கரூர் --- 0936. சஞ்சல சரித

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சஞ்சல சரித (கருவூர்)

 

தந்தன தனன தனதாத்தன

     தந்தன தனன தனதாத்தன

          தந்தன தனன தனதாத்தன ...... தனதான

 

 

சஞ்சல சரித பரநாட்டர்கள்

     மந்திரி குமரர் படையாட்சிகள்

          சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்

 

தண்டிகை களிறு பரிமேற்றனி

     வெண்குடை நிழலி லுலவாக்கன

          சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க்

 

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு

     பஞ்சணை மிசையி லிசையாத்திரள்

          கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங்

 

கொங்கணி மகளிர் பெருநாட்டிய

     நன்றென மனது மகிழ்பார்த்திபர்

          கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே

 

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்

     வென்றிட சகுனி கவறாற்பொருள்

          பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப்

 

பண்டையில் விதியை நினையாப்பனி

     ரண்டுடை வருஷ முறையாப்பல

          பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே

 

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்

     முந்துத முடைய மனைவாழ்க்கையின்

          வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள்

 

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி

     யுந்தினன் மருக வயலூர்க்குக

          வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.


 

பதம் பிரித்தல்

 

சஞ்சல சரித பரநாட்டர்கள்,

     மந்திரி,குமரர்,படையாட்சிகள்

          சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்

 

தண்டிகை களிறு பரிமேல் தனி

     வெண்குடை நிழல் உலவாக் கன

          சம்ப்ரம விபவ சவுபாக்கியம் ...... உடையோராய்க்

 

குஞ்சமும் விசிற,இறுமாப்பொடு

     பஞ்சணை மிசையில் இசையாத் திரள்

          கொம்புகள் குழல்கள் வெகுவாத்தியம் ...... இயல்கீதம்,

 

கொங்கு அணி மகளிர் பெருநாட்டியம்

     நன்று என மனது மகிழ் பார்த்திபர்,

          கொண்டு அயன் எழுதும் யமகோட்டியை ...... உணராரே?

 

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்

     வென்றிட சகுனி கவறால் பொருள்

          பங்கு உடை அவனி பதிதோற்றிட,...... அயலேபோய்ப்

 

பண்டையில் விதியை நினையா,பனி-

     ரண்டுடை வருஷ முறையாப் பல

          பண்புடன் மறைவின் முறையால்திரு ...... வருளாலே

 

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்

     முந்து த(ம்)முடைய மனைவாழ்க்கையின்

          வந்தபின் உரிமை அதுகேட்டிட,...... இசையாநாள்,

 

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி

     உந்தினன் மருக! வயலூர்க் குக!

          வஞ்சியில் அமரர் சிறைமீட்டு அருள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட--- தருமன் முதலாய பஞ்சபாண்டவர்களை, கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள,

 

      சகுனி கவறால் --- சகுனி ஆடிய சூதாட்டத்தால்,

 

     பொருள் --- தமது உடைமையாய் இருந்த பொருளையும்,

 

     பங்கு உடை அவனி பதி தோற்றிட---  தமது பாகமாய் இருந்த பூமியையும்ஊர்களையும் தோற்றுப் போகவும்,

 

      அயலே போய் --- வேற்றிடம் ஆகிய காட்டிலே சென்று,

 

     பண்டையில் விதியை நினையா --- தமது பண்டைய விதியை நினைந்து,

 

     பனிரண்டு உடை வருட முறையா--- பன்னிரண்டு ஆண்டுகள் முறையா(வனவாசம் செய்து முடித்து)

 

     பல பண்புடன்--- பல விதங்களில்,

 

     மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி--- மறைந்து வாழ்ந்து,திருவருளால்வஞ்சனையாக விதிக்கப்பட்ட ஓராண்டு கரந்துறை வாசம் முடிந்து,

 

     நிரை மீட்சியில்---(துரியோதனால் கவரப்பட்ட) பசுக் கூட்டங்களை மீட்டுவெளிப்பட்ட பின்,

 

     முந்து தம்முடைய மனை வாழ்க்கையில் வந்த பின்--- பழையபடி தங்களுக்கு இருந்த இல்லற நிலைக்கு வந்த பின்னர்,

 

     உரிமை அது கேட்டிட--- தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்கப் புகவும்,

 

     இசையா நாள்---(அதற்குத் துரியோதனன்) இசையாத நாளில்,

 

      மண் கொள --- (பாண்டவர்கள் தமது) பாகத்தைப் பெறும்பொருட்டு,

 

     விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக--- (மூண்ட பாரதப் போரில்) அருச்சுனன் விட்ட தேரினைச் சாரதியாக இருந்து செலுத்தியவரின் (திருமாலின்) திருமருகரே!

 

     வயலூரக் குக--- வயலூரில் எழுந்தருளி உள்ள குகப் பெருமாளே!

 

     அமரர் சிறை மீட்டு --- தேவர்களைச் சிறை மீட்டு,

 

     வஞ்சியில் அருள் பெருமாளே---வஞ்சி எனப்படும் கருவூரில் அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

 

     சஞ்சல சரித பரநாட்டர்கள்---துயரமான சரிதத்தை உடைய பிற நாட்டவர்களும்,

 

     மந்திரி--- அவர்களது அமைச்சர்களும்,

 

     குமரர்--- மைந்தர்களும்

 

     படை ஆட்சிகள்--- இளம் வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும்,

 

     சங்கட மகிபர் ---துன்ப நிலையில் இருந்த அரசர்களும்,

 

      தொழு ஆக்கினை--- தொழுது நிற்கும்படி ஆக்கினை புரிந்து,

 

     முடிசூடி --- திருமுடி தரித்துக் கொண்டு,

 

     தண்டிகை --- பல்லக்கின் மேலும்,

 

     களிறு--- யானையின் மீதும்,

 

     பரி மேல்--- குதிரையின் மீதும்,

 

     தனி வெண் குடை நிழலில் உலவா--- ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து வாழ்ந்து வந்,

 

      கன சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய்--- பெருமை தங்கியசிறப்பு மிக்கசெல்வ வளம் கொண்டு,மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய்,

 

      குஞ்சமும் விசிற--- வெண் சாமரை வீச.

 

     இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா--- செருக்குடன் பஞ்சணையின் மேல் பொருந்தி இருந்து,

 

      திரள் கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம்--- ஊது கொம்புகள்குழல்கள் முதலான பலவித வாத்தியங்கள் முழங்,

 

     இயல் கீதம்--- பாட்டொலியோடு,

 

      கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய(ம்)--- நறுமணம் கமழும் பெண்களின் சிறப்பான நாட்டியம்,

 

     நன்று என மனது மகிழ் பார்த்திபர்--- நன்று என்று மனம் மகிழ்ந்திருக்கும் பேரரசர்களும் கூ,

 

      அயன் கொண்டு எழுதும் யம கோட்டியை உணராரே --- பிரமதேவன் எழுதிய விதிக் கணக்கின்படிஅடையப் போகின்ற இயம வேதனையை அறியமாட்டார்களா? (மாட்டார்கள்)

 

பொழிப்புரை

 

            தருமன் முதலாய பஞ்சபாண்டவர்களை, கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ளசகுனி ஆடிய சூதாட்டத்தால்தமது உடைமையாய் இருந்த பொருளையும்,தமது பாகமாய் இருந்த பூமியையும்ஊர்களையும் தோற்றுப் போகவும்வேற்றிடம் ஆகிய காட்டிலே சென்றுதமது பண்டைய விதியை நினைந்து,பன்னிரண்டு ஆண்டுகள் முறையாக வனவாசம் செய்து முடித்து,பல விதங்களில்மறைந்து வாழ்ந்துதிருவருளால்வஞ்சனையாக விதிக்கப்பட்ட ஓராண்டு கரந்துறை வாசம் முடிந்துதுரியோதனால் கவரப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டு,வெளிப்பட்டபின்பழையபடி தங்களுக்கு இருந்த இல்லற நிலைக்கு வந்த பின்னர்,தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்கப் புகவும்அதற்குத் துரியோதனன் இசையாத நாளில்பாண்டவர்கள் தமது பாகத்தைப் பெறும்பொருட்டுமூண்ட பாரதப் போரில் அருச்சுனன் விட்ட தேரினைச் சாரதியாக இருந்து செலுத்தியவரின் (திருமாலின்) திருமருகரே!

 

          வயலூரில் எழுந்தருளி உள்ள குகப் பெருமாளே!

 

          தேவர்களைச் சிறை மீட்டுவஞ்சி எனப்படும் கருவூரில் அருள் புரியும் பெருமையில் மிக்கவரே!

 

          துயரமான சரிதத்தை உடைய பிற நாட்டவர்களும்அமைச்சர்களும்மைந்தர்களும்இளம் வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும்துன்ப நிலையில் இருந்த அரசர்களும்தொழுது நிற்கும்படி ஆக்கினை புரிந்துதிருமுடி தரித்துக் கொண்டுபல்லக்கின் மேலும்யானையின் மீதும், குதிரையின் மீதும்ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து வாழ்ந்து வந்,பெருமை தங்கியசிறப்பு மிக்கசெல்வ வளம் கொண்டு,மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய்வெண் சாமரை வீச.செருக்குடன் பஞ்சணையின் மேல் பொருந்தி இருந்து,

 

          ஊது கொம்புகள்குழல்கள் முதலான பலவித வாத்தியங்கள் முழங்,பாட்டொலியோடுநறுமணம் கமழும் பெண்களின் சிறப்பான நாட்டியம்கண்டுநன்று என்று மனம் மகிழ்ந்திருக்கும் பேரரசர்களும் கூ,பிரமதேவன் எழுதிய விதிக் கணக்கின்படிஅடையப் போகின்ற இயம வேதனையை அறியமாட்டார்களா? (மாட்டார்கள்)

 

 

விரிவுரை

 

     முடி சான்ற மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பர் ஆவர் என்றபடிஉலகம் முழுதையும் ஒரு குடைகை கீழ் ஆளும் அரசர்கள் ஆனாலும்பிரமதேவன் எழுதிய எழுத்தின்படி,தமது வாழ்நாள் முடிந்ததும்மரணவேதனைக்கு ஆளாவார்கள். இளமையாக்கைசெல்வம் யாவும் நிலையற்றவை என்று உணர்ந்துநிலையான இன்பத்தைத் தேடுவதில் முயற்சியோடு இருக்கவேண்டும் என்பது அடிகளார் இந்தப் பாடலின் முற்பகுதியின் வழி நமக்கு அறிவுறுத்துவது.

 

     பாடலின் பிற்பகுதியில்மகாபாரத் கதை காட்டப்பட்டது.

 

வஞ்சியில் அருள் பெருமாளே---

 

வஞ்சி எனப்படுவது இக் காலத்தில் கரூர் என வழங்கப்படுவது ஆகும்.

            

கருவூர் என்பது இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகின்றது. கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர்ஈரோடுதிருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.

 

இறைவர்: பசுபதீசுவரர்ஆனிலையப்பர்.

இறைவியார்  : கிருபாநாயகிசௌந்தர்யநாயகி

தல மரம்     : கொடி முல்லை

தீர்த்தம்       : ஆம்பிராவதி ஆறு

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிருதிருக்கரங்களுடனும்தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.

 

எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.

 

கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர்எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்.  ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள்அதாவது நவமி முன்னாளில்சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பிஅக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கிபாகர்கள் மேலேயிருப்பகுத்துக்கோல்காரர்கள் முன்னே ஓடவிரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கேசிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கேமூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பாஉன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவதுசிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டுஅவ் வழியே வந்த எறிபத்த நாயனார்சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும்எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்துயானையைக் கிட்டிஅதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்,பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.

 

சோழர் பெருமான்வடவை போல் சீறிஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார்.  நால்வகைச் சேனைகளும்பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான்யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்திகுதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோதுவேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோஅடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சிநாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன்.  நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது.  என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லிதமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை.  வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டுவாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன்கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.

 

"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்றஉங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும்யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துபுகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர்.  திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கிபுகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார்.  சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்துதிருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.

 

பொழில் கருவூர்த் துஞ்சிய

புகழ்ச் சோழ நாயனார்

வரலாறு

 

புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர்.  திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.

 

கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார்.  அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்துஅரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும்குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறிஅரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான்அமைச்சர்களை நோக்கிநமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

 

அந்நாளில்சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார்.  அதனைப் பட்டத்து யானைபற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார்எறிபத்த நாயனார் எதிரே சென்றுநேர்ந்த அபராதத்திற்குபட்டத்து யானையையும்பாகரையும்பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறுதனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார்.  எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோதுஇறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும்மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.

 

அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன்.  அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.  உடனேபுகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும்செல்வங்களையும்பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார்கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானாநல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.

 

இவ்வாறு நாயனார் புலம்பிஅமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும்சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார்.  அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள்.  நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன்திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார்.  திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்.  ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

கருவூர்த் தேவர் வரலாறு

 

திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்றுஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர்.  காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.

 

ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடுகொங்கு நாடுதொண்டை நாடுநடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர்இவர் நெல்லைப் பதியை அடைந்துநெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்கஅப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டுசிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்கஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்டநெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.

 

கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்துதிருக்குற்றாலம் சென்றுஅங்குச் சிலநாள் தங்கியிருந்துபின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்றுபலநாள் அங்கே இருந்தார்.

 

அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது.  அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்,பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்துதம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டுஅட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.

 

கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்றுஅரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள்கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்துகருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்துபசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.

 

கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும்தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில்வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.

 

கருவூர்த் தேவர் திருத்தில்லைதிருக்களந்தை ஆதித்தேச்சரம்திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்திருமுகத்தலைதிரைலோக்கிய சுந்தரம்கங்கைகொண்ட சோளேச்சரம்திருப்பூவணம்திருச்சாட்டியக்குடிதஞ்சை இராசராசேச்சரம்திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும்தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.

 

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...