8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

 


            8. நல்லது நாயகனுக்கு

                         ---


"அல்லமரும் குழலாளை வரகுணபாண்

     டியராசர் அன்பால் ஈந்தார்!

கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊன்அமுதைக்

     கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!

சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா

     வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!

நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்

     கென்றதனை நல்கு வாரே."


இதன் பொருள் ---


அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர் அன்பால் ஈந்தார் - இருள்போலும் கரிய நிறம் பொருந்திய  கூந்தலை உடையவளை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் அளித்தார், 


கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன் அமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார் - தேக்கிலைக் கலத்திலே மென்று உமிழ்ந்த இறைச்சியாகிய உணவைக் கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி இறைவருக்குக் கொடுத்தார்.


சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் - புகழ் பெறுகிற திருத் தண்டனை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருள் ஆகிய தண்டலையாருக்குச் செங்கீரையும் மாவடுவும் ஓர் அடியவர் படைத்தார்.


பெரியோர் நல்லது கண்டால் அதனை நாயகனுக்கு என்று நல்குவார் - சான்றோர்கள் நல்ல பொருளைப் பார்த்தால், அது நம் இறைவனுக் காகட்டும் எனக்  கொடுப்பார்கள்.


     வரகுணபாண்டியர் தாம்  மணந்த மனைவி அழகாய் இருந்ததனால் சிவபிரானுக்கென்று படைத்தார்; அந்த  அம்மையார்  சிவலிங்கத்தில் மறைந்தார். ஆனால்;  இவர் பற்றிய கைமட்டும் மறையாதிருந்தது வரகுணர் வருந்திச்  சிவபிரானை வேண்ட அக்கையும்  மறைந்தது. வேடரான திண்ணனாா் காளத்தியப்பரைக் கண்டவுடன் தம்மை  மறந்து தாயினும் அன்புடையராய்க், கான விலங்குகளின் ஊனை நெருப்பில் வதக்கி வாயிலிட்டுச் சுவை பார்த்துக் கல்லையில் வைத்துக் கொண்டு வந்து ஊட்டினார்.


      கணமங்கையில் வாழ்ந்த அரிவாள்தாய நாயனார் திருத் தண்டலை இறைவர்க்குச் செங்கீரையும் மாவடுவும் (தாம் உணவின்றி இளைத்தபோது கூட) படைத்து அருள்பெற்றார்.


     அடியவர்கள் தமக்கு வாய்த்த நல்ல பொருளை இறைவனுக்கு அளிப்பர் என்பது கருத்து.


72. மாணிக்கங்கள்

 



               72. மாணிக்கங்கள்

                            -----


சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான

     துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;

  சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள

     துரையுமோர் மாணிக் கம்ஆம்;


பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய

     பாவையோர் மாணிக் கம்ஆம்;

  பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்

     பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;


ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்

     உசிதனோர் மாணிக் கம்ஆம்;

  உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்

     உடையனோர் மாணிக் கம்ஆம்;


அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்

     கமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அழிவுஅற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே - கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!, 


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன துரகம் ஓர் மாணிக்கம் ஆம் - தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது.


சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உ(ள்)ள துரையும் ஓர் மாணிக்கம் ஆம் - சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், 


பழுதுஅற்ற அதிரூபவதியுமாய்க் கற்பு உடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் - குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள்.


பல கலைகள் கற்று அறி அடக்கம் உ(ள்)ள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம் - பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன். 


ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் - அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்.


உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம் ஆம் - நல்ல குடியில் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு மாணிக்கம் போன்றவன்.


56. வேசையர்

 


                          56. வேசையர்

                                  -----

பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை,

     புனைமலர் படுக்கைவீடு

பொன்வாசல், கட்டில்பொது அம்பலம், உடுத்ததுகில்

     பொருவில்சூ தாடுசாலை,


மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து,

     விழிமனம் கவர்தூண்டிலாம்,

மிக்கமொழி நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு

     மின்னல்இரு துடைசர்ப்பமாம்,


ஆவலாகிய வல்கு லோதண்டம் வாங்குமிடம்,

     அதிகபடம் ஆம்மனதுகல்,

அமிர்தவாய் இதழ்சித்ர சாலையெச் சிற்குழி,

     அவர்க் காசை வைக்கலாமோ?


மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை

     வதைத்தவடி வேலாயுதா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


மாவடிவு கொண்டு ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா - மாமர வடிவாக நடுக்கடலிலே மறைந்த ஒப்பற்ற சூரபதுமனைப் பிளந்த வடிவேல் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


பூவில் வேசிகள் வீடு பெருஞ் சந்தைப்பேட்டை - உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை; 


மலர்புனை படுக்கைவீடு பொன்வாசல் - மலர்களாலே அணிசெயப்பெற்ற படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில்.


கட்டில் பொது அம்பலம் - படுக்கைக் கட்டில் பலருக்கும் பொதுவான இடம். 


உடுத்த துகில் பொருஇல் சூதுஆடு சாலை - அவர்கள் உடுத்த ஆடை ஒப்பற்ற சூதாடும் அரங்கு.


மேவல் ஆகிய கொங்கை கை ஆடு திரள்பந்து - விருப்பத்தை ஊட்டும் அவர்களின் கொங்கைகள் (பலர்) கையாலும் ஆடத் தக்க திரண்ட பந்து.


விழி மனம் கவர் தூண்டில்ஆம் - அவர்களின் கண்கள் (பலருடைய) மனத்தையும் கவர்கின்ற தூண்டில் ஆகும்.


மிக்கமொழி நீர்மேல் எழுத்து - மிகைப்பட்ட அவர்கள் பேச்சு நீர்மேல் எழுத்தாகும்;


அதிக மோகம் ஒரு மின்னல் - அவர்கள் காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று மாறக் கூடியது. 


இருதுடை சர்ப்பம் ஆம் - அவர்களுடைய இரண்டு துடைகளும் பாம்புகள்; 


ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்கும் இடம் - விருப்ப மூட்டும் அல்குலோ எனில் தண்டனையை நிறைவேற்றும் இடம்.


அதி கபடம் ஆம் மனது கல் - மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல்லாகும்.


அமிர்தவாய் இதழ் சித்திரசாலை எச்சிற்குழி - அமுதம் எனக் கூறும் வாயிலுள்ள இதழ் ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சிற்குழி; 


அவர்க்கு ஆசை வைக்கலாமோ - அவர்களிடம் காதல்கொள்வது தகாது.


திருவொற்றியூர்

 

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்குஉருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."


பொழிப்புரை --- மனமே1வ முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பது தான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


விளக்கம் ---  இறந்த பிறகு உறவினராலே தூலதேகத்தை சுடப்படுவோராகிய அஞ்ஞானிகளுக்கு உண்மை விளங்காது என்பார் "சுடப்படுவார் அறியார்" என்றார். முப்புரங்களை எரித்த பிரான் என்பது, முப்புரமாவது மும்மல காரியம் என்பதனால் விளங்கும்.  மும்மலங்களைச் சுட்டான் என்பார் "புரமூன்றையும் சுட்டபிரான்" என்றார். பிறவியை ஒழித்துக் கொள்ள வேறு ஓர் உபாயம் எதையும் முயலவேண்டாம் என்பார், திருவொற்றியூர்த் தெருக்களில் நடப்பவருடைய திருவடிகள் தலைமீது பொருந்த இருந்தாலே போதும் என்பார், "தெருப் பரப்பில் நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே" என்றார்.  உருண்டு கிடத்தல் என்பது அங்கப் பிரதட்சிணம் என்று வடமொழியில் சொல்லப்படும். விதி என்பது பிரமனுக்கு உரிய பெயர்களில் ஒன்று.  அவன் எழுதி வைத்த ஏட்டின்படியே பிறவியும், வாழ்வும் மற்ற நிலைகளும் வாய்க்கும். அவன் எழுதுவது நின்றால் பிறவி இல்லை.  அதனால், பிரமன் எழுதுகின்ற ஏட்டைக் கிழித்துவிட்டால், அவனுக்கு எழுத எடு இருக்காது.


திருவொற்றியூர்

 


"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டுக்

கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே."


பொழிப்புரை ---  அலங்காரங்கள் செய்து அமைந்த திருவொற்றியூரிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே! நெஞ்சிலே கோழை மிகுந்து வரவும், கண்கள் பஞ்சடைந்து போகவும், அறிவும் அழிந்து கிடக்கவும்,  இதுவரை மெய் என்று நம்பியிருந்த இந்த உடம்பும் பொய்யாகிப் போகின்ற காலத்தில் அடியேன் ஒன்றை வேண்டிக் கொள்வேன். திருநீற்றை உடம்பில் தரித்து, கைகளைக் கூப்பி, உம்மைத் தொழுது, திருவைந்தெழுத்தை உச்சரிக்க எனக்குக் கற்பித்து அருள்வாயாக.


விளக்கம் ---  நமது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் முறையே 4 :2 : 1 என்னும் விகிதத்தில் இருக்கவேண்டும். இந்த அளவுகளில் ஒன்று குறைந்தாலும், அதிகமானாலும் நோய் செய்யும்.  "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று" என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த மூன்றின் தொகையும் 7. உடம்பின் அடுக்குகளும் 7.   வாதம் என்னும் காற்று 4/7ம், பித்தம் என்னும் நெருப்பு 2 /7 ம், ஐயம் என்னும் சிலேத்துமம் ஆகிய நீர் 1 /7 ம் இருக்கவேண்டும்.


இந்த மூன்றில் சிலேத்துமம் இறப்பை நெருங்கச் செய்வது.  இறப்பு நெருங்க நெருங்கத் தொண்டையில் கபம் கட்டும். கோழை மிகுந்து சிக்கிக் கொள்ளும். குடலில் மலச்சிக்கல், தொண்டையில் கோழைச் சிக்கல் கூடாது. இறப்புக் காலத்தில் உடலில் குளிர்ச்சி மிகும்போது தொண்டையில் ஐ என்னும் கபம் கட்டும்.


"வாதம் ஊது காமாலை சோகைநோய், பெருவயிறு வயிறுவலி படுவன்வர, இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழும் அது கொழகொழென ஒழுகிவிழ வாடி ஊனெலாம் நாடி பேதமாய்...."  என்பார் அருணகிரிநாதப் பெருமான்.


"ஐ நெரிந்து அகம் மிடற்றே அடைக்கும் போது, ஆவியார்தாம்

செய்வது ஒன்றி அறியமாட்டேன், திருப்புகலூ ரனீரே"


என்றும்,


"ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினால் கண்எழுதி மாலை சூட்டி

மயானத்தில் இடுவதன்முன்....."


என்றும் அப்பர் தேவார வாக்குகளாலும்,


"புலன்ஐந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி

அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று

அருள்செய்வான்....."


எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும் அறியலாம்.


இறப்புக் காலத்தில் கண் பஞ்சடைந்து போகும் கண்மணிப் பாவையும் செருகும் ஆதலின், "விழியும் செருகி" என்றார். மெய்யுணர்வும் அழியும் ஆதலால், "அறிவு அழிந்து" என்றார்.


பொய்யான, நிலையில்லாத உடல்தான். ஆனாலும் மெய்யாகிய உயிர் அதனுள் இருப்பதால் மெய் எனப்பட்டது. நாமும் பொய்யாகிய உடலை மெய் என நம்பினோம். அது ஒரு நாள் பொய்யாகிப் போகும் என்பதால், "மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது" என்றார்.  


அப்போது ஆன்மாவானது பாம்பின் வாய்த் தேரை போல பலப்பல நினைக்கும். அப்போதுதான் இறைவனை எண்ணும். அப்போதாவது இறைவனை மனதார எண்ணி வேண்டுவது வேண்டும். அது என்ன,  முத்தி தருவதாகிய திருநீற்றை உடல் முழுது அணியவேண்டும். பெருமானை மனதார வணங்க வேண்டும். திருவைந்தெழுத்தை மானதமாக உச்சரிக்க வேண்டும். இவை யாவும் இறப்பு நெருங்குகின்ற காலத்தில் தன் முயற்சியால் தடையின்றி முடியாது என்பதால்,  "திருநீறும் இட்டுக் கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே" என்று வேண்டினார்.


55. நல்லோர் இருக்கும் இடத்தில் தீயவரும் உண்டு

 

55.  நல்லோர் இருக்கும் இடத்தில் தீயவரும் இருப்பர்.

                                   ---


மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்

     வன்முதலை அங்கிருக்கும்

மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்

     மருவிஅதில் வண்டிருக்கும்


நெடுமைதிகழ் தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்

     நீங்காத முள்ளிருக்கும்

நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது

     நீளரவு சூழ்ந்திருக்கும்


குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது

     குரைநாய்கள் அங்கிருக்கும்

கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்

     கொடும்பாவி உண்டுகண்டாய்


வடுவையும் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற

     வள்ளிக் குகந்தகணவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குறவள்ளிக்கு உகந்த கணவா - மாவின் வடுவையும் நஞ்சையும் போன்ற இரு கண்களை உடைய வேடர்குல வள்ளியம்மைக்கு விருப்பமான கணவரே1


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


மடுவினில் கஞ்சமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் வன்முதலை அங்கு இருக்கும் - ஆழமான நீர் நிலையிலே தாமரைமலர் இருந்தாலும், ஒருவரும் நெருங்காமல் கொடிய முதலை அந்த நீர்நிலையிலே இருக்கும்; 


மலையினில் தேன் உண்டு, சென்று ஒருவர் கிட்டாமல் அதில் வண்டு மருவி இருக்கும் - மலையிலே தேன் அடை இருக்கிறது எனினும், ஒருவரும் அதனிடம் அணுகாமல் தேனீக்கள் அந்த அடையிலே இருக்கும்.


நெடுமை திகழ் தாழைமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் நீங்காத முள்இருக்கும் - நீண்டதாக விளங்கும் தாழையிலே மலர் உள்ளது எனினும், அதை ஒருவர் நெருங்கிப் பறிக்காமல் அத்தாழையிலே முள் நீங்காமல் இருக்கும்.


நீடு பல சந்தன விருட்சம் உண்டு, அணுகாது நீள் அரவு சூழ்ந்து இருக்கும் - உயர்ந்த பல சந்தன மரங்கள் உள்ளன எனினும் அவற்றினிடஞ் செல்ல முடியாமல் நீண்ட பாம்புகள் சூழந்து வாழும்.


குடிமல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரைநாய்கள் அங்கு இருக்கும் - குடிகள் நிறைந்து வாழும் மனையிலே புகமுடியாமல் அங்கே குரைக்கும் நாய்கள் காவலாக இருக்கும்.


கொடுக்கும் தியாகி உண்டு, இடையூறு பேசும் கொடும்பாவி உண்டு - உதவி செய்யும் கொடையாளி இருக்கின்றான் எனினும், இடையூறு செய்யும் கொடியபாவியும் அங்கு உள்ளான்.


    வடு - மாம்பிஞ்சு. கடு - நஞ்சு. பார்வை கொடியதாக இருக்கும்போது (பிணங்கியபோது) நஞ்சுபோன்றும் இனிமையாக (அன்புடன்) இருக்கும்போது மாவடுவைப் போன்றும் காதலர்களுக்கு ஒரு பெண்ணின் கண் தோன்றும், ‘வாழ்கிற வீட்டிற்கு மறநாய் போல' என்னும் பழமொழியைக், ‘குடி.......இருக்கும்' என்னுந் தொடர் நினைவு ஊட்டுகிறது.


     நல்லவன் ஒருவனுக்கு, பிறருக்கு உதவி வாழவேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் கொடுக்காமல் தடுக்கின்ற சூழலும் உண்டு.                                  



70. பூப்பு வாரம்


               70. பூப்பு  இலக்கினம்

                              ---


வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்

     மாறாது விபசாரி ஆம்;

  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்

     வலிதினிற் பிறரை அணைவாள்;


சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்

     சீர்பெறுவள் கன்னி யென்னில்;

  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்

     தேளினுக் குத்; தனுசுஎனில்


நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;

     நீள்மகரம் மான மிலளாம்;

  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ

     நெடியபே ரறிவு டையளாம்;


அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்

     அதுவென்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


மேடத்தில் வறுமை தப்பாது வரும் - மேட இராசியில் (பூப்பு அடைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும்.


இடபத்தில் மாறாது விபசாரி ஆம் - இடப ராசியில் தவறாமல் தீய ஒழுக்கம் உடையள் ஆவள்.


மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் - மிதுனத்தில் வாழ்வும் இன்பமும் அடைவாள்.


கடகம் வலிதினில் பிறரை அணைவாள் - கடகத்தில் தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள்.


மிருகேந்திரற்கு எனில் சிறுமை செயும் மிடி சேர்வாள் - சிங்கத்தில் இழிவுதரும் வறுமை உடையள் ஆவள்.


கன்னி என்னில் சீர் பெறுவள் - கன்னியில் ஆயின் புகழ் பெறுவாள்.


துலை எனில் செட்டு உடையள் - துலையாயின் சிக்கனம் உடையவளாய் இருப்பாள்,


தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் - விருச்சிகத்தில் நோயால் இளைத்திடுவாள்.


தனுசு எனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையள்ஆம் - தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே இருப்பாள்.


நீள் மகரம் மானம் இலள்ஆம் - பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள்.


கும்பம் எனில் நிறை போகவதி - கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள்.


மீனம் என்னிலோ நெடிய பேரறிவு உடையள் ஆம் - மீனத்தில் ஆனால் மிகுந்த பேரறிவு உடையவள் ஆவாள்.


மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன் அது என்பர் - இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.


பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.


பன்றி பல குட்டிகளைப் பெற்றும் என பயன்?

 

          7. பன்றி பல ஈன்றும் என்ன?

                          ---


"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்

     குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு

     நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வருடந் தோறும்

பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே."

இதன் பொருள் ---

மன்றில் நடம் புரிவாரே - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் - யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல),  நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் - நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ - நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).

"நன்றி தரும் பிள்ளை ஒன்று, அறிவு இல்லாத பிள்ளை நூறு" இந்த வாசகம் சிந்தனைக்கு உரியது.

திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள்தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவில்லை. நல்லறிவு சொன்னவர்களையும் அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.

இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவதும், வணங்குவதும் காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.

     நன்மக்கள் இல்லாத குடியானது, சந்ததி இல்லாமல் அழிவதே மேல் என்று கூறுகின்றது, வெற்றிவேற்கை (எ) நறுந்தொகை என்னும் நூல். 

"அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின், அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று".

இதன் பொருள் ---

(பழிப்புக்கு உரிய பாவச் செயல்களைச் செய்தல் கூடாது என்னும்) அச்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகின்ற நல்ல அறிவு இல்லாத, இழிந்த குணம் உடைய, ஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், அக் குடியில் உள்ளோர் சந்ததி இல்லாமல் ஏமாந்து வாழ்தல் நல்லது. கொச்சை - இழிவு. எச்சம் - பிள்ளைகள், வாரிசுகள். ஏமாந்து இருத்தல் - இன்பத்துடன் இருத்தல். (ஏமாப்பு - இன்பம்)

"அச்சம்" என்பது குறித்து, "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம்" என்றார் மணிவாசகப் பெருமான். அறச் செயல்களைப் புரியாமையால் உண்டாகும் அச்சம். பாவச் செயல்களைப் பயின்று வருவதால் உண்டாகும் அச்சம் என்று, அச்சம் இருவகைப்படும். இந்த இருவகை அச்சமும் மனத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருந்தால்தான், பாவச் செயல்களைச் செய்வதில் இருந்து விடுபடவேண்டும் என்றும், அறச்செயல்களைப் புரிந்து நற்கதி அடையவேண்டும் என்றும் தோன்றும்.

அறிவு எனப்படுவது, "தீயதன் தீமையும், நல்லதன் நன்மையும் உள்ளவாறு அறிந்து தெளிந்து ஒழுகுதல்" ஆகும். இதுவே உண்மையான அறிவு. மற்ற அறிவு எல்லாம் உலகியல் அறிவு. வயிறு வளர்ப்பதற்கும், உடலைப் பாதுகாத்தற்கும் பெறுகின்ற அறிவு உலகியல் அறிவு. அது உயிருக்கு ஆக்கமாக அமையாது.

நல்ல பிள்ளைகளைப் பெறுவதே, மக்கள் பெறவேண்டிய பேறுகளில் (பாக்கியங்களில்) சிறந்தது. எனவே, நன்மக்கள் பேறு எனப்பட்டது. ஒருவன் சிறந்து குடியில் பிறந்தவன் என்பதை அவனது உள்ளத்தில் உள்ள அன்பினால் அறியலாம் என்கின்றது "முதுமொழிக் காஞ்சி". 

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

மக்கட் பேற்றில் பெரும்பேறு இல்லை"

கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருக்கும், புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பெரும் பாக்கியம் வேறில்லை.

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

பேர்இல் பிறந்தமை ஈரத்தின் அறிப".

கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள அன்பினால் அறியலாம். (பேர் இல் --- பெருங்குடி)

அறிய வேண்டுவனவற்றை அறியாத பிள்ளகளைப் பெறுவது துன்பத்தைத் தரும் என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்.... 

"அறிவறியா மக்கள் பெறல் இன்னா"

"மகாலட்சுமியே! செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், நல்ல பிள்ளைப் பாக்கியம், நூறாண்டுகள் ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்" என்றுதான் ஸ்ரீசூக்தம் கூறுகின்றது.

பிள்ளை என்னும் சொல் சிறப்பாகப் பயன்படுத்துப்படுவது ஒன்று. விநாயாகப் பெருமானை, "மூத்த பிள்ளையார்" என்றும், முருகப் பெருமானை, "இளைய பிள்ளையார்" என்றும் வழங்கப்படுவது சைவ மரபு. திருஞானசம்பந்தரை, "ஆளுடைய பிள்ளையார்" என்று சைவர் வழங்குவர். வள்ளல்பெருமானும் தம்மை "ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே" என்று காட்டிக் கொண்டார்.

இறைவனை அடையக் காட்டி உள்ள நால்வகை மார்க்கங்கள், நெறிகள், அல்லது வழிகளில், "சற்புத்திர மார்க்கம்", "மகன்மை நெறி" என்பதும் ஒன்று. கடவுளர் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் "பிள்ளைத் தமிழ்" ஒன்று. வைணவர்களிலும் "பிள்ளை" என்னும் திருநாமத்தோடு வழங்கும் பெயர்கள் உண்டு.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள், "சற்புத்திரன்" வேண்டியே இறைவனை நோக்கி வரம் கிடந்த புராண வரலாறுகளும் நிறைய உண்டு. "நல்ல பிள்ளை" வேண்டும் என்றுதான் வேண்டினார்கள். "பிள்ளை" என்றும், "மக்கள்" என்றும் பொதுவாகத்தான் சொல்லப்பட்டது. "ஆண்பிள்ளை" என்றோ, "ஆண்மக்கள்" என்றோ எங்கும் பிரித்துச் சொல்லப்படவில்லை.

அறிவு, பொதுவாக நன்மைக்கும் தீமைக்கும் வழியைக் காட்டும். எனவே, சான்றோர்கள் "நல்லறிவு" என்று ஒரு சொல்லைப் பாடல்களில் தந்தார்கள். அறிவு என்றால், பொதுவாக, நல்லறிவைத் தான் குறிக்கும்.

இக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவதைக் காணலாம். அதனால் அவர்கள் உலகியல் அறிவில் சிறந்து விளங்குகின்றார்கள். புறப்பொருள் அறிவில் சிறந்து விளங்குவது தேவைதான். ஆனாலும், அகப்பொருள் அறிவிலும் சிறந்து விளங்கவேண்டும். அகப்பொருள் அறிவினால் விளங்குகின்ற  நல்லறிவு இல்லாததால், மக்களிடையே நற்பண்புகள் விளங்குவதில்லை. இதன் காரணமாக, "முதியோர் இல்லங்கள்" பல்கிப் பெருகி வருகின்றன. மக்கள் பெற்றுள்ள புறப்பொருள் அறிவானது, அவர்களை ஈன்றவர்க்கே நலம் புரிவதில்லை. இது அவர்களுக்கே திரும்பி வரக்கூடும் என்னும் நல்லறிவும் விளங்குவது இல்லை.

எனவே, நல்லறிவில்லாத, துட்டத்தனம் வாய்ந்த பிள்ளைகள் நூறு பேர் இருந்தாலும், வீட்டுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நலம் 

கொக்கு எனவே நினைத்தனையோ?

 


6. கொக்கெனவே நினைத்தனையோ?


முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்

     கையர்மகிமை மொழியப் போமோ!

ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே

     டனையெரித்தாள் ஒருத்தி! மூவர்

பக்கம்உற அமுதளித்தாள் ஒருத்திஎழு

     பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு

‘கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'

     என்றொருத்தி கூறி னாளே!


இதன் பொருள் ---


முக்கணர் தண்டலை நாட்டிற் கற்புடை மங்கையர்  மகிமை மொழியப் போமோ - முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள  திருத்தண்டலை என்னுநம் திருத்தலத்தை உடைய  நாட்டிலே கற்புடைய மாதரின் பெருமை விளம்ப முடியுமோ?, ஒருத்தி ஒக்கும் எரி குளிர வைத்தாள் - ஒருத்தி  (தன்னைப்) போன்ற நெருப்பைக் குளிரச் செய்தாள், ஒருத்தி வில்வேடனை எரித்தாள் - ஒருத்தி வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள், ஒருத்தி மூவர் பக்கம் உற அமுது அளித்தாள் - ஒருத்தி  முத்தேவரையும் தன் பக்கத்தில் (குழந்தைகளாக) அமரச் செய்து பாலூட்டினாள், ஒருத்தி எழுபரி தடுத்தாள் - ஒருத்தி (கதிரவனுடைய) ஏழு குதிரைகளையும் தடுத்தாள், பண்டு ஒருத்தி, ‘கொங்கணவா! கொக்கு எனவே நினைத்தனையோ'  என்று  கூறினாள் - முற்காலத்தில் ஒருத்தி, ‘கொங்கணவா! (என்னையும் நீ யெரித்த) கொக்கு என்று நினைத்தாயோ?' என்று கூறினாள்.


      எரி குளிரவைத்தவள் சீதை : அநுமான்  இராமன் ஆணைப்படி சீதையைத் தேடிச் சென்று இலங்கையிற் கண்டான். அவனை அரக்கர் பற்றிச் சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை வேண்டி அநுமானைச் சுடாதிருக்குமாறு செய்தாள்.


      வில்வேடனை எரித்தவள் தமயந்தி : காட்டில் நளனைப் பிரிந்த தமயந்தி கலக்கமுடன் அலையும்போது ஒரு வேடன் அவளைக் கற்பழிக்க நெருங்கினான். தமயந்தி, ‘சீறா  விழித்தாள்! சிலை வேடன் அவ்வளவில் - நீறாய் விழுந்தான் நிலத்து!'


      மூவர் பக்கம் உற அமுது அளித்தவள் அனுசூயை : பிரமன் திருமால் சிவன் என்னும் முத்தேவரும் அனுசூயை கற்பைச்  சோதிக்க எண்ணித் துறவிகளாக  வடிவமெடுத்துச் சென்றனர். அனுசூயை அவர்களை அதிதிகளாக வரவேற்றாள். அவர்கள்  தங்களுக்கு ஆடையின்றி  வந்து உணவளிக்க  வேண்டும் என்றனர். அவள் உடனே அவர்களைச் சிறு குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டுத் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு வந்து பாலூட்டினாள். அவர்கள் அவளுடைய கற்பின் திறமைக்கு வியந்தனர்.


      எழுபரி தடுத்தவள் நளாயினி : நளன்  மகளான  இவள்  தன் கணவரைக் கூடையில் நள்ளிரவிலே அவர் விரும்பிய தாசி வீட்டிற்குச் சுமந்து செல்கையிற்  கழுவிலிருந்த  மாண்டவியரின் காலிற் கூடை தட்டியது. வலிபொறுக்க முடியாத மாண்டவியர் தன் கணவன் பணிவிடையில் உள்ள ஊக்கத்தாலே தன்னைக் கவனியாமற் சென்றாள் என்று சினந்து, ‘விடிந்தவுடன் நளாயினி தன் தாலியை இழப்பாள்' எனச் சாப்பித்தார். நளாயினி திடுக்கிட்டுப், ‘பொழுது விடியாமற் போகட்டும்' என்று சபித்தாள். அவ்வாறே விடியாமற் போனதால், தேவர்கள் தலையிட்டு நளாயினியின் கணவன் இறவா வண்ணம் மாண்டவியரைக் கூறச்செய்து பொழுது விடியுமாறு நளாயினியைக் கூறச்செய்தனர்.


      ‘கொக்கென்று நினைத்தனையோ?' என்றவள் வாசுகி : கொங்கணவன் (போகரின்  மாணாக்கன்  என்பர்) என்ற  ஒருவன் தவம் புரிந்துகொண்டிருந்தான். நண்பகலிலே  ஊருக்குட் சென்று உணவு வாங்கியுண்பது வழக்கம். ஒருநாள் அவ்வாறு செல்கையில், வழியில் ஒரு மரநிழலிலே தங்கினான். ஒரு கொக்கு மரத்திலிருந்து இவன்மேல் எச்சமிட, அவன் அதனை உறுத்துப் பார்த்தான். அக் கொக்கு உடனே எரிந்தது. தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட அவன் திருவள்ளுவர் வீட்டிலே உணவுக்குச் சென்றான். திருவள்ளுவர் மனைவி இவன் வாயிலில் வந்து நின்று கேட்டவுடனே வராமல் தன் கணவருக்கு உணவு படைத்தபின் உணவு கொண்டு வந்தாள். சினங்கொண்ட கொங்கணவன்  அவளை உறுத்துப் பார்த்தான். அவள்  நகைத்துக் ‘கொக்கென்று  நினைத்தனையோ கொங்கணவா' என்று கூறினாள். இது ஒரு பழமொழியாக நம் நாட்டில் வழங்குகிறது. ஒழுக்கமே யாவற்றினும்  உயர்ந்தது என்பது கருத்து.


69. பூப்பு வாரம்

 


                     69. பூப்பு வாரம்        

                               ---


அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்

     கானகற் புடைய ளாவாள்;

  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி

     அளவில்பைங் குழவி பெறுவாள்;


திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு

     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;

  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;

     திருவுமுண் டாயி ருப்பாள்;


கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்

     காரிவா ரத்தி லாகில்;

  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார

     காலபலன் என்று ரைசெய்வார்;


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே - அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; 


அருக்கனுக்கு அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோய் உடையவள் ஆவள்,


நல்சோமனுக்கு ஆன கற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில் மிகுதியான கற்புடையவள் ஆவாள்.


அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் - செவ்வாயில் மிகுந்த வருத்தம் உடையவள் ஆவாள்.


புந்தியில் அளவு இல் பைங்குழவி பெறுவாள் - புதனில் மிகுதியான  குழந்தைகளைப் பெறுவாள்.


திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் - சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள்.


சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் - புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பம் உடையவளும் செல்வம் உடையவளும் ஆவாள், 


காரிவாரத்தில் ஆகில் கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள் - சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகு இழந்து, வறுமையுடன் திரிவாள், 


களபமுலை மாதர் புட்பவதி ஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் - கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.


பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல் தீமை; மற்றக் கிழமைகள் நலம்.


54. அறிய முடியுமோ?

 


                    54. அறிய முடியுமோ    

                              -----


மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்

     மட்டிக் குரங்கறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்க ளேஅறிவர்

     மலடிதான் அறிவதுண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாதறிவள்

     கணிகையா னவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம்என் பதைவரும்

     களவான நாயறியுமோ?


குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்

     கொடியபூ னையும்அறியுமோ?

குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீயென்று குறவள்ளி பின்தொடர

     வனமூடு தழுவும்அழகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!


இதன் பொருள் ---


மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனமூடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை பின்பற்றி வரச்சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ - மணமுடைய மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களேயன்றி அறிவற்ற குரங்கு அறியுமோ?, 


மக்களுடைய அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களேயல்லாமல் மலடி அறிவாளோ?


கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; பொதுமகள் அறிவாளோ?


கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவுஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருடவரும் நாய் அறியுமோ? 


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? 


குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்; கொடுமூடர் தாம்  அறிவரோ? - பழகத்தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினரே அறிவார்கள்; கொடிய கயவர்கள் அறிவார்களோ?


     (விளக்கவுரை) ‘குரங்கின் கைப்பட்ட பூமாலை' ‘மக்கள் அருமை மலடி அறிவாளோ?' ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்ததுபோல' ‘பாம்பின்கால் பாம்பறியும்' என்னும் பழமொழிகள் இங்குக் கருதத் தக்கன. ஒருசந்தி - ஒருவேளை. (நோன்பு) ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒருசந்தி, ஒருவேளை என்பது வழக்கம். ஒரு சந்திப் பானை : என்பது நோன்புக்குச் சமைக்க எனத் தனியே  வைத்திருக்கும் ஒரு பாண்டம்.  நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள். 


திருச்செங்காடு

 




"நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்திநிழல் அருகே

இருப்பார் திருவுளம் எப்படியோ, இன்னம் என்னை அன்னைக்

கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய

திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே."

பொழிப்புரை --- நெருப்பைப் போலும் திருமேனியை உடைய சிவபெருமான் திருச்செங்காட்டில் ஆத்தி மரநிழலிலே எழுந்தருளி இருக்கின்றான். அவனுடைய திருவுள்ளப் பாங்கு எப்படி அமைந்துள்ளதோ தெரியவில்லை. இன்னமும் ஒரு தாயின் வயிற்றிலே என்னைக் கொண்டு சேர்ப்பாரோ? திருமாலும் காண்பதற்கு அரியதான தன்னுடைய திருவடி நிழலிலே சேர்ப்பாரோ?  சிவபெருமானுடைய அருட்செயல் இன்னது என்று தெரியாது.

விளக்கம் - சிவபெருமான் பவளம் போல் சிவந்த திருமேனியை உடையவன் என்பதால், "நெருப்பான மேனியர்" என்றார். அவர் எழுந்தருளி விளங்குகின்ற இடங்கள் எல்லாம் திருக்கோயில் ஆகும்.  அடியவர் உள்ளமும் பெருங்கோயில் தான் அவருக்கு. அந்தப் பக்குவத்தை அடையச் செய்வதற்காக, அவனைக் கும்பம், தம்பம், பிம்பம் என்னும் நிலைகளில் வைத்து, எழுந்தருளப் பண்ணி வழிபாடு ஆற்ற அருளாளர்களை அதிட்டித்து வழிகாட்டியவனும் அவனே தான். பல திருக்கோயில்களிலும் அவன் நமது வேண்டுதலாகிய ஆவாகனம் காரணமாக எழுந்தருளி இருக்கின்றான். அத் திருத்தலங்களில் திருச்செங்காட்டங்குடியும் ஒன்று. ஆத்தி தலமரம். ஆதலின், "செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே இருப்பார்" என்றார்.

தம்மிடத்தில் அன்பு செய்வாருடைய பக்குவத்திற்கு ஏற்பத் தாமும் அன்பு செய்வார் ஆதலால், "அவரது திருவுள்ளம் எப்படியோ" என்றார்.  உயிர்கள் உய்யும்பொருட்டு, மாயாகாரியமாகிய உடம்பிலே அவைகளைச் செலுத்துதல் முதலாகிய ஐந்தொழில்களையும் பெருமான் ஆற்றுகின்றான். அவன்தான் உயிரின் பக்குவத்தை அறிவான்.  எத்தனையோ பிறவிகளை எடுத்து எடுத்து இளைத்த ஆன்மாவை, மேலும் ஒரு பிறவி எடுக்க வேண்டி, இன்னும் ஒரு தாயின் கருப்பையிலே புகுத்துவது செய்வானோ அல்லது, பன்றியாக வடிவெடுத்துச் சென்றும் திருமாலால் காணமுடியாத தனது திருவடி நிழலில் வைத்து ஆட்கொள்ளுவானோ என்பது, நான் என்னும் முனைப்பு உடைய ஆன்ம அறிவுக்குப் புலப்படாது.  அந்த ஊசியின் காது இன்னும் அறவில்லை. அதனால், சிவன் செயல் எப்படி அமையமோ என்பார்,  "இன்னம் என்னை அன்னைக் கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே" என்றார்.


திருத் தில்லை - 14

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல், ஏக்கற்று இருப்பர்களே."


கங்கை நதியோடு, தும்பை மலரையும் தரித்து ஆடுகின்ற அம்பலவாணப் பெருமானை வழிபடாதவர்களுக்கு இந்த உலகத்தில் அடையாளம் உள்ளது. அது என்னவென்றால், சோற்று வாசனை இல்லாமல், சுகம் ஏதும் இல்லாமல், உடுத்திக் கொள்ள ஆடை ஏதும் இல்லாமல், பிச்சை எடுத்தாலும் கிடைக்காமல் ஏங்கி இருப்பவர்கள்.


"இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையை சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே"


என்னும் சுந்தரர் தேவாரத்தினை எண்ணுக.


53. ஈடு ஆகுமோ?

 


                       53. ஈடாகுமோ?

                                   ---


தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்

     சந்திரற் கீடாகுமோ?

தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு

     தம்பட்ட ஓசையாமோ?


கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு

     குஞ்சரக் கன்றாகுமோ?

கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு

     கோகனக மலராகுமோ?


பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு

     பைம் பொன்மக மேருவாமோ?

பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்

     பனன்ஒருவ னுக்குநிகரோ?


வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரணக்கொடி ஒரு கரத்தில் பிடித்து, ஒன்றில் வடிவேல் பிடித்த முருகா - ஒரு திருக்கையிற் சேவற்கொடியையும், ஒரு திருக்கையில் வடிவேலையும் பிடித்த முருகப் பெருமானே! 


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும் சந்திரர்க்கு ஈடாகுமோ - ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளி வீசினும் திங்களுக்கு ஒப்பாகுமோ? 


தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ - மரத்தில் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல கூடினாலும், ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?


கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சரக்கன்று ஆகுமோ - அழகற்ற பன்றிக் குட்டிகள் பல சேர்ந்தாலும் ஒரு யானைக் கன்றுக்குச் சமம் ஆகுமோ?


வாவியில் பல கொட்டிமலர் கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ - பொய்கையிலே பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல் அழகு பெறுமோ?


பாரம் மிகு மாமலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மகமேரு ஆமோ - பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும் ஒப்பற்ற பொன் மலையான மகாமேருவுக்குச் சமமாகுமோ? 


பலன் இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ - பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு மகனுக்கு ஒப்பாவரோ?


     அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே மேல் என்பது கருத்து.


68. விருந்துக்கு உரிய கிழமை

 


               68. விருந்துக்கு உரிய கிழமை

                                 ----- 


செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;


பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;


மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;


அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அம்கையில் விளங்கி வளர் துங்க மழுவாளனே - உள்ளங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுப்படையை உடையவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


செங்கதிர்க்கு விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை வரும் - ஞாயிற்றுக் கிழமையில் ஒருவர் விருந்து செய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும்;


திங்களுக்கு உறவு உண்டு; நன்மை ஆம் - திங்கட் கிழமையில் (விருந்து உண்டால்) உறவு வரும்; வேறு நன்மையும் உண்டாகும்;


செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும் - செவ்வாய்க் கிழமையில் விருந்து உண்ணமாட்டார், (உண்டால்) பகை உண்டாகும்;


பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் - நலம் மிகு புதன்கிழமையில் நலம் உண்டாகும், உறவும் உண்டாகும்; 


பொன்னவற்கு விருந்து உண அதிக பகை ஆம் - வியாழனில் விருந்து உண்டால் மிகு பகைவரும்;


புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் - வெள்ளிக் கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர்;


மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் - முகில் அனைய சனிக்கிழமை நலம் உண்டாகும்;


இதனினும் மனம் ஒத்து இருந்த இடம் வாலாயமாய்ப்போய் விருந்து உண விருந்து உதவ வாய்த்த நாள் என்று அறியலாம் - மேலும் இந்த நாளே உள்ளம் ஒத்து உள்ள இடத்தில் வழக்கமாகச் சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என உணரலாம்.


சனியின் நிறம் கருமை. ஆகையால், ‘மங்குல் நிகர் சனி' என்றார். அகம் + கை - அங்கை. உள்ளங்கை. விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்ற நாள்கள் நலமானவை என்பது கருத்து.


8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...