பொது --- 1025. கற்பார் மெய்ப்பாட்டை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கற்பார்மெய்ப் பாட்டை (பொது)

 

முருகா! 

அடியார்களுடன் கூடி இருந்து

உம்மைப் பணிந்து உய்ய அருள் புரிவாய்.

 

 

தத்தானத் தாத்தத் தனதன

     தத்தானத் தாத்தத் தனதன

          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான

 

 

கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய

     சொற்பாகைக் காட்டிப் புழுகொடு

          கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ......இளநீரைக்

 

கட்சேலைக் காட்டிக் குழலழ

     கைத்தோளைக் காட்டித் தரகொடு

          கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ......மயில்போலே

 

நிற்பாருக் காட்பட் டுயரிய

     வித்தாரப் பூக்கட் டிலின்மிசை

          நெட்டூரக் கூட்டத் தநவர ......தமுமாயும்

 

நெட்டாசைப் பாட்டைத் துரிசற

     விட்டேறிப் போய்ப்பத் தியருடன்

          நெக்கோதிப் போற்றிக் கழலிணை ......பணிவேனோ

 

வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை

     மைச்சாவிக் காக்கைக் கடவுளை

          விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ......யிருகாலும்

 

விற்போலக் கோட்டிப் பிறகொரு

     சற்றேபற் காட்டித் தழலெழு

          வித்தார்தத் வார்த்தக் குருபர ......னெனவோதும்

 

பொற்பாபற் றாக்கைப் புதுமலர்

     பெட்டேயப் பாற்பட் டுயரிய

          பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ....யெனமாலாய்ப்

 

புட்கானத் தோச்சிக் கிரிமிசை

     பச்சேனற் காத்துத் திரிதரு

          பொற்பூவைப் பேச்சுக் குருகிய ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய

     சொல் பாகைக் காட்டி, புழுகொடு

          கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ......இளநீரை,

 

கண்சேலைக் காட்டி, குழல் அழ-

     கை, தோளைக் காட்டி, தரகொடு

          கைக் காசைக் கேட்டு, தெருவினில் ......மயில்போலே

 

நிற்பாருக்கு   ஆட்பட்டு, உயரிய

     வித்தாரப் பூக் கட்டிலின் மிசை

          நெட்டூரக் கூட்டத்து, அநவர ...... தமும் மாயும்

 

நெட்டு ஆசைப் பாட்டைத் துரிசு அற

     விட்டு ஏறிப் போய், பத்தியருடன்

          நெக்கு ஓதிப் போற்றி, கழல்இணை ......பணிவேனோ?

 

வெற்பால் மத்து ஆக்கிக் கடல் கடை,

     மைச்சாவிக் காக்கைக் கடவுளை

          விட்டு, ஆர் முக்கோட்டைக்கு ஒருகிரி ......இருகாலும்

 

வில் போலக் கோட்டி, பிறகு ஒரு

     சற்றே பல் காட்டித் தழல் எழு-

          வித்தார் தத்வ அர்த்தக் குருபரன் ...... என ஓதும்

 

பொற்பா! பற்றாக்கைப் புதுமலர்

     பெட்டு ஏயப் பால் பட்டு, உயரிய

          பொன் தோளில் சேர்த்துக் கருணைசெய் ......என, மாலாய்ப்

 

புள் கானத்து ஓச்சி, கிரி மிசை

     பச்சேனல் காத்துத் திரிதரு

          பொற்பூவைப் பேச்சுக்கு உருகிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

     வெற்பால் மத்து ஆக்கிக் கடல் கடை--- மலையைக் கொண்டு மத்து என நாட்டித் திருப்பாற்கடலைக் கடைந்த

 

     மைச்சு--- மைத்துனரும்,

 

     ஆவிக் காக்கைக் கடவுளை விட்டார்--- உயிர்களைக் காக்கின்ற தொழில் புரிபவருமான திருமாலை திரிபுராதிகளை மயக்க விடுத்தவரும்,

 

     முக்கோட்டைக்கு--- திரிபுரங்களின் மீதும்

 

     ஒரு கிரி இருகாலும் வில் போலக் கோட்டி---  ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைகளையும் வில்லாக வளைத்து

 

     பிறகு ஒரு சற்றே பல் காட்டி--- பிறகு சற்றே பற்களைக் காட்டிப் புன்னகை புரிந்து,

 

     தழல் எழு வித்தார்--- நெருப்பு எழுமாறு திருவிளையாடல் புரிந்தவரும் ஆகிய சிவபரம்பொருளுக்கு,

 

     தத்(து)வ அர்த்தக் குருபர என ஓதும் பொற்பா--- மெய்ப்பொருளை உபேதசித்த குருநாதரே என்று போற்றப்படும் அழகரே!

 

     பற்றாக்கை புதுமலர் பெட்டு ஏயப் பாற்பட்டு--- அம்புத் திரளைக் கட்டி இருக்கும் தூணியில் இருந்து மலர்கணைகளை மன்மதன் விரைவாக எய்யஅதனால் காமவயப்பட்டு,

 

     உயரிய பொன் தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய்--- உனது உயர்ந்த திருத்தோள்களில் அணைத்துக் கருணை புரிவாய் என்று வள்ளிநாயகியாரிடம் ஆசையோடு கூறி,

 

      புள் கானத்து ஓச்சி--- காட்டில் உலவும் பறவைகளை ஓட்டி,

 

     கிரி மிசை பச்சேனல் காத்துத் திரிதரு--- மலைமீது வளர்ந்துள்ள பசுமையான தினைப் பயிரைக் காத்துத் திரிந்த

 

     பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே --- அழகிய பூவையைப் போன்ற வள்ளிநாயகியாரின் பேச்சுக்கு மனமு உருகிய பெருமையில் மிக்கவரே! 

 

    கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய சொல் பாகைக் காட்டி--- கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில்,வெல்லப் பாகைப் போன்ற சொற்களின் இனிப்பைக் காட்டி,

 

     புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய--- புனுகு, கத்தூரி ஆகியவைகளின் கலவை பூசப்பட்டு,

 

     இள நீரை --- இளநீர் போன்றுள்ள முலைகளையும், 

 

     கண் சேலைக் காட்டி--- சேல்மீன் போன்ற கண்களையும் காட்டி,

 

     குழல் அழகை--- கூந்தலின் அழகையும்,

 

     தோளைக் காட்டி--- தோள்களையும் காட்டி,

 

     தரகொடு கைக் காசைக் கேட்டு--- இடையில் தரகர் ஒருவரை வைத்துப் பேசி, கையில் உள்ள பொருளைக் கேட்டு,

 

     தெருவினில் மயில் போலே நிற்பாருக்கு ஆட்பட்டு--- தெருவில் மயில் போல் ஒய்யாரமாக நிற்கும் விலைமாதர்க்கு நான் அடிமைப் பட்டு

 

      உயரிய வித்தாரப் பூக்கட்டிலின் மிசை --- உயர்ந்த,அழகு மிக்க,மலர்களைத் தூவியுள்ள கட்டிலின் மீது,

 

     நெட்டு ஊரக் கூட்டத்து--- நீண்ட நேரம் ஊர்ந்து கூடியிருந்து,

 

     அநவரதமு(ம்) மாயும் நெட்டாசைப் பாட்டை --- நாளும் அழிகின்ற நீண்ட ஆசைப்பாட்டை

 

     துரிசு அற விட்டு ஏறிப் போய்--- குற்றம் நீங்கும்படியாக விட்டு விலகிப் போய்,

 

     பத்தியருடன் நெக்கு ஓதிப் போற்றி --- பத்தி பூண்டுள்ள அடியார்களுடன் கூடியிருந்து உமது பொருள்சேர் புகழை ஓதி வழிபட்டு,

 

     கழல் இணை பணிவேனோ--- உமது திருவடி இணைகளைப் பணிவேனோ?

 

பொழிப்புரை

 

 

     மலையைக் கொண்டு மத்து என நாட்டித் திருப்பாற்கடலைக் கடைந்த மைத்துனரும்உயிர்களைக் காக்கின்ற தொழில் புரிபவருமான திருமாலை திரிபுராதிகளை மயக்க விடுத்தவரும், திரிபுரங்களின் மீது, அவற்றை அழித்து ஒழிக்க ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைகளையும் வில்லாக வளைத்து பிறகு சற்றே பற்களைக் காட்டிப் புன்னகை புரிந்துநெருப்பு எழுமாறு திருவிளையாடல் புரிந்தவரும் ஆகிய சிவபரம்பொருளுக்கு,

மெய்ப்பொருளை உபேதசித்த குருநாதரே என்று போற்றப்படும் அழகரே!

 

     அம்புத் திரளைக் கட்டி இருக்கும் தூணியில் இருந்து மலர்கணைகளை மன்மதன் விரைவாக எய்யஅதனால் காமவயப்பட்டு, "உனது உயர்ந்த திருத்தோள்களில் அணைத்துக் கருணை புரிவாய்" என்று வள்ளிநாயகியாரிடம் ஆசையோடு கூறிவள்ளிமலைக் காட்டில் உலவும் பறவைகளை ஓட்டிமலைமீது வளர்ந்துள்ள பசுமையான தினைப் பயிரைக் காத்துத் திரிந்த அழகிய பூவையைப் போன்ற வள்ளிநாயகியாரின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமையில் மிக்கவரே! 

 

     கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில்வெல்லப் பாகைப் போன்ற சொற்களின் இனிப்பைக் காட்டிபுனுகு, கத்தூரி ஆகியவைகளின் கலவை பூசப்பட்டு, இளநீர் போன்றுள்ள முலைகளையும், சே ல்மீன் போன்ற கண்களையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, இடையில் தரகர் ஒருவரை வைத்துப் பேசி, கையில் உள்ள பொருளைக் கேட்டு, தெருவில் மயில் போல் ஒய்யாரமாக நிற்கும் விலைமாதர்க்கு நான் அடிமைப் பட்டு,

உயர்ந்தஅழகு மிக்கமலர்களைத் தூவியுள்ள கட்டிலின் மீது, நீண்ட நேரம் ஊர்ந்து கூடியிருந்து, நாளும் அழிகின்ற நீண்ட ஆசைப்பாட்டைக் குற்றம் நீங்கும்படியாக விட்டு விலகிப் போய், பத்தி பூண்டுள்ள அடியார்களுடன் கூடியிருந்து உமது பொருள்சேர் புகழை ஓதி வழிபட்டு, உமது திருவடி இணைகளைப் பணிவேனோ?

 

 

விரிவுரை

 

கற்பு ஆர் மெய்ப் பாட்டைத் தவறிய சொல் பாகைக் காட்டி--- 

 

கற்பு --- உள்ளத் திண்மை. சொல் திறம்பாமை.

 

இது ஒருவருக்கு இருக்கவேண்டிய மெய்ப்பாடு ஆகும். மெய்நிலையில் இருந்து தவறி, பொருளாசை கொண்டு, பாகு போன்று இனிமையாகப் பேசி, ஆடவரைக் கவர்ந்து வாழ்வது விலைமாதரின் இயல்பு.

 

தரகொடு கைக் காசைக் கேட்டு--- 

 

தரகு -- வாங்குவோர் விற்போருக்கு இடையை இருந்து பண்டங்களின் விலையைப் பேசி விற்பனைக்கு ஏற்பாடு செய்பவர்.

 

பத்தியருடன் நெக்கு ஓதிப் போற்றி --- 

 

பத்தி நெறியில் வாழும் அடியவர்கள் எக்காலமும் இறைவனது பொருள் சேர் புகழை ஓதிவழிபட்டு, உள்ளம் நெக்கு நெக்கு உரிக நிற்பவர்கள்.

 

வெற்பால் மத்து ஆக்கிக் கடல் கடை மைச்சு ஆவிக் காக்கைக் கடவுளை விட்டார்--- 

 

மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினைக் காயிளாகவும் கொண்டு, அமுதம் வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்த வரலாறு கூறப்பட்டுத.

 

"வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே"

 

என்பது சிலப்பதிகாரப் பாடல்.

 

கடல் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷத்தின் வேகத்தால் திருமாலின் வெள்ளை நிறம் கறுத்தது. அவரும் கரியவன்எனப் பேர் பெற்றார் என்கின்றது காஞ்சிப் புராணம்.

 

"வருகனல் வல்விடம் தாக்கி மாயவன் வெண்ணிற மேனி

கருகினன், அன்றுதொ டங்கிக் கரியன் எனப்பெயர் பெற்றான்,

திருமல ரோன்உடல் பொன்மை தீர்ந்து புகைநிறம் உற்றான்,

வெருவு திசைச்கு இறையோரும் வேற்றுரு எய்தி அழுதார்".      

 

இதன் பொருள் ---

 

 கடலினின்றும் வருதீயை ஒத்த கொடிய விடம் மோதினமையால் திருமால் வெண்ணிறமேனி கருகினன். ஆதலின் அன்று முதல் கரியன் என்னும் பெயரைப் பெற்றனன். பிரமன் தன் திருமேனிப் பொன்னிறம் தவிர்ந்து புகை நிறம் எய்தினான். யாவரும் அஞ்சும் ஆற்றலுடைய எண்திசைத் தலைவரும் (இந்திரன் முதலானோரும்) வேறு வடிவினராகி அழுதனர்.

 

     திருமாலின் இயல்பான திருமேனி நிறம் வெண்மை என்பதற்கு, காஞ்சிப் புராணம் காட்டுவது...

 

"கடல் கடைந்திடச் செல்லுறூஉம் வெள்ளைமால் கடுப்பப்

படலை வெண்முகில் பரவைநீர் உழக்கிவாய் மடுத்து

விடம் எழுந்தென மீண்டஅம் மாயனை விழைய

உடல் கறுத்துவிண் நெறிப்படர்ந் தொய்யென மீண்டு". 

 

முக்கோட்டைக்கு ஒரு கிரி இருகாலும் வில் போலக் கோட்டி, பிறகு ஒரு சற்றே பல் காட்டி,தழல் எழுவித்தார்--- 

 

முக்கோட்டை --- திரிபுரங்கள்.

 

கமலாட்சன்வித்யுன்மாலிதாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்புவெள்ளிபொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

 

திரிபுரவாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்துநாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

 

அப்போதுஇந்தப் பூமியே தேராகவும்கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும்மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும்,எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும்மேருகிரி வில்லாகவும்வாசுகி நாணாகவும்பிரமன் சாரதியாகவும்வேதங்கள் குதிரைகளாகவும்திருமால் பாணமாகவும்அதற்கு அக்கினி வாயாகவும்வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

 

ஆனால், இறைவர் அவ்வில்லையும் கணையையும் பயன்படுத்தாமல் சிரித்தார். முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள்.

 

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.

 

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்

எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப

வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.   ---  திருஞானசம்பந்தர்.

                                                 

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்

கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.     ---  திருஞானசம்பந்தர்.

                                    

குன்ற வார்சிலை நாண் அராஅரி

            வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

            சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.    ---  திருஞானசம்பந்தர்.

 

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

            கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

            பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

            கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

            திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

 

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. --- சுந்தரர்.

 

தத்(து)வ அர்த்தக் குருபர என ஓதும் பொற்பா--- 

 

தத்துவம் --- உண்மைப் பொருள், மெய்ப்பொருள்.

 

அர்த்தம் --- பொருள்.

 

பொற்பா -- அழகுடையவரே!

 

நினைவாலும் சொல்லாலும் உணரவொண்ணாத பிரணவத்தின் பெருமையை, சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மலத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, சொல்ல அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தி, சொரூப அனுபூதி காட்டி அருளியவர் சிவபெருமான். அது சொல்லாமல் சொன்ன நிலை. 

 

கல்லாலின் புடை அமர்ந்து, நான்மறை, ஆறு     

     அங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த

     பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை

     இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

     நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.   --- திருவிளையாடல் புராணம்.

 

     திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுக வள்ளல் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

     பின்னர் ஒருகால் கந்தமாதன கிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

 

     அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல்உரிமைக் குறித்து ஆதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் பிரமதேவனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

     எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

 

     சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து,முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

 

     கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது.  நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். 

 

     குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுதம் புரிசடைத் தூங்கவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

     கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.   --- தணிகைப் புராணம்.

                                                                                              

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

ஞான வார்த்தை அருளிய பெருமாளே”  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

 

தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”   --- (கொடியனைய) திருப்புகழ்.

                                                                                  

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளிஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.

                                                                       --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

     பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

     தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

 

     உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.     ---  தணிகைப் புராணம்.                                                                                                 

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.

 

     சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                         

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டுசெய்தே. --- அபிராமி அந்தாதி.

                                      

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

                                    

 

பற்றாக்கை புதுமலர் பெட்டு ஏயப் பாற்பட்டு--- 

 

பற்றாக்கை -- அம்புகளை வைக்கின்ற தூணி.

 

பெட்டு ஏய--- விரைந்து பொருந்த.

 

உயரிய பொன் தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய்--- புள் கானத்து ஓச்சிகிரி மிசை பச்சேனல் காத்துத் திரிதரு பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே ---

 

பொற்றோள் --- பொன் தோள் --- அழகிய தோள்.

 

புள் கானத்து ஓச்சி --- பறவைகளக் காட்டில் வரவிடாமல் துரத்தி.

 

பச்சேனல் --- பசுமையான தினை.

 

பொன் பூவை --- அழகிய குயில்.

 

     தீய என்பன கனவிலும் நினையாத் தூயமாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில்திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தேமேல்பாடி என்னும் ஊரின் அருகில்காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும்பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும்,பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்திஅடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டுகுறி கேட்டும்வெறி ஆட்டு அயர்ந்தும்பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

 

     கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும்திருமகள் மானாகவும்உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர்சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்துஅம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான்சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று,தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்றுஉறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

 

     ஆங்கு ஒரு சார்,கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி,முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறுஅந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்துஇங்கும் அங்கும் உலாவிஉடல் நொந்துபுன்செய் நிலத்தில் புகுந்துவேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும்மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது,குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

 

     அதே சமயத்தில்ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால்வேட்டுவ மன்னனாகிய நம்பிதன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்றுஅக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டுஉள்ளமும் ஊனும் உருகிஓசை வந்த வழியே போய்திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்துதன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்துகுழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய்சிறு குடிலில் புகுந்துகுழந்தையைத் தொட்டிலில் இட்டு,முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடிவள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால்குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

 

     வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால்அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டிவேட்டுவர் குடிலில் தவழ்ந்தும்தளர்நடை இட்டும்முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும்,

சிற்றில் இழைத்தும்,சிறு சோறு அட்டும்,வண்டல் ஆட்டு அயர்ந்தும்முச்சிலில் மணல் கொழித்தும்அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து,கன்னிப் பருவத்தை அடைந்தார்.

 

     தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு,தமது சாதிக்கு உரிய ஆசாரப்படிஅவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும்மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்ததுஉயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவிதன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

 

     வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டுமுருகப் பெருமான்,கந்தமாதன மலையை நீங்கி,திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டுகை தொழுதுஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்துவள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டுதிருத்தணிகை மலைக்குச் சென்றுதிருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

 

     வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டுகரிய திருமேனியும்காலில் வீரக்கழலும்கையில் வில்லம்பும் தாங்கி,மானிட உருவம் கொண்டுதணியா அதிமோக தயாவுடன்திருத்தணிகை மலையினின்றும் நீங்கிவள்ளிமலையில் வந்து எய்திதான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்றுபரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

 

     முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியேஉலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல்இந்தக் காட்டில்பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதேநின் பெயர் யாதுதின் ஊர் எதுநின் ஊருக்குப் போகும் வழி எது?என்று வினவினார்.

 

நாந்தகம் அனைய உண்கண் 

     நங்கை கேள்,ஞாலம் தன்னில்                      

ஏந்திழையார்கட்கு எல்லாம் 

     இறைவியாய் இருக்கும்நின்னைப்                                

பூந்தினை காக்க வைத்துப் 

     போயினார்,புளினர் ஆனோர்க்கு                        

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

     அயன் படைத்திலன் கொல் என்றான்.   

 

வார் இரும் கூந்தல் நல்லாய்,

     மதி தளர்வேனுக்கு உன்தன்                  

பேரினை உரைத்தி,மற்று உன் 

     பேரினை உரையாய் என்னின்,                                    

ஊரினை உரைத்தி,ஊரும் 

     உரைத்திட முடியாது என்னில்

சீரிய நின் சீறுர்க்குச் 

     செல்வழி உரைத்தி என்றான். 

 

மொழிஒன்று புகலாய் ஆயின்,

     முறுவலும் புரியாய் ஆயின்,                               

விழிஒன்று நோக்காய் ஆயின்

      விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                                

வழி ஒன்று காட்டாய் ஆயின்,

     மனமும் சற்று உருகாய் ஆயின்                              

பழி ஒன்று நின்பால் சூழும்,

     பராமுகம் தவிர்தி என்றான். 

     

உலைப்படு மெழுகது என்ன 

     உருகியே,ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல 

     வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள் 

     கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ 

     அறுமுகன் ஆடல் எல்லாம். 

 

     இவ்வாறு எந்தை கந்தவேள்உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில்,வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார்.நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால்இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணிஅதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பிவேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

 

     நம்பி சென்றதும்முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகிநாணத்துடன் நின்று, "ஐயாநீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதேநம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர்.விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனேமுருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

 

     நம்பிஅக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக.உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்திதிருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பிஅவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாதுஉமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான்.பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கிஇளமை அடையவும்உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும்தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லிதனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

 

     பிறகுஅக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ!ஆறு மலை தாண்டிச் சென்றால்ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன்நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்றுசுனையில் நீர் பருகினார் பெருமான். 

 

     (இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடிபக்குவ அனுபவம் பெறபக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர்ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்துசகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார்,பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்கமுருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

 

     வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது.ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமாபுனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோஎமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும்,நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறிதினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

 

     தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய்,முதல்வா!" என்றார்.அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடிகிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்துவிநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

 

     முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகிஅது கண்டு ஆனந்தமுற்றுஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால்அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார்.பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்துபிரணவ உபதேசம் புரிந்து,"நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

 

     அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தைபறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார்நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார்.  

 

     "அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளதுசொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.  

 

மை விழி சிவப்பவும்,வாய் வெளுப்பவும்,

மெய் வியர்வு அடையவும்,நகிலம் விம்மவும்,

கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை

எவ்விடை இருந்து உளது?இயம்புவாய் என்றாள்.   

 

     இவ்வாறு பாங்கி கேட்அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

 

     வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில்ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கிவேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோஎன்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறிவந்தவர் கண்களும்இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணிபுனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

 

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   

கூட்டிடாய் எனில்,கிழிதனில் ஆங்கு அவள் கோலம்

தீட்டி,மா மடல் ஏறி,நும் ஊர்த் தெரு அதனில்

ஓட்டுவேன்,இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                  

 

     பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன்மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கிஅவருடைய காதலை உரைத்து,உடன்பாடு செய்து,அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும்,பரமன் வெளிப்பட்டு,பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன்உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

 

     இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்துவள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

 

     வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

 

     வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்துஎடுத்து அணைத்துமேனி மெலிந்தும்வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கிதெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி,முருகனை வழிபட்டு,வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி,"நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால்நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார்.அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

 

     முருகவேள் தினைப்புனம் சென்றுதிருவிளையாடல் செய்வார் போல்வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்துகுடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி,வெளி வந்து,பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால்இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்துபேய் துயில் அறிந்துகதவைத்திறந்துபாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள். 

 

தாய்துயில் அறிந்து,தங்கள் தமர்துயில் அறிந்துதுஞ்சா

நாய்துயில் அறிந்து,மற்றுஅந் நகர்துயில் அறிந்துவெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில்பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

 

     (இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும்புலன்களாகிய தமரும்ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும்தேக புத்தியாகிய நகரமும்சதா அலைகின்ற பற்று என்ற பேயும்இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

 

     வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவஎன் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்துஇவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

 

     பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டுநும் பதி போய்இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்துஉன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறிஅவ்விருவரையும் வழி விடுத்து,குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்றுஒரு பூங்காவில் தங்கினார்.

 

     விடியல் காலம்நம்பியின் மனைவி எழுந்துதனது மகளைக் காணாது வருந்தி,எங்கும் தேடிக் காணாளாய்பாங்கியை வினவஅவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டுபோர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகிஎம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

 

     முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார்.

நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்யசேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க,அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

 

     இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்துஎம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா?அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார்.முருகப் பெருமான் பணிக்கவள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன்அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கிஉச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்துஎமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்?தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா?எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்துஅக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

 

     கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்யவள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கிபழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்டநம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து,நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து,திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

 

     முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறுபெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால்,அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

 

     இந்த அற்புதமான அருள் வரலாற்றைஅருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.

 

முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...

 

குறவர் கூட்டத்தில் வந்து,கிழவனாய்ப் புக்கு நின்று,

     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,

குணமதாக்கிசிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த

     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.  --- கச்சித் திருப்புகழ்.

                                     

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்

     புணர் காதல் கொண்ட அக் ......    கிழவோனே!  --- பழநித் திருப்புகழ்.

                                    

 

செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....

 

செட்டி என்று வன மேவி,இன்ப ரச

     சத்தியின் செயலினாளை அன்பு உருக

     தெட்டி வந்துபுலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே. --- சிதம்பரத் திருப்புகழ்.

                                    

 

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,

செட்டி என்று எத்தி வந்துடி நிர்த்தங்கள் புரி

    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ......எங்கள் கோவே! --- சிதம்பரத் திருப்புகழ்.

                                   

 

வள்ளிநாயகிக்காக மடல் ஏறியது ....

 

பொழுது அளவு நீடு குன்று சென்று,

     குறவர்மகள் காலினும் பணிந்து,

          புளிஞர் அறியாமலும் திரிந்து,...... புனமீதே,

புதியமடல் ஏறவும் துணிந்த,

     அரிய பரிதாபமும் தணிந்து,

          புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.

                                    

 

முருகப் பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....

 

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்

     மங்கை தனை நாடி,...... வனமீது

வந்த,சரண அரவிந்தம் அது பாட

     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

 

குஞ்சர கலாப வஞ்சி,அபிராம

     குங்கும படீர ...... அதி ரேகக்

கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!

     குன்று தடுமாற ...... இகல் கோப!  --- நிம்பபுரத் திருப்புகழ்.

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ....அணைவோனே

                                                            --- திருவருணைத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...

 

தவநெறி உள்ளு சிவமுனி,துள்ளு

     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்

தரு புன வள்ளி மலை மற வள்ளி,

     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே!--- வெள்ளிகரத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....

 

மால் உற நிறத்தைக் காட்டி,வேடுவர் புனத்தில் காட்டில்,

     வாலிபம் இளைத்துக் காட்டி,...... அயர்வாகி,

மான்மகள் தனத்தைச் சூட்டி,ஏன் என அழைத்துக் கேட்டு,

     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                    

 

வள்ளிநாயகியின் திருக்கையையும்திருவடியையும் பிடித்தது...

 

பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா!--- சுவாமிமலைத் திருப்புகழ்.

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள்கற்புடைக் கிளியுள்

     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.  --- பொதுத் திருப்புகழ்.

                   

 

வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்

     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.  --- திருவேங்கடத் திருப்புகழ்.

                                

 

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

 

கன்னல் மொழி,பின்அளகத்துன்னநடை,பன்ன உடைக்

     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்

     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!  --- கண்ணபுரத் திருப்புகழ்.

                                

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...

 

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு

     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,

     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!       --- திருவருணைத் திருப்புகழ்.

                               

 

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி,சரசம் புரிந்தது.....

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே.

                                                                    --- திருவருணைத் திருப்புகழ்.  

 

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.

                                                                     --- திருத்தணிகைத் திருப்புகழ்.

 

கருத்துரை

 

முருகா! அடியார்களுடன் கூடி இருந்து உம்மைப் பணிந்து உய்ய அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...