70. பூப்பு இலக்கினம்
---
வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசாரி ஆம்;
வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
சீர்பெறுவள் கன்னி யென்னில்;
செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மான மிலளாம்;
நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடியபே ரறிவு டையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
மேடத்தில் வறுமை தப்பாது வரும் - மேட இராசியில் (பூப்பு அடைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும்.
இடபத்தில் மாறாது விபசாரி ஆம் - இடப ராசியில் தவறாமல் தீய ஒழுக்கம் உடையள் ஆவள்.
மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் - மிதுனத்தில் வாழ்வும் இன்பமும் அடைவாள்.
கடகம் வலிதினில் பிறரை அணைவாள் - கடகத்தில் தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள்.
மிருகேந்திரற்கு எனில் சிறுமை செயும் மிடி சேர்வாள் - சிங்கத்தில் இழிவுதரும் வறுமை உடையள் ஆவள்.
கன்னி என்னில் சீர் பெறுவள் - கன்னியில் ஆயின் புகழ் பெறுவாள்.
துலை எனில் செட்டு உடையள் - துலையாயின் சிக்கனம் உடையவளாய் இருப்பாள்,
தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் - விருச்சிகத்தில் நோயால் இளைத்திடுவாள்.
தனுசு எனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையள்ஆம் - தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே இருப்பாள்.
நீள் மகரம் மானம் இலள்ஆம் - பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள்.
கும்பம் எனில் நிறை போகவதி - கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள்.
மீனம் என்னிலோ நெடிய பேரறிவு உடையள் ஆம் - மீனத்தில் ஆனால் மிகுந்த பேரறிவு உடையவள் ஆவாள்.
மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன் அது என்பர் - இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.
பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.
No comments:
Post a Comment