அரைக் கல்வி கொண்டு அம்பலம் ஏறாதே

 

அறிவால் நிரம்புதல் வேண்டும்

அரைக் கல்வி கொண்டு அம்பலம் ஏறாதே.

-----

 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கும் புருஷார்த்தங்கள் என்று சொல்லப்படும். "புருஷர் வடிவானதே அன்றி புருஷர்த்தம் ஏதும் இல்லேன்" என்பார் தாயுமான அடிகளார். புருஷார்த்தம் என்பது மனிதப் பிறவியில் ஒருவன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள் ஆகும். உறுதி என்றால் நன்மை என்று பொருள். நன்மை தரும் பொருள்கள் இவை நான்கு என்றனர்.

 

     திருக்கோயிலுக்குச் சென்று அருச்சனை செய்கின்றோம். அதற்கு முன்னதாக குருக்கள் "சங்கல்பம்" செய்து வைப்பார். சங்கல்பம் என்பது, இன்ன இன்ன நன்மைகள் அருச்சனை செய்பவர்க்குச் சித்தியாக வேண்டும் என்னும் விண்ணப்பம். அது பலவகைப்படும். முதலில், "தருமார்த்த காமிய மோட்ச சித்தியர்த்தம்" என்பார். இதன் பொருளை நன்கு சிந்தித்தல் வேண்டும். தருமம் என்பது அறம். அர்த்தம் என்பது பொருள். காமியம் என்பது இன்பம். மோட்சம் என்பது வீடுபேறு. அருச்சனை செய்யச் செல்பவர் என்ன கருதிச் செல்கின்றார் என்பது அவருக்கு மட்டுமே வெளிப்படை. ஆனால், குருக்கள் சங்கல்பம் செய்து வைப்பதோ, "தருமார்த்த காமிய மோட்ச சித்தியர்த்தம்" தான். காரணம், அது ஒன்றுதான் இயல்பாக மனிதனுக்கு இயல்பாக விளங்காதது. இறையருளால் விளங்க வேண்டியது. எனவே, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு புருஷர்த்தங்களும் விளங்குகின்ற நூல்களையே ஒருவன் கற்று, இறையருளைப் பெற்று, ஒழுகவேண்டும்.

 

     புருஷார்த்தங்களை அடைய வேண்டிய மனிதனின் வாழ்நாள் வரையறை செய்யப்பட்டு உள்ளது. உயிர்களின் வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழித்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்கின்ற காலத்தில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால் உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.

 

     கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.

 

     அவ்வாறு கற்றலின் சிறப்பை "கல்வி" என்னும் அதிகாரத்தில் உடன்பட்டு அருளிய நாயனார், கல்லாமை என்னும் அதிகாரத்தில் கற்றலைச் செய்யாமையால் வரும் இழிவை எதிர்மறையாக அறிவுறுத்துகின்றார். நூல்களைக் கற்றுத் தெளியாமலேயே, சிறிது கற்றவுடனே தான் முழுதும் கற்றுணர்ந்தவன் எனக் காட்டிக் கொண்டு, பொருள் தேடும் முயற்சியில் சபை ஏறுவோர் உண்டு.

 

     "கல்லாமை" அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "தான் அறிவால் நிரம்புதற்கு உரிய நூல்களைக் கல்லாது, அவையில் ஒருவன் பேச முற்படுதல், அரங்கம் இல்லாமல் சூது ஆடியது போல் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அரங்கு என்பது ஆடுதற்கு வகுத்த இடம். வட்டு என்பது உண்டை. கோட்டி என்பது சபை.

 

அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே, நிரம்பிய

நூல் இன்றி கோட்டி கொளல். 

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.  

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்பார் "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியருளிய பாடல்...

 

மைவைத்த கண்டர் மறைவாக்கினால் புகழ்ந்த

சைவத் தலைவர் அன்பு சாற்றுதல், யான் - கைவைத்து

அரங்கின்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.          

 

இதன் பொருள் ---

 

     கரிய நஞ்சைக் கண்டத்திலே கொண்ட சிவபெருமான் வேத சிவாகமங்களை ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்த தமது திருவாக்கினாலே, தம்முடைய திருத்தொண்டர்களது அடிமைத் திறத்தைப் பாடும் பொருட்டு அருள் செய்தருளிய உண்மை டியார்களுடைய பத்தி நிலையை யான் சொல்லத் துணிந்த தன்மையானது, வட்டாடுதற்கு வகுத்த தானத்தை அமைத்துக் கொள்ளாமல் வட்டு ஆடினாற்போலும். தான் அறியவேண்டுவன எல்லாவற்றையும் அறிந்துகொள்ளுதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண்ணே ஒன்றினைச் சொல்லுதல் என்றவாறு.

                                                     

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கிற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...  

 

ஞானசம் பந்தருடன் நன்றாய்ச் சமணர்எதிர்த்து

ஈனம்உற்றார் அன்றோ? இரங்கேசா! --- ஆன

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.     

 

இதன் பொருள் --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சமணர் --- மதுரையில் சமணர்கள், ஞானசம்பந்தருடன் --- திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரோடு, நன்றாய் --- (தமது அறியாமையை அறியாமையால்) தைரியமாய், எதிர்த்து --- எதிர்வாதம் செய்து, ஈனம் உற்றார் அன்றோ --- அவமானம் அடைந்தார்கள் அல்லவா, (ஆகையால், இது) நிரம்பிய நூல் இன்றி --- நிறைந்த நூலுணரச்சி இன்றி, கோட்டி கொளல் --- சபையில் பேசுதல், ஆன அரங்கு இன்றி --- தகுதியான வகுப்பிடம் இன்றி (அதாவது) காயை வகுத்து வைக்கும் வீட்டிடம் இன்றி, வட்டு ஆடி அற்று --- பாய்ச்சிகை உருளையை உருட்டினது போலாகும் (என்பதை விளக்குகின்றது)

 

         விளக்கவுரை --- ஒரு காலத்தில் சமண் காடு மூடியிருந்த மதுரைக்குத் திருஞானசம்பந்தர் அடியார் கூட்டத்தோடு சென்று, அங்கொரு மடத்தில் தங்கி இருந்தார். அப்போது அமண் காட்டுத் தீ பற்றி எரிந்தபடி அவர் மடத்தைச் சமணர் கொளுத்தினார்கள். அது கண்ட நாயனார், தமது தேவார விசேடத்தால் அந் நெருப்பைச் சுர நோயாக்கிப் பாண்டியனைப் பற்றுவித்தார். "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்பதனால், சமணர் செய்த பிழைக்குப் பாண்டியன் தண்டனை அடைந்தான். நோய் பொறாமல் வருந்தும் பாண்டியன் சமணர் செய்த சிகிச்சை பலியாதது கண்டு, திருஞானசம்பந்தரை வரவழைத்தான். அவர் வந்தது பொறாத சமணர் அவரோடு வாதம் செய்ய வந்தார்கள்.  பாண்டியன் சுரநோயை வலப்புற நோய், இடப்புற நோய் என்று இருபங்காக்கி, ஒருபுறம் திருஞானசம்பந்தரும், மறுபுறம் தாமும் தீர்ப்பதென ஏற்படுத்தி முதல் வாதம் தொடங்கினார்கள். தாமே நோய்க்குக் காரணராகையால், திருஞானசம்பந்தர் தமது புற நோயை விரைவில் போக்கி அருளினார். நோயெல்லாம் திரண்டு சமணர் பக்கம் சேர்ந்து பாண்டியனை வருத்தியது. சமணர் தோற்றார்கள். பிறகு திருஞானசம்பந்தரே முற்றும் குணப்படுத்தினார்.

 

         இரண்டாம் முறை அனல்வாதம் தொடங்கின சமணர், தம் மந்திரங்களை ஏடுகளில் எழுதி நெருப்பில் இட்டார்கள்.  திருஞானசம்பந்தரும் தமது தேவார ஏட்டை அதில் இட்டார். திருஞானசம்பந்தர் நெருப்பில் இட்ட ஏடு பச்சென்றிருந்தது. சமணர் ஏடுகள் வெந்து சாம்பராயின.

 

         மூன்றாம் முறை புனல்வாதம் தொடங்கினார்கள். மந்திர ஏடுகளைச் சமணர் வைகையில் இட்டார்கள். திருஞானசம்பந்தரும் அப்படியே தமது ஏட்டை வெள்ளத்தில் விட்டார். சமணர்கள் இட்ட ஏடுகள் வெள்ளம் சென்ற வழியே பள்ளத்தில் ஓடின. திருஞானசம்பந்தர் இட்ட ஏடு மிதந்து வெள்ளத்திற்கு எதிரேறி ஓடிற்று. அனல்வாத புனல்வாதங்களிலும் சமணர்கள் தோற்க, திருஞானசம்பந்தர் வெற்றி பெற்றார். ஞான நூல் கல்லாத சமணர்கள் விவேகமின்றி வீண்வாதம் செய்ததனால் மும்முறையும் தோற்று அவமானம் அடைந்து கழுவேறி மாண்டார்கள்.

 

     இத் திருக்குறளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல்களை அமைந்துள்ளமை காணலாம்...

 

தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும், --- முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும், இம்மூன்றுஞ்

செல்வம் உடைக்கும் படை.               ---  திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் தன்னைத் தானே நன்கு மதித்து அகங்கரித்தலும்; அடக்கம் இல்லாமல் வீணாகச் சினத்தைப் பெருகச் செய்தலும்; கருதிய  பலவகைப் பொருள்களையும், இச்சிக்கின்ற (விரும்புகின்ற) சிறுமைத் தன்மையும் ஆகிய இந்த மூன்றும் ஒருவன் செல்வத்தை அழிக்கும் கருவிகள்.

 

         தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை என்றபடி.

 

 

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல் அறிவாளர் இடைப் புக்கு --- மெல்ல

இருப்பினும் நாய் இருந்த அற்றே, இராஅது

உரைப்பினும் நாய்குரைத்து அற்று.       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கல்வியறிவு பெறாமல் வாழ்நாளை வீணாகக் கழித்து வளர்ந்து விட்ட ஒருவன், உலகத்தில் உயர்ந்த அறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம் தெரியாமல் இருந்தாலும், அந்நிலை ஒரு நாய் குந்தி இருப்பதைப் போன்ற தன்மையை உடையதாக இருக்கும். அவன் அடக்கமாக இல்லாமல் ஏதேனும் ஒன்று வாய் திறந்து கூறினால், அது நாய் குரைத்தால் போன்ற தன்மை உடையதாகும்.

 

 

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி

கல்லா ஒருவன் உரைப்பவும், கண்ணோடி

நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பொருந்தாக் கல்வியை உடைய மெய்யுணர்வு இல்லாத வீணர்கள் இருக்கின்ற அவையில், கல்வியறிவு நிரம்பப் பெறாத ஒருவன், பொருளற்ற சொற்களை, எல்லாம் தெரிந்தவன் போலப் பேசினாலும், கல்வியறிவு உள்ள மேன்மக்கள் அவன் பேசுவதை மனம் வருந்தக் கேட்டுக்கொண்டு இருப்பார்களே தவி, அவனைத் தூற்ற மாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர் பலர் முன் அவமானப்பட்டு நிற்பானே என்று, அவன் நிலைக்கு இரங்கவே செய்வார்கள்.

 

 

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட்டு ஆங்கோர்

அஞ்ஞானந் தந்திட்டு அதுஆங்கு அறத்துழாய்க்

கைஞ்ஞானங் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன்

சொல் ஞானஞ் சோர விடல்.        --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     உண்மை றிவினை உடைய பெரியோர்கள் கூடியுள்ள சபைக்கு, அறிவில்லாத மூடர்களும் செல்வார்கள். அங்கு உள்ள நல்லறிவாளர் கூறும் வழியில் ஒழுகுதலை விடுத்து, தமது சிற்றறிவைப் புலப்படுத்துமாறு, தமது அறியாமைக் கருத்தையே மிகவும் பன்னிப் பன்னிப் பேசி இருப்பர். இவ்வாறு தமது சிற்றறிவே பற்றி ஒழுகுகின்ற மயக்க அறிவினர் எதிரில், சான்றோர் புகழ்தற்குரிய தமது ஞானப் பெருமையினைக் காட்டிக்கொள்ளாமல் தளர்த்துக் கொள்ளவேண்டும்.

 

 

நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் போல்செறிக்குந்

தீப்புலவற் சேரார் செறிவு உடையார்; -தீப்புலவன்

கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்

தோட்புடைக் கொள்ளா எழும்.       --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நன்கு கற்று உணராமல், நல்ல அறிவு பெறாமல், தாம் முன்னர் மனப்பாடம் செய்த சொற்களைக் கூறி, பலவற்றையும் கற்று உணர்ந்த மேதைபோல் மூடர்கள் தங்களைக் காட்டிக் கொள்வர். இத்தகைய தீயவர்களுடன் நல்லறிவாளர் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார். அந்தப் போலிப் புலவன் பெருமையானது சபையில் கெடுதலால், பெரியோர் குடிப்பிறப்பைப் பழித்துப் பேசுவான். இல்லை என்றால், தனது தோளைத் தட்டிக் கொண்டு பெரியாரோடு வலுச் சண்டைக்கு வருவான்.

 

 

கல்லாதான் ஊருங் கலிமாப் பரிப்பு இன்னா;

வல்லாதான் சொல்லும் உரையின் பயன்இன்னா;

இல்லார்வாய்ச் சொல்லின் நயம்இன்னா; ஆங்குஇன்னா

கல்லாதான் கோட்டி கொளல்.       --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     குதிரை ஒன்றை நடத்த வேண்டிய முறையைக் கல்லாதவன் ஏறிச் செலுத்தும் மனம் செருக்கிய குதிரை அவனைச் சுமந்து செல்லுதல் துன்பத்தைத் தரும்;  கல்வி அறிவு இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பத்தைத் தரும்; செல்வம் இல்லாதவருடைய வாயிலிருந்து வரும் சொல்லினது நயமானது துன்பத்தைத் தரும். அவ்வாறே கல்வி அறிவு இல்லாதவன்  கற்றவர் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பத்தைத் தரும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...