டைக்கு உரிய வாத்தியமாகிய இடக்கை, திரளாக ஆராவரித்து முழங்குகின்ற பறை வகைகள், பேருடுக்கைகள், பேரிகைகள் விதவிதமாக மிகுந்த ஒலியினை எழுப்ப, உக்கிரத்தோடு போருக்கு வந்த அரக்கர்களின் சேனையானது பக்கங்களிலே சரிந்து வி, ஒவியம் தீட்டப்பட்ட கொடிகள் போர்க்களம் முழுதும் பரந்து இருக்க, பட்டப் பகலிலேயே சூரியன் அத்தமித்தான் என்னும்படியாக விளங்க, போர்க்களத்தில் வந்து சேர்ந்த குண்டைக் குறள் பேய்கள், போர்க்களத்தில் பெருகி இருந்து குருதியில் குளித்துத் திளைத்து விளையாடி மீண்டு வரும்படியாக, வெற்றி கொண்ட வேலாயுதக் கடவுளே!

 

      வயலூர் என்னும் திருத்தலத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

 

     அடியார்க்கு அருள் புரிபவரே!

 

     சிறந்த புகழை உடைய திருமாலின் திருமருகரே!

 

     ஆறுமுகப் பரம்பொருளே!

 

     சிவசாரூபம் பெற்ற அடியார் கணங்கள் துதித்துப் போற்றும் மெய்ப்பொருளே!

 

         சிகரங்களைக் கொண்டு வடகயிலாத்தில் திருநடனம் புரிந்து அருளுகின்ற தந்தையார் ஆகிய சிவபரம்பொருளை அடைவதற்கு உரிய, முத்தி நெறியைத் (திருஞானசம்பந்தராக அவதரித்து) தப்பிதம் இல்லாமல் அருள் செய்த தனிப்பெரும் தலைவரே!

 

         வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும் கொண்டு மத நீர் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் புளகாங்கிதம் உண்டாக்கும் மார்பகங்கள் நெகிழ, இனிமையாகத் தாவி வந்து, கழுத்தைக் கைகளால் இறுகக் கட்டிப் பிணித்து, வாயிதழில் பொருந்தி உள்ள அமுதமாகிய எச்சிலை, காம சாத்திர முறைப்படி நிரம்ப அருந்தி, அதனால் மனம் உருகி, முத்தங்களைச் சொரிந்து, நகத்தாலும், பற்களாலும் உண்டான குறிகளைக் கோடுகளாகப் பதித்து,

நெற்றிப் பகுதியில் எட்டி வந்து முகத்தைப் பதித்து வைத்து, மனமானது கலக்கம் கொள்ளும்படியும், இடை துவண்டு, உடைகள் கழல, விருப்பத்துடன் அரையில் உள்ள பாம்புப் படம் போன்ற குறியைத் தொட்டு, அதை மிகவும் அலைத்து, போர் புரியும் பகைவர்களின் கண்கள் சிவப்பதை ஓத்து, கலவியில் ஈடுபட்டுள்ள விலைமாதரின் கறுத்த விழிகள் செக்கச் சிவப்பாக மாறவும், அழகிய கைகளில் உள்ள வளையல்கள் நெகிழவும், அகிலின் நறுமணத்தோடு அடர்ந்து, பூங்கொத்துக்களைச் சூடியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழவும், மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைப் போலக் காட்டிக் காம விளையாடல் புரிய, அதனால் உள்ளம் உருகி, கருத்து அழியவும், படுக்கையில் பெரிதாக ஆரவாரம் எ, நெருப்பில் வதக்கப்படுவது போல, காமாக்கினியால் உடல் சூடு உண்டாகி, உடல் கருவிகளால் புரிகின்ற இன்பத்தால் உள்ளம் கரவப்பட்டு, புணர்ச்சியால் உண்டான இன்பம் என்னும் கடலின் அலையில், தமது கண்கள் என்னும் வலையினை விரித்து, பொருளைக் கவர்ந்து கொள்ளுகின்ற விலைமாதர்களின் காமசாத்திர அறிவால் உண்டான எனது கவலை அறும்படியாகச் செய்து, தேவரீரது திருப்புகழில் விருப்பம் உற்று, உம்மைத் துதிக்கும் வகையில், எல்லை இல்லாத சிவஞானத்தில் அடியேன் சிக்குண்டு, அந்த உணர்விலேயே என்னைக் காத்து அளித்து, அருள் புரிவது எந்த நாளோ?

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் அன்பை விரும்பாது, பொருளையே விரும்புகின்ற விலைமாதர்கள் புரிகின்ற காம லீலைகளைக் கூறி, அவர்கள் தரும் இன்பத்தில் உண்டான விருப்பத்தை ஒழித்து, இறையருளில் விருப்பம் கொண்டு உய்யும் வகையை முருகப் பெருமான் அருள்புரிய வேண்டுகின்றார் அடிகளார்.

 

மதன கலை விதனம் அறுவித்து ---

 

மதன கலையில் விருப்பம் கொண்டால், விதனமே மிகும்.

 

முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே ---

 

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பர் பெருமான். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

 

ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?.  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

 

இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.

 

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.

 

பத்தர்க்கு அனுக்ரக ---

 

பத்தி செய்கின்ற அடியார்க்கு அனுக்கிரகம் என்னும் அறக்கருணையையும், அடியார் அல்லாதார்க்கு நிகிரில்லாத மறக்கருணை ஆகின்ற நிக்கிரகத்தையும் அருள் புரிபவன் இறைவன்.

 

வயலி நகர் பயில் குமர ---

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன்வேலினால் "ஓம்" என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் பற்றை விடுத்து, தேவரீரது திருவடிப் பற்றை அருள்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...