இறைவனைப் புகழ்வது எப்படி?

 

இறைவனைப் பாடுவது எப்படி?

----

கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்க வேண்டும். இதுதான் அனுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே,  எல்லை இல்லாத பேரின்பத்தை அருளக் கூடிய இறைவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படை பிழையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனிடத்தில் அன்பு வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். 

"அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலவன் கவியை, அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்" என்கிறார் அருணகிரிநாதர். இது அவர் பாடியருளிய பாடல்களுக்கு மட்டும் அல்லாமல், அவருக்கு முன்னாலே தோன்றிய அருளாளர்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், திருஞானசம்பந்தர் முதலியவர்கள் சிவபரம்பொருளைப் பற்றியும் பாடியருளி உள்ள பாடல்கள் அத்தனைக்கும் பொருந்தும். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பலப்பல பாடல்கள் அருளாளர்கஙள் பாடி இருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இவ்வாறு கந்தர் அலங்காரத்தில் பாடினார் அருணகிரிநாதர்.

தமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே பாடல்களால் அமைந்தவை. "பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரியபுராணம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு. குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு. குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு. குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு.  திருமணம் வந்தால் பாட்டு. இறுதியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வு அளப்பரிய பாடல்களால் ஆனது. அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் காலத்தை வெல்ல முடியாது. காலத்தை வென்றவன் ஆன இறைவன் திருவருளைப் பெற முடியாது.

பாடல்களைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி மனதில் உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால்  அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.

பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இறைவனிடம் இருந்தே தோன்றியது. எழுத்துக்களுக்குத் தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. "வாக்தேவதை" என்று சொல்வார்கள். ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, முகவரியையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது அல்லவா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால்,  அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அழுகையே தன் மொழியாகக் கொண்டு பிறக்கும் குழந்தை, பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன. "குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

  'திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை' என்று நாயனார் கருத்து இன்னதென்று அறியாதவர்கள் அப்படிச் சொல்லலாம். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது நாயனார் கருத்து அல்ல. முயற்சியும் பயிற்சியும் இருந்தால், சில ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் அப்படியே. வித்தையில் எவ்வளவுதான் வல்லவனாக ஒருவன் இருந்தாலும், சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச அவனுக்கு வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம். யானை மாதிரி பிளிறலாம்.  வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது. முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும் விட, கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது, இனிமையானது. முழு வார்த்தையையும் பேச வராத குழந்தை மழலை பேசுகின்றது. அதைக் கேட்டு மகிழ்கின்றனர் தாயும், தந்தையும். எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் மகிழ்ச்சி அடைவதில்லை.  "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து, மருத்துவரிடம் அழைத்துப் போவார்கள். மழலைதான் இனிது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயதில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர் மகிழமாட்டார்கள். அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.

ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணி தாய்தந்தையர் மகிழச்சி அடைகிறார்கள். மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெருவரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு. பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு.

'நான் உனக்கு உதவுகிறேன்' ஒருவன் என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அவன் மேலும் நமக்கு உதவுவான் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது?  இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவது உபகாரம் உண்டா?  என்றால் இல்லை. இதைப் பட்டினத்து அடிகளார் ஒரு பாடலின் வழி காட்டி உள்ளார்.


"பொன்னால் பிரயோசனம் பொன்படைத்

தாற்கு உண்டு, அப் பொன்படைத்தான்

தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு

  ஏது உண்டு, அத் தன்மையைப்போல்

உன்னால் பிரயோசனம் வேணது

  எல்லாம் உண்டு, இங்கு உன்தனக்கே

என்னாதல் பிரயோசனம் ஏது உண்டு

  காளத்தி ஈச்சுரனே"

நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற இறைவனுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று பட்டினத்து அடிகளார் சொல்கிறார். ஆனால், அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வைது பேசுகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபகாரம் செய்கிறோமே தவிர, ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை.

குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே, அம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறாள். பள்ளியில் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்கிறது. அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல வேலைக்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக் குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும்விட மிக அதிகமானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் விளங்குகிறவன் இறைவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் இறைவன் திருவுள்ளம் மகிழும்.

ஒரு தாய், தன் மகன் தினமும் பள்ளிக்குப் போகும் போது, மத்தியான்ன வேளையில் வயிறு பசித்தால் ஏதாவது வாங்கித் தின்னட்டும் என்று கைக்காசு கொடுத்து அனுப்புவாள்.  பள்ளியின் வாசலுக்கு எதிரே ஒரு கிழவி சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கி இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான். 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று காசு கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது'  என்றுதானே தாய் நினைப்பாள்?

இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். பள்ளிக்குச் சென்ற பிள்ளையைப் போலச் செய்தால் எப்படி? தாய் தான் காசு கொடுத்ததை நிறுத்திக் கொண்டது போல, இறைவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் அடுத்த பிறவியில் நம்மை ஊமையாக்கி விடுவான்.

நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அனுபவிக்கக் கூடியது பேச்சு மட்டும்தான். அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள்.  இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன்.

இறைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரம் என்றால், எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி.  ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். எனவே, சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. 

"வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே."

என்று அப்பர் பெருமான் பாடி இருக்கிறார்.

நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்?  அந்த வாய்க்குக் குடிக்கக் கூழும் கிடைக்காது என்கிறார் வள்ளல்பெருமான். "எந்தை! நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறு வாய்”. எனவே, வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற்கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் புகழ வேண்டியது நம்முடைய கடமை. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ, அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.

இறைவன் புகழ் ஒன்றே பொருள்சேர் புகழ். அவனைப் புகழ்ந்தார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா என்கிறார் திருவள்ளுவ நாயனார். "இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்பது திருவள்ளுவர் வாய்மொழி. பொருள்சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள். இறைவனுடைய புகழ் ஒன்றே உண்மையான புகழ்.  அவன் ஒருவனே புகழத் தக்கவன். எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை அப்பர் பெருமான் அருளிய திருத்தாண்டகப் பாடல் வழி அறியலாம்.

"நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்!

நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்!

மன் ஆனாய்! மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்!

மறைநான்கும் ஆனாய்! ஆறு அங்கம் ஆனாய்!

பொன் ஆனாய், மணி ஆனாய், போகம் ஆனாய்!

பூமிமேல் புகழ்தக்க பொருளே! உன்னை

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே. "

இறைவனைப் புகழ்ந்து பாடும் நன்றி உணர்வால் வாய் பெற்ற பயன் பெற்றது அல்லமால், மற்றொரு பயனும் உண்டு. இறைவன் பாடலை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகும் காலத்தில் வந்து மிரட்டுகிடன்ற பாவி ஆகிய இயமனுக்கு அஞ்ச வேண்டாம். அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்ல வராது. 

இறைவன் நினைப்புச் சாகிற காலத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். நம் நினைவில் என்ன என்ன எண்ணப்படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம். நம் நினைவில் உள்ள திருடன் கனவில் வரும்போது, தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். ஆனால், நாம் நினைப்பதில்லை.  அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன. கனவிலே இறைவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள் "பிழைப்பன், ஆகிலும் திருவடிப் பிழையேன்; வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்" என்றும், "நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்று பாடுகிறார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம். அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால், கழிந்த நாள் கிடக்கட்டும், இப்பொழுதிலிருந்தாவது இறைவன் திருப்புகழைச் சொல்லப் பழகி வரவேண்டும். 

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்'  என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் சில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள்.

இதைப் போலவேதான் இறைவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்

எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன

விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே."  --- கந்தர் அலங்காரம்.

நாம் இயமன் வாயில்தான் தூங்குகிறோம். நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. இயமன் முன் எச்சரிக்கை அனுப்பிவிட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பு இறைவனை நினைந்து அவனை வாயாரப் பாடிப் பகழ்தலே. திருஞானசம்பந்தர், "நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்?"

என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார்.






61. புத்தாடை உடுக்கும் நாள்

 

61.  புத்தாடை உடுக்கும் நாள்

-----


"கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்

     கட்டலாம் புதிய சீலை;

  கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில்

     கடிது நனைவுற்று ஒழிதரும்;


குறைபடாது இடர்வரும், வீரியம்போம், அரிய

     குருதிவாரம் தனக்கு;

  கொஞ்ச நாளில் கிழியும், வெற்றிபோம் புந்தியில்;

     குருவாரம் அதில் அணிந்தால்,


மறைபடாது அழகுண்டு, மேன்மேலும் நல்லாடை

     வரும்; இனிய சுக்கிரற்கோ

  வாழ்வுண்டு, திருவுண்டு; பொல்லாத சனியற்கு

     வாழ்வுபோம், மரணம் உண்டாம்;


அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்கு

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே --- புகழப்படுகின்ற வேதங்களின் வடிவாகவும் ஆகமங்களின் வடிவாகவும் விளங்கும் தூயவனே!

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

ஆதிவாரம் தனில் புதிய சீலை கட்டலாம் --- ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடையை உடுக்கலாம். 

(அவ்வாறு உடுத்தால்) 

கறை படாது --- ஆடையில் கறை பிடிக்காது. 

ஒளி சேரும் ---  தூயதாக ஒளிரும், 

கலை மதிக்கு ஆகாது - கலைகளையுடைய திங்களுக்குப் புத்தாடை புனைவது ஆகாது.   (உடுத்தினால்), 

பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் --- பல முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோகும், 

அரிய குருதிவாரம் தனக்குக் குறை படாது இடர்வரும் வீரியம் போம் --- நன்மைக்கு ஆகாத செவ்வாய்க்கிழமையில் புத்தாடை உடுத்தினால் மிகுந்த துன்பம் உண்டாவதோடு,  பெருமையும் நீங்கிவிடும், 

புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் --- புதன்கிழமையில் புத்தாடை உடுத்தினால் சிலநாளிலே கிழிந்து போகும்; வெற்றியும் நீங்கும், 

குருவாரம் அதில் அணிந்தால் மறைபடாத அழகு உண்டு; மேன்மேலும் நல்ல ஆடை வரும் --- வியாழக் கிழமைகளில் புத்தாடையை உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும் மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், 

சுக்கிரற்கோ வாழ்வு உண்டு திரு உண்டு --- புத்தாடையை வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும் உண்டாகும், 

பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் --- பொல்லாப்பை உண்டாக்கும் சனிக்கிழமையில் புத்தாடையை உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.

        ஞாயிற்றுக் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய நாள்களில் புத்தாடை அணிவதால் நலம் உண்டாகும் என்றும் மற்ற நாள்களில் புத்தாடை அணியலாகாது என்றும் பெரியோர் கூறுவர்.


60. கற்பில் மேம்பட்டவர்கள்

 60. கற்பு மேம்பாடு உடையவர்கள்

-----


"தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்

     தனக்கு இணங்காத நிறையாள்,

  தழல்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும்

     சாபம் கொடுத்த செயலாள்,


மன்னிவளர் அழல்மூழ்கி உலகு அறியவே தனது

     மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,

  மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி

     வாள்மாலை யான கனிவாள்,


நல்நதி படிந்திடுவது என்ன ஆர் அழல்மூழ்கி

     நாயகனை மேவு தயவாள்,

  நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி,

     நளினமலர் மேல்வை தேகி


அன்னம் என வருசந்த்ர மதிதுரோ பதை என்பர்

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆதியே --- முதற்பொருள் ஆனவரே!

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தன் கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன் தனக்கு இணங்காத நிறையாள் நானிலம் புகழ்சாலி --- தன்னுடைய கணவனின் வடிவத்துடன் தன்னைக் கூட வந்தவனுக்கு இணங்காத நிறைந்த கற்பினை உடையவள் உலகம் புகழும் அருந்ததி ஆவாள், 

தழல் கதிர் எழாமலும் பொழுது விடியாமலும் சாபம் கொடுத்த செயலாள் பேர் பெறு நளாயினி ---  கதிரவன் தோன்றாமலும், இரவு கழியாமலும் சாபம் கொடுத்த செய்கையினை உடையவள் புகழ்பெற்ற நளாயினி ஆவாள், 

மன்னி வளர் அனல் மூழ்கி உலகு அறியவே தனது மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள் நளின மலர் மேல் வைதேகி --- பொருந்தி வளர்ந்த தீயில் புகுந்து உலகம் அறியுமாறு தன் கணவனை அடைந்த அன்பினை உடையவள் தாமரை மலர்மேல் இருக்கும் இலக்குமியின் வடிவான சீதை, 

மைந்தனைச் சுட வந்த இறைவன் தடிந்த வடிவாள் மாலையான கனிவாள் அன்னம் எனவரு சந்திரமதி ----இறந்த தனது மகனைத் தீயில் இட சுடுகாட்டுக்கு வந்தபோது, தன் கணவன் வெட்டிய கூரிய வாள் ஆனது மலர் மாலையான கனிவினை உடையவள் அன்னம் போன்ற நடையை உடைய சந்திரமதி, 

நல் நதி படிந்திடுவது என்ன ஆர் அழல் மூழ்கி நாயகனை மேவு தயவாள் துரோபதை --- நல்ல ஆற்றிலே மூழ்குவதுபோல நிறைந்த தீயிலே முழுகித் தன் கணவனைக் கூடும் அன்பினை உடையவள் திரௌபதி, 

என்பர் --- என்று மேலோர் கூறுவர்.


59. பலரில் அரியவர் ஒருவர்

 



59. பலரில் அரியவர் ஒருவர்


"பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!

     பாடுவோர் நூற்றில் ஒருவர்!

  பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி தப்பாது

     பாடிப்ர சங்கம் இடுவோர்!


இதன்அருமை அறிகுவோர் பதினா யிரத்துஒருவர்!

     இதை அறிந்து இதயம் மகிழ்வாய்

  ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே

     இலக்கத்திலே ஒருவராம்!


துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்

     தூயர் கோடியில் ஒருவர் ஆம்.

  தொல்உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை

     சூழும்அவி நாசி பேரூர்


அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

தொல் உலகு புகழ் --- பழைமையான உலகம் புகழுகின்ற, காசி ஏகாம்பரம் கைலை சூழும் அவிநாசி பேரூர் அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி அத்தனே --- காசி, காஞ்சிபுரம், திருக் கயிலை, அடியவர்கள் சூழுகின்ற அவிநாசி, திருப்பேரூர், பெருமையுடைய திருவெண்காடு, திருச்செங்கோடு, திருக்காளத்தி ஆகிய தலங்களை இருப்பிடமாகக் கொண்ட முதல்வனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் --- சபையில் உள்ளோர் புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர், 

பாடுவோர் நூற்றில் ஒருவர் --- இனிமையாகப் பாடுவோர் நூற்றுக்கு ஒருவர், 

விதி தப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார் மீதில் ஆயிரத்து ஒருவர் --- முறை தவறாமல் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர், 

இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் --- இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரம் பேரில் ஒருவர், 

இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் --- இதன் அருமையை உணர்ந்து உள்ளம் மகிழ்ந்து பொருளை அளிப்பவர்கள், 

புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் --- உலகில் அருமையாக இலட்சத்தில் ஒருவர் ஆவர், 

துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த் தூயர் கோடியில் ஒருவர் ஆம் --- துதித்துப் போற்றுகின்ற முக்காலமும் உணர்ந்த உண்மையான றுள்ளத் தூய்மை உடையவர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.


58. இவையே போதும்

 



58. இவையே போதும்


"பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர்

     பூவலம் செய வேண்டுமோ?

  பொல்லாத கொலைகளவு இலாத நன்னெறி உளோர்

     புகழ்அறம் செய வேண்டுமோ?


நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்

     நல்லறம் செய வேண்டுமோ?

  நல்மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு

     நதி படிந்திட வேண்டுமோ?


மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்

     விரும்பி வழிபட வேண்டுமோ?

  வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை

     வேண்டி அர்ச்சனை செய்வரோ?


ஐயாறு உடன் கமலை, சோணாசலம், தில்லை

     அதிபனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை அதிபனே --- திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் எனப்படும் தில்லை ஆகிய திருத்தலங்களின் தலைவனே! அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர் பூவலம் செய வேண்டுமோ --- அழிவில்லாத உண்மையும் ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வருதல் வேண்டுமோ?

பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ --- தீய கொலையும் களவும் ஆகிய பாதகச் செயல்கள் அற்று, நல்லொழுக்க நெறியில் நற்பவர் புகழத்தக்க அறங்களைச் செய்தல் வேண்டுமோ?

நையாத காமத்தை லோபத்தை விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ --- என்றும் குறையாத ஆசையையும் உலோபத்தனத்தையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தைச் செய்தல் வேண்டுமோ?

நல் மனோ சுத்தி உண்டான பேர் மேலும் ஒரு நதி படிந்திட வேண்டுமோ --- நல்ல உள்ளத் தூய்மை பெற்றவர்கள், புண்ணிந நதிகளில் முழுகுதல் வேண்டுமோ?

மெய்யா நின் அடியரை பரவுவோர் உன்பதம் விரும்பி வழிபட வேண்டுமோ --- உமது அடியவரை உண்மையாக வணங்குவோர், உமது திருவடியைப் போற்றி வழிபட வேண்டுமோ?

வேதியர் தமைப் பூசை பண்ணுவோர், வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ --- மறையவரை வணங்குவோர், வானவரை விரும்பி மலரிட்டு வழிபடுவரோ?

    விளக்கம் --- பூவலம் செய்தல் என்பது திருத்தல யாத்திரை,  தீர்த்த யாத்திரை சென்று வருவதைக் குறிக்கும். அருள் நூல்களையும் நீதி நூல்களையும் ஓதி மெய்யறிவு பெறுதல் வேண்டும். அது குருமுகமாக அமைவதே சிறந்தது. 

    சற்குருவின் பெருமையைத் திருமந்திரம் கூறுமாறு காண்க...

"தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு,

தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்

தாள்தந்து, தத்துவ அதீதத்துச் சார் சீவன்

தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே."

இப் பாடலின் பொழிப்புரை : சற்குருவே தன்னை அடைந்த மாணாக்கர்க்குத் திருவருளை வழங்கிக் காக்கும் பதி ஆவான். அவனை அடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தையாலும், திருவடி சூட்டலாலும் தன்னை அடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்து விடுவான்.

    எனவே, சற்குருவின் பெருமை அவரது செயலால் விளங்கும் என்பதும், அது வெற்று வேடத்தால் மட்டுமே விளங்காது என்பதும் அறியப்படும்.

"தவிர வைத்தான் வினை, தன் அடியார் கோள்

தவிர, வைத்தான் சிரத்தோடு தன் பாதம்,

தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்,

தவிர வைத்தான் பிறவித் துயர் தானே."

இப் பாடலின் பொழிப்புரை : (சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும், ஒன்பது கோள்களின் தீங்கு நீங்கவும், யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

    எனவே, சற்குரு ஒருவனுக்கு இறையருளால் வாய்க்கவேண்டும். அதற்காகத்தான், தீர்த்த யாத்திரையும், தலயாத்திரையும் மேற்கொள்ளுவது. "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" என்னும் தாயுமான அடிகளின் அருள் வாக்கு உணரத்தக்கது.

    குருமுகமாக இருந்து அருள் நூல்களையும், நீதி நூல்களையும் ஓதித் தெளியவேண்டும். ஓதுவது, ஒழியாமல் நிகழவேண்டும். "ஓதுவது ஒழியேல்" என்ற ஔவையார் திருவாக்கின்படி, அறநூல்களை ஓயாது ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் குற்றமற ஓதுதல் வேண்டும். குற்றம் என்பது, ஐயம், திரிபு, மயக்கம் என குற்றங்கள் மூன்று என உணர்க. பொருளினிடத்தில் உண்டா, இல்லையா என்று ஐயுறுதல், ஒன்றை ஒன்றாக மாறுபட அறிதல், உண்மை அறியாமல் மயங்குதல். இந்தக் குற்றங்கள் கடிந்து கற்றல் வேண்டும்.

    இதனையே, திருவள்ளுவர், "கற்க. கசடுஅறக் கற்க. கற்பவை கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க" என்று கூறுகின்றார்.

"கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."

ஓதுவதன் பயன் ஒழுக்கம் உடைமை எனவும்,  ஒழுக்கம் இல்லாதார் ஓதியும் பயனில்லை என உணர்க.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ---  உலகநீதி.

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.---  கொன்றைவேந்தன்.

ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை.. ---  கொன்றைவேந்தன்.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.---  கொன்றைவேந்தன்.

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை..     --- முதுமொழிக் காஞ்சி.


"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." ---  அறநெறிச்சாரம்.


"பேருரை கண்டு அறியாது தலைச்சுமை

     ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,

போரில் நடந்து அறியாது பதினெட்டு

     ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,

ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்

     பொருள் சுமந்த அறிவிலோனும்,

காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த

     கழுதைக்குஒப் பாவர் தாமே." ---  தண்டலையார் சதகம்.


    இனி, ஓதுகின்ற நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுர்ணமி, அமாவாசை, பிரதமை.  என மாதத்தில் எட்டு நாள்கள் ஓதக் கூடாது.

"அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,

சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா

வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்

பித்தரும் பேசார் பிழை." --- ஔவையார்.

    ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும், தான்அடங்காப்

பேதையில் பேதையர் இல்." ---  திருக்குறள்.

    அவ்வாறு, பூவலம் செய்வதால் உண்டாகும் நற்பண்புகள் இயல்பாகக் கைவரப்பெற்ற ஒருவர் மேலும் பூவலம் செய்தல் வேண்டத் தகுவது அல்ல என்பதைக் காட்ட ‘பொய்யாத ....... வேண்டுமோ!' என்றார். 

    கொலை, களவு முதலிய பெரும் பாதகங்களை ஒருவன் செய்யாது ஒழுகுதல் நன்னெறி ஆகும். அதுவே அறமும் ஆகும் என்பதால், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார். மனமாசு அற்று, உயிர்கள்பால் கருணை பூண்டவர்கள், உலகமக்கள் எக்காலத்திலும் இன்புற்றிருக்க எண்ணுவார்கள். "எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" எனாறர் தாயுமானார்.

    காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவை உட்பகை என்பர் பெரியோர். உள்ளத்தில் மறைந்து உள்ள இந்தப் பகைகள் ஆன்மலாபத்தைக் கெடுத்து, உயிரைப் பிறவிக் குழியில் வீழ்த்துவன. 

நையாத காமம் - குறையாத ஆசை. 

சோண + அசலம். சோணாசலம், நெருப்பு மலை. திருவண்ணாமலையைக் குறிக்கும்.

    அடியவர் உள்ளத்தே ஆண்டவன் குடிகொண்டு இருப்பான்.  எனவே, அடியாரை வழிபட்டால் ஆண்டவனையே வழிபட்டதாகும். அடியார் வழிபாடு மிகுந்த நன்மையை அளிக்கும். அடியார்க்கு அடியாரையும் வழிபடலாம் என்பதால், "அடியார்க்கு அடியேன்" என்றும் "அடியார் அடியார்க்கும் அடியேன்" என்றும் திருத்தொண்டத் தொகை அறிவுறுத்துகின்றது.

    மெய்யடியார் பெருமையைக் குறிக்கும் பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க...


"மிடிஇட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம் எனவும்

        மெய் எலாம் உள் உடைந்து,

   வீறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய்

        வேதனைகள் உற, வேதனும்

துடியிட்ட வெவ்வினையை ஏவினான், பாவிநான்

        தொடர்இட்ட தொழில்கள் எல்லாம்

    துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டு ஆயது, உன

        தொண்டர்பணி செய்வது என்றோ?

அடிஇட்ட செந்தமிழின் அருமை இட்டு ஆரூரில்

        அரிவை ஓர் பரவைவாயில்

    அம்மட்டும் அடிஇட்டு நடை நடந்து அருள் அடிகள்

        அடிஈது முடிஈது என

வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே!

        வளமருவு தேவைஅரசே!

    வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை

        வளர்காதலிப் பெண்உமையே."    ---  தாயுமானார்.


:பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,

        புராந்தகி, த்ரியம்பகி, எழில்

    புங்கவி, விளங்கு சிவசங்கரி, சகஸ்ரதள

        புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி, மனாதீத நாயகி, குணாதீத

        நாதாந்த சத்தி என்று உன்

    நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே

        நான் உச்சரிக் கவசமோ?

ஆர் அணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ,

        அகிலாண்ட கோடிஈன்ற

   அன்னையே! பின்னையும் கன்னி என மறைபேசும்

        ஆனந்த ரூபமயிலே!

வார் அணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்

        வளமருவு தேவைஅரசே!

   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை

        வளர்காத லிப்பெண்உமையே." ---  தாயுமானார்.


"பார்கொண்ட நடையில் வன்பசி கொண்டு வந்து இரப்

பார்முகம் பார்த்து இரங்கும்

பண்பும், நின் திருவடிக்கு அன்பும், நிறை ஆயுளும்,

பதியும், நல்நிதியும், உணர்வும்,

சீர்கொண்ட நிறையும், உள்பொறையும், மெய்ப்புகழும், நோய்த்

தீமைஒரு சற்றும் அணுகாத்

திறமும்,மெய்த் திடமும், நல்இடமும், நின்அடியர் புகழ்

செப்புகின்றோர் அடைவர்காண்;

கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும், மயிலும், ஒரு

கோழிஅம் கொடியும், விண்ணோர்

கோமான்தன் மகளும்,ஒரு மாமான்தன் மகளும்,மால்

கொண்டநின் கோலம் மறவேன்,

தார்கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!" ---  திருவருட்பா


"வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ?

வானைஒரு மான் தாவுமோ?

வலிஉள்ள புலியை ஓர் எலிசீறுமோ? பெரிய

மலையை ஓர்ஈ சிறகினால்

துன்புற அசைக்குமோ? வச்சிரத் தூண்ஒரு

துரும்பினால் துண்டம் ஆமோ?

சூரியனை இருள் வந்து சூழுமோ? காற்றில் மழை

தோயுமோ? இல்லை, அதுபோல்

அன்புஉடைய நின்அடியர் பொன் அடியை உன்னும் அவர்

அடிமலர் முடிக்கு அணிந்தோர்க்கு,

அவலம் உறுமோ? காமம் வெகுளி உறுமோ? மனத்து

அற்பமும் விகற்பம் உறுமோ?

தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!" ---  திருவருட்பா.

    "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்றது திருமந்திரம். "வேதம்" என்னும் சொல், 'வித்' என்னும் சொல்லின் அடியாக வந்தது. வித் என்றால் வித்தை அல்லது அறிவு எனப்படும். மெய்யறிவு பெறுவதற்குத் துணை புரிவது வேதம். மெய்யறிவு பெற்ற உயிரானது அறவழியில் ஒழுகும். வேதம் என்பது வாழ்வியல் நெறி. ஆகமம் என்பது வழிபாட்டு நெறி. அறவழியில் நின்றோர் அனைவரும் அந்தணர். அவர் எல்லா உயிரும் இன்புற்றிருக்க எண்ணுவர். உலக நன்மைக்காகவே வாழ்வர் என்பதால், "அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்" என்றார் திருவள்ளுவ நாயனார். இவருள்ளத்தும் இறைவன் குடிகொண்டு இருப்பான். எனவே, வேதியரை வணங்கினோர் வேறு தேவரை வணங்கவேண்டியதில்லை என்றார். 


57. இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

 


57.  இவை எல்லாம் பயன்படாமல் அழியும்.

                             -----


"மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதுஅரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேர்இடமும், வரும்எதுகை

     மோனை இல்லாத கவியும்,


காப்புஅமைவு இலாததோர் நந்தவனமும், நல்ல

     கரை இலா நிறை ஏரியும்,

  கசடு அறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,


கோப்புஉள விநோதம்உடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட்டமும்,

  குளிர்புனல் நிறைந்து வரும் ஆற்று ஓரம் அதில்நின்று

     கோடு உயர்ந்து ஓங்கு தருவும்,


ஆப்பு அது இல்லாத தேர், இவைஎலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஐயனே --- தலைவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மூப்பு ஒருவர் இல்லாத குமரி குடி வாழ்க்கையும் --- மூத்த ஒருவருக்கு அடங்கி வாழாமல் சுயேச்சையாக வாழ்கின்ற இளம் பெண்ணின் வாழ்க்கையும்,

  மூது அரண் இலாத நகரும் --- பழைமையான காவல் இல்லாத நகர மும், 

மொழியும் வெகுநாயகர் சேர் இடமும் --- அதிகாரம் படைத்தவர்கள் சேர்ந்துள்ள இடமும்,

வரும் எதுகை மோனை இல்லாத கவியும் --- இலக்கடத்தில் சொல்லப்படும் எதுகையும் மோனையும் சேராத பாடலும், 

காப்பு அமைவு இலாதது ஓர் நந்தவனமும் --- காவல் பொருந்தி இராத ஒரு பூங்காவும், 

நல்ல கரை இலா நிறை ஏரியும் --- நல்ல கரையில்லாது உள்ள நீர் நிறைந்த ஏரியும், 

கசடுஅறக் கற்காத வித்தையும் --- மனக் குற்றங்கள் அறுமாறு கல்லாத கல்வியும், 

உபதேச காரணன் இலாத தெளிவும் --- கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைகளால் வருகின்ற தெளிவும், 

கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர் செய் கூத்தாட்டமும் --- கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் என்பவர்கள் ஆடுகின்ற கூத்தும், 

குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் --- குளிர்ந்த நீர் நிறைந்து வரக்கூடிய ஆற்றின் கரையிலே வளருகின்ற நீண்ட உயர்ந்த கொம்புகளை உடைய மரமும், 

ஆப்பு அது இல்லாத தேர் ---- அச்சாணி இல்லாத தேரும், 

இவையெலாம் ஒன்று ஆகும் - இவை யாவும் ஒரே தன்மையுடையன ஆகும். இவை எல்லாம் அழியக் கூடியவை ஆகும்.


      விளக்கம் --- இதே பொருள் பட வந்துள்ளது, பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்று.

"மூப்பு இலாக் குமரி வாழ்க்கை, 

முனை இலா அரசன் வீரம்,

காப்பு இலா விளைந்த பூமி, 

கரை இலாது இருந்த ஏரி,

கோப்பு இலான் கொண்ட கோலம், 

குருஇலான் கொண்ட ஞானம்,

ஆப்பு இலா சகடுபோலே 

அழியும் என்று உரைக்கல் ஆமே."

(தனக்கு மூத்தோர் ஒருவர் இருந்து, அவருக்கு அடங்கி வாழாத இளம் பெண்ணின் வாழ்க்கை, கோபம் கொள்ளாத அரசனின் வீரம், காத்தல் இல்லாத, நெல் விளைந்த நிலம், வலிமையான கரை இல்லாமல் இருந்த ஏரி, (குளம் என்றும் கொள்ளலாம்), பெருமைக்கு உரிய செல்வத்தைத் தன்னிடம் கொண்டு இராத ஒருவன் செய்துக் கொண்ட ஆடம்பரமான அலங்காரம்,

குருநாதர் ஒருவர் மூலம் அறிந்துகொள்ளாமல், ஒருவன் தானே கற்றுக் கொண்ட கல்வி அறிவு, இவை எல்லாம், அச்சாணி இல்லாத வண்டி போல, பயன்றறவையாய் அழிந்து போகும் என்று உறுதியாகச் செல்லலாம் என்பது இப்பாடலின் பொருள்.)

முதுமை + அரண் : மூதரண் என வந்தது. கோட்டை. 


மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் 

காடும் உடையது அரண். ---  திருக்குறள்.


மணிபோல் தெளிந்த நீர் நிலையும், நிலப்பகுதியும், மலைத் தொடர்களும், தொடர்ந்த நிழலோடு கூடிய காடுகளும் ஒரு நாட்டிற்குச் சிறந்த அரண்கள் ஆகும்.

அதிகாரம் படைத்தவர்கள் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால், தங்களில் யார் அதிகாரம் நிறைந்தவர் எனக் காட்டிக் கொள்வதிலும், ஒருவர் அதிகாரத்தை இன்னொருவர் பறிக்கும் செயலும் மிகுந்து இருக்கும்.

பாடலுக்கு இலக்கணமாக (இலட்சணமாக) உள்ளவை எதுகையும், மோனையும். அப்படி அமைந்தால் பாடல் இனிமையாக, சொல்லழகும், பொருள் அழகும் நிறைந்து இருக்கும். இக் காலத்தில் வரியைப் பிளந்து எழுதினாலே பாட்டு என்று ஆகிவிட்டது. "கானமயில் ஆடக் கண்டு இருந்த வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்து, தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி" என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இக்காலத்தில் பொருந்தும்.

கற்கவேண்டிய நூல்களைக் கற்று மனமாசு அடங்குவதே கல்வியாகும். கசடு அறக் கற்றலாவது,  நூலைக் கற்கும்போது உண்டாகும் விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடன் இருந்து பலகாலும் பயிலுதல் எனப் பரிமேலழகர் பெருமான் காட்டியது.

உபதேசகாரணன் - கற்பிக்குந் தலைவன். ‘கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்', ‘ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்' என்பவை இங்கு நினைக்கத் தக்கவை.

    கருத்து --- எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.


பிரார்த்தனை என்னும் மருந்து

 

பிரார்த்தனை என்னும் மருந்து

-----

1925-ஆம் ஆண்டில் தோன்றி, 1995 வரை வாழ்ந்திருந்த  "தமிழ்மாமுனிவர்" என்று போற்றப்பட்டு, பல அரிய செயல்களைச் செய்து, வாழ்ந்து காட்டி, நம்மிடையே இருந்து மறைந்த, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளில் ஒன்று,  "அருள்நெறி முழக்கம்" என்னும் நூல், ஆகும். இந்நூல் 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், "பிரார்த்தனை என்னும் மருந்து" என்னும் தலைப்பில் திருச்சிராப்பள்ளியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய உரை. அன்பர்களின் சிந்தனைக்குத் தரப்படுகின்றது.

                                                            ---------------------------

சந்தேகம் மனிதர்களின் நேரிடையான சத்துரு. அது நம்முடன் உடன்பிறந்த ஒரு தொற்றுநோய். அதற்கு நாம் எளிதில் ஆளாகி விடுகின்றோம். சந்தேகம் என்ற ஒன்றினையே நாம் நம் வாழ்நாளில் காணாது வாழ முயற்சிக்க வேண்டும். அது நம் வாழ்வில் நம்மை அறிந்தும் அறியாமலும் இடம் பெற்று விடுகின்றது.

சந்தேகம் உண்டாவதனால் விளைகின்ற தீமைகள் பலப்பல. அதனை மக்கள் சமுதாயம் உணருவதில்லை. சந்தேக எண்ணம் கொண்டவர்கள் - புரிந்து கொள்ளாமல் சந்தேகத்திற்கு ஆளாகின்றவர்கள் - பிறப்பாலேயே சந்தேகப் பிராணியாகத் தோன்றி வாழ்கின்ற அன்பர்கள் செய்கின்ற, செய்ய முனைகின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற காரியங்கள் அனைத்தும் நாட்டில் எவ்வளவு தீமையை விளைவிக்கின்றன என்பதை அவர்கள் எள்ளளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற காரியம் நாட்டின் போக்கை சீர்கேடான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது.

கடவுளும் - அதன் பாதையும் - அருள்நெறியும் அது காட்டும் வழியும் - அன்பும் - அதனால் உண்டாகும் நன்மைகளும் நல்லனதாம். அவைகளைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை இன்றைய உலகில் அருளுடைப் பெருமக்களும், நாட்டில் வாழ்கின்ற நல்லன்பர்களும், அறநெறிச் செல்வர்களும் நன்கு உணர்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை. கடவுள்நெறி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளாத மக்கள் செய்கின்ற காரியங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் எத்தகைய முறையில் இருக்கின்றன என்பதும் அன்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள், அவைகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற காரணத்தால் அவர்களுக்கு அதனைப் புரிந்து கொள்ளும் திறனும் -அறிவும் - போக்கும் கிடையாது. உண்மையான அறிவுக்கண் கொண்டு - மாற்றுக் கருத்துக்களை அகற்றி, மனம் அனைத்தும் ஒரு திறனாய்ப் பண்டைய இலக்கியங்களைப் படித்து உணர்ந்தால் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற கடவுட்கொள்கைகள் - சொல்லோவியங்கள் - பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் தெள்ளெனப் புலனாகும்.

நாம் எந்தத் துறையில் அறிவைச் செலுத்துகின்றோமோ அத்துறையில்தான் நமக்குக் காட்சி தர முடியுமே அல்லாது வேற்றுத்துறையில் காட்சிதர முடியாது. மனம் போல வாழ்வு என்பதனைக் கொண்டு ஒருவனின் வாழ்வை நிர்ணயித்தார்கள் நமது பெருமக்கள். இன்றைய உலகில் இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதனின் அறிவு பல்வேறுபட்ட போர்வைகளைப் போர்த்திக் கொண்டு செல்லாநின்ற நிலை விபரீதமாகவும் - விசித்திரமாகவும் இருக்கின்றது.

இத்தகு காலத்திலும் இங்குக் கூடியிருக்கின்ற மாபெரும் கூட்டம், தமிழ்நாடும் - தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுப் பண்பாட்டை, கலாசாரத்தை - தமிழர்களின் நாகரீகத்தை - குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றை இன்னும் இழக்கவில்லை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

வரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டிலே மனிதன் அதனை மறந்தோ, ஒதுக்கியோ, தனி இடம் கொடுத்தோ வாழ முடியாது. வாழ முற்பட்டாலும் அவனுக்கு வாழ்வதற்குத் தகுந்ததோர் வழி கிடைக்காது என்று உறுதியாகக் கூறலாம். விஞ்ஞானம் - அணுகுண்டு - அறப்போர். போர் - அஹிம்சை - அன்பு அறம் - பொருள் - பிரார்த்தனை - பட உலகம் - மேடைப் பேச்சு சமயப் பெரியார்களின் தொண்டுள்ளம் - தியாகிகளின் சேவை அனைத்திலும் இந்த இருபதாம் நூற்றாண்டு மிகமிக முக்கியத்துவம் பெற்று விட்டது என்பதை எவரும் நன்கு உணர்வர். மனித சமுதாய வாழ்விற்கு வேண்டிய அனைத்திலும் முக்கியத்துவம் தகுதியான இடம்பெற்ற இந்த இருபதாம் நூற்றாண்டினை எப்படி நாம் ஒதுக்கி வாழ முடியும்?

மனிதர்களின் கருத்தும் - சிந்தனையும் நாட்டை வாழ்விக்க முடியாது. காலமும் கருத்தும் சிந்தனையும் நாட்டை நல்ல நிலைமையில் இட்டுச் செல்லும் என்று மக்கட் சமுதாயம் கருதுவது சரியன்று. காலமும் - கருத்தும் - சிந்தனையும் செயலும் ஒத்து நின்று இயங்கினால் ஓரளவுதான் பயனைத் தர முடியும். இவை அனைத்தும் நாட்டிற்கும் நமக்கும் பயனைத் தர வேண்டுமேயானால், அருளியல் கலவாத எதுவும் பயனைத் தர முடியும் என்று எதிர்பார்த்துச் செயல் செய்ய முனைதல் முடிவில் ஏமாற்றத்தைத் தான் தரும் என்பதை மக்கட் சமுதாயம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அருளியல் கலவாத அறிவு அழிவைத்தான் தரும்.

மதம் நாட்டின் நச்சுக் கோப்பை - அது வேண்டாத ஒன்று என்று கூறுவதன் காரணம் என்ன? மதம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? அது எப்பொழுது தோன்றியது? என்ற பல கேள்விகளை எழுப்பி நன்கு சிந்தித்துப் பார்த்துப் பின்னர் முடிவுக்கு வாருங்கள். நீங்கள், காணுகின்ற நல்லதொரு முடிவு உங்களுக்கு விடையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூறுகின்றவர்கள் இடித்தலையும், எரித்தலையும் துணையாகக் கொண்டிருந்தால் அவர்கள் எடுத்திருக்கின்ற குறிக்கோள், செய்ய முனைந்திருக்கின்ற காரியங்கள் - அவர்களின் இலட்சியத்தில் எழுப்பப்பட்ட கொள்கைகள் அனைத்தும் எவ்விதம் நன்மையாக முடியும்?  நன்மையாக முடியும் என்று எதிர்பார்த்து இத்தகு காரியங்களில் ஈடுபட்டிருப்பதும் தவறுடையது என்பதை நம்முடைய மதிப்பிற்குரிய தோழர்கள் மறந்துவிடக் கூடாது.

இடித்தலும், எரித்தலும், உடைத்தலும், அழித்தலும் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியாது. நாட்டின் நன்மையைக் கருதித் தொண்டில் ஈடுபடுகின்ற அன்பர்கள் எக்காலத்தும் எந்தவிதக் காரணத்தைக் கொண்டும் தீய செயல்கள் செய்ய முனைதல் கூடாது. ஏன்? சிந்தனையில் - கருத்தில் கூட தீய கருத்துக்கள் தோன்றக் கூடாது. நமது எண்ணத்தின் எதிரொலிதான் நம் வாழ்வில் பிரதிபலிக்கும். எண்ணம்தான் சிந்தனையாக மாறும் - சிந்தனை உருப்பெற்ற பின் செயலில் உருவெடுக்கின்றது. ஆதலால், நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் மனதில் தீய கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் கூடாது. பகைவர்களிடம் அன்பு சொரியும் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் உளப் பண்பு நன்றாக வளரவேண்டும்.

ஒரு நாட்டின் நாகரிகம் - கலாசாரம் - பண்பாடு - வளம் - மொழி - நாகரீகம் முதலியவற்றை அந்நாட்டின் இலக்கியங்களின் மூலந்தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான இலக்கியங்கள்தான் அந்நாட்டின் படப்பிடிப்பு. நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் கடலாலும் - கறையானாலும் சூறையாடப்பட்டன. எஞ்சியிருக்கின்ற ஒன்று இரண்டு உண்மையான இலக்கிய ஏடுகளையும் இற்றைப் பகுத்தறிவுவாதிகள் எரிக்க முற்பட்டு விட்டார்கள். செய்யத் தகாத - நினைக்கவும் முடியாத காரியத்தையெல்லாம் புதுமையின் துணைகொண்டு அறிவினால் செய்துவிட முடியும் என்று கருதவும் தொடங்கி விட்டனர்.

இச்செய்தியைக் கேட்டதும் - உண்மையாகத் தமிழ் தமிழ்நாடு - தமிழ்க் கலாசாரம் - ஏன் குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழ் இலக்கியப் பற்றுடைய ஒவ்வொரு தமிழனின் குருதியும் கொதிப்பேறுகின்றது. அவர்கள் கூறுகின்ற, கருதுகின்றபடி எஞ்சியிருக்கின்ற உண்மை இலக்கியங்கள் ஒன்று இரண்டையும் எரிக்கத் தலைப்பட்டு விட்டால் பண்டைத் தமிழகம், இற்றைத் தமிழகம், நாளைத் தமிழகம் பற்றி அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது?

அவர்கள் செய்ய முனைந்திருக்கின்ற, செய்கின்ற ஒவ்வொரு காரியத்தாலும் கலாசாரம் - பண்பாடு முதலியவற்றிற்கு அழிவே இல்லை என்பதை நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. அவர்கள் எதனை எதிர்பார்த்துச் செய்கின்றார்களோ அதற்கு மாறாகத்தான் நாடு இயங்கி வருகின்றது என்பதை உணர்ந்த பின்னர்தான் அவர்கள் தாங்கள் முயற்சித்த அந்தந்தக் காரியங்களை விடுத்துப் புதுப்புதுக் காரியங்களில் முனைகின்றனர் என்பதை யாவரும் நன்கு அறிந்திருக்கலாம்.

அழிவு ஏற்படும் என்று கருதிய உள்ளம், மேன்மேலும் நன்கு வளர்ச்சியைக் கண்டு மயங்குகின்றது. அவர்கள் செய்ய முனைந்த செயலால் நல்லதொரு வளர்ச்சிதான் காணமுடிகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் பிள்ளையார் உடைப்பு - கம்பராமாயண எரிப்பு முதலியவற்றால் இன்றைய மக்களிடம் புதியதோர் மறுமலர்ச்சி எழும்பி இருக்கின்றது. மக்களிடம் காணப்பட்ட மகத்தான மறுமலர்ச்சியால் இன்றைய நாட்டில் இலக்கியப் பற்றும், திருவுருவ வழிபாடும், சமயப்பற்றும் வளர்ந்தோங்கி உள்ளன. மக்கள் உள்ளத்தில் பற்றுதல் உண்டான காரணத்தால் நல்லதொரு வெற்றிதான் கிடைத்திருக்கின்றது என்பதை எல்லோரும் நன்கு அறிதல் வேண்டும்.

"கல்லிலும் செம்பிலுமா கடவுள் இருக்கின்றார்” என்று இதுவரை கூறி வந்தவர் இன்றைய தினம் அதற்கு மாறாக நடந்து காட்டி விட்டனர். நீங்கள் காட்டும் கல்லிலும் செம்பிலும் மட்டும் கடவுள் இல்லை. நாங்கள் செய்கின்ற, செய்து உடைக்கின்ற களிமண் பொம்மையிலும் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். கடவுள் இல்லை என்றால் அவர்கள் செய்த அந்தக் களிமண் விநாயகர் பொம்மையை உடைத்திருக்க வேண்டியதில்லையே! “கடவுள் அந்தக் களிமண் பொம்மையிலும் இருக்கின்றார்” என்ற நம்பிக்கையால்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பதை இன்றைய உலகில் யாவரும் நன்குணர்வர்.

என்றும் நம்பிக்கை இல்லாதவனை, நம்பிக்கை உள்ளவனாக நம்பும்படி செய்வதுதான் - நம்புகின்ற ஒரு மனித உருவாகச் செய்வதுதான் முடியாத காரியம். நம்பிக்கை உண்டானபின் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விட முடியும். “உருவத்திலும் கடவுள் இல்லை" என்று இதுவரை கூறிவந்தார்கள். இன்று “உருவத்திலும் கடவுள் இருக்கின்றார்” என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். உருவத்திலும் கடவுள் உண்டு என்று கூறும் அவர்களை நம்பிக்கையில் உள்ள அவர்களை வழிபாட்டில் கொண்டு வருவது எளிது. நமக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் யார் செய்கின்ற எச்செயலும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் நேர்மையும் - நம்பிக்கையும் - தன்னடக்கமும் - கட்டுப்பாடும் - உறுதியும் தகுதியான இடத்தைப் பெறுவதோடு நன்முறையில் நம் உள்ளத்தில் வளம் பெற வேண்டும்.

யார் எதனைச் செய்தாலும் அதனை அன்புடன் - முக மலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எது வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் நல்ல இதயம் வேண்டும். துன்பம் செய்தாரிடத்தும் அன்பு காட்டுங்கள். இன்னல் செய்தாரிடத்தும் அன்புமொழி பேசுங்கள். மாற்றாரிடத்தும் உற்றார் உறவினர் என்ற உள்ளத்துடன் பழகுங்கள். அதுதான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடும் புலியும் ஒரே துறையில் நின்று நீர் அருந்திய தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் நாம் என்பதை நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள். நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எக்காலத்தும் உங்கள் வாழ்நாளில் வெறுப்பிற்கும் - வெறிக்கும் ஆளாகி விடாதீர்கள். வெறுப்பும் வெறியும் மக்கள் சமுதாயத்தைக் கெடுத்து விடும். அது மக்கள் சமுதாயத்தின் துரோகி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. மாற்று எண்ணம் கொண்டு, அறிந்தோ அறியாமலோ, அவர்கள் நம்மை எது கூறினாலும் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தும் அன்பின் வாழ்த்து வேறு விதத்தில் நம்மை நாடி வருகின்றது என்று எண்ணுங்கள். அந்த எண்ணந்தான் நம்மை அன்புடையவர்களாக என்றென்றும் வாழ்விக்கும்.

நாம் அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் நாடும் அன்புடைய நாடாக வாழமுடியும். மாற்று எண்ணங்கொண்டு அவர்கள் கூறுகின்ற அனைத்தும் நம்மை அல்ல. ஆக்கவும் காக்கவும் வல்ல அனைத்திற்கும் மூலகாரணமாக இருக்கின்ற கடவுளைத் தான் கூறுகின்றார்கள் என்று நம்புங்கள். அந்த உயரிய நம்பிக்கை தான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும்.

பிள்ளையார் உடைப்புச் செய்தவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு தெரியும். அவர்கள் நமது சாக்கிய நாயனார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சாக்கியனார், தனது மதத்திற்குத் தெரியாமல் இந்து மதத்தில் பற்றுக் கொண்டு சமயக் கொள்கையில் பற்றுக் கொண்டு நமது திருவுருவங்களை அன்புடனும் அருளுடனும் வழிபட்டு வந்தனர். அதுபோலத்தான் இன்றைய பிள்ளையார் உடைப்புக் கட்சிக்காரர்களின் போக்கும் போய்க் கொண்டிருக்கின்றது.

இதுநாள்வரை உருவ வழிபாடு கூடாது என்று கூறிய நாம், இனிக் கடவுள் வழிபாட்டை மேற்கொண்டால், உலகம் நம்மை நிலையில்லாதவன் என்று தூற்றுமே; நாம் நமது அன்பை ஆண்டவனிடம் உடைப்பின் மூலமாகத்தான் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்களேயன்றி வேறில்லை. சாக்கிய நாயனார்க்கு இடம் கொடுத்த சமயம், இவர்களுக்கும் இடம் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

“உண்மையுமாய் இன்மையுமாய்” இருக்கின்ற ஆண்டவன் “ஒளியாகவும் ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன்", தின்கின்ற வெற்றிலையாகவும் உண்கின்ற சோறாகவும் காட்சி தருகின்ற ஆண்டவன் “உடைப்பார் இடத்தும் எரிப்பார் இடத்தும்" உறுதியாக அன்பு காட்டுவான். அடக்கம்தான் என்றும் நன்மையைத் தரும்.

உலகில் இருளை ஒட்ட யாரும் முற்படுவதில்லை. ஒளியினை உண்டாக்கினால் இருள் தானாக ஓடிவிடும். நமக்கு வேண்டிய ஒன்றிலேயே அதன் வளர்ச்சி குறித்துக் கண்ணோட்டம் செலுத்தினால், வேண்டாத - விருப்பப்படாத ஒன்று தானாக விலகிச் செல்லும் என்பதை இளமை உள்ளங்கள் உணர்ந்து வாழ முற்பட வேண்டும். மாற்றாரின் தகாத செயல்களுக்குப் பரிகாரம் தேட முனைகிற காலத்து, அவைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து, நாம் நமது காரியங்களிலேயே கண்ணோட்டம் செலுத்தினால் நலம் உண்டு. உங்களுடைய பிரார்த்தனை உள்ளம் தோய்ந்ததாக இருக்கட்டும்.

சந்தேகப் பிராணிகள் எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர்களின் கூற்றைப் பெரிதென மதித்து நாம் செவி சாய்க்கக்கூடாது. “சந்தேகம் தங்குகின்ற நெஞ்சு தவறுடை நெஞ்சு” என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நாம் சந்தேகம் என்ற ஒன்றிற்கு எக்காரணத்தைக் கொண்டும் இடங்கொடுத்தல் கூடாது. நாம் சந்தேகத்தைக் கைக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வில் நாம் முன்னேற்றம் காணமுடியாது. முன்னேற்றம் காண்பது ஒருபுறமிருக்க இருக்கின்ற தகுதியையும் இழக்க நேரிடும். சந்தேகப் பேய்க்கு இடங்கொடுத்தால் அதனின்றும் தப்பி வாழ வழி கிடையாது. தத்துவங்கள் சடங்குகள் - சின்னங்கள் சம்பிரதாயங்கள். கடவுள் கொள்கைகள் முதலியன பற்றித் தெரிந்து கொள்ளாமலே குறை கூறுவதனால் என்ன பயன்? அதனால் விபரீதங்கள்தான் விளைகின்றன.

கடவுள் என்பது ஆதி மனிதன் காலத்தில், கற்காலத்தில் - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த தமிழ்க் குடியினர் கண்டது. கடவுள் நெறி - அன்பு நெறி - அருள் நெறி ஆதிமனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. அவன், தான் கண்டுபிடித்த அப்பாற்பட்ட சக்திக்குக் கடவுள் என்ற பெயர் கொடுத்தான். அதனை உருவத்தில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி வழிபட்டான்.

அந்த உயரிய தத்துவத்தை இன்று இருக்கின்ற புதுமை விரும்பி என்ற பெயர் கொண்டவர்கள் - தத்துவம் புரியாதவர்கள் - அழுக்கு மனம் படைத்தவர்கள் - குறுக்குப் புத்திக்காரர்கள் - மாற்று எண்ணம் கொண்டு, வேற்றுருவில் நடமாடுகின்ற மனித உருவங்கள் குறை கூறுகின்றன. இயற்கையின் படைப்புக்கு மனிதனின் அறிவும் - கருத்தும் - சிந்தனையும் பெயர் கொடுத்ததே அன்றிப் புதிதாக இந்த உலகில் இதுவரை ஒன்றையும் காணவில்லை. அடிப்படைத் தத்துவத்தை “பழமை” என்ற பெயரால் பிரிவுபசாரப் பத்திரம் வாசித்து வெறுத்து ஒதுக்குவதேன்?

மனிதனின் அறிவு உயிரற்ற ஒன்றைத்தான் கண்டுபிடிக்க முடியும். ஆண்டவன் படைப்பில் உயிர் உள்ளதும் - உயிர் இல்லாததும் இருக்கின்றன. மனிதனின் அறிவிற்கும் ஆண்டவனின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். பழமை இன்றிப் புதுமை இயங்க முடியாது. வேண்டாத ஒன்று என்று பழமையை வெறுத்து ஒதுக்குகின்றவர்கள் பழமைதான் , புதுமையின் தாயகம் என்பதை நன்கு உணர வேண்டும். புதுமையின் தாயகமான இன்றையப் பகுத்தறிவு வாதியர், சின்னங்களையும் சடங்குகளையும் வெறுத்து ஒதுக்குகின்றனர். சின்னங்களும் சடங்குகளும் இன்றி எதுவும் காண முடியாது. அவர்கள் கருதுகின்றபடி செய்தால் காலமும் பொருளும் குறைவாக இருக்கலாமே அன்றி, அவைகள் இன்றி எந்தக் காரியமும் செய்ய முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் சின்னங்களும் - சடங்குகளும் பின்னிக் கிடக்கின்றன. சின்னத்தையும் சடங்கையும் ஒதுக்குகின்றவர்கள் போடும் ஆரவாரமும் மந்திரமும் அதனுள் கட்டுப்பட்டன என்பதை மறந்து விடாதீர்கள்.

குறை கூறும் மக்கள் எதனையும் முழுதும் படிப்பதில்லை. பண்டைய இலக்கியங்களை முழுதும் படித்து அறிந்துணரும் திறன் இல்லை என்பதை அவர்கள் கூறாமல் கூறிக் கொள்ளுகின்றார்கள்.

மனிதனின் அறிவு, இரும்பை மைக் ஆகவும் - அரிசியைச் சோறாகவும் - துணியைச் சட்டையாகவும் கண்டது. அதுபோல, அருளுடைப் பெருமக்களின் அறிவு, கல்லைக் கடவுளாகக் கண்டது. இதில் என்ன தவறு? அறிவும் ஆராய்ச்சியும் ஓரளவுதான் பயன்தர முடியும். திருக்கோயில்களில் காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தை விளக்குகின்றன என்று தெளிவாக - ஆணித்தரமாக - துணிவுடன் எடுத்துக் கூறுங்கள். சமயச் சின்னங்களை அணிந்து தெருவில் வாருங்கள்.

இலக்கியத்தின் மூலம் சமயக் கொள்கைகளுக்கு மறுப்புக் காட்டினால், அது உண்மையான தமிழ் இலக்கியமாக இருக்க முடியாது. போலி இலக்கியங்களின் துணைகொண்டுதான் மறுக்க முடியும். பிளாட்டோ - இங்கர்சால் - ஜேம்ஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் துணைகொண்டு மறுக்க முற்படலாம். அவர்களும் உண்மைச் சமயத்தை வெறுத்தார்கள் அல்லர். சமயத்தில் காணப்பட்ட குறைகளைத்தான் கண்டித்தார்கள். அறிவுலக மேதை பெர்னாட்ஷாவும் சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவேதான் பாடுபட்டார். சமயம் மண்னோடு மண்ணாகி மக்கி மடியவேண்டும் என்று அவர் கருதினார் அல்லர். சமயம் திருந்தினால்தான் சமூகம் திருந்தி வாழ முடியும் என்ற காரணத்தால் அறிஞர் பெருமக்கள் அருளுடைய பெருமக்கள் காட்டிய கண்டு வாழ்ந்த உண்மைச் சமயத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையையும் - உண்மை இலக்கிய ஏடுகளையும் காண முற்பட்டார்கள்.

“சமயத்தில் பெருமையைத் தேடி தோல்வி உற்றவன்தான் கடவுள்மேல் - மதத்தின் மேல் - சமயக் காப்பாளர்கள் மேல் குறை கூறுகின்றான். தோல்வியுற்றவன் கண்டதுதான் நாத்திகம். விதி - வினை முதலியவற்றை வெல்ல முடியாத உனக்கு இவ்வுலகில் வாழ்வில்லை. வாழத் தெரியாத நீ துணிவு இல்லாத நீ சமயத்தைப் பற்றிக் குறை கூறுவது ஏன்?.."என்று அழகுபட மாவீரன் மாஜினி எழுதுகின்றான். குறைகூறுகின்ற மக்கள் அனைவரும் குறை கூறுமுன் சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஜனநாயகத்தில் இவ்வாறு இல்லாதிருக்க வேண்டுமேயானால், அரசு மதச்சார்பற்றதாக இருக்கட்டும். ஆனால் அதே நேரத்தில் மதச்சார்புடை அரசாகத்தான் இருந்தாக வேண்டும். அரசாங்கத்திற்கு வரி கொடுப்போரில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் மதத்தின் அடிப்படையை பின்பற்றி வாழ்கின்றவர்கள். ஜனநாயக அரசு அவர்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாது சிறுபான்மையோரின் அரசாக இருத்தல் கூடாது. பெரும் பான்மையோரின் வாழ்விற்குப் புறம்பாகப் பேசவோ எழுதவோ படவுலகில் காட்டவோ இசையின் மூலம் பரப்பவோ உரிமை கொடுப்பதும் தவறுதான்.

பள்ளிகளில் பிறநாடுகள் போல, சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். "சமயப் பாடமே கற்பிக்கப்படாத பள்ளிகளே இந்திய நாட்டில் இல்லை” என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். பள்ளிகளில் சமயப் பாடம் சட்டபூர்வமாக என்று கொண்டு வரப்படுகின்றதோ அன்றுதான் காந்தியடிகள் கண்ட நாட்டிற்கு அடிகோலியவர்கள் ஆவோம்.

காந்தியடிகள் கண்ட நாட்டை அமைத்தால்தான் நாமும் - பிற்காலச் சந்ததியார்களும் இன்புற்று வாழ முடியும். மேலும் உலகப் பெரியாரின் பொன்மொழியைக் காப்பாற்றிய - இலட்சியத்தை நிறைவேற்றிய பெருமையும் நம்மைச் சேரும். காந்தியடிகள் கண்ட நாட்டைக் காண எல்லோரும் பிரார்த்தனையைக் கைக்கொள்வோமாக.

மக்கட் சமுதாயத்தில் பிரார்த்தனை என்று வளம் பெறுகின்றதோ, அன்றே இயற்கையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனைதான் அண்ணல் காந்தியடிகளின் மருந்து.

அண்ணல் காந்தியடிகள் நோயுற்றிருந்த காலத்து உடனிருந்த அனைவரும் மருத்துவரை அழைத்து வர எண்ணினர். அவர்களின் எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அண்ணல் காந்தியடிகள், “என்னுடைய உயிரை இந்த மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது. காப்பாற்றக் கூடிய ஒரு மருத்துவன் இருக்கின்றான். அவனை அழையுங்கள். அவன் நினைத்தால்தான் முடியும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆக்கவும் காக்கவும் வல்ல மாபெரும் சக்தி அவனுக்குத்தான் உண்டு. ஆதலால், நீங்கள் எல்லோரும் உலகின் நலம் கருதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார். அண்ணல் காந்தியடிகள் பிரார்த்தனையை வலியுறுத்திக் கூறும் காலத்து, "என்னால் பல நாள் உணவின்றி இவ்வுலகில் வாழ முடியும். ஆனால், ஒரு நாள்கூடப் பிரார்த்தனை இன்றி வாழ முடியாது” என்று கூறினார்.

நாம் அனைவரும் உள்ளம் தோய்ந்த பிரார்த்தனையுடன் ஆண்டவனை வழிபட்டால் அவன் உறுதியாக நமக்கு வாழ்வளிப்பான் என்பதில் சந்தேகமில்லை. பிரார்த்தனை வீடுகள்தோறும், தெருக்கள்தோறும் கிளம்ப வேண்டும். பிரார்த்தனைதான் நம் உள்ளத்தைத் துய்மைப்படுத்தும் நமது பிரார்த்தனைதான் நம் உள்ளத்தில் உள்ள மாசுமறுவினைப் போக்க - வியாதியினைப் போக்க ஏற்றதொரு மருந்தாம். உள்ளத்து வியாதியினைப் போக்கப் பிரார்த்தனையைத் தவிர வேறு மருந்தில்லை. நமது பிரார்த்தனை உளங்கனிந்த பிரார்த்தனையாக இருக்கட்டும். ஒவ்வொரு தனிமனிதனும் பிரார்த்தனையைப் பின்பற்றி வாழ்ந்தால் சமுதாயம் தானே திருந்தி வாழும்.


பொது --- 1088. மடவியர் எச்சில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மடவியர் எச்சில் (பொது)


முருகா! 

அடியேனை ஆண்டு அருள்வாய்.

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து

     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான


சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து

     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய்


படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற

     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே


குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த

     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.


                                பதம் பிரித்தல்


மடவியர் எச்சில் உண்டு, கையில் முதலைக் களைந்து,

     மறுமை தனில் சுழன்று, ...... வடிவான


சட(ம்)மிக வற்றி நொந்து, கலவி செயத் துணிந்து,

     தளர்வு உறுதற்கு முந்தி ...... எனை ஆள்வாய்.


படஅரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற

     பசு முகிலுக்கு உகந்த ...... மருகோனே!


குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த

     குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே.

பதவுரை

பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசுமுகிலுக்கு உகந்த மருகோனே --- படங்களை உடைய (ஆதி சேடன் என்னும்) பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

குடமுனி கற்க --- அகத்திய முனிவர் கற்க வேண்டி,

அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறத்தி நம்பு பெருமாளே --- குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

மடவியர் எச்சில் உண்டு --- பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு,

கையில் முதலைக் களைந்து --- கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து,

மறுமை தனில் சுழன்று --- மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று.

வடிவான சடம் மிக வற்றி நொந்து --- அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி,

கலவி செயத் துணிந்து --- புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து,

தளர்வு உறுதற்கு முந்தி எனை ஆள்வாய் --- தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

பொழிப்புரை

படங்களை உடைய ஆதி சேடன் என்னும் பாம்பே படுக்கைக்குத் தக்க இடம் என்று கொண்டு அதில் பள்ளி கொண்டருளி கரிய மேகம் போன்ற திருமாலின் அன்புக்குரிய திருமருகரே!

அகத்திய முனிவர் கற்க வேண்டி, அக்காலத்தில் தமிழின் பொருளை அவர் செவியில் உபதேசித்து அருளிய குமாரக் கடவுளே!

குறமகள் வள்ளிநியாகி விரும்பிய பெருமையில் மிக்கவரே!

பொதுமகளிரின் வாயில் ஊறும் எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்பொருட்டுச் செலவழித்து, மறுபிறப்புக்கு ஏதுவான செயல்களில் உழன்று. அழகான உடம்பு மிகவும் இளைத்து, அதனால் மனமும் உடலும் வருந்தி, புணர்ச்சி இன்பத்தில் திளைத்து இருக்கத் துணிந்து, தளர்ச்சியை அடையும் முன்பாக அடியேனை ஆண்டு அருளவேண்டும்.

விரிவுரை

குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர --- 

குடமுனி --- ஒருகாலத்தில் கடற்கரையில் இருந்த மித்திரா வருணர் என்பவர்கள் ஊர்வசி என்னும் தேவமாதைக் கண்டு காம உணர்வு மேலிட்ட போது, தங்கள் வீரியத்தை ஒருவர் கும்பத்திலும் ஒருவர் தண்ணீரிலும் விடுக்க, கும்பத்தில் இருந்து அகத்தியரும் தண்ணீரில் இருந்து வசிட்டரும் தோன்றினர் என்றும், இதனால் அகத்தியர் குடமுனி என்றும், வசிட்டர் கும்பமுனி என்றும் வழங்கப்படுகின்றனர்.

அகத்திய முனிவர் ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகை மலைக்குச் சென்று முருகனை நோக்கித் தவம் செய்வாயாக. அவ்வாறு செய்யின், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். தணிகை மலைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும். அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களை எல்லாம் போக்குவதும் அல்லாமல் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும். மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் அடைதற்கு எண்ணினாலும், மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளை எல்லாம் அத் திருத்த நீராடலால் அடையலாம்.

அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகால் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும் துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத்தணிகை மலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த திருத்தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ, தொழில்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்த அடைந்து இன்புறுவார்கள். தணிகைப் பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், செய்கை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி 'ஞான சத்திதரன்' என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் சாயுச்சிய பதவியை அடைந்து, அம்முருகப் பெருமானே ஆவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.

இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக் கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார். வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பலநாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம் உபதேசித்து அருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார். இவ்வாறு தணிகைப் புராணம் கூறும்.


குறத்தி நம்பு பெருமாளே --- 

நம்புதல் - விரும்புதல்.  "நம்பும் அடியர்தமை ஆளவந்த பெருமாளே" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் குறித்துள்ளது காண்க. 


கருத்துரை


முருகா! அடியேனை ஆண்டு அருள்வாய்.


பொது --- 1087. குடமென ஒத்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குடம் என ஒத்த (பொது)


முருகா! 

முத்திப் பேற்றை அருள்வாய்.


தனதன தத்த தந்த தனதன தத்த தந்த

     தனதன தத்த தந்த ...... தனதான


குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே


வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த

     மதசல முற்ற தந்தி ...... யிளையோனே


இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து

     இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்


தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.


                           பதம் பிரித்தல்


குடம்என ஒத்த கொங்கை, குயில்மொழி ஒத்த இன்சொல்,

     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே!


வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த!

     மதசலம் உற்ற தந்தி ...... இளையோனே!


இடம்உடன் வைத்த சிந்தை இனைவு அற, முத்தி தந்து,

     இசை அறிவித்து வந்து ...... எனை ஆள்வாய்.


தடவரை வெற்பில் நின்று, சரவணம் உற்று எழுந்து,

     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.

பதவுரை

குடம் என ஒத்த கொங்கை --- குடத்தை நிகர்த்த கொங்கைகளையும்,

குயில் மொழி ஒத்த இன் சொல் --- குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய,

குறமகள் வைத்த நண்பை நினைவோனே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதசலம் உற்ற தந்தி இளையோனே --- மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

தடவரை வெற்பில் நின்று --- உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து,

சரவணம் உற்று எழுந்து --- சரவணப் பொய்கையில் வளர்ந்து,

சமர்கள வெற்றி கொண்ட பெருமாளே --- சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து --- அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து,

இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய் --- இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

பொழிப்புரை

குடத்தை நிகர்த்த கொங்கைகளையும், குயிலை ஒத்த இனிய சொற்களையும் உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகி தேவரீர் மீது வைத்த அன்பை நினைந்து அவருக்கு அருள் புரிந்தவரே!

வடதிசையில் உள்ள திருக்கயிலை மலையில் வீற்றிருக்கும் மகாதேவர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய கந்தசுவாமியே!

மதநீர் பொருந்திய யானைமுகத்தினை உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

உயர்ந்த திருக்கயிலை மலையில் அவதரித்து, சரவணப் பொய்கையில் வளர்ந்து, சூரபதுமனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பெருமையில் மிக்கவரே!

அடியேனுடைய மனத்தில் தேவரீர் இடம் பெறவேண்டும் என்று வைத்த வருத்தம் நீங்கும்படியாக அடியேனுக்கு முத்திப் பேற்றினை அருள் புரிந்து, இசை ஞானத்தை ஊட்டி வந்து அடியேனை ஆண்டு அருள் புரிவீராக.

விரிவுரை

வடவரை உற்று உறைந்த மகதெவர் பெற்ற கந்த --- 

வரை - மலை. வடவரை - வடதிசையில் உள்ள திருக்கயிலை மலை.

மகாதேவர் என்னும் சொல் மகதெவர் என வந்தது.


மதசலம் உற்ற தந்தி இளையோனே --- 

மதசலம் --- மதநீர்.

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. மூத்தபிள்ளையார் என வழங்கப் பெறும் விநாயகப் பெருமானுக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.

விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்.  --- காஞ்சிப் புராணம்.                                           


 உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்

தறிநிறுவி, உறுதியாகத்

தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,

இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்

களித்து உண்டு, கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து

வரு வினைகள் தீர்ப்பாம். --- திருவிளையாடல் புராணம்.

        எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.


இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற  --- 

இனைவு - வருத்தம், 


கருத்துரை


முருகா! முத்திப் பேற்றை அருள்வாய்.


பொது --- 1086. சுடரொளி கதிரவன்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சுடரொளி கதிரவன் (பொது)


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்

     சூழ்ந்தோங் ...... கிடுபாரிற்


றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்

     சோர்ந்தோய்ந் ...... திடநாறுங்


கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்

     கான்போந் ...... துறவோருங்


கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்

     காய்ந்தாண் ...... டருளாயோ


தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்

     தாந்தோய்ந் ...... திருபாலும்


தமருக வொலிசவு தத்திற் றத்தத்

     தாழ்ந்தூர்ந் ...... திடநாகம்


படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்

     பாய்ந்தாய்ந் ...... துயர்கானம்


பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                பதம் பிரித்தல்


சுடர்ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச்

     சூழ்ந்து ஓங் ...... கிடு பாரில்,


துயர், இருவினை, பல சுற்றப் பட்டுச்

     சோர்ந்து ஓய்ந் ...... திட நாறும்


கடுக என எடும் என் உடல் பற்று அற்றுக்

     கான்போம் ...... துறவோரும்,


கனல் இடை விதியிடு தத் துக்கத்தைக்

     காய்ந்து ஆண்டு ...... அருளாயோ?


தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க,

     தாம் தோய்ந்து ...... இருபாலும்


தமருக ஒலி சவுதத்தில் தத்த,

     தாழ்ந்து ஊர்ந் ...... திட, நாகம்


படி நெடியவர் கரம் ஒத்தக் கெத்துப்

     பாய்ந்து ஆய்ந்து ...... உயர்கானம்


பயில்பவர் புதல்வ! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.


பதவுரை

தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்கத் தாம் தோய்ந்து --- பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி,

இருபாலும் தமருக ஒலி சவுதத்தில் தத்த --- இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க,

தாழ்ந்து ஊர்ந்திட நாகம் படி நெடியவர் கரம் ஒத்த --- திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க

கெத்துப் பாய்ந்து ஆய்ந்து உயர் கானம் பயில்பவர் புதல்வ --- கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

சுடர் ஒளி கதிரவன் உற்றுப் பற்றிச் சூழ்ந்து ஓங்கிடு பாரில் ... ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில்

துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட --- துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக,

நாறும் கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று --- பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து,

கான் போந்து உறவோரும் கனல் இடை விதி இடு --- சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற, 

தத் துக்கத்தைக் காய்ந்து ஆண்டு அருளாயோ --- அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?

பொழிப்புரை

பெருமை உடைய வயிரவர்கள் செருக்குற்று ஒன்று கூடிப்பொருந்தி, இருபுறமும் உடுக்கையின் ஓசை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, திருச்சடையில் அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்துப் படிக்கும் திருமால் கைகளால் மத்தளம் வாசிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்து இலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே திருநடனம் புரிபவரான சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

ஒளி வீசும் கதிரவன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துயரம், நல்வினை, தீவினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, அதனால் சோர்வடைந்து அலுத்து ஓய்ந்து இறுதியில் பிணமாக, பிணம் நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த உடல் மீது கொண்டுள்ள பற்று ஒழிந்து, சுடுகாட்டுக்குப் போய் உறவினரும் பிறரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற, அந்தத் துக்கத்தை ஒழித்து, அடியேனை ஆண்டு அருள மாட்டாயோ?





இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...