பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்


குடருமல சலமுமிடை (பொது)


தனனதன தனனதன தனனதன தனனதன

     தனனதன தனனதன ...... தனதான


குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு

     கொழுவுமுதி ரமும்வெளிறு ...... அளறுமாகக்


கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி

     குமுகுமென இடைவழியில் ...... வரநாறும்


உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக

     வுலகமரு ளுறவரும் ...... அரிவையாரன்


பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன

     தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே


வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய

     வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை


வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென

     மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக்


கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில

     ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக்


கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.


                              பதம் பிரித்தல்



குடரும், மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு

     கொழுவும் உதிரமும் வெளிறு ...... அளறுமாக,


கொளகொள என அளவு இல் புழு நெளுநெளு என, விளைகுருதி

     குமுகுகு என, இடைவழியில் ...... வரநாறும்


உடலில், மணம் மலிபுழுகு தடவி, அணி கலம் இலக

     உலகம் மருள் உற வரும் ...... அரிவையார்அன்பு


ஒழிய, வினை ஒழிய, மனம்ஒழிய, இருள் ஒழிய, எனது

     ஒழிவு இல் அகல் அறிவை அருள் ...... புரிவாயே.


வடகனக சயிலம் முதலிய சயிலம் என, நெடிய

     வடிவுகொளும் நெடியவிறல் ...... மருவாரை


வகிரும் ஒரு திகிரி என, மதி முதிய பணிலம் என,

     மகரசல நிதிமுழுகி ...... விளையாடி,


கடல் உலகை அளவு செய வளரும் முகில் என, அகில

     ககனமுகடு உறநிமிரும் ...... முழுநீலக்


கலப கக மயில் கடவி, நிருதர் கஜ ரத துரக

     கடகம் உடன் அமர் பொருத ...... பெருமாளே.


பதவுரை


வடகனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொ(ள்)ளு நெடிய விறல் மருவாரை --- வடக்கே உள்ள பொன்மலை ஆகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை 


வகிரும் ஒரு திகிரி என --- பிளந்து எறியும் திருமாலின் ஒப்பற்ற சக்கரப்படை என்றும்,


மதி முதிய பணிலம் என --- முழுநிலவைப் போன்ற ஒளியை உடைய (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கு என்றும்,


மகர சலநிதி முழுகி விளையாடி கடல் உலகை அளவுசெய வளரும்முகில் என --- மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட நீண்ட திரிவிக்கிரமனாக வளர்ந்த மேகநிறத் திருமால் என்றும் சொல்லும்படியாக,


அகில ககனமுகடு உற நிமிரும் முழுநீலக் கலப ககம் மயில் கடவி --- இந்த உலகமும் வானமுகடும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுகின்ற முழுநீல நிறமுள்ள தோகையினை உடைய பறவையாகிய மயிலை விரைந்து செலுத்தி,


நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக ... குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், குருதியும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, 


கொள கொள என அளவுஇல் புழு நெளு நெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் உடலின் --- கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளுநெளு என்று நெளிய, உண்டாகும் இரத்தம் குமுகுமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர்நாற்றம் வீசும் உடலில், 


மணம்மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் --- நறுமணம் மிக்க புனுகு சட்டம் முதலான மணப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க, உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் (மீது வைத்த)


அன்பு ஒழிய, வினை ஒழிய, மனம் ஒழிய, இருள் ஒழிய, எனது ஒழிவில், அகல் அறிவை அருள் புரிவாயே --- மோகம் நீங்க,  அந்த மோகத்திற்கு ஏதுவாகிய தீவினை அடியேனை விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. 











உலகநீதி - 2

"நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

    நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

    நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

    அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை --


நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே.


நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை, நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே.


நஞ்சுடனே - விடத்தை உடைய பாம்புடனே, ஒருநாளும் - ஒரு பொழுதும், பழக வேண்டாம் - சேர்ந்து பழகாதே.


நல்இணக்கம் - நல்லவர்களுடைய நட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம் - நட்புக்கொள்ளாதே.


அஞ்சாமல்- பயப்படாமல், தனி - தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே.


அடுத்தவரை - தன்னிடத்து வந்து அடைந்தவரை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே.


மஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய் - நீ வாழ்த்துவாயாக.


பொழிப்புரை---


மனமறியப் பொய் கூறுதல் கூடாது. "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார் திருவள்ளுவ நாயனார்.  உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. (நிலையின்மை - பொய்த்தன்மை.) பாம்பைப் போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அது இங்கு கொடியாரை உணர்த்திற்று. நல்லோர் இனத்தைப் பெறாது தீயவருடன் நட்பு உடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது. "நல்லிணக்கம் இல்லார்" என்றமையால்; தீயவரின் இணக்கம் உடையவர் என்று கொள்க. நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். "இணக்கம் அறிந்து இணங்கு" என்கிறது ஆத்திசூடி. துணை இல்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம். தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல் காத்தல் வேண்டும். "அடுத்தவர்" - வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். "கெடுக்க வேண்டாம்" என்றமையால் காத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.


"மைந்து" என்பது மஞ்சு எனப் போலியாக வந்தது. மைந்து - வலிமை.


உலகநீதி.1

 


"ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்

    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---


ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்கவேண்டாம் - (நீ) வாளா இராதே.


ஒருவரையும் - யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு - தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.


மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.


வஞ்சனைகள் - வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே.


போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே.


போகவிட்டு - (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி - புறங்கூறி, திரியவேண்டாம் - அலையாதே.


வாகு - தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை --


 எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும்.


எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு "ஒருவரையும்" என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று.


பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும்.


வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம்.


செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது.


ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல்.


குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக.


வாகு - தோள், தோள்வலி. மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவர் எல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார்.


பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...