002. வான் சிறப்பு - 04. ஏரின் உழாஅர்





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்

இரண்டாவது அதிகாரம் -  வான்சிறப்பு

வான்சிறப்பு என்னும் இந்த இரண்டாவது அதிகாரத்தில்,  நான்காவதாக வரும் இத் திருக்குறள், மழை என்கின்ற வருவாயானது, தனது வளத்தில் குன்றியபோது, உழவர் பெருமக்கள் ஏர் கொண்டு உழுதலைச் செய்யார் என்கின்றது.


ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும்
வாரி வளம் குன்றிக்கால். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---              

      உழவர் ஏரின் உழார் --- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;

     புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் --- மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்.

('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

இதற்கு ஒப்புமை -----

மழைவளம் குன்றியதால் வரும் கொடிய வறுமையானது, உயிர்களை மிக வருத்தும். அந்தக் காலத்தும், மனக்கலக்கம் சிறிதும் இன்றி. வள்ளண்மையோடு அடியார்கள் இருந்தார்கள் என்கின்றது பின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்.

அலங்கல்மலி வானவரும் தானவரும்
         அலைகடலைக் கடையப் பூதம்
கலங்கஎழு கடுவிடம் உண்டு இருண்டமணி
         கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல்மறந்து, மீன்சனி புக்கு
         ஊன்சலிக்கும் காலம் தானும்
கலங்கல் இலா மனப்பெருவண் கையுடைய
         மெய்யர் வாழ் கழுமலமே.      ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.

No comments:

Post a Comment

39. காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு

“ ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்      கழகாகும் ; உலகில் யார்க்கும் ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்      களுக்கழகாய் இருக்கும் அன்றோ ? ந...