7. பன்றி பல ஈன்றும் என்ன?
---
"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு
நூறுபெற்றும் ஆவது உண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று
ஈன்றதனால் பயன் உண்டாமே."
இதன் பொருள் ---
மன்றில் நடம் புரிவாரே - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் - யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல), நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் - நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ - நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).
"நன்றி தரும் பிள்ளை ஒன்று, அறிவு இல்லாத பிள்ளை நூறு" இந்த வாசகம் சிந்தனைக்கு உரியது.
திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள்தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவில்லை. நல்லறிவு சொன்னவர்களையும் அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.
இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவதும், வணங்குவதும் காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.
நன்மக்கள் இல்லாத குடியானது, சந்ததி இல்லாமல் அழிவதே மேல் என்று கூறுகின்றது, வெற்றிவேற்கை (எ) நறுந்தொகை என்னும் நூல்.
"அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின், அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று".
இதன் பொருள் ---
(பழிப்புக்கு உரிய பாவச் செயல்களைச் செய்தல் கூடாது என்னும்) அச்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகின்ற நல்ல அறிவு இல்லாத, இழிந்த குணம் உடைய, ஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், அக் குடியில் உள்ளோர் சந்ததி இல்லாமல் ஏமாந்து வாழ்தல் நல்லது. கொச்சை - இழிவு. எச்சம் - பிள்ளைகள், வாரிசுகள். ஏமாந்து இருத்தல் - இன்பத்துடன் இருத்தல். (ஏமாப்பு - இன்பம்)
"அச்சம்" என்பது குறித்து, "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம்" என்றார் மணிவாசகப் பெருமான். அறச் செயல்களைப் புரியாமையால் உண்டாகும் அச்சம். பாவச் செயல்களைப் பயின்று வருவதால் உண்டாகும் அச்சம் என்று, அச்சம் இருவகைப்படும். இந்த இருவகை அச்சமும் மனத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருந்தால்தான், பாவச் செயல்களைச் செய்வதில் இருந்து விடுபடவேண்டும் என்றும், அறச்செயல்களைப் புரிந்து நற்கதி அடையவேண்டும் என்றும் தோன்றும்.
அறிவு எனப்படுவது, "தீயதன் தீமையும், நல்லதன் நன்மையும் உள்ளவாறு அறிந்து தெளிந்து ஒழுகுதல்" ஆகும். இதுவே உண்மையான அறிவு. மற்ற அறிவு எல்லாம் உலகியல் அறிவு. வயிறு வளர்ப்பதற்கும், உடலைப் பாதுகாத்தற்கும் பெறுகின்ற அறிவு உலகியல் அறிவு. அது உயிருக்கு ஆக்கமாக அமையாது.
நல்ல பிள்ளைகளைப் பெறுவதே, மக்கள் பெறவேண்டிய பேறுகளில் (பாக்கியங்களில்) சிறந்தது. எனவே, நன்மக்கள் பேறு எனப்பட்டது. ஒருவன் சிறந்து குடியில் பிறந்தவன் என்பதை அவனது உள்ளத்தில் உள்ள அன்பினால் அறியலாம் என்கின்றது "முதுமொழிக் காஞ்சி".
"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
மக்கட் பேற்றில் பெரும்பேறு இல்லை"
கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருக்கும், புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பெரும் பாக்கியம் வேறில்லை.
"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
பேர்இல் பிறந்தமை ஈரத்தின் அறிப".
கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள அன்பினால் அறியலாம். (பேர் இல் --- பெருங்குடி)
அறிய வேண்டுவனவற்றை அறியாத பிள்ளகளைப் பெறுவது துன்பத்தைத் தரும் என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்....
"அறிவறியா மக்கள் பெறல் இன்னா"
"மகாலட்சுமியே! செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், நல்ல பிள்ளைப் பாக்கியம், நூறாண்டுகள் ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்" என்றுதான் ஸ்ரீசூக்தம் கூறுகின்றது.
பிள்ளை என்னும் சொல் சிறப்பாகப் பயன்படுத்துப்படுவது ஒன்று. விநாயாகப் பெருமானை, "மூத்த பிள்ளையார்" என்றும், முருகப் பெருமானை, "இளைய பிள்ளையார்" என்றும் வழங்கப்படுவது சைவ மரபு. திருஞானசம்பந்தரை, "ஆளுடைய பிள்ளையார்" என்று சைவர் வழங்குவர். வள்ளல்பெருமானும் தம்மை "ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே" என்று காட்டிக் கொண்டார்.
இறைவனை அடையக் காட்டி உள்ள நால்வகை மார்க்கங்கள், நெறிகள், அல்லது வழிகளில், "சற்புத்திர மார்க்கம்", "மகன்மை நெறி" என்பதும் ஒன்று. கடவுளர் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் "பிள்ளைத் தமிழ்" ஒன்று. வைணவர்களிலும் "பிள்ளை" என்னும் திருநாமத்தோடு வழங்கும் பெயர்கள் உண்டு.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள், "சற்புத்திரன்" வேண்டியே இறைவனை நோக்கி வரம் கிடந்த புராண வரலாறுகளும் நிறைய உண்டு. "நல்ல பிள்ளை" வேண்டும் என்றுதான் வேண்டினார்கள். "பிள்ளை" என்றும், "மக்கள்" என்றும் பொதுவாகத்தான் சொல்லப்பட்டது. "ஆண்பிள்ளை" என்றோ, "ஆண்மக்கள்" என்றோ எங்கும் பிரித்துச் சொல்லப்படவில்லை.
அறிவு, பொதுவாக நன்மைக்கும் தீமைக்கும் வழியைக் காட்டும். எனவே, சான்றோர்கள் "நல்லறிவு" என்று ஒரு சொல்லைப் பாடல்களில் தந்தார்கள். அறிவு என்றால், பொதுவாக, நல்லறிவைத் தான் குறிக்கும்.
இக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவதைக் காணலாம். அதனால் அவர்கள் உலகியல் அறிவில் சிறந்து விளங்குகின்றார்கள். புறப்பொருள் அறிவில் சிறந்து விளங்குவது தேவைதான். ஆனாலும், அகப்பொருள் அறிவிலும் சிறந்து விளங்கவேண்டும். அகப்பொருள் அறிவினால் விளங்குகின்ற நல்லறிவு இல்லாததால், மக்களிடையே நற்பண்புகள் விளங்குவதில்லை. இதன் காரணமாக, "முதியோர் இல்லங்கள்" பல்கிப் பெருகி வருகின்றன. மக்கள் பெற்றுள்ள புறப்பொருள் அறிவானது, அவர்களை ஈன்றவர்க்கே நலம் புரிவதில்லை. இது அவர்களுக்கே திரும்பி வரக்கூடும் என்னும் நல்லறிவும் விளங்குவது இல்லை.
எனவே, நல்லறிவில்லாத, துட்டத்தனம் வாய்ந்த பிள்ளைகள் நூறு பேர் இருந்தாலும், வீட்டுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நலம்