உடல் நலத்திற்கே உணவு

 

 

உடல் நலத்திற்கே உணவு

-----

 

"மிகினும் குறையினும் நோய்செய்யும், நூலோர்

வளிமுதலா எண்ணிய முன்று".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

இதன் பொருள் ---

 

அளவில் மிகுந்தாலும், அளவில் குறைந்தாலும், மருந்து நூலோர் வாதம் முதலாகக் கருதப்பட்ட வாதம், பித்தம், சீதம் என்னும் மூன்று ஆகிய நோய் ஒருவனுக்கு உண்டாகும்.

 

வாதம் என்னும் ஊதையும், பித்தமும், கோழை என்னும் சிலேத்துமமும் (கபம் அல்லது ஐ அல்லது ஐயம் என்பதும் கோழைக்குப் பெயர்) உடலில் அளவில் சரியாக இருத்தல் வேண்டும்.

 

இவை மூன்றும் உடம்பில் இருந்து வெவ்வேறு நல்ல தொழில்களைச் செய்யும் இன்றியமையாத மூலக் கூறுகளே. இவைகள் நோய்கள் அல்ல.

 

---  மூச்சும் பேச்சும் உட்பொருள் இடமாற்றமும், வெளியேற்றமும் தனித்தும், பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது வாதம் என்னும் ஊதையின் தொழில்கள்.

 

---  உண்ட உணவின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்.

 

---  தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய்போல் பயன்படுவது கோழை.

 

இவை உணவு, உடை, மற்றும் செயல்களின் ஒவ்வாமையாலும், இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

 

நோய் வரும் வழிகள் அல்லது காரணங்கள் பழவினை, முன்னோர் தொடர்பு, இயற்கை, ஒட்டுவாரொட்டு, ஊண், உடை, நஞ்சு, உறுப்புக் குறைவு, வறுமை, பஞ்சம், செய்வினை, அச்சம், போர் முதலியன.

 

தாக்கும் பகுதி பற்றி உள்ளநோய், உடல்நோய் என, நோய்கள் இருவகைப் படும்.

 

நோய் நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அறுப்பு, மந்திரம், மந்திரத் தூக்கம்,(Hypnotism), வழிபாடு, இறும்பூது (miracle).  நம்பகம் (Faith) முதலியவனவாகப் பல திறப்படும்.

 

---  பழவினையால் வந்த நோய்க்கு மருந்து இல்லை என்பர். இறைவனால் ஊட்டப்பட்ட வினை காரணமாக  வந்த நோய் இறை வழிபாட்டால் மட்டுமே நீங்கும்.

 

---  மருந்து, இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேரும் தழையும் போல்வன இயற்கை; மாத்திரை போல்வன செயற்கை.

 

---  நோய்கள், உணவு உடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

 

---  உணவு ஒவ்வாமையாவது, சுவை மணம் ஆற்றல்களால் உடல் கூற்றோடும் கால இடங்களொடும் பொருந்தாமை.

 

---  உடை ஒவ்வாமையாவது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை.

 

---  செயல் ஒவ்வாமை மிகையும் தகாமையும் ஆகும்.

 

"மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது

அற்றது போற்றி உணின்".

 

என்பதும் திருக்குறளே.

 

இதன் பொருள் ---

 

ஒருவன் தான் முன்னர் உண்ட உணவானது செரிமானம் ஆனதை அறிந்து, கடைப்பிடித்து, பின்னர் உண்பான் ஆகில், அவனுடைய உடம்புக்கு மருந்து என வேறு ஒன்று வேண்டியது இல்லை.

 

பெரும்பாலும் நோய்கள் எல்லாம் செரிமானம் ஆகாத உணவாலும் பொருந்தாத உணவாலும், மிகையான உணவாலுமே நேர்கின்றன.

 

செரிமானத்தை அறியும் குறிகள் ஆவன--- வயிற்றில் கனம் இன்மை, ஏப்பத்தின் செம்மை,  பசி உண்டாதல், உணவு உட்கொண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இருத்தல், என்பன ஆகும்.

 

தமிழகத்து உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையில் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடு உண்டாக்கும். எனவே, அது நமது வெப்பநாட்டிற்குப் பொருந்தாது என்று புழுங்கலரிசி ஆக்கப்படுகின்றது. அதைச் சரி ஆளவு தண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். வாழைக்காய் வாயுவை மிகுப்பது என்று, பிஞ்சு நிலையில் சமைக்கப்படும். சீனி அவரை என்னும் கொத்தவரை பித்தம் மிகுப்பது என்று அதற்குப் புளி சேர்க்கப்படும்.

 

காயச் சரக்காகக் கூட்டுவனவற்றுள்,

 

--- மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்;

--- கொத்துமல்லி பித்தத்தை அடிக்கும்;

--- சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்;

--- மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும்;

--- பூண்டு வாயுவை அகற்றி வயிற்றுப் பொருமலை நிறுத்திப்  பசியை மிகுவிக்கும்;

--- வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் இரத்தத்தைத்  தூய்மைப்படுத்தும்;

---  பெருங்காயம் வாயுவை வெளியேற்றும்;

--- இஞ்சி பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்;

--- தேங்காய் நீர்க்கோவை அல்லது தடுமன் என்னும்  முக்குச் சளியை நீக்கும்;

---  கறிவேப்பிலை உணவுக்கு மணம் ஊட்டி விருப்பை உண்டாக்கும்;

--- கடுகு வயிற்று வலி வராமல் காக்கும்;

--- நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத் தெளிவும்  உண்டாக்கும்,

 

இவை எல்லாம் சேர்த்த துவரம் பருப்புக் குழம்பும், சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும், சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடல் புண்ணை ஆற்றும், நெய்யோடும் உடலுக்கு வலிமை செய்து, மல பந்தத்தை நீக்கும் கீரையொடும், குளிர்ச்சி தந்து பித்தம் போக்கும் எலுமிச்சை ஊறுகாயொடும், அறுசுவைப்பட உண்ட பின், உண்டது செரிமானம் ஆகி, நல்ல பசி எடுத்தால், அதன் பின்னர் மறு வேளை உணவை உட்கொண்டால், மருந்து என்பது ஒன்று வேண்டியதில்லை.

 

எனவே,

 

"அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து".    

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

இதன் பொருள் ---

 

முன்னர் உண்ட உணவு செரிமானம் ஆனதை உணர்ந்து, நன்றாகப் பசி எடுத்த பின்னர், உடல் நிலைக்கும், அறமுறைக்கும் மாறுபாடு இல்லாத உணவு வகைகளை, நோக்கமாகக் கொண்டு உண்ணுக.

 

இங்கு 'அற்றது அறிந்து' என்றது, செரிமானத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தவே.

 

திருவள்ளுவ நாயனார், இதை முதன்மையாகக் கொண்டதினாலேயே, இன்பத்துப்பாலில் உலகில் சிறந்த இன்பத்தைக் கூறுகின்ற போதும்,

 

"உணலினும் உண்டது அறல் இனிது, காமம்

புணர்தலின் ஊடல் இனிது"

 

என உவமமாகக் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

 

இதன் பொருள் ---

 

உண்ணுவதை விடவும், முன்னர் உண்ட உணவு செரித்தல் இன்பத்தைத் தரும். அதுபோலவே, காம இன்பத்திற்குச் சேர்க்கையில் உள்ளதை விட, ஊடல் கொள்ளுதல் இன்பம் ஆகும்.

 

உண்ட உணவு செரித்த பின்பும், அதன் சுவையும் மணமும் சற்று நேரம் நிற்கும். நாம் ஏப்பம் விடும்போது இதை நன்கு உணரலாம். ஏனவே, துவரப் பசித்தபின் உண்ணுதல் வேண்டும். 

 

ஊதை பித்த கோழைகளை மிகுப்பனவும் குறைப்பனவுமாக உள்ளவை உணவுகள். 

 

இளமைக்கு உரிய உணவுகளை முதுமையில் உண்பது பருவத்தோடு மாறுபடும்.

 

அருவருப்பான தோற்றமும் நாற்றமும் உள்ள உணவுகள் விருப்பத்தோடு மிகுதியாக உண்பது கூடாது.

 

கோடைக்கு உரிய உணவை மழைநாளிலும், காலைக்கு உரிய உணவை மாலையிலும் உண்பதும் கூடாது.

 

வெப்பநாட்டிற்கு உரிய உணவைக் குளிர் நாட்டில் உண்பதும் கூடாது.

 

அறுசுவைகளுள்,  துவர்ப்பும் புளிப்பும் ஊதைக் கூறு உள்ளவை.

 

உவர்ப்பும் கசப்பம் பித்தக் கூறு உள்ளவை.

 

இனிப்பும் கார்ப்பும், கோழைக் கூறு உள்ளவை.

 

ஒரே சுவையுள்ள காய்கனிகள் நேர்மாறான குணம் செய்வதாலும், ஒரே கனி வேறுபட்ட வளர்ச்சி நிலையிலும் வேறுபட்ட நிலத்தாலும் வேறுபட்ட காலத்தாலும் சுவை வேறுபடுதலாலும், சுவையை மட்டும் நோக்காது பொருளையும் நோக்கி, ஏற்பதும் ஏற்காததும் அறிந்து கொள்வதும் தள்ளுவதும் செய்தல் வேண்டும்.

 

வெளி இடங்களில் உடல்கூறு முதலியவற்றோடு மாறுபடும் உணவுகளை, சுவை கருதியோ, அல்லது வேறு காரணம் கருதியோ உண்ண நேர்ந்தாலும், அவற்றிற்கு உரிய மாற்றுக்களை உடனே உண்டுவிடுவது நோய் வராமல் தடுக்கும்.

 

ஒவ்வோர் உணவுப் பொருளிலும், சிறிது அளவாகவோ பேரளவாகவோ, ஒவ்வொரு குற்றம் இருந்தாலும், ஒருவர் உடலுக்கு ஓத்தது இன்னொருவர் உடலுக்கு ஒத்து வராது.

 

பித்தத்தையும் காய்ச்சலையும் நீக்கினும், தாது வளர்ச்சியைக் குறைக்கும் இஞ்சி சுக்குபோல ஒன்றிற்கு ஆவது இன்னொன்றிற்கு ஆகாது என்பதாலும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ஆகும் என்பதாலும், எல்லாவற்றின் இயல்பையும் அறிந்து, எல்லா நிலைமைக்கும் ஏற்ப, உடம்பிற்கு ஒத்த உணவை அளவாக உண்டு நோய் இன்றி வாழலாம்.

 

உணவு வகை பற்றித் தமிழ் மருத்துவம் மரக்கறி மருத்துவமும் புலால் மருத்துவமும் என இரு வகைப்படும். என்றாலும்,  திருவள்ளுவர் தழுவியது மரக்கறி மருத்துவமே.

 

புலால் உணவில் மரக்கறி உணவும் கலந்திருத்தல்போல, புலால் மருத்துவத்தில் மரக்கறி மருத்துவமும் கலந்துள்ளது.

 

ஆக, முன்னர் கூறியது போல, வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்று கூறுகள் அளவாக இல்லாத போது, ஒன்றுக்கு ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் நோய் உண்டாகும்.

 

நோய்கள் உண்டாவதற்குப் பிற காரணங்கள் என்னவென்று, "குமரேச சதகம்" என்னும் நூலில் கூறியுள்ளது காண்போம்....

 

கல்லினால், மயிரினால், மீதூண் விரும்பலால்,

     கருதிய விசாரத்தினால்,

கடுவழி நடக்கையால், மலசலம் அடக்கையால்,

     கனி, பழங் கறி உண்ணலால்,

 

நெல்லினால், உமியினால், உண்டபின் மூழ்கலால்,

     நித்திரைகள் இல்லாமையால்,

நீர்பகையினால், பனிக் காற்றின் உடல் நோதலால்,

     நீடுசருகு இலை ஊறலால்,

 

மெல்லிநல் லார்கலவி அதிகம் உள் விரும்பலால்,

     வீழ்மலம் சிக்குகையினால்,

மிகுசுமை எடுத்தலால், இளவெயில் காய்தலால்,

     மெய்வாட வேலைசெயலால்,

 

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால்,

     வன்பிணிக்கு இடம் என்பர்காண்.

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

 இதன் பொருள் ---

 

            மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

            கல்லினால் மயிரினால் --- உணவிலே கல்லும் மயிரும் கலந்திருப்பதாலும்,

 

            மீதூண் விரும்பலால் -- உணவை விரும்பி மிகுதியாக உண்பதாலும்,

 

            கருதிய விசாரத்தினால் --- உள்ளத்தை வருத்தும் கவலையினாலும்,

 

            கடு வழி நடக்கையால் --- வெகு தூரம் நடப்பதனாலும்.

 

            மல சலம் அடக்கையால் --- மலத்தையும், சிறுநீரையும் அடக்குவதாலும்,

 

             கனி, பழம் கறி உண்ணலால் --- மிகவும் கனிந்த பழங்களையும், முன்பு செய்து வைத்த கறிகளையும் உண்பதாலும்,

 

            நெல்லினால் உமியினால் --- உணவில் நெல்லும் உமியும் சேர்ந்து இருப்பதாலும்,

 

            உண்ட பின் மூழ்கலால் --- உணவு உண்ட பின்னர் குளிப்பதாலும்,

 

            நித்திரைகள் இல்லாமையால் --- உறக்கம் கெடுவதாலும்,

 

            நீர் பகையினால் --- தன் உடம்புக்கு ஒவ்வாத நீரிலே குளிப்பதாலும், சுத்தம் இல்லாத நீரைக் குடிப்பதாலும்,

 

            பனிக் காற்றின் உடல் நோதலால் --- பனிக் காலத்திலே வீசும் காற்று உடம்பை வருத்துவதாலும்,

 

            நீடு சருகு இலை ஊறலால் --- சருகும் இலையும் நீண்டநாள் ஊறிக் கிடக்கும் நீரைக் குடிப்பதாலும்,

 

            மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் --- மென்மைத்தன்மை உடைய பெண்களின் புணர்ச்சியை மிகவும் விரும்பி அனுபவிப்பதாலும்,

 

            வீழ் மலம் சிக்குகையினால் --- மலமானது கழியாமல் சிக்குவதாலும்,

 

            மிகு சுமை எடுத்தலால் --- பெரும் சுமையை எடுப்பதாலும்,

 

            இள வெயில் காய்தலால் --- காலை வெயிலில் உடம்பு காய்வதாலும்,

 

            மெய் வாட வேலை செயலால் --- உடல் வாட்டம் உறும்படி வேலைகளைச் செய்வதாலும்,

 

            வல் இரவிலே தயிர், கள், சருகு ஆதி உண்ணலால் --- இரவிலே தயிரையும், கள்ளையும்,  கீரைக் கறிகளையும் உண்பதாலும்,

 

            வன் பிணிக்கு இடம் என்பர் --- கொடிய நோய்க்கு இடம் உண்டாகும் என்பார்கள்.

 

மேற்குறித்த பாடலில், உணவு முறை அல்லாது, மற்றவைகளும் சொல்லப்பட்டு இருக்கும். உணவு மட்டும் அல்லாது செயல்முறைகளாலும் நோய் வரும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

 

அவ்வாறு, செய்வதோடு, உடம்பில் அழுக்குச் சேராமல் காத்துக் கொள்வது உடம்பினை ஓம்புவது ஆகும்.

 

வள்ளல் பெருமான், உடம்பின் மேலே வெள்ளை அழுக்கும், கீழே  மஞ்சள் அழுக்கும் தேங்காமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

 

நமது உடம்பில் கீழே உள்ளது மஞ்சள் அழுக்கு என்னும் மலம். மலம் கழியாமல் இருந்தாலும் ஆபத்து. மார்புக்கு மேலே உள்ளது வெள்ளை அழுக்கு என்னும் கபம், கோழை. சளியானது, மார்ச்சளி ஆகி, கபம் அல்லது கோழையாக மாறவிடக் கூடாது.

 

அழுக்கினைத் தேங்காமல் காத்துக் கொள்வது, உண்ணத் தக்க உணவினை, காலம், வயது, இடம் அறிந்து கடைப்பிடிப்பதால் சாத்தியம் ஆகும். நமது வாழ்க்கை முறையும், நடைமுறையும் அதற்கு இடம் கொடுக்காமல் காத்துக் கொள்வது நலம்.

 

"மலச்சிக்கல் பலச்சிக்கல்" என்பார்கள். வீழ வேண்டிய மலம், சலம் சிக்குவதாலும், மலசலத்தை அடக்குவதாலும் நோய் உண்டாகும் என்று மேலே கண்டோம்.

 

தக்க உணவு முறைகள், செயல்முறைகள் மூலம் மஞ்சள் மலத்தை நாள்தோறும் இருமுறை கழித்துக் கொள்ளுதல் வேண்டும்.

 

உடம்பின் மேலே உண்டாகும் வெள்ளை மலம் என்னும், சளி, கோழை அல்லது கபம் வராமல் காத்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வந்தால் அதை, உரிய முறையில் போக்கிக் கொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம்.

 

நமது உடலிலே பத்து வகையான வாயுக்கள் உள்ளன. உடலில் மாற்றம் உண்டாகும்போது, அவை தக்கவாறு செயல்பட்டு சரியாகும்.

 

கொட்டாவி விடுகின்றோம் என்றால், உடலில் பிராணவாயு போதவில்லை என்று பொருள். அந்த நிலையை உடலில் உள்ள தச வாயுக்களில் ஒன்றான "தேவதத்தன்" என்னும் வாயு, கொட்டாவி மூலம் போக்கும். கொட்டாவியை வாயை மூடுவதன் மூலம் பிறர் அறியாதபடி செய்யலாம். இல்லை என்றாலும் அதனால் தொற்று இல்லை.

 

ஏப்பம் வருகிறது. "நாகன்" என்னும் காற்றானது வயிற்றிலே ஏற்படுகின்ற வாய்வுத் தொல்லை பிரச்சினைகளைத் தீர்க்க, வாய்வழியாக வாயுவை வெளியேற்றுகின்ற (Belching) பணியை செய்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்ட பிறகு, கீழ்ப்பகுதியில் காற்றை வெளியேற்ற முடியாதபோது வாய் வழியாக எப்பம் விட்டு, சுக நிலையை எய்திட உதவுகிறது. ஏப்பத்தைப் பிறர் அறியாதவகை மென்மையாக விட்டுக் கொள்ளலாம். ஏப்பத்தால் தொற்று உண்டாவது இல்லை.

 

விக்கல் வருகின்றது என்றால், அதை நமது உடம்பில் உள்ள ஒரு வாயு செயல்பட்டுப் போக்கும். விக்கலை உடனடியாகப் போக்கிக் கொள்ளலாம்.

 

இந்த கொட்டாவி, ஏப்பம், விக்கல் ஆகியவற்றால் பிறருக்கு எவ்வித பாதகமும் விளைவது இல்லை.

 

ஆனால், தும்மல், இருமல் வருகின்றது என்றால் அதைப் போக்க வழியில்லை.

 

நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண. கோபம் வருகிறது. ஓடினால் இரைக்கிறது. தும்முகிறோம். இந்தச் செய்கைகளுக்கு மூலமாக இருக்கும் வாயுவுக்குக் "கிருகரன்" என்று பெயர்.

 

இதை "தும்மல் காற்று" என்பர். கிருகரன் என்னும் இந்தக் காற்றானது, சுவாசப் பாதைக்குள் அதாவது மூச்சுக் குழலுக்குள் ஏதாவது வெளிப் பொருளானது புகுந்துவிட்டால், அல்லது தொண்டைப் பகுதிக்கு வந்து விட்டால், அதனை உடனடியாக வெளியேற்ற ஒரு தும்மலையோ அல்லது இருமலையோ ஏற்படுத்திவிடுகிற வேலையை வெகுவேகமாக செய்து காப்பாற்றி விடுகிறது.

 

ஆக, தும்மல் இருமல் வெளிப்பொருள்களாலும் வரும். இதைத்தான் தொற்று என்கின்றோம். தும்மல் இருமலை அடக்கிக் கொள்ள முடியாது. அது வெளிவந்துதான் ஆகவேண்டும். அதனால்தான், தும்மல், இருமல் வரும்போது, கைகளாலோ, துணியாலோ அல்லது வேறு எந்த விதத்தினாலோ மறைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர்.

 

இதுவரையில் வந்துள்ள தொற்று நோய்கள் எல்லாம், சளி, ஜலதோஷம் வாயிலாக வரும் தும்மல், இருமல் ஆகியவற்றால் தான் வந்துள்ளன என்பதையும், இப்போது வந்துள்ள கொரோனா வும் அப்படித்தான்.

 

ஆக, தும்மல், இருமல் என்பவை, அதனால் பாதிக்கப்பட்டவரோடு, பிறருக்கும் கேடு விளைவிப்பது ஆகும் என்பதால் இது கொடியது எனப்பட்டது. இதனால், தனக்கும், பிறருக்கும் கேடு வருவது நிச்சயம்.

 

எனவே தான், இந்த இருவகையான பாதிப்புகளைச் சுட்டிக் காட்டி, அருளாளர்கள் பாடிவைத்தனர்.

 

"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே"

 

என்றும்,

 

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்

அம்மலர் அடி அ(ல்)லால் அரற்றாது என்நா,

கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்

மும்மதிள் எரிஎழ முனிந்தவனே!

 

இதுவோ எமை ஆளுமாறு, ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே!

 

என்றும்,

 

கனைகொள் இருமல் சூலைநோய்

  கம்பதாளி குன்மமும்

இனைய பலவும் மூப்பினோடு

  எய்திவந்து நலியாமுன்

பனைகள் உலவு பைம்பொழில்

  பழனம் சூழ்ந்த கோவலூர்

வினையை வென்ற வேடத்தான்

  வீரட்டானம் சேர்துமே.

 

என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.

 

"இருமல்" என்னும் நோயை முதன்மையாகக் கொண்டுய, "இருமல் உரோகம் முயலகன் வாதம்" எனத் தொடுங்கி, அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றை நான் முன்னரே பதிவிட்டு இருந்தேன்.

 

இந்த இருமல் என்பது எப்போது ஒருவருக்கு மிகத் துன்பத்தைக் கொடுக்கும் என்றால், இரவு நேரத்தில் படுக்கைக்குச் சென்ற பிறகுதான். எனவேதான்,  "உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து" என்று அருணகிரிநாதப் பெருமான் பிறிதொரு திருப்புகழில் பாடினார்.

 

     வாழைக்காயைப் பிஞ்சு நிலையில் உணவாகக் கொள்ளுதல் குறித்து, மேலே நான் குறிப்பிட்டு இருந்தேன். ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள "திருவிசைப்பா" என்னும் நூலில், திருமாளிகைத் தேவர் பாடியுள்ள பின்வரும் அருட்பாடலால் இது தெளிவாகும்.

 

துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்;

கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்;

எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும், எனது பணி 

நச்சாய் காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

இதன் பொழிப்புரை ---

தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும் எம்பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையதாய் இருப்பினும் வாழைக் கச்சல்களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப் பயன்படுத்துவார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப் பற்றுக்கோடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பாது இருப்பதன் காரணம் புலப்படவில்லை.

     வாழையின் பிஞ்சுக் காயும், வேப்பிலையும் கசப்புச் சுவை உடையன. என்றாலும், அவற்றையும் கறியாகக் கொள்வர் மக்கள் என்னும் உண்மை இப்படாலின் மூலம் காட்டப்பட்டுள்ளது காண்க.

 

 

1 comment:

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...