54. அறிய முடியுமோ
-----
மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்
மட்டிக் குரங்கறியுமோ?
மக்களுடை அருமையைப் பெற்றவர்க ளேஅறிவர்
மலடிதான் அறிவதுண்டோ?
கணவருடை அருமையைக் கற்பான மாதறிவள்
கணிகையா னவள் அறிவளோ?
கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம்என் பதைவரும்
களவான நாயறியுமோ?
குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்
கொடியபூ னையும்அறியுமோ?
குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்
கொடுமூடர் தாம்அறிவரோ?
மணவாளன் நீயென்று குறவள்ளி பின்தொடர
வனமூடு தழுவும்அழகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இதன் பொருள் ---
மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனமூடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை பின்பற்றி வரச்சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ - மணமுடைய மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களேயன்றி அறிவற்ற குரங்கு அறியுமோ?,
மக்களுடைய அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களேயல்லாமல் மலடி அறிவாளோ?
கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; பொதுமகள் அறிவாளோ?
கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவுஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருடவரும் நாய் அறியுமோ?
குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ?
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்; கொடுமூடர் தாம் அறிவரோ? - பழகத்தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினரே அறிவார்கள்; கொடிய கயவர்கள் அறிவார்களோ?
(விளக்கவுரை) ‘குரங்கின் கைப்பட்ட பூமாலை' ‘மக்கள் அருமை மலடி அறிவாளோ?' ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்ததுபோல' ‘பாம்பின்கால் பாம்பறியும்' என்னும் பழமொழிகள் இங்குக் கருதத் தக்கன. ஒருசந்தி - ஒருவேளை. (நோன்பு) ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒருசந்தி, ஒருவேளை என்பது வழக்கம். ஒரு சந்திப் பானை : என்பது நோன்புக்குச் சமைக்க எனத் தனியே வைத்திருக்கும் ஒரு பாண்டம். நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும் ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள்.
No comments:
Post a Comment