56. வேசையர்

 


                          56. வேசையர்

                                  -----

பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை,

     புனைமலர் படுக்கைவீடு

பொன்வாசல், கட்டில்பொது அம்பலம், உடுத்ததுகில்

     பொருவில்சூ தாடுசாலை,


மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து,

     விழிமனம் கவர்தூண்டிலாம்,

மிக்கமொழி நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு

     மின்னல்இரு துடைசர்ப்பமாம்,


ஆவலாகிய வல்கு லோதண்டம் வாங்குமிடம்,

     அதிகபடம் ஆம்மனதுகல்,

அமிர்தவாய் இதழ்சித்ர சாலையெச் சிற்குழி,

     அவர்க் காசை வைக்கலாமோ?


மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை

     வதைத்தவடி வேலாயுதா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


மாவடிவு கொண்டு ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா - மாமர வடிவாக நடுக்கடலிலே மறைந்த ஒப்பற்ற சூரபதுமனைப் பிளந்த வடிவேல் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


பூவில் வேசிகள் வீடு பெருஞ் சந்தைப்பேட்டை - உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை; 


மலர்புனை படுக்கைவீடு பொன்வாசல் - மலர்களாலே அணிசெயப்பெற்ற படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில்.


கட்டில் பொது அம்பலம் - படுக்கைக் கட்டில் பலருக்கும் பொதுவான இடம். 


உடுத்த துகில் பொருஇல் சூதுஆடு சாலை - அவர்கள் உடுத்த ஆடை ஒப்பற்ற சூதாடும் அரங்கு.


மேவல் ஆகிய கொங்கை கை ஆடு திரள்பந்து - விருப்பத்தை ஊட்டும் அவர்களின் கொங்கைகள் (பலர்) கையாலும் ஆடத் தக்க திரண்ட பந்து.


விழி மனம் கவர் தூண்டில்ஆம் - அவர்களின் கண்கள் (பலருடைய) மனத்தையும் கவர்கின்ற தூண்டில் ஆகும்.


மிக்கமொழி நீர்மேல் எழுத்து - மிகைப்பட்ட அவர்கள் பேச்சு நீர்மேல் எழுத்தாகும்;


அதிக மோகம் ஒரு மின்னல் - அவர்கள் காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று மாறக் கூடியது. 


இருதுடை சர்ப்பம் ஆம் - அவர்களுடைய இரண்டு துடைகளும் பாம்புகள்; 


ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்கும் இடம் - விருப்ப மூட்டும் அல்குலோ எனில் தண்டனையை நிறைவேற்றும் இடம்.


அதி கபடம் ஆம் மனது கல் - மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல்லாகும்.


அமிர்தவாய் இதழ் சித்திரசாலை எச்சிற்குழி - அமுதம் எனக் கூறும் வாயிலுள்ள இதழ் ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சிற்குழி; 


அவர்க்கு ஆசை வைக்கலாமோ - அவர்களிடம் காதல்கொள்வது தகாது.


No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...