வாழ்வாவது மாயம்

 


வாழ்வாவது மாயம்

-----

 

     இந்த நெடிய உலக வாழ்க்கை நிழலின் அசைவு போல் விரைவில் மறைகின்றதுஇதனை நிலை என்று கருதிப் புலை நிலையில் இழிதல் கூடாது. பலவகையான கூட்டங்கள் சேர்ந்த ஒரு மாயக் கூட்டமே இந்த உலக வாழ்க்கை. தோன்றி நின்று அறிவை மயக்கிபின் தெளிவித்து மறைவதே மாயை ஆகும்.

 

     மனிதன் கண்டதைக் கொண்டு களிப்பு அடைகின்றான். பெற்றது எதுவாயினும் அதனைப் பெரிதாக எண்ணுவதும்அபிமானங்கள் புரிவதும் உள்ளத்தில் செருக்குக் கொண்டு ஆரவாரங்கள் செய்வதும் இயல்பாக உள்ளது. மயக்கமும் மாய மோகங்களும் வளர்கின்றன. பொய்யும் புலையும் புன்மையும் வளர்கின்றனமெய்யும் நலமும் மேன்மையும் மெள்ளத் தளர்கின்றன. அல்லல் நிலைகள் எல்லாம் அறியாமையால் விளைகின்றன. அவலக் கவலைகளுக்கு மடமை இடமாய் நிற்றலால்அஞ்ஞான நிலைகொடிய மருள்நெடிய இருள் என்று மண்டிக் கிடக்கின்றது. 

 

     உண்மையை ஒர்ந்து உணருகின்றோர் உள்ளம் உருகி நன்மை காண முடியும். உணராதார் நலம் ஏதும் காணாமல் வெறுமனே இழிந்து போகின்றனர். 

 

     உலக வாழ்வை நிழல் அசைவு என்று பெரியோர்கள் கூறுவதுஅதன் நிலையாமையைக் கருதி. நிழலின் அசைவானது மது கண் முன்னே இருப்பது போல் தோன்றிஅறிவை மயக்கிகணத்தில் இல்லாது போவது. இதை மாயம் என்பர்.

 

"வாழ்வாவது மாயம்இது மண்ணுவது திண்னம்: 

பாழ் போவது பிறவிக் கடல்: பசிநோய் செய்த பறிதான்

தாழாது அறம் செய்ம்மின் தடங் கண்ணான் மலரோனும் 

கீழ்மேல் உற நின்றான் திருக் கேதாரம் என்னீரே".

 

என்பது சுந்தர்மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     உலகவர்களே! பசியையும் நோயையும் போட்டு வைத்து இருக்கின்ற பையைப் போன்ற இந்த உடம்பு நிலைத்திருக்கும் என்பது பொய். இது மண்ணோடு மண்ணாய் மறைந்து ஒழிவதே மெய்.  ஆதலின்இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ஆகும்.  அதன் பொருட்டுநீங்கள் காலம் தாழ்த்தாது,விரைந்து அறச் செயல்களைச் செய்யுங்கள்.  பெரிய கண்களை உடையவனாகிய திருமாலும்மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும்வானின் மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய சிவபரம்பொருள் எழுந்தருளி இருக்கின்ற, 'திருக்கேதாரம்'  என்று சொல்லி வழிபாடு செய்யுங்கள்.

 

     மாடுமனைசெல்வம் எனக் கூடி நிற்பன எல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு ஒடி ஒழியும்இந்த மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்து இருத்தல் கூடாது. அதற்கு இறையருள் கைகூடி இருத்தல் வேண்டும். "மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான்" என்று இறைவன் தனக்கு அருளிய மேன்மையை வியந்து போற்றினார் மணிவாசகப் பெருமான். மெய்யான ஆன்ம லாபத்தை அடையாமல்பொய்யானதில் மையல் மீதூர்ந்து மயங்கிக் கிடப்பதுகொடிய துயரமாய் விரிந்து வரும். 

 

“Life’s but a walking shadow, a poor player 

That struts and frets his hour upon the stage, 

And then is heard no more: it is a tale 

Told by an idiot, full of sound and fury, 

Signifying nothing.”                   --- Macbeth.

 

     "மனித வாழ்வு ஒரு அசைகின்ற நிழலைப் போன்றது.  நாடக மேடையில் இடை இடையே கோமாளி வந்துபிலுக்கி நடந்துபிதற்றிப் போவது போலவும்மூடன் சொல்லிய பழங்கதை போலவும் வெறும் பாழானது யாதொரு மேன்மையும் இல்லாதது"என மேக்பெத் என்னும் மேலை நாட்டாரும் தனது வாழ்நாள் முடிவில் இவ்வாறு குறித்துள்ளார். 

 

     உலக ஆசைகளில் வெறியாய் ஒடி அலைந்து, கலகமும் களிப்பும் மிகுந்து, ஒரு பயனும் காணாமல் வறிதே மாண்டு மறைந்து போவதே மானிட வாழ்வின் தன்மையாய் உள்ளது. 

 

     தேகஉலக போகங்களில் மோகம் கொண்டு, அவற்றை விழைந்து திரிபவர் ஆன்ம நலனை இழந்து விடுகின்றனர். மோகத்தை ஒழித்தவர் முத்தி இன்பத்தை அடைகின்றனர். சிற்றின்ப நிலையில் இழிந்து கிடக்கின்ற போது பேரின்பம் ஒழிந்து போகின்றது. அதனைத் துறந்து எழுந்தவர் உயர்ந்த பதவியில் சிறந்து திகழ்கின்றார். வாழ்வின் நிலையாமையை உணர்ந்து தெளிந்து, உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தால் பேரின்ப நிலையை அடையலாம். உயர்ந்த குறிக்கோள் இல்லாமை கேட்டையே தரும் என்பதை,

 

"பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்தநாளும் குறிக்கோள் இலாதுகெட்டேன்;

சேல் உலாம் பழனவேலித் திருக் கொண்டீச்சரத்து உளானே".

 

எனவரும் அப்பர் பெருமான் தேவாரப் பாடல் காட்டும். 

 

     "சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும்குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும்மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்" என்று திருக்கொண்டீச்சரம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளினிடத்து முறையிடுகின்றார் அப்பர் பெருமான்.

 

     உலகிற்கு உள்ள பெருமையாகத் திருவள்ளுவ நாயானர் காட்டுவதே அதன் நிலையாமையைத் தான். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது நாயனார் அருளிய திருக்குறள். நேற்று இருந்தவர் இன்று இல்லாமல் போனார், போவார் என்னும் பெருமையை இந்த உலகம் கொண்டு உள்ளது. உலகில் வந்து பிறந்தவர் யாரும் நிரந்தரமாக இங்கே இருந்தது இல்லை. இதனை நேரில் கண்டு இருந்தும், ஆன்றோர் வாக்கால் அறிந்து இருந்தும், நிலையற்ற உலக இன்பத்தையே ஒரு பொருட்டாக மதித்து, அதனையே குறிக்கோளாகக் கொண்டு இருந்து, வேடிக்கை மனிதர்களாக வாழ்ந்து, ஒழிந்து போவது மடமையிலும் மடமை ஆகும்.

 

     மன்னர்களாய் மகிமை பெற்று இருந்தவரும் கூட மாண்டு, மண்ணோடு மண்ணாய் மறைந்து போகின்றனர். பெரும் செல்வந்தர்களாய், பெரும் பதவியில் திளைத்தவர்களாய் இருந்தவரும்  இல்லாமல் போகின்றனர். இதை நோக்க உலக போகங்கள் அனைத்தும் நிலையற்றவை என்பது புலனாகும். உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஆன்றோர்கள் பலவாறாக அறிவுரை கூறியுள்ளதைக் கடைப்பிடித்து வாழ மறந்து போகின்ற அளவுக்கு மாயை மனித இனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது. 

 

"முடிசார்ந்த மன்னரும், மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு 

பிடிசாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்தப் 

படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவார் இல்லையே"

 

என்று உலகவரின் அறியாமைக்கு இரங்கி இவ்வாறு பாடியருளினார் பட்டினத்து அடிகளார்.

 

     “A King may go a progress through the guts of a beggar.” (Hamlet 4-3) "ஒரு அரசன் மடிந்து மாறிப் பிச்சைக்காரன் குடலில் போய்ச் சேரலாம்என மேல் நாட்டுக் கவிஞரும் இவ்வுலக வாழ்வின் நிலையாமையைக் குறித்துச் சொல்லி உள்ளார். 

 

     இன்று உள்ளவர் நாளை இருப்பது என்பது நிச்சயம் இல்லை. இதுதான் உலக இயற்கை என்பதை அறியாமல் உலக மக்கள் வாழுகின்றார்கள்.

 

"இன்று உள்ளார் நாளை இல்லை என்னும் பொருள்

ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்!

அன்று வானவர்க்கா விடம் உண்ட

கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே"

 

"வென்றிலேன் புலன்கள் ஐந்தும், 

     வென்றவர் வளாகம் தன்னுள் 

சென்றிலேன், ஆதலாலே 

     செந்நெறி அதற்கும் சேயேன், 

நின்றுஉள்ளே  துளும்புகின்றேன் 

     நீசனேன். ஈசனே! ஓ 

இன்று உள்ளேன் நாளை இல்லேன் 

     என்செய்வான் தோன்றினேனே". 

 

என்று அப்பர் பெருமான் பாடினார்.

 

"நேற்று உள்ளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும் 

போற்றிலேன் நின்னை, அந்தோ! போக்கினேன் வீணே காலம், 

ஆற்றில்என் அகண்ட ஆனந்த அண்ணலே! அளவில் மாயைச் 

சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே".

 

என்று தாயுமான அடிகளார் வாழ்வின் நிலையாமையையும், அதில் இருந்து நீங்கி உய்யும் வழியையும் காட்டிப் பாடினார்.

 

"நன்றுளேன். அல்லேன், யார்க்கும் 

     நல்லறம் புரியேன்: அன்றிக் 

கொன்றுளேன், அற்றம் பார்க்கும் 

     கூற்றுவன் விடுவான் அல்லன்

இன்று உளேன் நாளை இல்லேன்: 

     யமன் வரும் போது, வெள்ளி 

மன்றுளே இருந்த சொக்கே! 

     வழக்கு நீ என் சொல்வாயே

 

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடினார்.

 

     இவ்வாறு ஆன்றோர்களும் அருளாளர்களும் அறிவுறுத்திச் சென்று உள்ளதை ஓதி உணர்வு பெறாமல், ஓதியும் உணர்வு பெறாமல், உள்ளம் நிலையற்ற உலக போகங்களை விழைந்து, களியாட்டங்களில் திளைத்து மனிதர்களாகிய நம்முடைய வாழ்நாள் வீணே கழிந்து கொண்டு இருக்கின்றது.

 

     வலைஞன் ஒருவன் நீர் நிலையில் தனது வலையை வீசினான். அதில் ஒர் ஆமையை வந்து பட்டது. அதனைப் பக்குவமாக அவித்துத் தின்ன விழைந்தான் கவலைஞன். பெரிய மண்பானையில் நீரை ஊற்றி, ஆமையை இதல் இட்டுஅடுப்பில் வைத்தான். ஆமை தனது நிலையை எண்ணி"நாம் சுகமாய் நல்ல தண்ணீர் கிடைத்தது. இனி இங்கேயே நாம் நீண்ட காலம் இருக்கலாம்" என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டது. உலை நீரிலே சுற்றிச் சுற்றி வந்தது. வலைஞன் அடுப்பில் விறகை வைத்துத் தீயை மூட்டினான். மூட்டிய தீ விறகில் பற்றிப் பானையில் இருந்த தண்ணீர் கொஞ்சும் சூடு ஏறியது. அந்தச் சுடுநீர் கொஞ்சம் இதமாக இருப்பதாக எண்ணி ஆமை மிகிழ்ந்தது. தண்ணீர் வெம்மை ஏறிச் சுட்டது. ஆமை உடல் வெந்து செத்தது. வலைஞான் அதனை உண்டு மகிழ்ந்தான். 

 

     மனிதனுடைய வாழ்வும் இவ்வாறே உள்ளது. உலக வாழ்வினு நிலையாமையை உணராதுபலப்பல மனக்கோட்டைகளைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சி மீதூரபட்டுக் களித்துத் திரிகின்றான்இறுதியில் எமன் வாயில் பட்டுத் தொலைந்து போகின்றான். உலையில் மாண்ட ஆமையின் நிலைக்கும்எமன் வாயில் அகப்பட்ட இவன் நிலையும் ஒன்றாகத் தானே உள்ளது. இந்தப் பேதைமை குறித்து,

 

"கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்ப,ஆமை

நிலை அறியாது அந்நீர் படிந்து ஆடி அற்றே,

கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை

வலைகத்துச் செம்மாப்பார் மாண்பு"

 

என்று நாலடியார் கூறுகின்றது.

 

"வளைத்து நின்று ஐவர் கள்வர் 

     வந்து எனை நடுக்கம் செய்ய,

தளைத்து வைத்து உலையை ஏற்றித் 

     தழல் எரி மடுத்த நீரில்

திளைத்து நின்று ஆடுகின்ற

     ஆமைபோல் தெளிவு இல்லாதேன்,

இளைத்து நின்று ஆடுகின்றேன்,

     என்செய்வான் தோன்றினேனே"

 

என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

     அபாய நிலையில் உள்ள ஆமையைச் சுட்டிக் காட்டி மனித வாழ்வின் பரிதாபங்களைப் பெரியோர்கள் விளக்கியிருக்கும் பலவகைக் காட்சிகளும் புலமை மணம் கமழ்ந்து சுவை தந்து திகழ்கின்றன. உறுதி நலங்கள் தெளிவு பெற உணர்வு நலங்கள் வருகின்றன. நிலையாமையை உணர்ந்துநிறை இன்பம் பெறுதல் வேண்டும்.

 

இறைவனைக் காணும் முறை

 


இறைவனைக் காணும் வழி

-----

 

     பக்தியோகம்கர்மயோகம்ஞானயோகம் என்னும் மூன்று நெறிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையன. ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச் சாதனம்.

 

--- பக்தி இல்லாமல் நற்கருமம் இல்லைஞானமும் இல்லை. 

--- நற்கருமம் இல்லாமல் ஞானம் இல்லைபக்தியும் இல்லை. 

--- ஞானம் இல்லாமல்,நற்கருமமும் பக்தியும் இல்லை. 

 

     இந்த மூன்றில் எது மிகுதியாக இருக்கிறதோ அதைக் கருதி பக்திநெறிகர்மநெறிஞானநெறி என்று சொல்லப்படும். இதன் விளக்கத்தை அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல் ஒன்றினால் அறியலாம். 

 

     இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அப்படி இருந்தாலும் எல்லோருக்கும் தெரியவில்லை. விறகு முழுவதும் தீயானது பரவி இருக்கிறது. விறகை எந்த இடத்தில் கடைந்தாலும் தீயானது தோன்றும். விறகு முழுவதும் இருக்கும் தீயானதுவிறகைக் கடைந்தால் வெளிப்படும். பாலில் நெய்யானது ஒவ்வொரு துளியிலும் இருக்கிறது. அதைத் தயிராக்கிக் கடையும்போது வெண்ணெய் தோன்றுகிறது. கடையாவிட்டால் தோன்றுவதில்லை. வைரம் முதலிய மணிகள் சுடர் வீசுபவை. அவற்றைச் சாணையிட்டுக் கடைய வேண்டும். கடையாத மணியானது ஒளி இன்றி மங்கலாக இருக்கும். விறகுபால்மணி என்னும் மூன்று விதமான பொருள்களையும் கடைந்தால் அவற்றினூடே மறைந்திருக்கும் தீநெய்ஒளி ஆகியவை வெளிப்படும். அப்படியே எம்பெருமான் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற இருந்தாலும் அன்பு என்னும் கோலை நட்டு ஞானம் என்னும் கயிற்றினால் கடைந்தால் வெளிப்படுவான்.

 

"விறகில் தீயினன்பாலில் படுநெய்போல் 

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே."

 

என்கின்றார் அப்பர் பெருமான்.

 

     இறைவன் தீயைப் போலவும் வெண்ணெயைப் போலவும் ஒளியைப் போலவும் மறைந்து நிற்கிறான். கடையும் பொருள்கள் மூன்றிலிருந்து வெளிப்படுபவை. மூன்றும் கடையும் பொருள்களே ஆயினும்கடைதலில் மேற்கொள்ளும் முயற்சியில் வேற்றுமை உண்டு. விறகை நன்றாக முறுக வாங்கிக் கடைந்தால்தான் நெருப்பு உண்டாகும். பாலில் வெண்ணெய் தோன்ற அவ்வளவு பலம் வேண்டாம்.வாங்கிக் கடைய வேண்டும். மணியைக் கடைந்தாலே போதும்ஒளி தோன்றிவிடும். முறுகக் கடைய வேண்டியது விறகு, நடுத்தரமாகக் கடைவது பால். மெல்லக் கடைவது மணி. 

 

     இதுபோலத்தான்இப்படியே மனிதர்களில் மூன்று வகையான மன இயல்புடையவர்கள் இருக்கிறார்கள். பலவகையால் முயன்று பக்குவம் பெறுவார் உண்டு. ஓரளவு முயன்று பக்குவம் பெறுவாரும் உண்டு. சிறிதளவில் பக்குவம் பெறுவாரும் உண்டு. தாய்மார்கள் தயிர் கடைவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு கம்பத்தை ஒட்டிச் சட்டியை வைத்துஅதிலே தயிரை ஊற்றிமத்தைச் சட்டியில் இட்டு அதைக் கம்பத்தோடு தொடர்பு உடையதாக்கிமத்தைச் சுற்றியுள்ள கயிற்றைப் பிடித்து இழுத்து இழுத்துத் தயிர் கடைகிறார்கள். மத்துச் சுழலும் போது அதற்கு ஆதாரமாக இருக்கிற கம்பம் அசையாமல் இருக்க வேண்டும். அது ஆடினால் எத்தனை தான் கடைந்தாலும் வெண்ணெய் திரளாது. தயிர்ச் சட்டியே உடைந்து போதலும் கூடும். கடவுளை உணர்வது கடைவது போன்ற செயல். கடைவதற்கு நட்ட கோலும்கயிறும் வேண்டும். இறைவனைக் காணும் முயற்சிக்கும் உறவு என்னும் கோல் வேண்டும்உணர்வு என்னும் கயிறு வேண்டும்.உறவு என்ற கோலை நட்டுஉணர்வு என்ற கயிற்றைக் கொண்டு கடைய வேண்டும். உறவு என்பது இறையன்புஅல்லதுபத்தி எனப்படும். அது அசையாமல்தளராததாக இருக்க வேண்டும். பாலைக் கடைவதற்குக் கோல் நடுவது அவசியம். கயிறு மாறும்சட்டி மாறும்தயிர் மாறும்கடைபவர் கூட மாறலாம். ஆனால் நட்ட கம்பம் மாத்திரம் நிலையாக இருக்கும். அதுபோல இறைவனைக் கடைந்து உணரும் செயலில் பக்தி இன்றியமையாதது.தளர்வற்ற அன்பு அல்லது பக்தி இருக்க வேண்டும். உணர்வு அல்லது ஞானத்தைக் கயிறாகச் சொல்கிறார். ஞானம் என்பது வரவர வளர்வது. அறியப்படும் பொருள் விரிய விரிய ஞானம் விரிகிறது. அதில் பல நிலைகள் உண்டு. இந்த இரண்டோடுகடைவதாகிய செயலும் வேண்டும். அது இல்லாவிட்டால் மற்றவை இருந்தும் பயன் இல்லை. உறவு என்பது பத்தி. உணர்வு என்பது ஞானம்கடைதல் கருமம் அல்லது செயல். உறவுஉணர்வுகருமம் என்னும் மூன்றும் சேர்ந்து முயற்சி செய்தால் இறைவன் முன் நிற்பான். 

 

     விறகுக் கட்டை மனிதர்கள் உண்டு. பால் போன்ற மனிதர்கள் உண்டுமணி போன்ற மனிதர்களும் உண்டு. பிறவித் துன்பத்தில் உழன்று உழன்று தடித்துப் போன உள்ளம் படைத்தவர்களுக்கு எளிதில் இறைவனைப் பற்றிய உணர்வு வருவதில்லை. வாழ்க்கையில் மிகவும் அல்லல் பட்டு,நைந்து போன பிறகே அவர்கள் அறிவு பெறுகிறார்கள். 

 

     உள்குவர் உள்ளத்து உளன் கண்டாய்" என்றார் ஆழ்வார். இறைவன் எங்கே இருக்கின்றான் என்றால்அவனை நினைப்பவர் உள்ளத்தில் இருக்கின்றான் என்கின்றார். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றார் அப்பர் பெருமான். "ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை" என்றார் மணிவாசகப் பெருமான். இவ்வளவையும் உணராது  "கடவுள் உள்ளத்தில் இருக்கிறார் என்கிறீர்களேஎன் உள்ளத்தில் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்" என்று சொல்கிற அறிவாளிகள் உலகில் இல்லாமல் இல்லை. ஒரு சின்னக் குழந்தை தனது தாயிடம் போய், "இந்தப் பாலில் வெண்ணெய் இருக்கிறது என்றாயே! வெண்ணெயைக் காணோமே. எங்கே காட்டுபார்ப்போம்” எனக் கேட்டால் "அருமைக் குழந்தையேபாலை இப்படியே வைத்துக் கொண்டு பார்த்தால் உனக்கு வெண்ணெய் தெரியாது. பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருக்கிறது. அதைக் காட்டுகிறேன்வாஎன்று சொல்லிப் பாலை வாங்கிக் காய்ச்சி உறை குத்திதயிராக்கிவாங்கிக் கடைந்து வெண்ணெயை உருட்டிஅதன் கையில் கொடுப்பாள். அதைப்போலஇறைவனைக் காண்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதுமனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டு என் மனத்தில் இருக்கிற கடவுளைக் காட்டுபார்ப்போம்" எனக் கேட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்துநமது அருட்குரு ஆகிய அப்பர் பெருமான்அவர்களை விட்டே அன்பு என்னும் உறவுகோல் நட்டுஉணர்வு என்னும் கயிற்றைக் கொண்டுவாங்கிக் கடையச் சொல்லி இறைவனைக் காட்டுகிறார். 

 

     முதல் தரமான மக்கள் மணியைப் போன்றவர்கள். கொஞ்சம் பாசி படர்ந்திருக்கிற மணியைக் கடைந்தாலே ஒளி வீசுவதைப் போலஅந்த மக்கள் முன்னைப் பிறப்பில் கடுந்தவம் செய்துயோகப் பயிற்சிகளை மேற்கொண்டுஇறைவனைக் காண இடைவிடாது முயற்சி செய்தவர்களாக இருப்பார்கள். உணவிற்கு உப்புப் போட மறந்த்து போகுழம்புக்கு மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்க மறந்துவிட்டது போலதலைவாரிப் பின்னிக் கொண்டுஉடைகளையும்அணகலன்களையும் பூண்டுகொண்ட பெண் ஒருத்தி,நெற்றிக்குப் போட்டு வைத்துக் கொள்ள மறந்துவிட்டது போல இவர்கள் முற்பிறப்பில் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இருந்துவிட்டுஇறைவன் அருளைப் பெறுவதற்குள் வாழ்நாள் முடிவைச் சந்தித்து இருப்பார்கள். அது அவர்களது வினைப்பயன். அவர்கள் இப்பிறப்பில் விட்ட குறை தொட்ட குறையாக மிக விரைவில் இறைவன் அருளைப் பெற்றுவிடுவார்கள். 

 

     நரைவரும் என்று எண்ணி நல்லறிவாளர் குழவி இடத்தே துறந்தார்" என்பது நாலடியார். நல்ல அறிவுடையவர்கள் இளம்பருவத்திலேயே துறவு உள்ளத்தைப் பெற்றுவிடுவார்கள். 

திருஞானசம்பந்தப் பெருமான் குழந்தைப் பருவத்திலேயே ஞானம் பெற்றார். 

 

     மிகப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கின்ற குழந்தைக்குப் பூமிக்கு அடியில் கடைக்கால் எத்தனை ஆழத்தில் போடப்பட்டு இருக்கிறது எனத் தெரியாது. அந்தக் கடைக்கால் மறைந்து இருக்கும். கட்டிடம் மேலே தெரியும். விட்டகுறை தொட்டகுறை உடைய யோகப் பயிற்சியாளர்கள்முந்திய பிறப்பிலேயே பலமான கடைக்கால் போட்டுக் கொண்டவர்கள்அவர்களுக்கு இந்தப் பிறப்பில் கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும். இறைவனைக் காணும் நிலை வந்து விடும். 

 

     எந்த நிலையில் இருப்பவர்களானாலும் உறவுஉணர்வுசெய்கை என்னும் மூன்றும் வேண்டும். இது பத்திஞானம்கர்மம் என்று சொல்லப்படும். மூன்றும் ஒன்றனோடு ஒன்று தொடர்பு உடையவை. அந்த மூன்றும் இணைந்த முயற்சியிலேதான் இறைவனைக் காண முடியும். 

 

     இறைவனிடத்தில் பக்தி இல்லாமல்வெறும் கர்மாக்களை மட்டுமே மேற்கொண்டு இருந்த தாருகாவனத்து முனிவர்களிடத்தில் இறைவனுடைய பெருமையை உணரும் ஞானம் இல்லாமல் போயிற்று. இறைவனைப் பகைவனாக எண்ணித் தீயவேள்வி செய்து அதில் எழுந்த பாம்புகளை அவன் மேல் ஏவிவிட்டார்கள். இறைவன் அந்தப் பாம்புகளையே ஆபரணமாகப் பூண்டுஅவர்கள் செருக்கை அழித்தான். 

 

     மூட பத்தி என்பதுஞானம் இல்லாத பத்தி. மூடபத்தி உள்ளவர்கள்பத்தரைப் போலவே ஆடிப் பாடுவார்கள். ஆனால் பயன் விளையாது. தன்னுடைய உடம்பையே அறுத்து அறுத்துதான் செய்த வேள்வியில் அவிசாகப் போட்டான் சூரபதுமன்அவனுக்குப் பக்தியோ ஞானமோ இல்லை. ஆனாலும்அவனைப் போலக் கடுந்தவம் செய்ய யாராலும் இயலாது அந்தத் தவம் நல்ல பயனை உண்டாக்கவில்லை. மாறாஉலகத்திற்குத் தீங்கு விளைந்ததுஉலகிற்கு உண்டான தீங்குமுடிவில் அவனுக்கே தீங்காக முடிந்தது. 

 

     சாத்திரம் ஓதும் சில சழக்கர்கள், 'இறைவனிடத்தில் பக்தி செய்துதொண்டு செய்து பயன் என்னஅகம் பிரம்மாஸ்மி என்று பாவனை செய்தால் போதும்என்பார்கள். அவரகள் ஞான நூல்களைப் படித்த மாத்திரத்தில்தமக்கு ஞானமே வந்துவிட்டதாக எண்ணிக் கொள்வார்கள். இது ஆணவத்தின் விளைவு என்று அருமையாக அறிவுறுத்துகின்றார் வள்ளல்பெருமான்.

 

"அமைவு அறிந்திடா ஆணவப் பயலே!

     அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண்

எமை நடத்துவோன்ஈது உணராமல்,

     இன்று நாம் பரன் இணையடி தொழுதோம்,

கமைவின் ஏத்தினோம்அடியரும் ஆனோம்,

     கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்,

உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே".

 

இதன் பொருள் --- தகுதி அறியாது திமிர் கொள்ளும் ஆணவம் என்னும் சிறு பையனே!கோடிக் கணக்கான அண்டங்கள் அனைத்தையும் ஆட்டுகின்றவன் எம்மை நடத்துபவனாகிய சிவபெருமான் இதனை உணராமல், “இன்று நாம் பரமனுடைய இரண்டு திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் ஏத்துகின்றோம்” என்று நாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்ய்யாதே.  உமாதேவியை மனைவியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன் இதனை உண்மையாக உணர்க. 

 

"கருமையாம் அகங்கார மர்க்கடவா!

     கடையே! உனைக் கலந்த அதனாலே,

அருமையாக நாம் பாடினோம்கல்வி

     அற அறிந்தனம்அருளையும் அடைந்தோம்,

இருமை இன்பமும் பெற்றன் என்றே

     என்னை மதித்து நான் இழிவு அடைந்தனன் காண்,

ஒருமை ஒற்றியூர்ச் சிவன் அருக் வாளால்

     உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே!"

 

இதன் பொருள் --- கருமைப் பண்பு உடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே உன்னோடு கலந்து நான் இருப்பதால், “நாம் அருமையாகப் பாடுகின்றோம்கல்வியும் முற்றக் கற்று உள்ளோம்திருவருளையும் பெற்று விட்டோம்இம்மை மறுமைக்கு உரிய இன்பமும் பெற்றுள்ளோம் என்று என்னை நானே வியந்து இழிவு உற்றேன் ஒருமை நலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபெருமானது திருவருளாகிய ஞான வாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன் இதனை மெய்யாக உணர்வாயாக.

 

     இந்த மாய மயக்கங்களே இன்று மிகுதியாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது. வெற்று வேடமும்சிறிது நூலறிவுமே போதும் என்னும் மனப்பாங்கு உள்ளது. வேடம் போடுதல் பெரிதல்ல. வேடநெறியின்படி வாழ்தல் வேண்டும். நூலறிவு தர்க்கம் புரிய உதவும். அநுபவஞானம் உண்டாகாது. பெரிய மாளிகையின் உள்ளே நுழைவதற்கு உதவிய வாயிற்படியைஉள்ளே நுழைந்த பின் அடைப்பவர்கள் இல்லை.  எந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தார்களோ அந்த வாசலை நன்றாக அலங்கரித்து வைப்பார்கள். தங்களுக்கு ஞானம் உண்டாவதற்குக் காரணமாய் இருந்த இறைவன் திருமேனியை அவரவர்கள் கடைசி வரையிலும் வைத்துப் பூசித்துப் பத்தி செய்வார்கள். 

 

     "சிவஞான போதம்" என்கிற ஞான நூலின் இறுதிச் சூத்திரம்,"செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ,அன்பராடு மரீஇ,மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்பது.  சீவன் முத்தர்களுக்கும் சில சமயங்களில் வாசனை வந்து தாக்கும்.  உடம்பு இருக்கிற வரைக்கும் அந்தத் தாக்குதலுக்கு இடம் உண்டு. அதனால்ஞானம் பெற்றுவிட்டோம் என்று அசட்டையாக இருத்தல் கூடாது. வாசனை வந்து தாக்காமல் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலான ஞானம் பெற்ற சீவன்முத்தர்களும் வாசனாமலம் தாக்காமல் இருக்க  சிவவேடத்தையும் ஆலயத்தையும் வழிபட வேண்டும். ஞானம் பெற்றவர்களுக்கு வாசனா மலம் தாக்காமல் இருப்பதற்காக ஆண்டவனிடத்தில் அன்பு செய்து தொண்டு செய்யத்தான் வேண்டுமாம். இல்லாவிட்டால் நாளடைவில் உலகம் வாசனா மலத்தை அவர்களுக்கும் கொண்டு வந்து விடுமாம். 

 

     இந்த உண்மையெல்லாம் அநுபவத்தினால் உணர்ந்த அருணகிரியார், "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாள்"என்றார். 'என்னிடத்தில் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய அன்பு என்னும் வாள் இருக்கிறது. அது ஞானத்திற்குப் புறம்பானது அல்ல. அதுவே அவிரோத ஞானச் சுடர் வடிவாள்என்கிறார். "ஞான வாள் ஏந்தும் ஐயர்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஞானம் என்பது மெய்யறிவு. இனிப்புப் பண்டத்தை வாயில் போட்டுஇனிக்கிறது என்று அநுபவித்துச் சொன்னால் அது அறிவுதான். இந்த அறிவு உலகியல் அறிவு. இத்தகைய அறிவைக் கொண்டு நாம் உலகில் உள்ளவற்றைப் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இவன் வேண்டியவன்இவன் வேண்டாதவன்இவன் நம் சாதிஇவன் வேறு சாதியைச் சேர்ந்தவன்இது ஆண்இது பெண் என்றெல்லாம் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இது நமக்கு வேண்டும்இது நமக்கு வேண்டாம் என்ற வேறுபாடு காண்கிறோம். இது பேதஞானம். இதையே விரோத ஞானம் என்றும் சொல்லலாம். எமனுக்குக் கூற்றுவன் என்று ஒரு பெயர். அவன் உடம்பையும் உயிரையும் கூறுபோட்டுப் பிரிப்பதனால் அப்பெயர் பெற்றான். உலகில் உள்ளனவற்றை எல்லாம் கூறு போட்டுப் பிரித்துப் பார்க்கின்ற பேதஞானம் உடைய நாம்இறுதியில் கூற்றுவன் கையிலே சிக்கிக் கொள்கிறோம். கூறு படுத்தும் ஞானம்நம்மைக் கூற்றுவன் கையில் நம்மைச் சிக்க வைத்து விடுகிறது. இறைவனுடைய திருவடியில் உண்மையான அன்பு செய்கிறவர்களுக்கு அபேதஞானம் வரும்.எல்லா உயிர்களிடத்திலும் சமமான அன்பு பிறக்கும். வேறுபடுத்திப் பார்க்கத் தோன்றாது. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில் முருகனை, “சேரா நிருதர் குலகலகாஎன்று அதன் ஆசிரியர் பாடுகிறார். நிருதர்களாகிய அசுரர்கள் தாமும் ஒன்று சேர மாட்டார்கள். பிறரையும் ஒன்று சேர விட மாட்டார்கள்இணைய வேண்டியவைகளையும் பிரித்துத் துன்புறுத்தும் நாட்டம் உடையவர்கள். அந்த உணர்ச்சி உடையவர்கள் யாராக இருந்தாலும்அவரைஅசுர பரம்பரையினர் என்று சொல்லிவிடலாம். 

 

     அணைக்கும் கை தாயின் கைதெய்வக் கை. பிரிக்கும் கை பேயின் கைஅசுரர் கை. இறைவனிடம் தொண்டு பூண்டவர்கள் அணைக்கும் கையும் இணைக்கும் மனமும் உடையவர்கள்.கண்ட ஞானம் இன்றி அகண்ட ஞானம் பெற்றவர்கள் அவிரோத ஞானிகள் அவர்கள்.யாரிடமும் பகையின்றிவெறுப்பின்றி வாழ்கிறவர்கள். 

 

     செந்தில் வேலனுக்குத் தொண்டு என்றாலும் அவிரோத ஞானம் என்றாலும் ஒன்றுதான். வேறுபாடு இல்லை. இறைவனுக்குத் தொண்டுபட்டதால்,உலகத்து ஆருயிர்கள் அத்தனையும் ஒன்று என்ற நினைப்பு வந்தது. ஆண்டவனுக்கு அவ்வுயிர்கள் எல்லாம் குழந்தைகள் என்று உணர்ந்துபிரித்துப் பிரித்துப் பார்க்கின்ற தன்மை மாறிஎல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கின்ற அவிரோத ஞானம் வந்தது.

 

     இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் உயிர்களுக்கும் தொண்டு செய்து அன்பு பாலிப்பார்கள். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டியவை. ஒரு தகப்பனிடம் அன்பு செய்பவர்கள் யாரும் அவனுடைய குழந்தையை அலட்சியம் செய்யமாட்டார்கள். சிவபெருமானிடம் பக்தியோடு தொண்டு புரியும் பிரமதேவன்சிவனை வணங்கிவிட்டுமுருகனை அலட்சியம் செய்து உள்ளே நுழைந்தான். அவனுடைய தலையில் குட்டிஅவனுக்கு உண்டாகி இருந்த மண்டைக் கனத்தைப் போக்கினார் முருகப் பெருமான். இறைவனிடம் அன்பு உள்ளவர்கள் என்றால் அவனுடைய குழந்தைகளாகிய உலகிலுள்ள உயிர்களிடத்திலும் அன்பு செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு அருள் செய்வான். அவன் வேறுஇவன் வேறு என்கிற விரோத ஞானம் போய்எல்லோரும் ஆண்டவனுடைய குழந்தைகள் என்கிற அவிரோத ஞானத்தால் காலனையும் வென்றுவிடலாம். அருணகிரியார், "என்னிடத்தில் தொண்டாகிய வாள் இருக்கிறது. அவிரோத ஞானம் என்கிற வாளும் அதுதான் என்கிறார்.

 

     இந்த அவிரோதஞானம் என்னும் வாளை இறையருளால் பெற்றவர்கள்எமனையே அச்சுறுத்துவார்கள். அவர்களுக்கு மரணம் என்பதே இல்லை. அருணகிரியார் எமனை அச்சுறுத்துகின்றார். எமனுக்கு அந்தகன் என்பதும் ஒரு பேர். அச்சொல்லுக்குக் குருடன் என்று பொருள். ஆகையால், "நீ அந்தகன் அல்லவாஉனக்கு இந்த வாளின் சுடரை உன்னால் காணமுடியாது. உடம்பிலே கொஞ்சம் பட்டால்தான் தெரியும். என் கைக்கு எட்டும்படி வா பார்க்கலாம்இதன் கூர்மையைக் காட்டுகிறேன்"என்கிறார். "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாய்டா அந்தகா! வந்து பார்சற்று என் கைக்கு எட்டவே". என்று பாடுகின்றார்.

 

     "ஏதோ நான் வெற்று வேட்டு என்று எண்ணாதே. என் கையில் பளபள என்று மின்னுகின்ற கத்தி உள்ளது. அந்தகாஎன் கைக்கு எட்டும்படியாகச் சற்று என் அருகில் வந்து பார். இந்தக் கத்தியின் கூர்மை எவ்வளவு என்பதை நீ உணர்ந்து கொள்வாய்" எனச் சொல்கின்றார்.

 

     அவரைப் போலவே நாமும் அச்சம் இல்லாமல் சொல்ல வேண்டும். என்றால்நமது நெஞ்சத்தில் அருணகிரியாருக்கு இருந்த முறுக்கு இருக்கவேண்டும். செந்தில் வேலனுக்குத் தொண்டு செய்தால் அந்த முறுக்கு ஏறும். அவனுக்குத் தொண்டனாக மாத்திரம் இருந்து கொண்டுஉலகிலுள்ள உயிர்களிடத்து அன்பு இல்லாமல் இருத்தலாகாது. அவன் உயர்ந்தவன்இவன் தாழ்ந்தவன் என்று கூறுபோட்டுக் கொண்டு இருந்தால்கூற்றுவனுக்குத் தான் இரையாகும்படி நேரிடும். செந்தில்வேலனுக்குத் தொண்டு செய்து கொண்டேஉலகிலுள்ள ஆருயிர்கள் எல்லாம் அவன் குழந்தைகள் என உணர்ந்துஎல்லா உயிர்களிடத்திலும் அன்பு பாலிப்பதே அவிரோத ஞானம். 

 

     அந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால் நெஞ்சிலே எத்தனை வீரம் வந்துவிடும்தெரியுமாயமனுக்கு அஞ்சாத தைரியம் வரும். திருடனையும் பாம்பையும் பேயையும் கண்டு அஞ்சாத தைரியம் தைரியம் அல்ல. காலனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் வீரமே வீரம். இந்திரியங்களின் வழியே செல்கிறவர்களுக்கு அந்த வீரம் வராது. இறைவன் அடியார்களுக்கே வரும். உண்மை அடியார்களை வீரர் என்று பெரியபுராண ஆசிரியர் ஆகிய தெய்வச் சேக்கிழார் பெருமான் அடையாளப் படுத்துகின்றார். 

 

"ஆரம் கண்டிகைஆடையும் கந்தையே

பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார்,

ஈர அன்பினர்யாதும் குறைவிலார்

வீரம் என்னால் விளம்பும் தகையதோ?”  --- பெரியபுராணம்.

 

     வாழையடி வாழை என வந்த திருக்கூட மரபினில் வந்தவர் அருணகிரியார். நம்முடைய கோழை நெஞ்சத்திலும் அத்தகைய வீரம் விளங்கவேண்டும் என்ற பெருங்கருணையோடு "கந்தர் அலங்காரம்" பாடுகின்றார்.

 

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் 

திண்டாட வெட்டி விழவிடுவேன்;செந்தில் வேலனுக்குத் 

தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் 

கண்டாய்டா அந்தகா! வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே". 

 

இதன் பொருள் ---

 

கூற்றுவனே! திருச்செந்தூர் என்னுமு திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள வேலாயுதப் பெருமானுக்கு அடிமையாகிய என்னுடைய விரோதம் இல்லாத ஞானம் ஆகிய,ஒளி பொருந்தியதும் கூர்மை உடையதும் ஆகிய வாளைப் பார். எனது கைக்கு எட்டுகின்ற அளவில் சற்றே வந்து பார். அந்த வாளினால் உன்னுடைய கதாயுதமும்மூவிலைச் சூலமும் உனது கையில் இருந்து பொடிப்பட்டுப் போகுமாறு செய்துஉன்னையும் மோதி வலி அழிந்து வருந்துமாறு வெட்டி விடுவேன்.

 

     இறைத் தொண்டில் ஈடுபட்டுஅவிரோத ஞானத்தைப் பெற்றுமரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வழி காட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...