தாய் தந்தை இல்லாத குறை சிவனுக்கு

 

 

    தில்லை நடராசப் பெருமானை வணங்கி, அவரைப் பழிப்பது போலப் புகழ்ந்து, காளமேகப் புலவர் பாடிய பாடல்....

 

வில்லால் அடிக்க, செருப்பால் உதைக்க, வெகுண்டு ஒருவன்

கால்லால் எறி, பிரம்பால் அடிக்க, இக் காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்குஓர்அன்னைபிதா

இல்லாத தாழ்வு அல்லவோ? இங்ஙனே எளிது ஆனதுவே.

 

இதன் பொருள் ---

 

இருள் செறிந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள தில்லையில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாசப் பெருமானுக்கு, இந்த உலகத்தில் ஒப்பற்ற தாய், தந்தை இல்லாத குறைவினால் அல்லவா, அருச்சுனன் வில்லால் அடிக்கவும்,

கண்ணப்பர் தமது செருப்புக் காலை திருக்கண்ணிலே வைக்கவும், பாண்டிய நாட்டு மன்னனாகிய பாண்டியன் வெகுண்டு பிரம்பினால் அடிக்கவும், சாக்கிய நாயனார் கல்லால் அடிக்கவும் நேர்ந்தது (என்று பழிப்பது போலவும்). இவ்வளவும் இறைவன் எல்லோர்க்கும் எளியனாகத் தோன்றி அருள் புரிவதால் ஆகும். (என்று இறைவனது அடியார்க்கு எளியனாம் தன்மையைப் புகழ்வது போலவும் பாடபட்டது.)

 

     காசினி --- உலகம். அல் ஆர் பொழில் (அல்லார் பொழில்) --- இருள் செறிந்த சோலை. மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்து,  பகலில் சூரியனது ஒளியும், இரவில் சந்திரனது ஒளியும் புகாதபடி உள்ளதால், "இருள் செறிந்த சோலை" என்றார்.  அம்பலவாணன் --- பொன்னம்பலம் என்னும் அருள்வெளியில், உயிர்களுக்கு அருள் புரிவதற்காக, அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளுகின்ற சிவபெருமான். இறைவன் பிறப்பு இறப்பு அற்றவன். எனவே,தாய் தந்தை அற்றவன். எல்லா உயிர்க்கும் தாயாகவும், தந்தையாகவும் இருந்து அருள் புரிபவன். தாழ்வு --- குறைவு. எளிது ஆனது --- எளிதாய் முடிந்தது.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...