69. பூப்பு வாரம்
---
அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே - அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!;
அருக்கனுக்கு அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோய் உடையவள் ஆவள்,
நல்சோமனுக்கு ஆன கற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில் மிகுதியான கற்புடையவள் ஆவாள்.
அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் - செவ்வாயில் மிகுந்த வருத்தம் உடையவள் ஆவாள்.
புந்தியில் அளவு இல் பைங்குழவி பெறுவாள் - புதனில் மிகுதியான குழந்தைகளைப் பெறுவாள்.
திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் - சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள்.
சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் - புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பம் உடையவளும் செல்வம் உடையவளும் ஆவாள்,
காரிவாரத்தில் ஆகில் கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள் - சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகு இழந்து, வறுமையுடன் திரிவாள்,
களபமுலை மாதர் புட்பவதி ஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் - கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.
பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல் தீமை; மற்றக் கிழமைகள் நலம்.
No comments:
Post a Comment