சுடுசொல் சொல்லுதல் அறம் அல்ல

 

 

                       திருக்குறளில் "பயனில சொல்லாமை" என்னும் ஓர் அதிகாரம்.

 

     அறப்பொருள், செல்வப்பொருள், இன்பப்பொருள் ஆகிய மூன்று பொருள்களுள் ஒன்றின் பயனையும், தமக்கும் பிறர்க்கும் உதவாத சொற்களைச் சொல்லாது இருத்தலை இந்த அதிகாரம் குறிக்கும். வாக்கில் உண்டாகும் பாவங்கள் நான்கு என்பர். அவை, பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், கடும்சொல் சொல்லுதல், பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் என்பன. அவற்றுள் முதலில் கூறிய பொய் என்பது, நான் எனது என்னும் பற்று அற்று, மனத் துறவினை அடைந்த துறவிகளுக்கே நிச்சயமாக நீக்கக் கூடுமே அல்லாது, இல்லறத்தோரால் நீக்கமுடியாது. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி உண்டாவதாகிய பொய்யைத் துறவறத்தார்க்கு அல்லாது, இல்லறத்தார்க்கு முற்றும் ஒழித்தல் கூடாது. எனவே, அப் பொய்யினை ஒழிந்த மற்ற மூன்று வாக்கின் குற்றங்களையே இல்லறத்தார் ஒழித்தல் கூடும் என்றும், அம் மூன்றின் உள்ளும், குறளை என்னும் கோள் சொல்லுதலை, "புறங்கூறாமை" என்னும் அதிகாரத்தாலும், கடுஞ்சொல்லை "இனியவை கூறல்" என்னும் அதிகாரத்தாலும் விலக்கி விட்டார் நாயனார். இவை இரண்டும் ஒழிந்து நின்ற "பயனில் சொல் சொல்லாமை" என்னும் வாக்கின் குற்றத்தை இந்த அதிகாரத்தால் விலக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

 

     கடும்சொல், பொய், புறங்கூறல், பயனில சொல் என்னும் இந்நான்கும் வாக்கின் வழி உண்டாகும் அசுப கருமங்கள். வாக்கினால் பெரும்பான்மையும் அசுப கருமத்தைச் செய்தால், பறவை அல்லது மிருகமாய்ப் பிறக்கின்றான்" என்பது மனுதரும சாத்திரத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "பயன் இல்லாத வெற்றுச் சொற்களை, அறிவுடையார் பலரின் முன்னிலையில் ஒருவன் சொல்லுவது, தனது நண்பர்களிடத்தில் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்வதிலும் தீயது" என்கின்றது.

 

     சொல்லல் என்பதால், பயனில என்பது பயன் இலவாகிய சொற்கள் என்பதும், செய்தல் என்பதால், நயனில என்பது, விருப்பம் இல்லாத செயல்கள் என்பதும் பெறப்பட்டது.

 

"பயன்இல பல்லார்முன் சொல்லல், நயன்இல

நட்டார்கண் செய்தலின் தீது".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்

சொல்லார் ஒருவரையும் உள்ஊன்றப் - பல்லா

நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்

உரைத்தால் உரைபெறுதல் உண்டு.   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பல் ஆநிரை புறங்காத்த நெடியோனே ஆயினும் --- பலவாகிய பசுக்கூட்டங்களைக் காத்த நீண்ட வடிவெடுத்த திருமாலே ஆயினும், உரைத்தால் --- அவையில் ஒருவனை இகழ்ந்து உரைத்தால், உரை பெறுதல் உண்டு --- (தாமும் அவனால்) இகழ்ச்சி உரையை அடைதல் உண்டு. (ஆகையால்), பல்லார் அவை நடுவண் --- நல்லோர் பலரும் கூடியிருக்கும் அவையின் இடையே, பால்பட்ட சான்றவர் --- நன்னெறிப்பட்டு ஒழுகும் சான்றோர், ஒருவரையும் உள் ஊன்ற சொல்லார் ---எவரையும் மனம் உளையும்படி இகழ்ந்து கூறார்.

 

     இனிய சொல் சொன்னால் இனிய சொல் கிடைக்கும். கடுஞ்சொல் சொன்னால் அதுவே திரும்பக் கிடைக்கும்.

 

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம், நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் பன்பார்ப்பு,

நாவிற்கு நன்றல் வசை.        --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

     சிலம்பிக்கு தன் சினை கூற்றம் --- சிலந்திப் பூச்சிக்கு தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும்; விலங்கிற்கு நீள்கோடு கூற்றம் --- எருது முதலிய மிருகங்களுக்கு, அவற்றின் நீண்ட கொம்புகளே எமனாகும்; வலம் படா மாவிற்கு மயிர்தான் கூற்றம் --- வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும்; ஞெண்டிற்கு தன் பார்ப்பு (கூற்றம்) --- நண்டுக்கு, தன் குஞ்சுகளே எமனாகும்; நாவிற்கு நன்று அல் வசை (கூற்றம்) --- ஒருவனுடைய நாவுக்கு நன்மையல்லாத பழிமொழிகள் எமனாகும்.

 

         சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையே சாக்காட்டைக் கொடுக்கும்.  நீண்ட தமது கொம்புகள் துன்பங் கொடுக்கும். ஆதலால் விலங்கிற்கும் அவையே கூற்றம். வெற்றி இல்லாத கவரிமாவிற்கு, தன் மயிரே கூற்றம். நண்டிற்கு அதன் குஞ்சே கூற்றம்.  ஒருவனது நாவிற்குப் பழியைக் கொடுக்குமாதலால் பிறரை நன்று அல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம்.

 

     பயனில்லாத சொற்களைப் பலரும் மனம் நோகும்படி, அரசவையில் பேசிய துரியோதனனைப் பார்த்து, நீ செய்தவை எல்லாம் அறத்திற்கு மாறான செயல்களே. என்றாலும், சொல்லத் தகாத சொற்களை நீ சொல்லாமல் இருந்தாலே கற்பகாலம் உயிரோடு வாழ்வாய் என்று, விதுரர் அறிவுறுத்துகின்றார்.

 

அறந்தரு மைந்தன் தன்னை

     அறன்அலாது இயற்றி, நம்பி

திறந்தரு செல்வம் யாவும்

     தீமையில் கவர்தல் உற்றாய்,

மறந்தரு வலியும் அன்று,

     மணந்தரு வாழ்வும் அன்று 

திறந்தரு புகழும் அன்று

     நெறிதரு மதியும் அன்றே.  ---  வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

 

இதன் பதவுரை ---

 

     (விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);- 'நம்பி --- சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை --- அறக்கடவுள் பெற்ற புதல்வனாகிய தருமபுத்திரனை, அறன் அலாது இயற்றி --- தரும விரோதமாகிய சூதாடுதலைப் புரியும்படி செய்து, திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் --- (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீயவழியால் கவரத் தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது), மறம் தரு வலியும் அன்று --- வீரத்தைத் தருகிற சாமர்த்தியமும் அல்ல; [இது சுத்த வீரர்க்குச் சிறிதுந்தகாது]; மணம் தரு வாழ்வும் அன்று ---மங்களகரமான வாழ்க்கையும் அல்ல; திறம் தரு புகழும் அன்று --- பெருமையைத் தருகிற புகழும் அல்ல; நெறி தரு மதியும் அன்று --- தரும சாத்திரங்களில் கூறிய புத்தியும் அல்ல.

 

     'நீ மாயச் சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்; இது வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய், உனது நாசத்திற்கே காரணமாயுள்ளது' என்று கூறி விதுரன் துரியோதனனுக்கு அவனதுசெயல் தகாததென எடுத்துக் காட்டினன்.

 

திருத்தக மொழிந்த எல்லாம்

     செய்தனை எனினும், செவ்வி

மருத்தகு தெரியல் மாலை

     மாசிலாமன்னர் முன்னர்

உருத்தகு கற்பினாளை உரை

     அலாது உரைக்கும் மாற்றம்

கருத்தினில் நினையல் கண்டாய்,

     கடவுளர் கற்பம் வாழ்வாய்.       ---  வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

 

இதன் பதவுரை ---

 

     (விதுரன் மேலும் துரியோதனனுக்கு அறிவுறுத்தியது) திரு தக --- (உனக்குச்) சிறப்பு உண்டாகும்படி, மொழிந்த எல்லாம் --- (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை எல்லாம், செய்தனை எனினும் --- செய்து முடித்தாயானாலும், செவ்வி மரு தகு தெரியல் மாலை --- அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையை அணிந்த, மாசு இலா மன்னர் --- குற்றமற்ற அரசர்கட்கு எதிரில், உருத் தகு கற்பினாளை --- அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையும் உடையவளான பாஞ்சாலியைக் குறித்து, உரை அலாது உரைக்கும் மாற்றம் --- சொல்லத்தகாத சொற்களைச் சொல்லுதலை மாத்திரம், கருத்தினில் நினையல் --- மனத்தில் எண்ணாது இருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்), கடவுளர் கற்பம் வாழ்வாய் --- தேவர்களது ஆயுள் அளவும் அழியாது [நீடுழி காலம்] நீ வாழ்ந்திருப்பாய்.

 

    தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும், மகா பதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை மாத்திரம் தவிர்ந்திடு. இதனால், உனக்கு மிக்க நன்மை உண்டாகும் என்று விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறினன்.

 

     உருத் தகு கற்பினாள் --- (கண்டவர்) அஞ்சத்தக்க [மிக்க] கற்பை உடையவளான பாஞ்சாலி. கற்பாவது - கணவனைத் தெய்வமாக மதித்து அவனை வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாயிருக்கும் போது தாய் தந்தை முதலியோராலும் திருமணம் ஆன பின்னர்க் கணவன் முதலியோராலும் கற்பிக்கப்படுவதாதலின், இது கற்பு ஆயிற்று.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...