55. நல்லோர் இருக்கும் இடத்தில் தீயவரும் இருப்பர்.
---
மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்
வன்முதலை அங்கிருக்கும்
மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்
மருவிஅதில் வண்டிருக்கும்
நெடுமைதிகழ் தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்
நீங்காத முள்ளிருக்கும்
நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது
நீளரவு சூழ்ந்திருக்கும்
குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது
குரைநாய்கள் அங்கிருக்கும்
கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்
கொடும்பாவி உண்டுகண்டாய்
வடுவையும் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற
வள்ளிக் குகந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குறவள்ளிக்கு உகந்த கணவா - மாவின் வடுவையும் நஞ்சையும் போன்ற இரு கண்களை உடைய வேடர்குல வள்ளியம்மைக்கு விருப்பமான கணவரே1
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மடுவினில் கஞ்சமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் வன்முதலை அங்கு இருக்கும் - ஆழமான நீர் நிலையிலே தாமரைமலர் இருந்தாலும், ஒருவரும் நெருங்காமல் கொடிய முதலை அந்த நீர்நிலையிலே இருக்கும்;
மலையினில் தேன் உண்டு, சென்று ஒருவர் கிட்டாமல் அதில் வண்டு மருவி இருக்கும் - மலையிலே தேன் அடை இருக்கிறது எனினும், ஒருவரும் அதனிடம் அணுகாமல் தேனீக்கள் அந்த அடையிலே இருக்கும்.
நெடுமை திகழ் தாழைமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் நீங்காத முள்இருக்கும் - நீண்டதாக விளங்கும் தாழையிலே மலர் உள்ளது எனினும், அதை ஒருவர் நெருங்கிப் பறிக்காமல் அத்தாழையிலே முள் நீங்காமல் இருக்கும்.
நீடு பல சந்தன விருட்சம் உண்டு, அணுகாது நீள் அரவு சூழ்ந்து இருக்கும் - உயர்ந்த பல சந்தன மரங்கள் உள்ளன எனினும் அவற்றினிடஞ் செல்ல முடியாமல் நீண்ட பாம்புகள் சூழந்து வாழும்.
குடிமல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரைநாய்கள் அங்கு இருக்கும் - குடிகள் நிறைந்து வாழும் மனையிலே புகமுடியாமல் அங்கே குரைக்கும் நாய்கள் காவலாக இருக்கும்.
கொடுக்கும் தியாகி உண்டு, இடையூறு பேசும் கொடும்பாவி உண்டு - உதவி செய்யும் கொடையாளி இருக்கின்றான் எனினும், இடையூறு செய்யும் கொடியபாவியும் அங்கு உள்ளான்.
வடு - மாம்பிஞ்சு. கடு - நஞ்சு. பார்வை கொடியதாக இருக்கும்போது (பிணங்கியபோது) நஞ்சுபோன்றும் இனிமையாக (அன்புடன்) இருக்கும்போது மாவடுவைப் போன்றும் காதலர்களுக்கு ஒரு பெண்ணின் கண் தோன்றும், ‘வாழ்கிற வீட்டிற்கு மறநாய் போல' என்னும் பழமொழியைக், ‘குடி.......இருக்கும்' என்னுந் தொடர் நினைவு ஊட்டுகிறது.
நல்லவன் ஒருவனுக்கு, பிறருக்கு உதவி வாழவேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் கொடுக்காமல் தடுக்கின்ற சூழலும் உண்டு.
No comments:
Post a Comment