"நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்திநிழல் அருகே
இருப்பார் திருவுளம் எப்படியோ, இன்னம் என்னை அன்னைக்
கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய
திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே."
பொழிப்புரை --- நெருப்பைப் போலும் திருமேனியை உடைய சிவபெருமான் திருச்செங்காட்டில் ஆத்தி மரநிழலிலே எழுந்தருளி இருக்கின்றான். அவனுடைய திருவுள்ளப் பாங்கு எப்படி அமைந்துள்ளதோ தெரியவில்லை. இன்னமும் ஒரு தாயின் வயிற்றிலே என்னைக் கொண்டு சேர்ப்பாரோ? திருமாலும் காண்பதற்கு அரியதான தன்னுடைய திருவடி நிழலிலே சேர்ப்பாரோ? சிவபெருமானுடைய அருட்செயல் இன்னது என்று தெரியாது.
விளக்கம் - சிவபெருமான் பவளம் போல் சிவந்த திருமேனியை உடையவன் என்பதால், "நெருப்பான மேனியர்" என்றார். அவர் எழுந்தருளி விளங்குகின்ற இடங்கள் எல்லாம் திருக்கோயில் ஆகும். அடியவர் உள்ளமும் பெருங்கோயில் தான் அவருக்கு. அந்தப் பக்குவத்தை அடையச் செய்வதற்காக, அவனைக் கும்பம், தம்பம், பிம்பம் என்னும் நிலைகளில் வைத்து, எழுந்தருளப் பண்ணி வழிபாடு ஆற்ற அருளாளர்களை அதிட்டித்து வழிகாட்டியவனும் அவனே தான். பல திருக்கோயில்களிலும் அவன் நமது வேண்டுதலாகிய ஆவாகனம் காரணமாக எழுந்தருளி இருக்கின்றான். அத் திருத்தலங்களில் திருச்செங்காட்டங்குடியும் ஒன்று. ஆத்தி தலமரம். ஆதலின், "செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே இருப்பார்" என்றார்.
தம்மிடத்தில் அன்பு செய்வாருடைய பக்குவத்திற்கு ஏற்பத் தாமும் அன்பு செய்வார் ஆதலால், "அவரது திருவுள்ளம் எப்படியோ" என்றார். உயிர்கள் உய்யும்பொருட்டு, மாயாகாரியமாகிய உடம்பிலே அவைகளைச் செலுத்துதல் முதலாகிய ஐந்தொழில்களையும் பெருமான் ஆற்றுகின்றான். அவன்தான் உயிரின் பக்குவத்தை அறிவான். எத்தனையோ பிறவிகளை எடுத்து எடுத்து இளைத்த ஆன்மாவை, மேலும் ஒரு பிறவி எடுக்க வேண்டி, இன்னும் ஒரு தாயின் கருப்பையிலே புகுத்துவது செய்வானோ அல்லது, பன்றியாக வடிவெடுத்துச் சென்றும் திருமாலால் காணமுடியாத தனது திருவடி நிழலில் வைத்து ஆட்கொள்ளுவானோ என்பது, நான் என்னும் முனைப்பு உடைய ஆன்ம அறிவுக்குப் புலப்படாது. அந்த ஊசியின் காது இன்னும் அறவில்லை. அதனால், சிவன் செயல் எப்படி அமையமோ என்பார், "இன்னம் என்னை அன்னைக் கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே" என்றார்.
No comments:
Post a Comment