69. பூப்பு வாரம்

 


                     69. பூப்பு வாரம்        

                               ---


அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்

     கானகற் புடைய ளாவாள்;

  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி

     அளவில்பைங் குழவி பெறுவாள்;


திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு

     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;

  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;

     திருவுமுண் டாயி ருப்பாள்;


கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்

     காரிவா ரத்தி லாகில்;

  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார

     காலபலன் என்று ரைசெய்வார்;


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே - அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; 


அருக்கனுக்கு அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோய் உடையவள் ஆவள்,


நல்சோமனுக்கு ஆன கற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில் மிகுதியான கற்புடையவள் ஆவாள்.


அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் - செவ்வாயில் மிகுந்த வருத்தம் உடையவள் ஆவாள்.


புந்தியில் அளவு இல் பைங்குழவி பெறுவாள் - புதனில் மிகுதியான  குழந்தைகளைப் பெறுவாள்.


திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் - சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள்.


சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் - புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பம் உடையவளும் செல்வம் உடையவளும் ஆவாள், 


காரிவாரத்தில் ஆகில் கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள் - சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகு இழந்து, வறுமையுடன் திரிவாள், 


களபமுலை மாதர் புட்பவதி ஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் - கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.


பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல் தீமை; மற்றக் கிழமைகள் நலம்.


No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...