அறிவு நூல் --- உலக நூல்

 


உலக நூல் --- அறிவு நூல்.

----

 

     சற்றேறக்குறைய ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்புவீட்டுத் தேவைக்கான பொருளை வாங்க நான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றேன். வழக்கம் போலநான் வாங்கிய பொருளை ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிழித்த தாளில் வைத்துப் பொட்டலமாக்கிக் கடைக்காரர் என் கையில் கொடுத்தார். இன்னொரு பொருளை வேறொரு புத்தகத்தில் இருந்து தாளைக் கழித்து பொட்டலமாக்கித் தந்தார். 

 

     எப்பொழுதுமே எந்த ஒரு துண்டுச் சீட்டாக இருந்தாலும் கூடஅதில் உள்ளதைத் தவறாமல் படித்துப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பதற்காக அல்ல. "கண்டுஅத்தைப் படித்தால் ஒருவன் பண்டிதன் ஆவான்" என்பது தான் அது. 

 

     இந்த உண்மையெல்லாம் அப்போது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. எனக்கு உள்ள பழக்கத்தின் காரணமாககடைக்காரர் வசமிருந்து பொட்டலம் மூலமாகக் கிடைத்த அந்த இரண்டுத் தாள்ளை வீட்டுக்கு வந்த பிறகு நான் படித்துப் பார்த்தேன். எனக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. ஒரு தாளில் வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா பாடல் இருந்தது. மறு தாளில் இப்போது நான் சொல்லப் போகும் தகவல் இருந்தது. இரண்டையும் படித்த பின்னர் எனக்கு உண்டான ஆவல் காரணமாக கடைக்குச் சென்று அந்த இரண்டு தாள்கள் அடங்கிய பழைய புத்தகங்களைக் கேட்டேன். ஒன்று தீர்ந்து விட்டது. இருந்தது வள்ளலார் அருளிய திருவருட்பாத் தொகுப்பு மட்டுமே தான். அதை விலைக்குக் கேட்டேன். கடைக்காரர் இலவசமாகவே தந்தார். நன்றி சொல்லிப் பெற்று வந்தேன். 

 

     அதற்குப் பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ வாடகை வீடுகளை நான் பார்க்க நேர்ந்தது. வீட்டை மாற்றும்போதுசில பொருள்களை தேவையில்லை என்று வீசி விடுவேன். சில பொருள்கள் எப்படியோ எனக்கு அகப்படாமல் போனதும் உண்டு. ஆனால்அந்த அரைத் தாளை மட்டும் இன்னமும் நான் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன். சில புத்தகங்களை நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்னிடமிருந்து எடுத்துச் செல்வார்கள். அவை என்னிடம் பெரும்பாலும் திரும்பி வருவது இல்லை. அவ்வப்போது நண்பர்களிடம் நான் போற்றிப் பாதுகாக்கும் துண்டுச் சீட்டைக் காட்டிகையோடு அதை நான் திரும்பப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்.

 

     சாதாரணமாக ஒரு A4 தாளின் நான்கில் ஒரு பகுதி அளவை உள்ள அதை நான் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கின்றேன்அதுவும் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக என்னும்போதேஎல்லாருக்கும் அந்தத் துண்டுச் சீட்டிலே அப்படி என்னதான் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள ஆவல் மேலிடும் தான். இதோ அந்தத் தாளில் உள்ள செய்தி....

 

     ////தமிழக முதல்வராக அண்ணா அவர்கள் பதவி ஏற்றதும்வெளிநாடுகளுக்குச் சென்றார். அந்த நேரத்தில்பல நிகழ்ச்சிகளில் பேசினார். முடிவில் வெளிநாட்டவர் பலரும் பேரறிஞர் அண்ணா அவர்களை ஒரே நேரத்தில் ஒருசேர எழுந்துஒரு கேள்வி கேட்டனர். "ஐயாதங்கட்கு உண்மையில் உங்கள் உள் உணர்வோடு பிடித்த நூல் எது?"

 

     மக்கள் எல்லாம் அண்ணா அவர்களிடமிருந்து எதிர்பார்த்தது ஒன்று. ஆனால் அண்ணா அவர்கள் சொன்னது, "எனக்கு திருமூலர் திருமந்திரம் நூல் ஒன்றுதான் உயிர்க்கு உறுதுணையாக உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நூல்" என்றதும் மக்கள் எல்லோரும் சொல்லொணா வியப்பில் மூழ்கினார்கள்.////

 

     இதை உங்களில் பெரும்பாலோரால் நம்பமுடியாது.

 

சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றால் மனிதன் வேறுபட்டு விடக் கூடாது என்று நிறையவே பேசுகின்ற,எழுதுகின்ற உலகில், சாதிஇனம்மொழிசமயக் கொள்கைகள் போன்ற வேறுபாடுகள் மலிந்துள்ள சமுதாயம்தான் நாம் இன்றும் காண்பது. இந்த பேத உணர்வுகளைக் களைந்து ஒரு புதிய சமுதாயம் காண எத்தனையோ பெரியவர்கள் பிறந்த பூமி இது. "சாதி இரண்டொழிய வேறு இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார். 

 

     "சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அல்லவே" என்று கூவினார் வள்ளல்பெருமான். அவர் அருளிய பாடல்களை ஓதிக் கொண்டே இன்னமும் சாதிப் பித்து ஒழியாத நிலையில் மனித சமுதாயத்தின் ஒரு பகுதி, தம்மைச் சன்மார்க்கத்தினர் என்று கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 

     மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த மணிவாசகப் பெருமான், "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேன்" என்றார். அருமையான திருவாசகப் பாடலை ஓதுகின்றவர்களில், சாதி குலம் என்னும் வேற்றுமைகளைக் கருத்தில் கொள்ளாதவர் மிக அருமையே.

 

     "ஒன்றே குலம் ஒருவனே தேவன்". "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்". "யாதும் ஊரேயாவரும் கேளிர்" என்பதெல்லாம் வீதிக்கு வீதி முழங்கியது ஒருகாலம். என்னைப் போன்றவர்களைநாங்கள் இளைஞராக இருந்த பொழுதுஅதாவது ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்,ஒன்றே குலம் ஒருவனே தேவன்யாதும் ஊரேயாவரும் கேளிர் என்று யார் சொன்னது என்று கேட்டால்அறிஞர் அண்ணா என்றுதான் உடனடியாகப் பதில் வரும். 

 

     "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதும் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பதும் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரம் என்ற நூலை அருளிய திருமூல நாயனாரின் அருள்வாக்கு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

 

     "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது புறநானூற்றுப் புலவர்களில் ஒருவராகிய கணியன் பூங்குன்றனார் என்பதும் அந்தக் காலத்தில் பாமர மக்கள் பலருக்கும் தெரிந்திருக்க முடியாதுதான். யார் சொன்னது? என்றால் அண்ணா சொன்னார் என்றுதான் அப்போதைய இளைஞர்கள் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் சொன்னார் என்பதற்காகவே சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்கள் அக்காலத்தில் உண்டு. சாதி வேறுபாடு கொள்ளமால் ஒருமை மனதுடன் வாழ்ந்தவர்களும் அக்காலத்தில் உண்டு. அண்ணா அவர்கள் நல்லநூல்களைத் தேர்ந்து படித்துச் சொன்ன சொற்கள் பலன் தராமல் போயின என்று சொல்லுவதற்கு இல்லை.

 

     காய்தல் உவத்தல் இன்றி நூல்களைப் படித்துத் தெளியும் ஆற்றல் படைத்தவர் என்பதால்உண்மையிலேயே அண்ணாதுரை அவர்கள் ஓர் அறிஞர் தான். ஓர்ஒரு என்பதற்கு "ஒப்பற்ற" என்று பொருள். எனவேஅண்ணா அவர்கள் "ஒப்பற்ற அறிஞர் " என்பதில் ஐயமில்லை. 

 

     நூலக வசதிகளும்அச்சிட்ட புத்தகங்களும் அருகி இருந்த காலம் அது. இப்போது போல் பட்டனைத் தட்டினால் எந்த நூலையும் பெறலாம் என்ற தொழில்நுட்ப வசதியெல்லாம் இல்லாத காலம் அது.

 

     கற்றல் குறித்துச் சொன்ன திருவள்ளுவ நாயனாரும், "கற்பவை கசடு அறக் கற்க" என்றும், "கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்றும் தான் அறிவுறுத்தினார்.

 

     அதாவதுஅறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றிசிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும் பல,நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால்சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின்கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து,பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில்,நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும்இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கிஉண்மைப் பொருளை உணர்ந்துஉணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால்,உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.

 

     கற்ற வழியில் நிற்றல் என்பது,இல்லறத்தில் வழுவாது நின்றுமனைவியோடு போகம் புசித்துகெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கிதுறவறத்தில் நின்றவரானால்தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்துஅவா அறுத்துசிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.

 

     இந்தப் பிறவியில் ஒருவன் அடைய வேண்டிய சுவர்க்க இன்பம் ஒன்று உள்ளது என்றால், அது கற்ற பலரோடும் கூடி நல்ல நூல்களைப் பியன்று வருதலே ஆகும் என்கின்றது, "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

நற்குணம் உடைய வேந்தை 

      நயந்து சேவித்தல் ஒன்று;

பொற்புடை மகளிரோடு 

      பொருந்தியே வாழ்தல் ஒன்று;

பற்பலரோடு நன்னூல் 

      பகர்ந்து வாசித்தல் ஒன்று;

சொல்பெறும் இவைகள் மூன்றும் 

      இம்மையில் சுவர்க்கமாமே ---  விவேகசிந்தாமணி.

 

இதன் பொருள் ----

 

     நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று--- நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பிஅவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்,பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று--- நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டுஅவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும்,பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று--- பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்துஅந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும்  சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே ---புகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில்சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

 

     விளக்கம்--- உடம்பை விட்டபின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிரதுன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தைஇப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும்.

 

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிதில்லை --- அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.        --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     எப்பிறப்பு ஆயினும் --- வேறு எந்தப் பிறப்பானாலும்மக்கட்பிறப்பின் --- மக்கட் பிறப்பினைப் போலஒருவற்கு ---ஒருவனுக்குஏமாப்பு --- இன்பம் செய்வதுபிறிது இல்லை--- வேறு ஒன்று இல்லைஅப்பிறப்பில் --- அம் மக்கட் பிறப்பில்கற்றலும் --- கற்பதற்கு உரியவற்றைக் கற்றலும்கற்றவை கேட்டலும் --- கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும்கேட்டதன்கண் நிற்றலும் --- கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும்கூடப்பெறின் --- கூடப் பெற்றால்.

 

தேசும், திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து

மாசு மனத்தகத்து இல்லாமை, --- ஆசு இன்றிக்

கற்றல்,கடன் அறிதல்,கற்றார் இனத்தராய்

நிற்றல் வரைத்தே நெறி.        --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     தேசும் --- கீர்த்தியும்திறன் அறிந்த திட்பமும் --- நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய்தேர்ந்து உணர்ந்து --- மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிந்துமனத்தகத்து மாசு இல்லாமை --- மனத்திடைக் குற்றமில்லாமல்ஆசு இன்றிக் கற்றல் --- மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும்கடன் அறிதல் --- தனது கடமையை அறிதலும்கற்றார் இனத்தராய் நிற்றல் --- கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகியவரைத்தே நெறி --- எல்லையினை உடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

 

 

கற்றாங்கு அறிந்துஅடங்கிதீதுஒரீஇநன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றிபணிஅறநின்றுஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச் சென றார்.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     கற்று ஆங்கு அறிந்து --- அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்துஅடங்கி --- அவற்றிற்கேற்ப அடக்கமாய்தீது ஒரீஇ --- (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டுநன்று ஆற்றி --- (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து,பெற்றது கொண்டு மனம் திருத்தி --- கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்திபற்றுவதே பற்றுவதே பற்றி --- தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்திற் கொண்டுபணி அற நின்று --- சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்றுஒன்று உணர்ந்து --- தனிப்பொருளாகிய இறைவனை அறிந்துநிற்பாரே --- நிற்கின்ற ஞானியரேநீள்நெறி சென்றார் --- வீட்டையும் வழியில் நின்றவராவர்.

 

     அறிவு நூல்கள் உள்ளத்தில் உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்க வல்லவை. அல்லாத நூல்கள் எல்லாம் ஆரவாரத் தன்மையை வளர்ப்பவை என்கின்றது நாலடியார்.

 

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉம் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார் இல்.       --- நாலடியார்.

 

இதன் பொருள் --- 

 

     ஆராய்ந்து அறிந்து, நல்ல அறிவு நூல்களைக் கல்லாது, இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், உலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்குப் உதவலாம். அவையெல்லாம் பிறவித் துயரில் தடுமாறும் உயிர்களுக்குத் துன்பத்தில் இருந்து விடிபடத் துணையாக மாட்டா.

 

     பல கற்றோம் என்று கூறிக் கொண்டு தம்மைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்குவதோடு, பிறரையும் அறிவு மயக்கத்தில் ஆழ்த்தும் செயல் கூடாது. அறிவு நூல்களைப் பயின்று, நல்லறிவு பெற்று, பிறரையும் நல்வழிப்படுத்துதல் வேண்டும்.

அறம் சார்ந்த வறுமை - அறம் சாரா வறுமை

 


"அறம் சார்ந்த வறுமை --- அறம் சாரா வறுமை"

-------------------------

 

            இந்தத் தலைப்பே இதுவரையில் கேட்டிராதது போல் இருக்கும். ஆனால் உண்மை. உண்மை என்ன என்று ஆராய்வோம்.

 

            திருக்குறளில் "நல்குரவு" என்னும் ஒர் அதிகாரத்தை வைத்தார் நாயனார். நல்குரவு என்னும் தலைப்பிற்கு, "நுகர்தற்கு ஏதும் இல்லாமை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.

நல்குரவு என்பதுவறுமைஇல்லாமைஏழ்மைமிடிதரித்திரம் என்று பலவாறாகச் சொல்லப்படும்.

 

            அருணகிரிநாதர் வறுமையை, "மிடி என்று ஒரு பாவி" என்று அருளினார். வறுமையில் கிடந்து வாடுபவனை, "வறுமையாகிய தீயின் மேல் கிடந்து நெளியும் நீள் புழு ஆயினேன்" என்றார்.

 

"வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா!

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே!

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே".

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய, "கந்தர் அனுபூதி" யில் வரும் ஒரு பாடல். வறுமையின் கொடுமையை இந்தப் பாடலில்பின்வருமாறு விளக்கி அருளினார்.

 

            "பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே! வறுமை என்கிற பாவி வந்து பிடித்துவிட்டால்ஒருவனுடைய அழகும்சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும்நல்லொழுக்கமும்பரம்பரைப் பெருமையும்நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்!"

 

            வறுமை காரணமாக உண்ண உணவு கிடைக்காமல்பசி நோய் வந்துவிட்டால்தன்மானமும்,குடிப்பெருமையும்கல்வியும்,கொடையும்அறிவு உடைமையும்தானமும்தவமும்பெருமையும்தொழிலில் ஈடுபடும் முயற்சியும்தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும்ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.

 

"மானம்குலம்கல்விவண்மைஅறிவுடைமை,

தானம்தவம்உயர்ச்சிதாளாண்மை, - தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்".                --- ஔவையார்.

 

"தாங்க ஒணா வறுமை வந்தால் 

            சபைதனில் செல்ல நாணும்,

வேங்கை போல் வீரம் குன்றும்,

            விருந்தினர் காண நாணும்,

பூங்கொடி மனையாட்கு அஞ்சும்

            புல்லருக்கு இணங்கச் செய்யும்,

ஓங்கிய அறிவு குன்றும்

            உலகெலாம் பழிக்கும் தானே".

 

இது "விவேகசிந்தாமணி" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...   இதன் பொருள் ---  

 

            ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால்அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால்விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனைகீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானதுஇப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.

 

 

"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்

            சரீரத்தை உலர்தர வாட்டும்,

தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,

            சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே

            தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,

தரித்திரம் அவமானம் பொய் பேராசை

            தரும் இதில் கொடியது ஒன்று இலையே".

 

இது குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

           வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும் வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும்சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல்பொய் பேசுதல்பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். (ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.

 

"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,

            சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,

தரித்திரம் பற்பல துக்கமும் தோன்றத்

            தக்க பேர் ஆகரம் என்ப,

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்

     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,

தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிதுஅத்

     தகையதை ஒழித்தல் நன்று ஆமே".

 

இதுவும் குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்;  சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்;  வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர்வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்;தரித்திரம் கொடிய எவற்றினும் கொடியது.  அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

 

"கொடியது கேட்கின்நெடிய வெவ் வேலோய்!

கொடிது கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை;

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;

அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;

அதனினும் கொடிது இன்புற

அவர் கையில் உண்பதுதானே!"    --- ஔவையார்.

 

            இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிகமிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும். தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானதுஅன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானதுஅந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று என ஒளவையார் தெளிவுபடுத்தி உள்ளார்.

 

"வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;

     மனையாட்டி சற்றும் எண்ணாள்;

வாக்கில் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

     வசனமாய் வந்துவிளையும்;

 

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது,

     சிந்தையில் தைரியமில்லை;

செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;

     செல்வரைக் காணில் நாணும்;

 

உறுதிபெறு வீரமும் குன்றிடும்விருந்துவரின்

     உயிருடன் செத்தபிணமாம்;உலகம் பழித்திடும்

பெருமையோர் முன்புசென்று

     ஒருவர் ஒரு செய்திசொன்னால்,

 

மறுவசனமும் சொலார்துன்பினில் துன்பம்இது

     வந்து அணுகிடாது அருளுவாய்!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல் நீடு

     மலைமேவு குமரேசனே!"

 

            இதுகுருபாத தாசர் என்னும் பெரியார் இயற்றிய, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! --- திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!

 

            வறுமை தான் வந்திடில் தாய் பழுது சொல்வாள் --- (ஒருவனுக்கு) வறுமை வந்து சேருமானால் அன்னையும் குற்றம் கூறுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் --- மனைவியும் சிறிதும் மதிக்கமாட்டாள் வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் --- வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும் சிறுமையோடு தொலையா விசாரமே --- இழிவும் நீங்காத கவலையுமே;அல்லாது --- அது அல்லாமல் சிந்தையில் தைரியம் இல்லை --- உள்ளத்தில் துணிவு இருக்காது செய்ய சபை தன்னிலே சென்று வர வெட்கம்ஆம் --- நல்ல சபையிலே போய் வர நாணம் உண்டாகும்;

செல்வரைக் காணில் நாணும் --- செல்வம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கம் அடையும் உறுதிபெறு வீரமும் குன்றிடும் --- நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்விருந்து வரின் உயிருடன் செத்த பிணம் ஆம் --- விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும் உலகம் பழித்திடும் --- உலகத்தார் இகழ்ந்து பேசுவர் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் மறு வசனமும் சொல்லார் --- பெருமையுடையோர் எதிரில் போய்வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் சொல்லமாட்டார்;துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் --- துன்பத்திலும் துன்பமான இந்த வறுமையானது (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்புரிவாய்.

 

"பிறந்த குலம் மாயும்பேர் ஆண்மை மாயும்;

சிறந்த தம் கல்வியும் மாயும்;-கறங்கு அருவி

கல்மேல் கழூஉம் கண மலை நல் நாட!

இன்மை தழுவப்பட்டார்க்கு". 

 

இது நாலடியார் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            கறங்கு அருவி கல்மேல் கழூஉம் கணமலை நல் நாட --- பாய்ந்து ஒலிக்கின்ற அருவி நீரானது கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மை தழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் --- உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்அவருடைய பேராற்றல் கெடும்எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும்.

 

            திருவள்ளுவ நாயனார்இந்த வறுமை குறித்து, "நல்குரவு" என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள்பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.

 

"நல்குரவு என்னும் இடும்பையுள்பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்".

 

என்பது திருக்குறள்.

 

            வறுமையை, "இன்மை என ஒரு பாவி" என்றும் சாடினார் திருவள்ளுவ நாயனார்.இத்தனை கொடிய வறுமையானது ஒருவனை வந்து சாருவது கொடுமையிலும் கொடுமையானது தான். வறுமை காரணமாகவே சமூகத்தில் தீய செயல்கள் அத்தனையும் நிகழ்கின்றன. 

 

            இந்தக் கொடிய வறுமை வந்து சேர்ந்துவிட்டால்அப்போதும் ஒருவன் அறநெறியில் பிறழாது வாழ்வான் என்றால்அவனைச் சார்ந்த வறுமையானதுஅறம் சார்ந்ததாக இருக்குமானால்யார் வெறுத்தாலும்பெற்றெடுத்த தாய் வெறுக்கமாட்டாள். 

 

            அறச்செயல்களைப் புரிந்து வறுமையானோர் பலர் உண்டு. தமது செல்வத்தை எல்லாம் எல்லோருக்கும் வரையாது வழங்கிவறுமையை அடைந்து சிறுமைப்பட்டவர்கள் உண்டு. ஆங்கிலேய அரசுக்கு எதிராககப்பல் வாணிகத்தைச் செய்யும் அளவுக்குச் செல்வ வளம் பெற்று இருந்தவர் "கப்பல் ஓட்டிய தமிழன்" என்று சிறப்புப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளையவர்கள். தமது வாழ்நாள் இறுதியில் வறுமையில்தான் வாடினார். 

 

            "அறம் சார்ந்த நல்குரவு" என்பது அறவழியில் ஒழுகியதால் வந்த வறுமையாகும். அதை உலகம் வறுமையாகக் கொள்ளாது. "செவ்வியான் கேடு நினைக்கப்படும்" என்று பிறிதொரு திருக்குறளில் சொன்னார்.

 

            இதைக் காட்டவேதிருவள்ளுவ நாயனார், "அறம்சாரா நல்குரவு" என்று ஒரு பிரிவை உண்டாக்கிபின்வருமாறு ஒரு திருக்குறளை வைத்தார். 

 

"அறம் சாரா நல்குரவுஈன்ற தாயானும்

பிறன் போல நோக்கப் படும்"

 

என்பது நாயனார் வகுத்து அருளிய அற்புதமான திருக்குறள்.

 

            அறத்துடன் பொருந்தாத வறுமையை உடைய ஒருவன்தன்னைப் பெற்ற தாயாலும்யாரோ ஒருவனைப் போலப் பார்க்கப்படுவான் என்பது இத் திருக்குறளின் பொருள்.

 

            அறம் சார்ந்த வறுமையில் உள்ளோர்அது தீர்ந்து செல்வராவது திண்ணம் என்பதுபெரிய புராணத்தில் வரும் குங்கிலியக்கலய நாயனார் வரலாற்றால் தெரியவரும். 

 

            அறம் சாராத வழியில் ஒழுகினால் நிச்சயம் வறுமை வரும். அது தீவினையின் பயன். அந்த வறுமைதான் தீராது வருத்தும்.

எனவேஅறம் சாராத தீயவழிகளில் வாழ்ந்துவறுமையைத் தேடிக் கொள்ளுதல் கூடாது. 

 

     இனிவறுமை அறிவின்மை என்று திருக்குறள் கூறும். நாலடியார் கூறுவதும் அதுவே. "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் திருவள்ளுவ நாயனார். 

பொருட்செல்வமானது கீழ்மக்களிடமும் மிகுந்து காணப்படுவதால்பொருள் இன்மை வறுமையாக மாட்டாது. உண்மையில் வறுமை என்பது நல்லறிவு விளங்காமையே ஆகும். நல்ல குணம் படைத்தோர் நல்லறிவு உள்ளவரை நாடிச் சென்றுதமது அறிவின்மையைப் போக்கிக் கொள்வார்கள்.  தீயகுணம் உள்ளவர்கள்தமக்கு அறிவு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால்அவர்களை என்றும் அறிவு வறுமை நீங்காது. இதனை நாலடியார் என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் அருமையாகக் கூறும்...

 

"நுண்ணுணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால் 

பெண் அவாய்ஆண்இழந்த பேடி அணியாளோ

கண்ணவாத் தக்க கலம்?"

 

     நுட்பமான அறிவுத் திறன் இல்லாமல் இருப்பதுதான்ஒருவனுக்கு வறுமை என்று கூறப்படுவதாகும். அந்த அறிவை உடைமையோமிகவும் வளர்ச்சி பெற்ற பெருஞ்செல்வமாகும். எண்ணிப் பார்ப்போமானால்பெண் தன்மையை விரும்பிஆண் தன்மையை இழந்து விட்ட பேடியானவள்கண்கள் விரும்பும்படியான கவர்ச்சி மிக்க ஆபரணங்களை அணியமாட்டாளோ?

 

     அறிவுதான் சிறந்த செல்வம்அது இல்லாதோர் பெற்றுள்ளசெல்வம் எல்லாம் பேடியின் புனைவுகள் பெண்மையாகத் தோன்றினும்,அது உண்மையில் பெண்மையாகாதது போலச் செல்வம் போலத் தோன்றினும் செல்வம் ஆகாது என்று அறிதல் வேண்டும்.

 

 

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...