பொறாமைப் படுவதால் உயர்ந்தவர் இல்லை

 

 

பொறாமைப் படுவதால் உயர்ந்தவர்கள் இல்லை

----- 

 

     திருக்குறளில் "அழுக்காறாமை" என்னும் அதிகாரத்துள்  வரும் பத்தாம் திருக்குறள், "பொறாமைப்படுதலைச் செய்து பெரியவர் ஆனதும் இல்லை; அது இல்லாதவர் பெருக்கத்தில் இருந்து நீங்கினதும் இல்லை" என்கின்றது.

 

     பொறாமை என்பது பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மனம் பொறுத்துக் கொள்ளாமல், மனம் புழுங்குகின்ற நிலை. இது "வயிற்று எரிச்சல்" எனப்படும். வயிற்று எரிச்சல் கொள்வதால், பிறன் ஒருவனிடம் உள்ள செல்வம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை. மாறாக, "அல்சர்" எனப்படும் "வயிற்றுப் புண்" மட்டுமே வந்து சேரும் என்பதை வாழ்வியலாக நம்மில் பலரும் கண்கூடாகக் கண்டும், அனுபவித்தும் இருக்கலாம்.

 

     கேடு வருவதற்குக் காரணம் பொறாமையும், ஆக்கம் வருவதற்குக் காரணம் பொறாமை இன்மையும் காரணம் ஆகும்.

 

     பொறாமை கொண்ட மனத்தை உடையவன் புகழையும் புண்ணியத்தையும் அடைவது இல்லை. பொறாமை இல்லாதவன் புகழையும் புண்ணியத்தையும் அடைவான்.

 

"அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

புத்தன் இறந்தான் பொறாமை செய்து, செய்யார்க்கு

நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ், --- மெத்த

அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

 

இதன் பொருள் ---

 

     புத்தன் --- புத்த நந்தி; பொறாமை செய்து --- ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் சின்னமும் ஊர்தியும் பெற்று வருவதைக் கண்டு மனம் பொறுக்காமல், இறந்தான் --- இறந்து போனான்; செய்யார்க்கு --- பொறாமை செய்யாத சிவனடியார்களுக்கு; செம்மை உடையார்க்கு எனினும் ஆம்; நித்தர் அருள் உண்டாய் --- நித்தியப் பொருளாக உள்ள இறைவன் அருள் உண்டானது; நிறைந்த புகழ் --- புகழும் நிறைந்தது.

 

     எனவே, இந்த நிகழ்வானது, மெத்த --- மிகவும், அழுக்கற்று அகன்றாரும் இல்லை --- பொறாமைப்படுதலைச் செய்து பெரியவர் ஆனதும் இல்லை; அஃது இல்லார் --- அந்தப் பொறாமைக் குணம் இல்லாதவர், பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் --- அது (பொறாமைப்பபடுதல் என்னும் தீய குணம்) இல்லாதவர் (வாழ்வில் செல்வம் முதலான) பெருக்கத்தில் இருந்து நீங்கினதும் இல்லை (என்னும் திருக்குறள் பொருளை உணர்த்தி நிற்கின்றது)

 

         திருஞானசம்பந்தப் பெருமான் திருநள்ளாற்று இறைவரை வணங்கி,  அத்திருத்தலத்தில் சில நாள் தங்கி இருந்து, பின்னர் திருதெளிச்சேரி என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, போதி மங்கையை நெருங்கினார். போதிமங்கை என்பது, புத்தர்கள் நிறைந்த ஊர். சிவனடியவர்களின் ஆரவாரமும், திருச்சின்ன ஓசையும், திருவைந்தெழுத்து முழக்கமும் புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்தநந்தியைத் தலைவனாகக் கொண்டு, சிவனடியவர்களின் திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், "உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் வென்று அல்லவா அவைகளை முழக்கவேண்டும்?" என்று வெகுண்டு விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட சிவனடியார்கள் "இத் தலைவனை மாய்த்தல் வேண்டும். இல்லையேல் இவன் தீங்கு விளைவிப்பான்" என்று கருதி, நிலைமையைத் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார்கள். பிள்ளையார், "இதென்ன நன்றாய் இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாக, தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர்,

 

'புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின,

வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே'

 

என்று திருஞானசம்பந்தபெ பெருமான் அருளிய திருப்பாட்டை ஓதி முடித்தார். முடித்ததும், புத்தநந்தி மீது இடி விழுந்தது. புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "இது விதியால் நேர்ந்தது. அரன் நாமத்தை ஓதுங்கள்" என்றார். அடியார்கள் அப்படியே செய்தார்கள்.

 

         மருண்டு ஓடிய புத்தர்கள், சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள். வந்து, "மந்திர வாதம் வேண்டாம், தருக்க வாதம் செய்யுங்கள், பார்ப்போம்" என்று அடர்த்தார்கள்.   பிள்ளையார் சிவிகையில் இருந்து இறங்கி, ஒரு மண்டபத்தில் எழுந்தருளினார். புத்தர்களை அழைத்து வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளை இட்டார். புத்தர்களை அழைத்து வந்தார்கள். சாரிபுத்தன் பிள்ளையார் அருகே நின்றான். புத்த நந்தியை இருகூறு படுத்திய அன்பர், பிள்ளையார் முன்னிலையில் வாதத்தைத் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடுபட்டான். முடிவில் சாரிபுத்தன் தோல்வி

அடைந்தான். அவன் பிள்ளையாரை வணங்கினான். மற்ற புத்தர்களும் பிள்ளையாரை வணங்கினார்கள். பிள்ளையார் எல்லாருக்கும் திருநீறு அளித்து அருள் செய்தார்.

 

     பொறாமை காரணமா, திருஞானசம்பந்தரை வாதிற்கு அழைத்து, புத்தர்கள் தமது ஆக்கநிலையை இழந்தார்கள்.

        

         பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.

 

     சீதையின் அழகில் மயங்கி,  காமமயக்கம் கொண்டிருந்தான் இராவணன். காம மயக்கத்தில் உள்ளவர்க்கு இரவுக் காலமும், குளிர்ந்த சந்திரன் ஒளியும் துன்பத்தைச் செய்யும். காம நோயினது தன்மையை இதுவரையில் அனுபவித்து இராதவனாகிய இராவணன், சந்திரனைப் பழித்துக் கூறுகின்றான். சீதையின் முகத்தில் மரு ஏதும் இல்லை. ஆனால், சந்திரனில் கருமை உண்டு. "நீ சீதையின் முகத்துக்குத் தோற்றுப் போனாய்" என்கின்றான். சந்திரனின் கலைகள் நாளுக்கு ஒன்றாகத் தேய்வது உண்டு. இந்த உண்மையைத் தனது காம மயக்கதால் அறிவிழிந்த இராவணன் உணராது, "நீ சீதையின் அழகினைக் கண்டு மெலிந்து போனாய். உன்னுடைய குளிர்ச்சி நிலையில் இருந்து மாறுப்படு, இப்போது என்னைச் சுடுகின்றாய். நீயும் ஒருவேளை சீதையின் மீது காதல் கொண்டாயோ?" என்று சந்திரனைப் பார்த்து இராவணன் பழித்துக் கூறினான். தனது பணியாளர்களைப் பார்த்து, "இந்த இரவோடு சந்திரனை நீக்கிவிட்டு, பகல் பொழுதையும் சூரியனையும் வரச் செய்யுங்கள்" என்று கட்டளை இட்டான்.

 

     "நீ மாற்றான் ஆகிய இராமனுக்குச் சொந்தமான சீதையைக் கண்டு மனம் புழுங்குகின்றாய். பிறனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு மனம் அழிந்தால், வெற்றி பெறும் வல்லமை உண்டாகுமோ" என்று சந்திரனைப் பழித்துக் கூறுகின்றான்.

 

     காதல் நோயால் வாடுகின்ற எனது உயிரைக் கொல்லுகின்ற இயமனாக இப்போது சீதை இருக்கின்றாள் என்று சொல்லுகின்றான் இராவணன். இராவணன் சொன்ன சொல்லே அவனுக்குப் பின்னால் வரும் கேட்டினை முன்னால் உணர்த்தி நின்றது.

 

     திருக்குறள் கருத்தை, "மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆக வற்று ஆமோ?" என்னும் வாசகத்தால், பின்வரும் பாடலில், கம்பர் காட்டுகின்றார். சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாடலைக் காண்போம்...

    

 

'ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு

     அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்

கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை

     மலர்ந்த தாமரைக்குத்

தோற்றாய்; அதனால், அகம் கரிந்தாய்;

     மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்,

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால்,

     வெற்றி ஆகவற்று ஆமோ?'

        

இதன் பொருள் ---

 

     என் ஆர் உயிர்க்கு --- என்னுடைய இனிய உயிருக்கு; கூற்றாய் நின்ற --- எமனாய் அமைந்த; குலச் சனகி --- நற்குடிச் செல்வியாகிய சீதையின்; குவளை மலர்ந்த தாமரைக்கு --- கண்களாகிய குவளைப் பூக்கள் பூத்திருக்கும் முகமாகிய தாமரைக்கு; தோற்றாய் --- நீ தோல்வியுற்றாய்; அதனால் அகம் கரிந்தாய் --- அக்காரணத்தால் உள்ளம் கரிந்து போனாய்; மெலிந்தாய் --- உடல் தேய்ந்தாய்; வெதும்பத் தொடங்கினாய் --- மேனி வெப்பமுறவும் தொடங்கினாய்; மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் --- பிறர் செல்வ வளம் கண்டு இப்படி மனம் சிதைவுற்றால்; வெற்றி ஆக வற்று ஆமோ --- வென்று உயர்தல் இயலுவதாகுமோ?; ஆற்றார் ஆகின் --- தம்மால் வெல்ல இயலாதது என உணர்ந்தால்; தம்மைக் கொண்டு அடங்காரோ? --- (அறிவு மிக்கோர்) தம் நிலை உணர்ந்து கொண்டு அடங்கி விட மாட்டார்களோ? (அடங்குதல் தானே பொருத்தம்!)

 

 

 

    

                             

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...