24. எட்டி பழுத்து என்ன!

 

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள்உப காரம் ஆகும்;

சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்

மட்டுலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என்உண் டாமே?"


இதன் பொருள் ---

மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே -  திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 

வனங்கள் தோறும் எட்டிமரம் பழுத்தாலும் என் உண்டாம் - காடுகள் எங்கும் எட்டிமரம் பழுப்பதனாலும் என்ன பயன் உண்டாகும்? 

        ஈயாதார் வாழ்ந்தாலும் என் உண்டாம் - (நாடுகள் எங்கும்) கொடைப் பண்பு இல்லாத உலோபிகள் வாழ்வதனாலும் என்ன பயன் உண்டாகும்? 

கட்டு மாங்கனி  வாழைக் கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் - (பழுப்பதற்காகக்) கட்டி வைக்கும் மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின்  பழங்கள் (மற்றவர்க்குப்) பயன்படும்; 

அவ்வணம் சிட்டரும் தேடும் பொருளையெல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - (அதுபோலவே) நல்லோரும் தாம் (பாடுபட்டுத்) தேடும் பொருள் முழுதையும் (புதைத்து வைத்துக் கேடு கெட்டுப் போகாமல்) இல்லை என்று வந்து இரப்போர்க்கே அளித்துச்  சிறப்புடன் வாழ்வார்கள்.

விளக்கம் ---

      ‘எட்டி பழுத்தால் என்? ஈயாதார் வாழ்ந்தால் என்?' என்பன பழமொழிகள். உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற்கொள்கிற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைப்பதில்லை.  ஒருவன் சிறந்த செல்வனாக இருக்க, மற்றொருவன் கையில் உள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்பு, பொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால், எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. பொருள் குவிவதும், அழிவதும் அவரவருடைய முன்னைவினைப் பயனால் நிகழ்கின்றது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த முன்னை வினைப்பயனை நமக்கு ஊட்டுவது இறைவன். எனவே, ஒருவன் பெற்ற செல்வம் இறையருளால் வந்தது. 

"பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை, பிறந்து மண் மேல் 

இறக்கும் போது கொண்டு போவது இல்லை, இடை நடுவில் 

குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது 

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே"

என்கின்றார் பட்டினத்து அடிகளார்.

ஆகவே, நாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறது என்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவியாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறது என்ற நினைவு வந்தால், இந்தப் பொருள் நாம் ஈட்டியது அல்ல என்ற நினைவு உண்டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்து, அவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அனுபவத்தைக் கூட்டி வைத்து, அருள் செய்கிற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால், நம்முடைய நெஞ்சம் கசியும். பரம்பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான உள்ளம் உடையவர்களாக இருந்தாலும், இறை அன்பு முதிர முதிர அவர்கள் உள்ளம் நெகிழும்.

மரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால், மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் இல்லாமல் காய் கண்ணீர் வடிப்பதுபோலப் பால் வடிகிறது அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போது, அதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி, பால் வற்றி, மஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி, அது தானே உதிர்ந்து விடுகிறது. 

தன்னிடத்து உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடையவை என்று பற்றிக் கொண்டு, தன்னுடைய முயற்சியால் எல்லாவற்றையும் ஈட்டியதாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைவனிடத்தில் அன்பு உண்டானால், இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையது ஆகும். அதன் பயனாக உலகியல் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தனது பொருளால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற நயம் ஏற்படும். "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.


73. செல்வம் நிலையற்றது


"ஓடமிடும் இடமது மணல்சுடும், சுடும்இடமும்

     ஓடம்மிக வேநடக்கும்;

உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும், மேடெலாம்

     உறுபுனல்கொள் மடுவாயிடும்;


நாடுகா டாகும்,உயர் காடுநா டாகிவிடும்;

     நவில்சகடு மேல்கீழதாய்

நடையுறும், சந்தைபல கூடும்,உட னேகலையும்;

     நல்நிலவும் இருளாய்விடும்;


நீடுபகல் போயபின் இரவாகும், இரவுபோய்

     நிறைபகற் போதாய்விடும்;

நிதியோர் மிடித்திடுவர், மிடியோர் செழித்திடுவர்;

     நிசமல்ல வாழ்வுகண்டாய்!


மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்

     மருவுகன வாகும் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஓடம் இடும் இடமது மணல் சுடும் - ஓடத்தை நிறுத்தி வைத்திருக்கும் (நீர் நிறைந்த பள்ளமான) இடம் (நீர் வற்றி) மணல் சுடும்படி (மேடாக) மாறும்; சுடும் இடமும் ஓடம் மிக நடக்கும் - (மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம் மிகுதியாக ஓடும்; 

உற்றது ஓர் ஆற்றின் மடு மேடாகும் - நீருள்ள ஓர் ஆற்றின் பள்ளம் மேடாக மாறும்; மேடு எலாம் உறுபுனல்கொள் மடு ஆயிடும் - மேடுகள் யாவும் மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்; 

நாடு காடாகும் - (மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; உயர்காடு நாடு ஆகிவிடும் - (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்; 

நவில் சகடு மேல்கீழதாய் நடையுறும் - சொல்லப்படும் (வண்டியின்) சக்கரம் மேலும் கீழுமாக மாறிமாறிச் சுற்றிக்கொண்டு செல்லும்; 

பல சந்தை கூடும் உடனே கலையும் - பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே இருக்கும்; 

நல்நிலவும் இருளாய் விடும் - நல்ல நிலவின் ஒளியும் (மாறி) இருளாகி விடும்; 

நீடு பகல் போய பின் இரவாகும் - பெரிய பகல் கழிந்து இரவு வரும்; இரவு போய் நிறை பகற்போதாய் விடும் - இரவு நீங்கி ஒளி நிறைந்த பகற்காலம் வந்துவிடும்; 

 (உலக நிகழ்வுகள் இவை யாவும் போலவே)

நிதியோர் மிடித்திடுவர் - செல்வர் வறியராவர்; மிடியோர் செழித்திடுவர் - வறியோர் செல்வராவர்; வாழ்வு நிசம் அல்ல - (ஆகையால்) வாழ்க்கை நிலையானது அல்ல.

மாடு, மனை, பாரிசனம், மக்கள்,  நிதி, பூடணமும் மருவு கனவு ஆகும் அன்றோ? - ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் அன்றோ?

நிலையற்ற செல்வத்தைக் கொண்டு,  அறம் பல புரிந்து, நிலையான வீடுபேற்றைப் பெற முயலவேண்டும் என்பது கருத்து.


89. தத்துவத் திரயம்.

 


"பூதம்ஓர் ஐந்துடன், புலன்ஐந்தும், ஞானம்

     பொருந்தும்இந் திரியம் ஐந்தும்,

  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்

     புகலரிய கரணம் நான்கும்,


ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;

     உயர்கால நியதி கலையோடு

  ஓங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று

     உரைசெய்யும் ஓர் ஏழுமே


தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்

     திகழ்சுத்த வித்தை ஈசன்,

  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே

     சிவதத்வம் என்று அறைகுவார்;


ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே."


இதன் பொருள் ---

ஆதி வடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்  அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் வீற்றிருந்து சனகாதியர் நால்வருக்கு அருள்புரிந்த பெரியோனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் - (அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம் ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம் ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர் சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்;

உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன் மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம் என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர்;

இவை அலால் - இவையல்லாமல், 

திகழ் சுத்தவித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும் சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய) ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.


விளக்கம் ---

பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். 

புலன் ஐந்து: சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். 

ஞான இந்திரியம் (அறிவுப் பொறி) ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி. 

கன்ம இந்திரியம் (தொழிற்பொறி) ஐந்து : வாக்கு, பாதம், பாணி(கை), பாயுரு (எருவாய்), உபத்தம் (கருவாய்) 

கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம். 

ஆன்மதத்துவம் - உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள். சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள், ஆக தத்துவங்கள் முப்பத்தாறு.


23. நாய் அறியாது, ஒரு சந்திப் பானையின் அருமையை

 


"தாயறிவாள் மகளருமை! தண்டலைநீள்

     நெறிநாதர் தாமே தந்தை

ஆயறிவார் எமதருமை! பரவையிடம்

     தூதுசென்ற தறிந்தி டாரோ?

பேயறிவார் முழுமூடர்! தமிழருமை

     அறிவாரோ? பேசு வாரோ?

நாயறியா தொருசந்திச் சட்டிப்பா

     னையின்அந்த நியாயந் தானே!"


இதன் பொருள் ---

மகள் அருமை தாய் அறிவாள் - மகளின் அருமையைப் பெற்ற தாயே அறிவாள்,  எமது அருமை தண்டலை நீள்நெறிநாதர் தாமே தந்தையாய் அறிவார் - (அடியவரான) எமது அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே  தந்தையாகி அறிவார், 

பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ - சிவபெருமான்  (தம் அடியவரான நம்பிஆரூரின் வேண்டுகோளுக்கு இரங்கி)) பரவை நாச்சியாரிடம் இரவு முழுதும் தூது நடந்ததை உலகினர் அறியமாட்டாரோ?, 

முழுமூடர் பேய் அறிவார் - முற்றினும்  பேதையர் பேய்த் தன்மையையே அறிவார், தமிழ் அருமை அறிவாரோ - தமிழின் அருமையை உணர்வாரோ?, பேசுவாரோ - (தமிழைப் பற்றி) ஏதாவது உரைப்பாரோ? (ஒன்றும் செய்யார்). 

ஒரு சந்திச் சட்டிப் பானையின் அந்த நியாயம் நாய் அறியாது - ஒருபோது(க்குச் சமைக்கும்) சட்டிப் பானையின் அந்த உயர்வை  நாய் அறியாது.

விளக்கம் ---

     "தந்தையாய்த் தாயும் ஆகி, தரணியாய், தரணி உள்ளர்க்கு எந்தையும் என்ன நின்ற" என்றும், "அம்மை நீ, அப்பன் நீ" என்றும் வரும் அப்பர் தேவாரப் பாடல் வரிகளையும், "தாயும் நீயே, தந்தை நீயே, சங்கரனே" என வரும் திருஞானசம்பந்தர் திருவாக்கையும், "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்" என வரும் வள்ளல்பெருமான் அருள் வாக்கையும் கொண்டு, உயிர்களுக்குத் தாயும் தந்தையுமாய் விளங்குகின்றவன் இறைவன் என்பது தெளியப்படும். எனவே,  ‘தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தையாய் அறிவர் எமது அருமை' என்றார். 

"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று சிவபரம்பொருளே திருவாய் மரல்ந்து அருளியபடி, "தம்பிரான் தோழர்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் உலகவரால் வழங்கப்பட்டார். தனது அடியவரும் தோழரும் ஆகிய அவரின்  வேண்டுகோளுக்கு இரங்கிப் பரவை நாச்சியாரின் ஊடலைத் தவிர்க்கத் தூது சென்றது அடியவரின் அருமையையும் தமிழின் அருமையையும் உணர்ந்தே. ஆகையால் ‘அறிந்திடாரோ?'  என்றார். "பரவையார் ஊடலை மாற்ற ஏவல் ஆளாகி இரவெலாம் உழன்ற இறைவனே" என்று பட்டினத்து அடிகளார் பாடுவார்.

முழுமூடர் பேய்த் தன்மை உடையவர். "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பது மணிவாசகம். பற்றியதை விடாது பேய். அன்புக்கு இரங்காது பேய். விரட்டினால் விட்டு விலகிச் செல்லும். முழுமூடர் அச்சத்திற்காகக் கொடுப்பரே, அன்றித் தமிழின் அருமை அறிந்து  கொடுக்கமாட்டார். ‘கொல்லச் சுரப்பதாம் கீழ்'என்றது நாலடியார்.

"இரவலர் கன்றாக ஈவார் ஆவாக

விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி

வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்

கொல்லச் சுரப்பதாங் கீழ்." -- நாலடியார்.

இதன் பொருள் ---

இரவலர் கன்றாக ஈவார் ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர் கன்றுகளை ஒப்பக் கொடுப்போர் ஆன்களை (பசுக்களை) ஒப்பப் பூரிப்புடன் குறையாது அளிப்பதே கொடை எனப்படும். விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடி ஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ் - அத்தகைய உயிர்க் கிளர்ச்சி இல்லாமல், கறக்க வல்லவர் தமது விரல்களை அழுத்தி நோவுண்டாக்க, அது பொறாது பாலை ஒழுகச் செய்யும் பசுக்களைப்போல் சூழ்ச்சி உடையார், பலவகையிலும் வருத்தினால், அது பொறாது கீழ்மக்கள் தம்பொருளைச் சொட்டுவோர் ஆவர்.

ஒரு சந்திப் பானை : நோன்புக்குச் சமைக்க வேண்டித் தனியே வைத்திருக்கும் சமையல் கலம்.  நாய்க்கு  எல்லாப்  பானையும்  ஒரே  மாதிரியாகத் தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும் ஒரு  தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள். ஒருசந்தி - ஒருபோது.


72. மாமனார் வீட்டில் மருமகன் நிலை

 


"வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்

     மேன்மேலும் உபசரித்து

விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை

     வேண்டுவ எலாமமைப்பார்;


ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர்; தைலம்இட்டு

உறுதியாய் முழுகுவிப்பார்;

ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்;

     உற்றநாள் நாலாகிலோ,


நாட்டம்ஒரு படியிரங் குவதுபோல் மரியாதை

     நாளுக்கு நாள்குறைவுறும்;

நகைசெய்வர் மைத்துனர்கள்; அலுவல்பார் போஎன்று

     நாணாமல் மாமிசொல்வாள்;


வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பள்; அவன்

     மட்டியிலும் மட்டிஅன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வேட்ட அகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில் - மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன், மேன்மேலும் உபசரித்து - மேலும் மேலும் ஆதரவு காட்டி, விருந்துகள் சமைத்து - புதிய உணவுகளைச் சமைத்து, நெய்பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் - நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாக விரும்பியவற்றை யெல்லாம் செய்துவைப்பார்கள்; 

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்து இடுவர் - உடலுக்கு வலிமை தரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்; 

தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் - எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்; 

ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் - தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும் அளிப்பார்கள்; 

உற்ற நாள் நாலாகிலோ - (அங்குத்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால், 

நாட்டம் ஒருபடி இறங்குவதுபோல் நாளுக்கு நாள் மரியாதை குறைவுறும் - அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல, மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்; 

மைத்துனர்கள் நகை செய்வர் - மைத்துனர்கள் எல்லோரும் இகழ்ந்து பேசுவர்; 

மாமி அலுவல் பார் போ என்று நாணாமல் சொல்வாள் - மனைவியின் தாயானவள், 'சென்று ஏதாவது வேலை செய்' என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்; 

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் - அழகு மிக்க மனைவியும் அவனை ஒரு துரும்பு போல நினைப்பள்; 

அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? - (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லனோ?

‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.'   என்று பெரியோர் கூறுவர்.


88. பலவகை அறிவுரைகள்

 

"தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்

     தங்களுக் கவைத ழுவுறா;

  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்

     தயவிலோர் ஆயுள் பெருகார்;


மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்

     வீடுநற் செந்நெல் இவைகள்

  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்

     விலைகொடுத் தேகொள் ளுவார்;


தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்

     தீண்டரிய நீசர் எனினும்

  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்,

     சீலமுடை யோர்என் பரால்;


ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆன் கொடி உயர்த்த உமை நேசனே - விடைக் கொடியை உயர்த்திய உமையன்பனே!  ஈசனே - செல்வத்தை அளிப்பவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா - தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் தாமே புகழ்ந்து கூறிக் கொள்வோருக்கு அவை கிடையாமல் போய்விடும்;

சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய் தயவு இலோர் ஆயுள் பெருகார் - சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கம் அற்றவருக்கு வாழ்நாள் குறையும்; 

மேம்படு நறுங் கலவை, மாலை, தயிர், பால், புலால், வீடு. நல் செந்நெல் இவைகள் - உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம், மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை, வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர் விலை கொடுத்தே கொள்ளுவார் - மற்றொருவர் கொடுத்தாலும், மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள்;

தேன், கனி, கிழங்கு, விறகு, இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற அளிப்பரேல் - தேனையும், கனியையும், கிழங்கையும், விறகையும், இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத் தகாத  இழிந்தோரானாலும் நேர்மையோடு கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக் கொள்வர் - ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.


விளக்கம் ---

தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கூறுதல் ஒருவனுக்கு அழிவைத் தரும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். "அமைந்து ஆங்கு ஒழுகலான், அளவு அறியான், தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்னும் திருக்குறளைக் காண்க. சூழல் அமைந்தபடி வாழாதவனும், வலிமைகளின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான் என்கின்றார் நாயனார்.  பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க.

"தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்

அமராது அதனை அகற்றலே வேண்டும்;

அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம்." --- பழமொழி நானூறு.

இதன்பொருள் ---

அமை அரும் வெற்ப - மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே!, கொள்ளாக் கலம் தமவேனும் - தமக்கு ஏற்றதாக இல்லாத பொற்கலன்கள் தம்முடையதாயினும், தம்மை அணியார் - மக்கள் அவற்றை அணிந்து கொண்டு தம்மை அணிபெறச் செய்யார். (அதுபோல) தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் - தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து, தமரேயும் அமராததனை அகற்றலே வேண்டும் - சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு விலக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.

'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.


"தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்."

இதன் பொருள் ---

தாயினால் ஆயினும், தந்தையினால் ஆயினும் யாதானும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தனது வாயினாலேயே தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களை, மற்றவர்களுக் புகழ்ந்து கூறுதல் என்பது, புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவது இல்லை. என்றாலும், அவ்வாறு கூறுவது அடுப்பின் ஓரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயை பார்த்து, புலி என்று சொல்வது பொலப் பொருத்தம் இல்லலாத புகழ்ச்சியே ஆகும் அது. (குடிப் பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினை உடையவர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றத்தைக் கண்டு புகழ்வது எல்லாம் பொய்யான புகழ்ச்சியே ஆகும்.

 

"ஒன்னார் அடநின்ற போழ்தின்,ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க;--- துன்னினார்

நன்மை இலராய் விடினும்,நனிமலராம்

பன்மையில் பாடு உடையது இல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் --- 

    ஒன்னார் அட நின்ற போழ்தின் - பொருந்தாத பகைவரிடத்தில் போரிடும்போது, தம்மைக் கொல்ல நின்ற பொழுதில், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க - வீரத்தில் மிக்கவனாக இருந்தாலும், தனித்து நின்ற ஒருவன், தன்னை எத்துணையும் வியந்து கூறுதல் கூடாது. துன்னினார் நன்மையிலராய்விடிலும் - கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றவர் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனி பலவாம் பன்மையில் பாடுடையது இல் - மிகப்பலராய் இருத்தலை விட வலிமையுடையது ஒன்று இல்லை.

 

"கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்,

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்;- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்."  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்கு உரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

    நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடமோ, தளும்பித் தளும்பி, இருக்கின்ற நீரும் இல்லாமல் போகும். கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அறிவில்லாதவர்கள் தம்மைத் தாமே பெரிதும் மதித்துப் பேசி, இழிவைத் தேடிக் கொள்வார்கள்.

 

 "தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், -– தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்."        --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

      தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளுதல், தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று - குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போல ஆகும்;  ஆதலால்,  தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது -  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

    தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் மிகாது அழிந்தே போகும் என்று சொல்லப்பட்டது.

 

"கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்."      --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

     கற்று ஆங்கு அறிந்து அடங்கி - அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அவற்றிற்கேற்ப மன அடக்கத்தோடு இருந்து, தீது ஒரீஇ - (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள, அருள் நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப் பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே நீள்நெறி சென்றார் - நிற்கின்ற ஞானியரே வீட்டை அடையும் வழியில் நின்றவராவர்.

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியன. அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை,வாய்மை முதலியன. 

 

 "கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்."           ---  நாலடியார்.

இதன் பொருள் --- 

      கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சி பரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், 'மருந்தினால் தெளியாத பித்தன் இவன்' என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

         பேதைமை என்பது, பிறர் கருத்தை அறியாது, பிறர் கூறும் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மை உடையது.


24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...