72. மாணிக்கங்கள்
-----
சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான
துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;
சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள
துரையுமோர் மாணிக் கம்ஆம்;
பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக் கம்ஆம்;
பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்
பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;
ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக் கம்ஆம்;
உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக் கம்ஆம்;
அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அழிவுஅற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே - கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன துரகம் ஓர் மாணிக்கம் ஆம் - தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது.
சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உ(ள்)ள துரையும் ஓர் மாணிக்கம் ஆம் - சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன்,
பழுதுஅற்ற அதிரூபவதியுமாய்க் கற்பு உடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் - குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள்.
பல கலைகள் கற்று அறி அடக்கம் உ(ள்)ள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம் - பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன்.
ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் - அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்.
உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம் ஆம் - நல்ல குடியில் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு மாணிக்கம் போன்றவன்.
No comments:
Post a Comment