அக ஒழுக்கத்தைப் பேணிக் காக்கவேண்டும்.

 

ஒழுக்கத்தைப் பேணிக் காக்கவேண்டும்.

-----

 

     "கோடிய மனத்தால், வாக்கினால், செயலால், கொடிய ஐம்புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ளா" என்பார் பட்டினத்து அடிகளார். மனம் கோடுவதால், அதனடிப்படையாக நல்ல வாக்கு உண்டாகாது. இவ்விரண்டின் விளைவாக தீச் செயல்கள் விளையும். மனம் வாக்கு செயல் என்னும் மூன்றின் வழியே பாவங்கள் நிகழும். எனவே, மன அடக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றும் நாவடக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டும் என்று அருளிய நாயனார், "சொல்லப்படுகின்ற அறங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால்உயிருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக வருவது ஒழுக்கமே. ஆதலால்ஒழுக்கத்தை எவ்விதத்திலும் குறைவு படாமல் வருந்திப் பாதுகாக்கவேண்டும்என்று "ஒழுக்கமுடைமை" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து,

 

பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம்,தெரிந்து ஓம்பித்

தேரினும் அஃதே துணை.

 

என்று அருளினார்.

 

     மனம் வாக்கு காயங்களால் செய்யவேண்டியவற்றைச் செய்வதும்தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து ஒழுகுவதும்ஒழுக்கம் எனப்படும். அதுவே அறம் ஆகும். அல்லாத எல்லாம் பாவம் ஆகும்.

 

     இதனை விரித்துவாகீச முனிவர் இயற்றிய "ஞானாமிர்தம்"என்னும் நூல் கூறுமாறு காண்க.

 

"பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும்

உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின்,

இருள்தீர் காட்சிஅருளொடு புணர்தல்,

அரும்பொறை தாங்கல்பிறன்பொருள் விழையாமை,

 

செய்தநன்று அறிதல்கைதவம் கடிதல்,

பால்கோடாது பகலில் தோன்றல்,

மான மதாணி ஆணின் தாங்கல்,

அழுக்காறு இன்மை,அவாவின் தீர்தல்,

அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை

 

அழல்தோய்வு அன்னர் ஆகிஆனாக்

கழலும் நெஞ்சின் கையற்று இனைதல்,

பன்னரும் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு

அறிவும் பொறியும் கழிபெரும் கவினும்,

பெறற்கரும் துறக்கம் தம்மின் ஊஉங்கு

 

இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம்;

வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள

அறம்பெரிது கரைதல்,புறங் கூறாமை,

வாய்மைகல்விதீமையின் திறம்பல்,

இன்மொழி இசைத்தல்வன்மொழி மறத்தல்,

 

அறிவுநூல் விரித்தல்அருமறை ஓதுதல்,

அடங்கிய மொழிதல்,கடுஞ்சொல் ஒழிதல்,

பயன்நின்ற படித்தல்படிற்று உரை விடுதல்,

காயத்து இயைந்த வீயா வினையுள்

அருந்தவம் தொடங்கல்திருந்திய தானம்,

 

கொடைமடம் படுதல்,படைமடம் படாமை,

அமரர்ப் பேணல்,ஆகுதி அருத்தல்,

ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை,

உடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார்

அடைந்த காலை அவண்இயல் துயரம்

 

தேரார் அல்லர் தெரிந்தும் ஆருயிர்

பெரும் பிறிதாக இரும்பிணம் மிசைஞரின்

ஓராங்குப் படாஅ மாசில் காட்சி,

ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்,

இந்தியப் பெரும்படை இரிய நூறும்

 

வன்தறு கண்மை,வாள்இட்டா அங்கு

நோவன செய்யினும் மேவன இழைத்தல்,

தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து,

பாத்தூண் செல்வம்,பூக்கமழ் இரும்பொழில்,

தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை

 

அன்னையின் தீரா நன்னர் ஆண்மை,

கார்கோள் அன்ன கயம்பல கிளைத்தல்,

கூவல் தொட்டல்,ஆதுலர் சாலை,

அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி,

கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்,

 

இனையவை முதல நினைவரும் திறத்த

புரத்தல் அரத்துறைமறத்துமறை இவற்றின்

வழிப்படாது எதிர்வன கெழீஇ

உஞற்றல் என்ப உணர்ந்திசி னோரே".

 

இதற்குப் பதவுரை ---

 

     பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும் --- நிலையற்ற இந்தப் பரு உடம்பில் கூட்டப்பட்டுள்ள மனம்வாக்குகாயம் என்ற மூன்றாலும் (ஈட்டப்படும் கன்மங்களுள்),உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின்--- மனத்தால் செய்யப்பட வேண்டுவன ஆகிய கன்மங்களை தெளியும்படிச் சொல்வதாயின்,இருள்தீர் காட்சி--- ஐயம்திரிபு ஆகிய குற்றங்களின் நீங்கிய மெய்யுணர்வு, அருளொடு புணர்தல்--- எக்காலமும் அருள் உணர்வோடு கூடி இருத்தல்அரும்பொறை தாங்கல்--- பொறுக்க முடியாத சினம் உண்டாகிய போதும்பொறுக்க முடியாத துன்பம் உண்டாகிய போதும்அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல்பிறன்பொருள் விழையாமை--- தனது சுகத்திற்காகப் பிறரிடம் உள்ள பொருளைக் கவர விரும்பாமைசெய்த நன்று அறிதல்--- பிறர் தனக்குச் செய்த உதவியைநன்மையை மறவாது இருத்தல்,

கைதவம் கடிதல்--- மனத்தில் வஞ்சக எண்ணத்தை ஒழித்தல். பால்கோடாது பகலில் தோன்றல் --- விருப்பு வெறுப்பு இல்லாமல் எங்கும் ஒரு தன்மைத்தாக விளங்கும் சூரியன் போலநண்பர் பகைவர் முதலிய எவரிடத்தும் ஒரு பக்கம் சாயாமல்நடுவி நிலையோடு இருத்தல்மான மதாணி ஆணின் தாங்கல்--- மானம் என்னும் அணிகலனைப் பெருமையோடு (ஆண்மையோடு) தரித்தல். அழுக்காறு இன்மை--- பிறரிடத்தில் உள்ள செல்வம் முதலிய சிறப்புக்களைக் கண்டு பொறாமைப் படாது இருத்தல். அவாவின் தீர்தல்--- பிறப்பிற்கு ஏதுவாகிய ஆசையில் இருந்து விடுபடுதல். அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை --- பிற உயிர்களுக்குப் பெரும் துன்பம் உண்டான காலத்தில்அழல்தோய்வு அன்னர் ஆகி--- நெருப்பில் இட்டது போன்ற துயரத்தைத் தாமும் அடைந்துஆனா --- அளவுக்கு அடங்காமல்,  கழலும் நெஞ்சின் கையற்று இனைதல்--- நெகிழ்ந்து உருகும் உள்ளத்தினராய்துன்ப மிகுதியால் செயலற்று வருந்துதல்பன்ன அரும் சிறப்பின் மன்ன உயிர்த் தொகைகட்கு --- சொல்லுதற்கு அரிய சிறப்பினை உடைய நிலைபெற்ற உயிர்த் தொகுதிகளுக்குஅறிவும் பொறியும் --- ஞானமும்செல்வமும்கழிபெரும் கவினும்--- மிகப் பெரிய வடிவழகும்பெறற்கு அரும் துறக்கம் --- பெறுதற்கு அரிய சுவர்க்க இன்பம்தம்மின் ஊஉங்கு --- தம்மைக் காட்டிலும்இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம்--- மிகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்ற அரிய பெரிய குணம் (ஆகிய இவைகளே ஆகும்)

 

     இவ்வாறு, மனத்தால் தோன்றும் நல்ல நினைவுகளைச் சொல்லி,அல்லாத வழித் தோன்றும் தீய நினைவுகளையும் குறிப்பால் பெறவைத்த வாகீச முனிவர்இனிஅந்த நினைவுகளின் வழிசொல்லால் செய்யப்படும் வினைகளை இனிக் கூறுகின்றார்.

 

     வாக்கொடு சிவணிய நோக்கின் --- வாக்கினால் பொருந்திய வினைகளைக் கூறுங்கால்மீக்கொள அறம்பெரிது கரைதல்--- மேன்மையான அறங்களை எடுத்துக் கூறுதல்புறங் கூறாமை--- ஒருவரைக் காணாத இடத்து,அவரைப் பற்றிப் பிறரிடம் இகழ்ந்து கூறாது இருத்தல். வாய்மை--- உண்மையே பேசுதல்கல்வி--- உயர்ந்த அறிவு நூல்களைக் கற்றல்தீமையின் திறம்பல்--- தீய சொற்களில் இருந்து நீங்குதல்,இன்மொழி இசைத்தல்--- இனிய சொற்களைக் கூறுதல்வன்மொழி மறத்தல்--- வன்மை தரும் சொற்களை அடியோடு மறந்து விடுதல்அறிவுநூல் விரித்தல்--- அறிவு நூல்களை ஓதுதல்,அருமறை ஓதுதல்--- அரிய வேத ஆகமங்களை ஓதுதல்அடங்கிய மொழிதல்--- பணிவான செற்களைச் சொல்லுதல்,கடுஞ்சொல் ஒழிதல்--- கடுமையான சொற்களைச் சொல்லாது இருத்தல்பயன்நின்ற படித்தல்--- பிறர்க்குப் பயன்படும் சொற்களைச் சொல்லுதல்படிற்று உரை விடுதல்--- பயன் இல்லாத ஒஎற்றுச் சொற்களைப் பேசாது விடுத்தல்,

 

     (இனிகாயத்தால் செய்யப்படும் வினைகள் விரித்துக் கூறப்படுகின்றன)

 

     காயத்து இயைந்த வீயா வினையுள் --- உடம்பினால் செய்யட்டும் கெடாத வினைகளைச் சொல்லப் புகுங்கால்அருந்தவம் தொடங்கல்--- மனமானது ஐம்புலன்களின் வழிப் படர்வதை விடுத்துவிரதங்களான உண்டி சுருக்குதல் முதலியவற்றை மேற்கொண்டு,அரிய தவத்தைச் செய்தல்திருந்திய தானம்--- அறநெறியில் வந்த பொருள்களைத் தக்கார்க்கு மகிழ்ந்து கொடுத்தல்கொடைமடம் படுதல்--- இன்னார்இனியார் என்று பாராது,தன்னிடம் உள்ளதை,வரையாது கொடுத்தல்,படைமடம் படாமை--- போரில் வீரர் அல்லாதார் மேலும்புறமுதுகு இட்டார் மேலும்புண்பட்டார் மேலும்,மூத்தோர் இறையோர் மேலும் செல்லாமைஅமரர்ப் பேணல்--- தேவர்களைப் போற்றி வழிபடுதல்ஆகுதி அருத்தல்--- வேள்விகளைச் செய்துஆகுதிகளைத் தேவர்க்கு உண்ணக் கொடுத்தல், ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை--- தனது நிலைக்கு ஏற்ற ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் சிறப்புஉடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார்அடைந்த காலை --- வாளை ஏந்திக் கொண்டுதனது உடலை வெட்டுவதற்குப் பலர் கூடி வந்த போது,அவண் இயல் துயரம் தேரார் அல்லர் --- அவ்விடத்து தனது உடலும் உள்ளமும் என்ன துயரத்தை அடையும் என்பதைத், தெரிந்தும் --- தெரிந்து இருந்தும்,ஆருயிர் பெரும் பிறிதாக --- அருமையான உயிரை (புலால் உணவிற்காக) உதன் உடலில் உர்நுத பிரியச் செய்து,இரும்பிணம் மிசைஞரின் --- பிணம் ஆகிய அந்த உடலைத் தின்பவருடன்ஓராங்குப் படாஅ --- நட்புக் கொண்டு கூடாதுமாசில் காட்சி--- குற்றம் அற்ற அறிவு உடைமை,ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்--- கொலைகளவுகள் உண்டல்குரு நிந்தைபொய் என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பாதகமாகிய ஆழ்கடலில் வீழாமல் தப்புதல்இந்தியப் பெரும்படை இரிய நூறும் வன் தறுகண்மை--- இந்திரியங்கள் ஆகிய வெல்லுதற்கு அரிய பெரிய படையானது பின்னிட்டு ஓடுமாறுஅதனை வென்று இழக்கும் வலிய பேராண்மை,வாள்இட்டா அங்கு நோவன செய்யினும் மேவன இழைத்தல்--- வாளால் அறுப்பது போன்ற பெரும் துன்பத்தை ஒருவர் தனக்குச் செய்தாலும்அவரே பின் ஒரு காலத்தில் வந்து,ஒரு செயலை முடித்துக் கொடுக்கும்படி வேண்டி நிற்கும் நிலை வந்தால்பழையதை நினைத்துப் பாராதுஅவர் வேண்டியதைவேண்டியவாறே செய்து கொடுத்தல்தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து--- தன்னிடம் உள்ளது மிகச் சிறியது ஆயினும்மிகப் பலராகிய விருந்தினரோடு,பாத்தூண் செல்வம்--- பகிர்ந்து உண்டு மகிழும் சிறப்புபூக்கமழ் இரும்பொழில்--- பூக்களின் மணம் கமழும் பெரிய சோலைகளை அமைத்தல்தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை --- தன்னுடைய மனையாளைத் தவிர,பிற மாதரை,அன்னையின் தீரா நன்னர் ஆண்மை--- தனது தாயைப் பொன்று நினைத்துப் பார்ப்பதில் நீங்காத நல்ல பெரிய ஆண்மைகார்கோள் அன்ன கயம் பல கிளைத்தல்--- கடலைப் போன்ற பெரிய ஏரி,குளம் பலவற்றை அமைத்தல்கூவல் தொட்டல்--- கிணறு அமைத்தல்ஆதுலர் சாலை---  மருத்துவச் சாலையை உண்டாக்குதல்அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி--- நல்லறங்களை எடுத்துச் சொல்லும்நாவினை உடைய ஆன்றோர்கள் வாழ்தற்கு உரிய தவப்பள்ளிகளை அமைத்தல்கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்--- கடவுளர்கள் எழுந்தருளி உள்ள உயர்ந்த ஆலயங்களை எடுத்தல்இனையவை முதல --- இத் தன்மைகளை உடையவை முதலாக,  நினைவரும் திறத்த புரத்தல் --- நினைத்தற்கு அரிய புண்ணியச் செயல்களைச் செய்தல்,

 

     அறத்துறை --- அறத்துறை ஆகிய வினைகளை ஆவன. மறத்துமறை --- பாவங்களை மறைவாகச் செய்யும் மறத்துறை என்பதுஇவற்றின் வழிப்படாது --- இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்யாதுஎதிர்வன கெழீஇ உஞற்றல் என்ப --- இவற்றிற்கு மாறுபாடானவற்றைபொருந்தச் செய்தல் என்று சொல்லுவர்உணர்ந்திசினோரே --- இந்த உண்மையை உணர்ந்த பெரியோர்.

 

     வெள்ளம் வரும் முன்ஆற்றில் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் வந்த பிறகு என்ன செய்யக்கூடும்?அது போஉயிரைக் கவரந்து செல்கின்ற கொடிய கூற்றுவன் ஒருவனைக் கொல்வதற்கு நெருங்கும் முன்னமே மனம் கனிந்து அறங்களைச் செய்து ஈடேற்றம் பெறவேண்டும் என்கின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்

உள்ளம் கனிந்து அறம்செய்து உய்கவே - வெள்ளம்

வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்

பெருகுதற்கண் என்செய்வார் பேசு.                --- நன்னெறி.

 

     (கொள்ளும் - உயிரைக் கொள்ளும். குறுகுதல் - அடைதல். பெருகுதற்கண் - வெள்ளம் வந்த பொழுது.

 

     கந்தபுராணத்தில் ஒரு காட்சியை, கச்சியப்ப சிவாச்சாரியார் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, அரியதோர் உண்மையை உரைக்கின்றார்.

      சூரபதுமன் முதலானோருக்கு அவர்களின் தந்தை காசிப முனிவர் பாடம் சொல்லித் தருகிறார். தருமம் என்று ஒரு பொருள் உள்ளது என்று என்கிறார். நாட்டில் நடக்கும் அறம் அல்லாத செயல்களைக் காணும்போதும், கேட்கும்போதும், அறம் (தருமம்) என்று ஒன்று உள்ளதா என்றே நமக்கு ஐயம் உண்டாகும்.காரணம் அறம் அல்லாத வழியில் நடப்பவர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்கிறோம். அறவழியில் ஒழுகுபவர்கள் அல்லல் படுவதையும் காண்கின்றோம். கேட்கவும் செய்கின்றோம்.

      கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்லுகின்றார் பாருங்கள்.

தருமம்என்றுஒருபொருள்உளது,தாவிலா

இருமையின்இன்பமும்எளிதின்ஆக்குமால்,

அருமையில்வரும்பொருள்ஆகும்,அன்னதும்

ஒருமையினோர்க்குஅல்லால்உணர்தற்குஒண்ணுமோ?

                                     --- கந்தபுராணம்காசிபன்உபதேசப்படலம்.


      
தருமம் என்ற ஒரு ஒப்பற்ற பொருள் உள்ளது. ஒப்பற்ற (ஐயம் கொள்ள வேண்டாம்) அது ஒரு போதும் தாழ்வு இல்லாமல்,இந்தப் பிறவிமறுபிறவி என்ற இரண்டுக்கும்இன்பத்தையும் எளிதாகத் தரும்.அரியவற்றை எல்லாம் எளிதில் கிடைக்கச் செய்யும்அப்பேர்க்கொத்த தருமம் என்பதைமன வேறுபாடுகள் அற்றுஒருமை உணர்வோடு காண்பவர்களால் மட்டுமே உணரமுடியும். (மற்றவர்களால் அதன் அருமையை உணர முடியாது)

     பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது.

"யதாயதாஹிதர்மஸ்யக்லானிர்-பவதிபாரத

அப்யுத்தானம்அதர்மஸ்யததாத்மானம்ஸ்ருஜாம்யஹம்"

 

     "அருச்சுனா உலகில் தருமம் குறைந்துஅதருமம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்" என்றான் கண்ணன். மேலும்,

 

"பரித்ராணாயஸாதூனாம்விநாசாயதுஷ்க்ருதாம்

தர்ம-ஸம்ஸ்தாபனார்தாயசம்பவாமியுகேயுகே!"

 

     "நல்லவர்களைக் காப்பதற்கும்தீயவர்களைஅழிப்பதற்கும்தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் நான் யுகங்கள்தோறும் அவதரிக்கிறேன்" என்றும் கண்ணன் சொன்னான்.

 

     "கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்பைங்கூழ் களை கட்டதனோடு நேர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதற்கு ஏற்பபயிர்களுக்கு இடையே வளர்ந்துள்ள களைகளைக் களைந்து எறிதலும்வளரும் செம்மையான பயிருக்கு உரம் இட்டு நீர் பாய்ச்சிக் காத்தலும் சிறந்த வேளாண்மை ஆகும். உலகில் தீயவர் கூட்டம் பெருகிவிட்டால்அவர்களுக்கு இடையில் அறம் தலை எடுக்காது. எனவேபோர்கொள்ளைநோய்,பஞ்சம் ஆகியவற்றின் வாயிலாக அவர்களுக்குத் துன்பத்தைத் திருவருள் உண்டாக்குகின்றது. அக்காலத்திலும் திருவருளை உணராதவர்கள்தமது மனம் போன வழியே நடந்து அழிவர். ஆனால்நல்லவர்களைக் காக்கத் திருவருள்துன்பத்திலும் துணை புரியும். திருவீழிமிழலையில் பஞ்சம் வந்தபோதுதிருஞானசம்பந்தர்திருநாவுக்கரசு நாயனார் வாயிலாக மக்களுக்கு உதவியது இதற்குச் சான்று. நல்லோரைக் காப்பதற்கு இறைவன் திரு அவதாரம் கொள்ளுவது இப்படியும் நடக்கும். 

 

     தன்னை இராமதூதன் என்று சொல்ல வந்த அனுமன்முதலில் இராமபிரானது பெருமையைஇராவணன் முன்பு இவ்வாறு கூறுவதாகக் கம்பநாட்டாழ்வார் காட்டுகின்றார்.

 

"அறம்தலை நிறுத்திவேதம்

    அருள் சுரந்து அறைந்த நீதித்

திறம் தெரிந்து உலகம் பூணச்

    செந்நெறி செலுத்தி,தீயோர்

இறந்து உக நூறி,தக்கோர்

    இடர் துடைத்து ஏகஈண்டுப்

பிறந்தனன்தன் பொன் பாதம்

    ஏத்துவார் பிறப்பு அறுப்பான்".

 

இதன் பொருள் ---

 

     தன் பொன்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் --- தனது பொன்னார்திருவடிகளைத் துதிப்பவர்களான அடியார்களது பிறவி நோயைப் போக்கி அருளுபவனான பரம்பொருள்அறம் தலை நிறுத்தி --- அறத்தைநிலை நிற்கச் செய்துவேதம் அருள் சுரந்து அறைந்த நீதி திறம் --- வேதங்கள் அருளோடு சொல்லிய நீதியின் வழிகளைஉலகம் தெரிந்து பூண ---உலகத்தார் அறிந்து மேற்கொண்டு ஒழுகும்படிசெந்நெறி செலுத்தி --- அவர்களைச் செம்மையான வழியிலே செலுத்திதீயோர் இறந்து உக நூறி --- கொடியவர்கள் இறந்துஒழியும் படி அழித்துதக்கோர் இடர் துடைத்து --- நன்மக்களுக்கு உண்டான துன்பங்களைப் போக்கிஏக --- பிறகு தன்னுடைய திருவடிக்குச் சென்று சேர்வதாகச் சங்கற்பித்துக் கொண்டுஈண்டு பிறந்தனன் ---இந்தப் பூமியில் (அயோத்தியில் இராமபிரானாகத்) திருவவதாரம் செய்துள்ளான்.

 

     உலகத்தில் அறத்தை நிலை நிறுத்துதல்வேதம் கூறும் நீதிகளை உலகமக்கள் பின்பற்றி நடக்குமாறு அவர்களை நல்வழிப்படுத்துதல்,  அல்லோர்களைஅழித்தல்நல்லோர்களைக் காத்தல் ஆகியவை அவதாரத்தின் பயன்களாகக் கூறப்பட்டன. 

 

            எனவேஒழுக்கம் என்றுமே ஒருவற்கு உயர்வைத் தரும் என்பதால்உழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் என்றார் திருவள்ளுவ நாயனார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...