சும்மா இரு மனமே

 


சும்மா இருப்பாய் மனமே

-----

 

"வேதாகம சித்ர வேலாயுதன்வெட்சி பூத்த தண்டைப்

பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச் 

சூதானது அற்ற வெளிக்கேஒளித்துசும்மா இருக்கப் 

போதாய்இனி மனமே! தெரியாது ஒரு பூதர்க்குமே".

 

என்று நெஞ்சுக்கு அறிவுறுத்தலாக அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரப் பாடல் இது.

 

இதன் பொருள் ---

 

     மனமே! வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையை உடைய முருகப் பெருமானின் வெட்சி மலரை அணிந்துள்ளதும்தண்டையினை அணிந்துள்ளதும் ஆகிய திருவடித் தாமரையையே அரணாகக் கொண்டு மறப்பும் நினைப்பும் அற்ற வஞ்சகம் அற்ற பரவெளியில்உலக பசு பாச தொந்தங்களில் அகப்படாமல் மறைந்து,உரை அற்ற நிலையாகிய பேசா அனுபூதியில் நிலைத்து இருக்கும் பொருட்டு,சென்ற நாள் ஒழியினும்இனியாவது வருவாயாக. இந்த செந்நெறியானது ஒருவருக்கும் தெரியாத ஒன்று ஆகும். 

 

     நம்முடைய மனம் நல்ல வழியைக் காட்டினாலும் காட்டும்அல்லாதவழியைக் காட்டினாலும் காட்டும். அது குரங்கு போன்றது. குரங்கு குருவிகள் கட்டுகிற கூட்டைப் பிரித்து எறியும். மாலைகளைப் பிய்த்து எறியும். கட்டியதைப் பிரித்து எறியும் இயல்புடைய குரங்குகளை ஆட்கொண்டான் இராமன். அந்தக் குரங்குகள்குரங்கரசனாகிய சுக்கிரீவனது தலைமையில்ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து இலங்கைக்கு அணை கட்டின. கட்டியதைப் பிரிக்கும் இயல்புடைய குரங்குகள், இராமனோடு சேர்ந்தமையால் பிரிந்தவற்றை ஒன்று சேர்த்துக் கட்ட உதவின. அவ்வாறே மனம் என்னும் குரங்கு தன் விருப்பப்படி திரிந்தால் நாம் நல்ல எண்ணங்களைக் கட்டக் கட்ட அவற்றைக் குலைத்துசெய்கின்ற முயற்சியை எல்லாம் சின்ன பின்னம் ஆக்குகிறது துன்பத்தை உண்டாக்குகிறது. அதே குரங்கை இராமன் ஆண்டது போல  நாமும் அடக்கி விடுமோனால் அதுவே நமக்கு உதவியாக இருக்கும்.

 

     மதம் பிடித்த யானையினிடம் யாராவது போனால் தன் துதிக்கையினால் அவர்களைப் பற்றி இழுத்து மிதித்து அழித்து விடுகிறது. அதைக் கண்டால் எல்லோரும் ஒடுகிறார்கள். அந்த யானையை அடக்கிய பிறகு தன்னைக் குத்தி நோவ அடிக்கும் மாவுத்தனுக்குப் பணிந்துகீழே கிடக்கும் அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிறது. தன்னைக் கட்டுவதற்குரிய இரும்புச் சங்கிலியைத் தன் துதிக்கையினாலேயே அவனிடம் எடுத்துக் கொடுக்கிறது. காலையும் தூக்கிக் காட்டுகிறது. மதம் அடங்கின யானையாக நமது மனம் ஆகிவிட்டால்தன்னைக் கட்டுகிற வழியை அதுவே காட்டும். இல்லாவிட்டால் மதம் பிடித்த யானை சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்துதன்னை அடக்க வருகின்ற மாவுத்தனையும் கொன்று வீழ்த்துவது போலத் துன்பம் கொடுத்து நம்மையே வீழ்த்திக் கொன்று விடும். 

 

     அத்தகைய மனத்தைப் பார்த்து அருணகிரிநாதர் உருப்படுவதற்கான வழியைக் காட்டுகிறார். முன்பு மதம் பிடித்த யானை போலத் தன் இச்சைப்படி எங்கெங்கோ ஒடித் திரிந்து கொண்டிருந்தது. தன் வழியில் குறுக்கிடுபவர்களின் மேல் சினம் கொண்டு சீறி விழுந்தது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் அலைந்து ஓடிக் கொண்டு இருந்தது. அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்லும் கழுதை போல அது இருந்தது. இப்பொழுது அந்த மனம் மடைமாறிச் சென்றது. நல்ல மனம் ஆகிவிட்டது. வெகுளி அடங்கி இருக்கிறது. தன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் தானமாகப் பிறருக்குக் கொடுத்துப் பற்று நீங்கி இருக்கிறது. முன்பு சிறிது கண்ணை மூடினாலும் என்ன என்ன என்னமோ வரும்.யார் யார் முகமோ தோன்றும். இப்பொழுது கண்ணை மூடும் பொழுது முருகப் பெருமானின் திருவுருவந்தான் வருகின்றது. அவன் திருவடி சம்பந்தமான நினைவுகள்தான் வருகின்றன. 

 

     ஞானம் என்ற பெரும் பொன்னைப் பெற்ற ஆன்மா பயப்படுகிறது. இதை மனமாகியசிறுவன் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமேஎன அஞ்சுகிறது. மாயை பலப்பலவிதமாக வந்து வேறு வேறு விளையாடல்களைச் செய்யும். அவற்றினின்றும் பிழைத்து ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமே  என்று பெரியோர்கள்அஞ்சுவார்கள்.

 

     நமக்குக் கிடைத்த பொன்னை வீட்டில் வைத்திருந்தால் திருடர் பயம். பொன்னைக் கொண்டு போய் வங்கியில் பாதுகாப்பாக வைத்து விடுகிறோம். அவ்வாறே பணத்தையும் வீட்டில் வைத்து இருந்தால் பயம். பாதுகாப்பாக வங்கியில் கொண்டு வைத்து விடுகிறோம்.நிலையில்லாமல் அழிந்து போகும் பொன்னுக்கும் பொருளுக்குமே இவ்வளவு பாதுகாப்பு என்றால்பலகாலம் செய்த தவப் பயனாகப்பெற்ற அருட்செல்வத்தைப் பாதுகாக்க எவ்வளவு விழிப்புணர்வு இருக்க வேண்டும்! எனவே இறைவன் திருவருளால் பெற்ற ஞானச் செல்வத்தைப் பாதுகாத்து வைக்க வேண்டுமே என்று அறிவு பயப்படுகிறது. 

 

     இரவு நேரத்தில் தாமத குணத்தினால் சோர்வு வருகிறது. பகல் பொழுதிலோ சத்துருக்கள்  நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். போதாக் குறைக்கு என்று இதசத்துருக்களும் (இதம் செய்வது போலத் தோன்றுகின்ற சத்துருக்கள்) கூடவே இருக்கின்றார்கள். ஆகவேஒப்பற்ற பொருளாகிய அருட்செல்வத்தைக் காப்பாற்றப்  பகலும் கூடாதுஇரவும் கூடாது.  பகல் என்பது நினைப்பு இரவு என்பது மறப்பு. உலகத்தோடு ஒட்டிவாழ்ந்து கொண்டே போகிற நிலை பகல். செயலை மறந்து தூக்கத்திற்குள்அடங்கிக் கிடக்கிற நிலை இரவு. இந்த இரண்டு நிலையும் நமக்கு உறுதியான பயன் ஒன்றையும்அளிக்கவில்லை. பகலும் இரவும் நாம் ஓயாமல் ஒழியாமல் வேலை செய்கிறோம். இரவில்படுத்துத் தூங்குவதும் ஒரு வேலைதானேஅவை உயிருக்கு நலம் செய்யும் பயனைஅளிப்பதில்லை.

 

     நனவுநிலை சகலாவத்தை எனப்படும்.  சகல அவத்தைகளும் பகலில்விழிப்பு நிலையில் உண்டு. தூக்கமாகிய நிலை கேவல அவத்தை எனப்படும். சகலத்தில் பயனற்ற வீண் வேடிக்கைக் காரியங்களைச் செய்கிறோம். கேவலத்தில் அந்த முயற்சியும் இல்லாமல் தூங்குகிறோம். பகலில் தூங்கினாலும்ஆன்மா கேவல அவத்தையில் உள்ளதாகவே கொள்ளவேண்டும். ஆகவேபகலும் இரவும் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை. அனுபவிக்கின்ற இன்பம் அனைத்தும் துன்ப சொரூமானவையே. இன்பம் போலத் தோன்றுகின்ற துன்பத்தையே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆன்மாவுக்கு இன்பத்தைத் தருவதற்குப் பகல்இரவு அற்ற இடம் வேண்டும்.

 

     ஒர் அருமையான பொருள் கிடைத்துவிட்டால்யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போலவே கிடைத்தற்கரிய பேறான ஞானத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார்.  ஒரு பூதர்க்கும் தெரியாத ஓர் இடம் உண்டு. நமக்கு இரவும் கூடாது. பகலும் கூடாது. இரவுபகல் அற்றஅந்த வெளிக்குப் போய் விடலாம் வாஎன்று அழைக்கிறார். ஒரு பூதர்க்கும் தெரியாத இடம் மட்டுமல்ல. ஒரு பூதர்க்கும் அறிய ஒண்ணாத இடமும் அதுதான். 

 

     போகிற வரைக்கும்துணை வேண்டும். போன பிறகும் துணை வேண்டும். கள்ளர் நம்மைக் கண்டு அஞ்சி நெருங்காமல் போக வேண்டும் என்றால் ஆயுதம் கையில் உடைய ஒருவன் துணையாக வர வேண்டும். பெரிய பெரிய அசுரர்களைச் சங்காரம் செய்து வாகை சூடிக்கொண்டிருக்கும் தேவசேனாபதியாகிய முருகப் பெருமான் திருக்கையில் வேலாயுதம் உள்ளது. அவனுடைய பாதாரவிந்தங்களையே சரணாகப்பற்றிக் கொண்டு ஈடேறலாம்என்கிறார். பாதம் = திருவடி. அரவிந்தம் = தாமரை. திருவடித் தாமரையைப் பாதாரவிந்தம் என்கிறார்.

 

     முருகன் திருக்கையில் உள்ள வேல் ஞானசத்தி ஆகும். தாமத குணத்தைப்போக்கிஅறியாமையை நீக்கிஅறிவைக் கொடுப்பது அந்த ஞானவேல். ஞானத்திற்கு உருவம் இல்லை 'அவன் மிக்க அறிவாளி'  என்றால்அவனிடமுள்ளஅறிவைக் காண இயலாது. அதற்கு உருவம் இல்லை. அவன் அறிவுக்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டுமென்றால் நாம், 'அவன் பெரிய அறிவாளி பட்டதாரி' என்று கூறுகிறோம். அறிவுக்கு உருவம் இல்லையானாலும் பட்டதாரி என்பதன் மூலம் அதற்கு ஒரு வகையாக அடையாளம் கூறுகிறோம். அதையே உருவம் என்று சொல்லலாம். இறைவனோடு தொடர்வுடைய அறிவு எதுவோஅது மெய்ஞ்ஞானம். ஞானம் இருவகைப்படும். கல்விகேள்வியினாலே வருவது அபரஞானம். உணர்வினாலேஅனுபவத்தினாலே பெறுவது பரஞானம். 

 

     அபர ஞானத்தைத் தர உதவியாக இருப்பவை நூல்கள். எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். வேதம் இறைவன் அருளியது என்பர். அது எல்லோருக்கும் பொதுவானது. வேதத்தோடு சேர்த்துச் சொல்லப்படுபவை ஆகமங்கள். அந்த அந்தச் சமயத்தவர்களுக்கு ஏற்றபடி தனித்தனியே ஆகமங்கள் இருக்கின்றன. பொதுவான வேதத்தையும்சிறப்பான ஆகமங்களையும் சேர்த்து வேதாகமம் என்று சொல்வது வழக்கம். வேதத்தில் மந்திரம் மிகவும் முக்கியம். ஆகமத்தில் தந்திரம் மிகவும் முக்கியம். எனவேவேதத்தை மந்திரம் என்றும் ஆகமத்தைத் தந்திரம் என்றும் சொல்வர். வேதம் இறைவனைப் பற்றியும்அறங்களைப் பற்றியும் சொல்கிறது. ஆகமங்கள் இறைவனை அடைவதற்குரிய வழிபாட்டு முறைகளைச் சொல்கின்றன. வேதம் அறத்தை எடுத்துச் சொல்வதன் மூலம் வாழ்வியலைக் கூறும். ஆகமம் வழிபாட்டு நிலைகளைக் கூறும்.

 

     ஞானம் எப்படி வருகிறது?  வேதமாக வருகிறது. ஆகமமாக வருகிறது. "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பார் மணிவாசகர். பிற நூல்களாக வருகிறது. முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலை "ஞானவேல்" என்று சொல்வார்கள் அருணகிரிநாதர் அந்த ஞானத்திற்கு உருவம் கொடுத்து ஞானம் தரும் நூலாகிய வேதத்தையும்ஆகமத்தையும் நினைத்துவேதாகமவேல் என்று சொல்கிறார்.இ றைவனோடு சம்பந்தப்பட்டட எல்லாவற்றையுமே வேதம் என்பது வழக்கம். சிவபிரான் ஏறிச் செல்லும் இடபம் வேதம். அவன் அணிகின்ற ஆடை வேதம். அவன்பாதுகை வேதம். அவன் சிலம்பு வேதம் என்பர்.

 

"மறையே நமது பீடிகையாம்;மறையே நமது பாதுகையாம்;

மறையே நமது வாகனமாம்;மறையே நமது நூபுரமாம்;

மறையே நமது கோவணமாம்;மறையே நமது விழியாகும்;

மறையே நமது மொழியாகும்;மறையே நமது வடிவாகும்" 

 

என்பது திருவிளையாடல் புராணம்.

 

"மன்னுகலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத் 

தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ"

 

என்பது திருவாசகம்.

 

     அருணகிரிநாதப் பெருமான் இந்த முறையை நினைத்துமுருகன் வேதாகமத்தையே வேலாக வைத்திருக்கிறன் என்கிறார். அந்த வேல் சித்திரவேல். எனவே "வேதாகமச் சித்ர வேலாயுதன்" என்றார். கிடைப்பதற்கரிய பொருள் ஒன்று கிடைத்தால்,அதை அறிவுடைய மனிதனால்தான் காப்பாற்ற முடியும். உயர்ந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால்அதற்குப் பாதுகாவலாக இருப்பது ஞானவேல். 

 

     அந்த ஞானவேல் உலகத்தைத் தனக்குள் அடக்கி ஆண்ட சூரபதுமனது உடலைத் துளைத்துஅவனுக்குக் கவசம் போல் இருந்த கிரெளஞ்ச மலையையும் பொடிப் பொடியாக்கியது.  வேல் நமக்குத் துணையாக வேண்டுமென்றால் அந்த வேலை உடைய வேலாயுதன் திருவடியை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் காலைப் பற்றினால் வேலை விடுத்து நம்மைக் காப்பாற்றுவான்.    

 

     அநாதி காலம் தொட்டு அடியவர்கள் எப்போதும் அருச்சனை செய்து வரும் முருகனது திருவடியில் அடியவர்கள் தூவிய மலர்கள் இருக்கின்றன. வெம்மையுடைய மனிதன் கையில் பட்டால் மலர் வாடிவிடும். செடியில் இருப்பது போலவேஅதையும் விட மிக்க மலர்ச்சியோடுமுருகன் திருவடிகளில் வெட்சி மலர் கிடக்கிறது. அவ்வளவு தண்மை உடையது அவன் திருவடி. மலரை அணிந்ததோடு தண்டையையும் அணிந்த திருவடி அது.

 

     'அந்தத் திருவடித் தாமரைகளை நமக்கு அரணாகப் பற்றிக் கொண்டு போவோம் வாமனமே!என்கிறார் அருணகிரிநாதர். நாம் பற்றிக் கொள்வது கால். நமக்கு அஞ்சல் என்று சொல்வது கை. நாம் தண்ணீர் விடுகிற இடம் வேர். நமக்குக் காய் தருகிற இடம் செடியின் மேற்பகுதி. அவனது திருவடியைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு, 'நீயே சரணம்என்று கதறினால் அவன் கை, 'அஞ்சல்என்று சொல்லும். அவனது வெட்சி பூத்ததண்டை அணிந்த பாததாமரையைப் பற்றிக் கொண்டால்அவன் கையிலுள்ள வேல் நம்மைப் பாதுகாக்கும்.  நாம் பாதுகாப்பான இடத்தை அடையலாம்.

 

     இப்போதே  "இனி இங்கே ஒரு கணமும் இருக்கக் கூடாது. இந்தக் கணமே வேறு இடத்திற்குப் போய் விடுவோம்என்கிறார் அருணகிரிநாதர் தமது நெஞ்சை நோக்கி. அது பகலும் இரவும் அற்ற இடம்நினைப்பும்  மறப்பும் அற்ற இடம்இன்பதுன்பம் அற்ற இடம்.  நமக்கு கிடைத்துள்ள அருள்ஞானச் செல்வத்தைக் கள்வர்கள் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று அச்சப்பட அவசியம் இல்லாத இடம்.

 

     இப்படித்தான் அருளாளர்கள் இறைவனது திருவருளால் ஞானத்தைப் பெற்ற மாத்திரத்தில் அவனுடைய திருவடியில் சேர்ந்து எல்லை இல்லா இன்ப நலங்களைத் துய்க்க ஒடுகிறார்கள்.  அவர்களது உடல் நம்மிடையே இருந்தாலும் மனத்தால் அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்று விடுகிறார்கள். அப்படி ஒடிவிட வேண்டுமென்ற உள்ளம் படைத்த மக்களுக்குச் சொல்வதைப் போல தமது  நெஞ்சத்துக்குச் சொல்கிறார் அருணகிரிநாதர்.  இங்கே இரவு பகல் இருக்கிறது. ஞானத்தைக் குலைக்கும் அஞ்ஞானமாகிய சூது இருக்கிறது. "அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துசும்மா இருக்கப்போதாய்" என்கிறார். 

 

     சூதானது அற்ற வெளி என்றால் இரவுபகல் இல்லாத இடம். இரவு அற்ற இடம் என்றால்அங்கே பகல் உண்டு என்று தோன்றும். பகல் அற்றது என்றால் இரவு உண்டு என்று ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இனமானவை. வெண்தாமரை என்ற சொல்,செந்தாமரை என்ற இனத்தை நினைப்பூட்டுகிறது. அதைப் போல இரவு என்று சொன்னால் பகல் இருப்பது நினைவுக்கு வருகிறது. அருணகிரிநாதர் காட்டுகின்ற வெளியோ பகலும் இரவும் இல்லாத இடம். மறதிநினைப்பு ஆகிய இரண்டும் அங்கே இல்லை. இன்பமும் இல்லைதுன்பமும் இல்லை. எங்கும் ஓரே ஆனந்தம். ஆனந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது. சூது அற்ற இடம் அது. வெறும் வெட்ட வெளியான இடம் அது. 

 

     வெளி என்பது ஆகாயம். ஆகாயம் ஐந்து பூதங்களுக்குள் ஒன்று.  மற்றப் பூதங்களை எல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருப்பதுஅது பூத ஆகாயம். அந்த வெளி சூது உடைய வெளி. அதற்குமேல் ஓர் ஆகாயம் உண்டு. அதற்குச் சிதாகாசம் என்று பெயர். அது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. பூத ஆகாசத்திற்குத் தோற்றம் உண்டுமுடிவு உண்டு. சிதாகாசத்திற்குத் தோற்றக் கேடு இல்லை. கால எல்லைக்குள்பூத எல்லைக்குள்மூச்சுக் காற்றுக்குள் அடங்கி வாழ்கின்ற நாம் காலனுக்குப் பயப்பட்டே வாழ வேண்டும். இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில்இரவும் பகலும் அற்ற வெளியில் சிதாகாசத்தில் இருக்கின்ற இறைவனோடு நாம் போய்ச் சேர்ந்து விட்டால்அங்கே காலபயம் இல்லை.

 

     "பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது. இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடிக் கீழ் ஓர் தலைமறைவே" என்றார் அப்பர் பெருமான். அப்படித் தலைமறைவாக இருக்கின்ற இடத்தை வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாது. அங்கே போவதற்கும் இறைவன் துணையாக இருப்பான். அங்கே போன பிறகும் துணையாக எப்பொழுதும் இருப்பான். இங்கேஇந்தப் பூவுகில்இருந்தால் ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடிவதில்லை.  ஒரு கணம்கூடத் தூக்கம் வருவதில்லை. எப்போதும் வேலை. பகலும் வேலைஇரவும் வேலை. பகலும்இரவும் இல்லா இடத்தில் வேலையே இருக்காது. எனவே, "சும்மா இருக்கப் போதாய்" என்கிறார்.

 

     சும்மா இருப்பது என்பதுசெயல் அடங்கிபேச்சு அடங்கிமனம் அடங்கி இருப்பதைக் குறிக்கும். மோன நிலை அது. இந்த மூன்றையும் "காஷ்டமெளனம்", "வாக்குமெளனம்", "மனோமெளனம்" என்றுசொல்வர். மனோமௌனம் என்பதுதான் பூரணமௌனம். இறைவனுடைய அருளைத் அடைந்த மாத்திரத்தில் அடியவர்கள் சொல் அடங்கிசெயல் அடங்கிமனம் அடங்கிச் சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டுச் சும்மா இருக்கிறார்கள். அனுபவத்தில் ஈடுபடு ம்போது எல்லாம் அடங்கிவிடும். ஆராய்ச்சிக்கும் பேச்சுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து செல்வதால் பயன் இல்லை. "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார். இறைவனைப் பற்றியும்உயிரைப் பற்றியும்அவனருளைப் பெறுவது பற்றியும் ஆராய்ச்சி பண்ணத்தான் வேண்டும். உண்பதற்கு உணவு கிடைத்தால் அது உண்ணத் தகுந்த உணவுதானா என ஆராய்ச்சி செய்யலாம். அது உணவுதான் என்று அறிந்த பிறகு அதை உண்டு மகிழாமல் 'இது எந்த அரிசியால் ஆனது?அது எங்கே விளைந்தது அது பழையதாபுதியதாஎந்தக் கடையில் வாங்கியது?" என்றெல்லாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்வதால் ஒரு பயனும் இல்லை. பயனற்ற ஆராய்ச்சியால் இன்பமும் இல்லை. ஆன்மாவுக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருபவன் இறைவன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால்அவன் அருளைப் பெறுவதற்கு அந்தக் கணமே முயலவேண்டும்.  ஞானமாகிய செல்வம் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு இயைந்து ஏகாந்தமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலைதான் சும்மா இருக்கும் நிலை. சும்மா இருப்பதுதான் அனுபவம். அருணகிரியார் உபதேச முறையில் மனமே வாசும்மா இருக்கலாம்" என்று சொல்கிறார்.

 

     அப்படிச் சும்மா இருக்கின்ற நிலை ஒருவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத நிலை ஆகும். மனத்தை வசப்படுத்துதல் அவ்வளவு எளிது அல்ல. "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்ற தாயுமான அடிகளார் வேறு எந்த எந்தக் காரியங்கள் எளிதானவை என்று பட்டியல் இட்டுக் காட்டுகிறார்.சும்மா இரு’ என்று எளிதில் சொல்லி விடலாம். அதுதான்  கடினம் என்றார் தாயுமானவர். அதற்கு அருள் செய்யச்சொல்லி இறைவனை வேண்டுகிறார்.

 

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்,

          கரடிவெம் புலிவாயையும்

     கட்டலாம்ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாம்,

                  கட்செவி எடுத்து ஆட்டலாம்,

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்

                  வேதித்து விற்று உண்ணலாம்,

      வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்,

                   விண்ணவரை ஏவல்கொளலாம்,

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்மற்றொரு

                   சரீரத்தினும் புகுதலாம்,

      சலமேல் நடக்கலாம்கனல்மேல் இருக்கலாம்,

                   தன்னிகரில் சித்திபெறலாம்,

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

                   திறம்அரிதுசத்தாகிஎன்

     சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

                   தேசோ மயானந்தமே.

 

இதன் பொருள் ---

 

     என் சிந்தனையில் மெய்ப்பொருளாகத் திகழ்கின்ற அறிவு வடிவான தெய்வமேஒளிமயமான ஆனந்தமேமதயானையை வசமாக்கி விடலாம்கரடிபுலியின் வாயைக் கட்டலாம்சிங்கத்தின் மீது ஏறலாம்பாம்பைக் கையில் பிடிக்கலாம்மற்ற உலோகங்களைப் பொன்னாக்கலாம்,  இன்னொருவருக்குத் தெரியாமல் நடமாடலாம்தேவர்களை அடிமையாக்கலாம்எப்போதும் இளமையோடு இருக்கலாம்இன்னோர்  உடலில் புகலாம்நீர்மேல் நடக்கலாம்நெருப்பின்மேல் நடக்கலாம்இணையில்லாத சித்திகளையும் பெறலாம். ஆனால்,  இத்தனையையும் செய்தாலும்சிந்தனையை அடக்கிச் சும்மா’ இருப்பது சிரமம். அந்தத் திறன் எளிதில் வந்துவிடாதுஅதை எனக்கு அருள்வாய்! 

 

     சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற அரிய நிலையைப் பெறுவதற்கு இறைவன் திருவருள் புரியவேண்டும். அந்த நிலையை ஒருவராலும் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த நிலை இறைவன் திருவடியையே தஞ்சமாக அடைந்தவர்க்கே வாய்க்கும். நினைப்பு மறப்புஇன்பதுன்பம் ஏதும் அறியாத இடம் இரவுபகல் அற்ற பரவெளி. அந்தப் பரவெளியில் ஒளித்துச் சும்மா இருப்பதற்கு இனியாவது வருவாயாக என்று நெஞ்சுக்கு நீதி புகல்கின்றார் அருணகிரிநாதர்.

 

     சும்மா இருப்பதுதான் சுகம். அந்த சுகம் எப்போது வாய்க்குமோ   என்று ஏங்கினார் வள்ளல்பெருமான்.

 

"இன்று வருமோநாளைக்கே வருமோஅல்லது மற்று

என்று வருமோ அறியேன்,எம்கோவே! - துன்றுமல

வெம்மாயை அற்றுவெளிக்குக் வெளி கடந்து

சும்மா இருக்கும் சுகம்."

 

     சொல் அற்ற நிலையில் சும்மா இரு என்று பரமகுருநாதன் ஆகிய முருகப் பெருமான் உபதேசித்த அனுபவத்தை"சும்மா இரு சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே" என்றர் கந்தர் அனுபூதியில். அந்த நிலையைத் தனக்குக் காட்டுமாறு அறுமுகப் பரம்பொருளை வேண்டி நின்றார் சிதம்பர சுவாமிகள்.

 

"சும்மா இரு என நீ சொல்அப் பொருள் ஒன்றும்

அம்மா! அறிந்திலம் என்று உரைத்த - எம்மான்

அருணகிரிநாதர் அனுபவம் நாயேற்குக்

கருணைபுரி போரூரா காட்டு"

 

     சும்மா இருக்கும் சுகத்தை விரைந்து பெற பரமகுருநாதன் திருவடிகளைச் சரணடைந்துஅவனது பரமகருணைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனைப் பெறுவதற்கான தாகமும் வேகமும் நமது உள்ளத்தில் இருத்தல் வேண்டும்.

 

 

 

 

 

 

முருகன் திருவடி பட்ட இடம்

 


முருகன் திருவடி பட்ட இடம்

-----

 

     அருணகிரிநாதப் பெருமான் முருகன் என்னும் குழந்தையை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டிக் கொண்டு வருகிறார். குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்சொன்னாலும்குருத்தைப் போலப் பச்சிளம் குழந்தையாகத் தொட்டிலில் படுத்து விளையாடிப் பாலுக்காக அழுவதைச் சொன்னார். பின்பு அவனது இடையில் கட்டிய  கிண்கிணியில் ஒலி எப்படி எதிரொலியை எழுப்பியது என்று சொன்னார். அதற்குப் பிறகு முருகன் தவழ்ந்து உட்கார்ந்து சப்பாணி கொட்டிய பன்னிரண்டு கைகளை உடையவன் என்று கூறினார். முருகக் குழந்தை இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறான். அக்குழந்தை அடி எடுத்து வைக்கும்போது நடந்தவை பற்றிக் கூறுகிறார்.

 

     அருணகிரிநாதர்ஒரு கருத்தைச் சொல்ல வரும்போது அதை மாத்திரம்  நேர்முகமாகச் சொல்லாமல்சுற்றிச் சூழ இருக்கிற விடயங்களையும் சொல்லி அழகுபட விளக்குவார். ஒன்றைச் சொல்லுகையில் அதற்குத் தொடர்பு உடைய வேறு பலவற்றைச் சொன்னால் அழகாக இருக்கும். தங்கத்தால் செய்த மாலையில் வைரத்தை வைத்துக் கட்டினால் அழகு கூடும். அந்த வகையில் முருகப் பெருமான் அடிஎடுத்து வைத்தான் என்று சொல்ல வரும்போது அவனுக்கு முன்னாலே அடி எடுத்து  வைத்தவர் என்னும் பெருமையை உடைய முருகனுடைய மாமனாகிய திருமாலை நினைக்கிறார். திருமால் தமது  பெரிய திருவடியால் மண்ணையும் விண்ணையும் அளந்தவர்.

 

     அவருடைய திருமருகராகிய முருகப் பெருமானும் தன்னுடைய சிறிய அடிகளால் மூன்றடி வைத்தான். அருணகிரிநாதர் இந்த இரண்டையும்சேர்த்துச் சொல்லுகிறார். "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும்பெருமான்" என்று திருமாலைக் குறித்துப் பாடுகிறார். வாமனாவதாரத்து நிகழ்ச்சி இது. 'மூன்று அடி மண் தந்தேன்என்று மகாபலி சொன்னவுடனே பெருவடிவை எடுத்துக்கொண்டுபூவுலகத்தைத் தம்முடைய பேரடியினால் ஓர் அடியாகவும்வானுலகத்தை ஓர் அடியாகவும் அளந்துவிட்டுமூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார் திரிவிக்கிரமர். மாபலிச் சக்ரவர்த்தியிடம் அவர் வரும் போது வாமனராககுறிய வடிவினராக வந்தார். தம்முடைய உடம்பை மிகவும் குறுக்கிக் கொண்டுபார்ப்போர் அருவருத்து வெறுத்து ஒதுக்கும்படியாகக் கூனிக் குறுகி வந்தார். 

 

     பல் எல்லாம் தெரியக் காட்டிப்  பிறரிடத்தில் கையை நீட்டி இரத்தல் இழிவான செயல். அப்படி இரக்கிறவன் எத்தகைய தைரியமும்பராக்கிரமும் உடையவனாக இருந்தாலும் கேட்கும்போது கூனிக் குறுகிப் போவான். தானம் வாங்கப் போன  திருமால் தம்முடைய நெடிய உருவத்தோடு போகவில்லை. சாதாரண மனிதனது உருவத்திரும் போகவில்லை. மிகக் குட்டையானபெற்றவரும் வெருக் கொள்ளுகின்ற வாமன உருவத்தோடு சென்றார். கடவுள் எந்த விளையாட்டைச் செய்தாலும் அதில் ஒரு நீதி இருக்கும். 

 

     வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எதுஎன்று கேட்டால்அந்த வறுமையைப் போல்வறுமை என்பதே துன்பத்தினைத் தருவது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதைப் போல இழிவு தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவேயாசகத்திற்கு என்று போகும்போது திருமாலின் நெடிய உருவமே குறுகிப் போனது. பிறரிடம் கையை நீட்டி யாசகம் பண்ணுகிறவர்கள் கூனிக்  குறுகிப் பல்லை இளிக்கும் அவலநிலையை அடைவார்கள் என்ற தத்துவத்தை இது உணர்த்தும். உலகத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளித்து வந்த மகாபலியை அடக்கவே அவர் போனார். அவனிடத்தில்,  'மூன்றடி மண்ணைத் தாஎன்று கேட்டார். உலகத்தோருக்கு எல்லாப் பொருளையும்கொடுக்கும் வள்ளலாகிய திருமால்எல்லாப் பொருள்களையும் தம்மிடத்திலேயே  வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும்மாபலியிடம் அவர் கேட்டது யாசகம்தான்.  இல்லாதவன் கேட்பது  இயற்கை. அவன்கூட இல்லை என்று சொல்லிப் பிறரிடம் சென்று கேட்கக் கூடாது என்று திருவள்ளுவர் கூறுவார். இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது வழங்குதலே மாண்பு. அப்படிக் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்தலே மிக உயர்ந்தது. 

 

"'என இரத்தல் இழிந்தன்றுஅதன் எதிர்,

'ஈயேன்என்றல் அதனினும் இழிந்தன்று;

'கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதன் எதிர்,

'கொள்ளேன்என்றல் அதனினும் உயர்ந்தன்று.."

 

என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. 

 

     "ஈ என இரத்தல் இழிந்தோன் கூற்று" எனச் சொல்லப்பட்டு உள்ளதால்ஒருவனிடம் சென்று எனக்குத் தருவாயாக என்று இரப்பது இனிவானது.அப்படி ஒருவன் தனிடம் வந்து கேட்டபோதுஇல்லை என்று சொல்லுதல் அதனினும் இழிவானது. தம்மிடத்து வந்தவர் இல்லை என்ற சொல்லைச் சொல்லும் முன்பாகவே அவருடைய முகக் குறிப்பை உணர்ந்துஇதனைக் கொள்வாயாக என்று கொடுப்பது உயர்ந்தது. தம்மிடத்து  ஒன்று இல்லாத நிலையிலும்தமக்கு ஒருவர் ஒன்றைக் கொடுத்தாலும்,கொள்ளேன் என்று சொல்லி மறுத்தல்அந்தக் கொடையினும் உயர்வானது.

 

     பொல்லாதவர்களிடத்தும் சில நல்ல குணங்கள் இருக்கும். ஒருவன் ஒழுக்கம் தவறியவனாக இருப்பான். ஆனால் யார் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பு  அவனிடம் இருக்கும். இந்த வகையைச் சேர்ந்தவன்தான் மாபலி. வாமன உருவத்தில்  திருமால்  வந்திருக்கிறார் என்பதை அவன் அறியவில்லை. அவர் கேட்ட  'மூன்றடி மண் தருகிறேன்என்று சொன்னான். ஆனால்,அவனுடைய குரு சுக்கிராசாரியாருக்கு வாமனராக வந்தவர் யார் என்று தெரியும். அவர் ஞானம் உடையவர். "மாபலியேவாமனராக வந்திருப்பவர் யார்  என்று தெரியாமல்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாயே. முடியாது என்றுசொல்லி விடுஎன அவனைத் தடுத்தார். "நான் சொன்ன வாக்கை மீறமாட்டேன்என்று சொல்லி விட்டான் மகாபலி. அப்பொழுதும் சுக்கிராசாரியாருக்கு மனம் வரவில்லை. அவன் தண்ணிர்  வார்க்க எடுத்த கிண்டியின் வாயில் ஒரு சிறு வண்டைப் போல நுழைந்து கொண்டுதண்ணீர் கீழே விழாமல் தடுத்தார். வாமனர் தம் கையில் வைத்திருந்த தர்ப்பையை எடுத்து அதன் துவாரத்தின் வழியே குத்தினார். அதனால் சுக்கிராசாரியார் ஒருகண்ணை இழந்தார். நல்ல ஞானம் படைத்த சுக்கிராசாரியாருக்கு அசுரனாகிய மாபலியைத் திருத்துகிற ஆற்றல் இல்லை. மாபலியின் அசுரத் தன்மை அவருக்கு வந்துவிட்டது. நல்லவர்களிலும் சிலர்,சேர்க்கையினால் இப்படித் தான் கெட்டுப்போவார்கள் என்பதை இது காட்டும்.சில நல்லவர்கள் எங்கே இருந்தாலும்அந்த இடத்தில் தாம் கெட்டுப் போகாமல் இருப்பார்கள். இது அவர்களின் மனத் தின்மையைப் பொறுத்தது. ஒருவன் மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அதைக் கொடுக்காதே என்று  தடுக்கக் கூடாது என்பது சுக்கிராசாரியாருக்குத் தெரியவில்லை. 

 

        கொடுப்பதைத் தடுப்பவன் என்ன கதியை அடைவான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்."கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.” என்பது திருக்குறள். கம்பரும் இராமாயணத்தில் இந்த்த் திருக்குறள் வலியுறுத்திப் பாடுகிறார்.

 

"எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி!

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்"

 

என்பது கம்பராமாயணம்.

 

     சுக்கிராசாரியார்மாபலி கொடுப்பதைத் தடுக்கின்ற பெரியபாவத்தைச் செய்தார். இரண்டு கண்ணும் இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவுஅந்த அசுரகுருவுக்கு இல்லை.ஆகையால்வாமனர்ஒரு கண்ணைக் குத்தி விட்டார்.

 

     மாபலி நீர் வார்த்துமூன்றடி மண் தந்தேன்என்று சொன்னான். உடனே வாமனருடைய திருவுருவம் பெரிதாகி விட்டது. பெருவடிவத்தை ஏற்றுக் கொண்டவுடன்  தம்முடைய ஒர் அடியாலே பூவுலகத்தை அளந்தார். மற்றோர் அடியாலே வானுலகத்தைஅளந்தார். மூன்றாவது அடியால் அளக்க ஒன்றும் இல்லை. 'நீ வாக்களித்தபடி மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?' என்று கேட்டார். அப்போது மாபலி தன்தலையைக் காட்டினான். திருமால் அவன் தலையின் மேலே தம்முடைய திருவடியை எடுத்து வைத்தார். இறைவனது திருவடி சம்பந்தம் கிடைத்த மாத்திரத்திலே அவனுக்குப் புகழ்உண்டாகி விட்டது. 'எம்பெருமானே!  இன்றைக்குத்தான் என் அகத்தில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தீர்கள். இன்றைத் தினத்தில் உலகிலுள்ள மக்கள் என் நினைவாக தங்கள் அகங்களில் விளக்கு ஏற்றி வைத்துக் கும்பிடட்டும்என்று வேண்டிக் கொண்டான். மாபலியின் அகத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நாள் எல்லா மக்களின் அகத்திலும் விளக்கு ஏற்றி வைக்கப்படும் கார்த்திகை நாளாக விளங்குகிறது.  முருகன் பெருமையைக் கூற வந்த அருணகிரிநாதர்பாடலின் இடையே இந்த அற்புதமான நிகழ்வைக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துகிறார். 

 

     "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்". படி என்பது நிலம்.  அப்படிச் சேவடியை நீட்டிய பெருமானுக்கு மருமகன்தங்கை பிள்ளைஆகிய முருகன். மாமாவின் பேரடிபூவுலகம்வானுலகம்மாவலியின் தலை ஆகிய மூன்றையும் அளந்தது. மருகன் ஆகிய முருகனின் சிற்றடியும் மூன்று பொருளை அளந்தது."தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ?என்கிறார் அருணகிரிநாதர்.

 

     முருகனுடைய சிற்றடி மயில் மேலே பட்டது.  மயில் வாகனம் வைத்துக் கொண்டிருக்கிற பெருமான் அதைப் பெருமைக்காக  வைத்துக் கொள்ளவில்லை. தன்னை வழிபடும் அடியார்கள் அழைப்பதற்கு முன்னே ஒடிச் சென்று அருள் செய்வதற்காக வைத்திருக்கிறான். 'நீலம்கொள் மேகத்தின் மயில் மீதே,நீ வந்த வாழ்வைக் கண்டு அதனாலே மால்கொண்ட பேதை'  என்று ஒரு திருப்புகழ் கூறும்.  'இறைவனேநான் எவ்வாறு உனது அருள்பெறப் போகிறேன்என ஏங்கினாள் ஒரு பெண். முருகன் மயில் வாகனத்தில் வந்து அன்பர்களின் வீட்டு வாசலில் இறங்கினான். தேவலோகத்தில் இருப்பவன்  பூலோகத்திலுள்ள சிற்றுயிர்களுக்கு அருள் செய்வதற்காகவே மிக வேகமாக ஓடிவரும் மயிலை வாகனமாக வைத்திருக்கிறான். ஆகவேஅவன் மேல் காதல் கொண்டால் அது நிறைவேறும் என்று அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வந்தது. இங்கே பெண் என்று குறிப்பிட்டது பக்குவம் அடைந்த ஆன்மாவை. பக்குவப்பட்ட ஆன்மா ஆகிய அருணகிரிநாதர் இவ்வாறு பாடினார்.

 

      தன்னை நினைந்து உருகுகின்ற பக்குவத்தை அடைந்து இருக்கும் அடியார்களை அந்தக் கணமே ஆட்கொள்வதற்காகப் பாய்ந்து ஒடும்போது மயிலை அணைத்துக் கொண்டு ஏறுவான். அவனதுகால் மயிலின்மீது படுவதே அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத்தான். அதன் மீது அவன் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மற்றொரு காலைத் தூக்குகிறான். அவன் அமர்ந்த மாத்திரத்திலே குதிரை செல்வது போல அந்த மயில் தாவி ஓடுகிறது. அவன் விரைவாகவே ஏறுகிறான் தாவடி ஒட்டும் மயிலில். தாவுகின்ற அடியை உடையது மயில். தாவித் தாவி ஒடுகின்ற அந்த மயிலின் மேல்முருகன் தன் சிற்றடியை வைத்தான்எதற்காகஅடியார்களுக்கு அருள் செய்வதற்காக. 

 

     எம்பெருமான் திருவடி சிற்றடியானாலும் அதன் பெருமை சொல்லி முடியாது. சூரபதுமன் தன்னுடைய அசுரத் தன்மையைக்  காட்டித் தேவர்களை அல்லல் பட வைத்தான். இந்திரனது வீரமும் அவனது வச்சிராயுதமும் சூரபதுமனை அடக்கப் பயன்படவில்லை. அவன் தேவலோகத்தையே இழந்தான். இந்திரன் முதலிய தேவர்களுக்கு இறைவன் நினைவு வந்தது. சிவபெருமானிடத்தில் ஒடிப் போய் முறையிட்டார்கள். தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டுஆறு திருமுகங்களை உடையவராய்செந்தழல் வடிவாகிய ஆறுநெற்றிக் கண்களின் நின்றும்ஒரே சமயத்தில் வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். திருமுருகன் அவதாரம் நிகழ்ந்தது. தேவர்கள் தலையைக் தாழ்த்தி முருகன் திருவடியை வணங்கினார்கள். தேவர்களின் தலை மீது முருகன் திருவடி பட்டது.

 

     இதைத்தான் அருணகிரிநாதப் பெருமான்மாபலியிடத்தில் மூன்றடி நிலம் கேட்டுபிரபஞ்சமாகிய அண்டத்தின் முகடு முட்டும்படியாகப் பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு  தம்முடைய பெரிய அடி ஒன்றினாலே பூமியையும்மற்றோர் அடியாலே வானத்தையும்மூன்றாவது அடியாலே மாபலியின் தலையையும் அளந்த திருமாலின் திருமருகனாகிய முருகன்மயிலின் மேலே ஏறும் போது தன்னுடைய சிற்றடி அதன் மேல் படும்படி செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தலைமீது தன் சிற்றடிபடும்படியாகச் செய்தான். முருகன் திருவடி தேவர்களுடைய சிரத்தில் பட்டது என்கிறார்.

 

     அடுத்து தனது அனுபவம் ஆக"என் பா அடி ஏட்டிலும் பட்டது" என்று சொல்கிறார். முருகன் திருவடி சம்பந்தம் உண்டானதால் ஆயிரக் கணக்கான சந்தப் பாடல்களை அழகிய தமிழில் பாடினார்அருணகிரிநாதர். தமிழின் சிறப்பு அப்படி. முத்தமிழால் தன்னை வைதாரையும் கூட வாழவைக்கின்ற வள்ளல் முருகப் பெருமான்."என் பா அடி ஏட்டிலே முருகப் பெருமானுடைய சிறிய திருவடிகள் பட்டிருக்கின்றன.  அந்த அருட்பாடல்களை எல்லாம் நான் எழுதவில்லை" என்றும், "முருகன் திருவடிதான் அந்தப் பாடல்களை உருவாக்கின. அதனால் இந்தப் பாடல்கள் உயர்வு பெற்றன" என்கிறார் அருணகிரிநாதர்.

 

     அருளாளர்கள் சந்தம்எதுகை மோனை முதலியவை பார்த்துவார்த்தைகளைக் கோர்த்துப் பாடல் புனைபவர்கள் அல்ல. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து வைத்துக்கொண்டு பாடல்கள் எழுதுபவர்கள் அல்ல. அவர்களுக்கு நாக்குதான் ஏடுஎழுத்தாணி எல்லாம். நாவிலிருந்து அருட்பாடல்கள் வெள்ளமாகப் பெருகும். உள்ளத்திலே ஊறிய திருவருள் அனுபவம் வாக்கிலே வருகிறது. உள்ளத்தில் இறைவன் குடிகொண்டு உள்ளதால்அவர்கள் சொல்லும் வார்த்தை எல்லாம் இறைவன் சொலும் வார்த்தைகள் ஆகின்றன. "எனது உரைதனது உரை" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான் ."உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்கருகாவூர் எந்தை தானே" என்பது அப்பர் அருள் வாக்கு. "நான் சொல்லும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை" என்பார் வள்ளல்பெருமான்.

 

     நாக்குப் பேசுகிறது. இந்த நாக்குப் பேசுவதற்கு முன்னாலே உள்ளே இருக்கிற நாக்கு ஒன்று பேசுகிறது. வெளியே இருக்கிற நாக்காகிய ஏட்டுக்கு அடிஏட்டுக்குஉள்ளே உள்ள நாக்கு. புறத்தில் இருக்கிற கண்ணைப் புறக்கண் என்கிறோம். அதே போல அகத்தில் கண் இருக்கிறது. அது அகக்கண். கண் மாத்திரம் அல்ல. காதும் இருக்கிறது. உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதைத்தான் நினைப்பு என்று சொல்கிறோம். உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதை வெளியே இருக்கிற நாக்கானது ஒலியை அதிகப்படுத்திக் கூட்டியும்குறைத்தும் வெளியிடுகிறது. ஊமைக்கும் நாக்கு இருக்கிறது.அவனால் பேச முடியவில்லை. உள்ளே உள்ள நாக்குப் பேசவில்லை என்றால் வெளியே உள்ளம் ஆகிய நாக்கும்பேசுவது இல்லை.உள்ளே இருக்கிற நாக்கும் தானாகப் பேசாது. அதற்கு உரை சொல்லிக் கொடுக்கிறவன்  ஒருவன் இருக்கிறான். அவன்தான் இறைவன். முதலிலே பேசுகிறவன் இறைவன்.அதற்கு அப்புறம் உள்ளேயுள்ள மனமாகிய நாக்குபேசுகிறது.அதற்கு அப்புறந்தான் வெளி நாக்குப் பேசுகிறது. இறைவனே ஒவ்வொருவருடைய நாக்கும் இயங்க மூலமாக இருக்கிறான். இதையே அப்பர் பெருமான், "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்று பாடினார்."உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்"எனப் பாரதியார் பாடுகின்றார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாவதற்குக் காரணம் இறைவன் அங்கே வீற்றிருப்பதுதான். இறைவனது திருவடியானது,அந்த அடி ஏட்டில்பட்டால்தான் ஒளி உண்டாகும். 

 

     பாரதப் போர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்தது என்பது புராணகதை. ஒவ்வொரு நாளும் நம் உள்ளங்களில் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் போர். ஆறு கோடி மாயா சக்திகள் வேறுவேறு தம் மாயைகள் தொடங்குகின்றன. நமது உள்ளம் போர்க்களம் ஆகின்றது.  போர்க்களத்திலே அருச்சுனனுக்கு உபதேசம் செய்த கண்ணபிரான்,நித்தம் நமது உள்ளங்களிலேயும் உபதேசம் புரிகிறான். நம் உள்ளங்களிலேயே இருக்கிறான். ஓர்ந்து பார்ப்பவர்க்கு உண்மை விளங்கும். ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியாக இறைவன் இருக்கின்றான். 

 

     நமது உள்ளமானது  அன்பு என்னும் நீர் ஊறிய நிலமாக இருந்தால் இறைவன் திருவடிச் சுவடு தெரியும். கட்டாந் தரையாக இருந்தால் தெரியாது. இரும்பாக இருந்தாலும் உருகினால்தான் பயன் உண்டு. பொன்னாக இருந்தாலும் உருகினால்தான் அணிகலன் ஆகும். அன்பே வடிவான முருகப் பெருமான் நடமாடுகிற உள்ளம் உடையவர் அருணகிரிநாதர். அங்கே  முருகப் பெருமானின் சிற்றடி பதிந்திருக்கிறது. காமம்,  குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் முதலிய அழுக்குகளை வேரோடு களைந்து எடுத்தவர் ஆதலால் எம்பெருமான் அவரது உள்ளத்திலே எப்போதும் ஒடி ஆடிக் கொண்டிருக்கிறான். நமது உள்ளங்களிலே கோபத்தின் அடி படுகிறது. அதன்  பயனாக நமது நாவில் கடுஞ்சொல் கொப்புளிக்கிறது. காமத்தின் அடி பதிகிறது. அதனால் பொருளற்ற சொற்கள் வருகின்றன. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். அரசியல் மேடைகளில்  நடக்கும் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டு,  'நாம் முன்னோர்கள் இயல் தமிழ்இசைத் தமிழ்நாடகத் தமிழ் என்று மூன்று வகைத் தமிழ் இருப்பதாக வரையறை செய்தார்கள். அந்த மூன்றுக்கும் மேல் நான்காவதாக "வசைத்தமிழ்என்ற ஒன்று இப்பொழுது வளர்ந்து வருகிறதே'  என்று சொல்வார்கள். இனிமையான தூய சொற்கள் நம் வாக்கிலிருந்து வர வேண்டுமானால் நம் உள்ளங்கள் தூயனவாக இருக்க வேண்டும். 

 

     "ஈர நெஞ்சினர் யாதும் குறைவு இலர்" அடியார்களைப் பற்றி தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுவார். அன்பு நீரினால் நனைந்து ஈரமாகிய உள்ளங்களில் இறைவனது சிற்றடிகள் பதிகின்றன. "என்னுடைய உள்ளத்தில் இறைவனுடைய சிற்றடிகள் பதிந்தன" என்கிறார் அருணகிரிநாதர். மயில்மேல் பட்ட திருவடிதேவர்தலையில் பட்ட மலரடி இந்த ஏழையின் ஏட்டிலும் பட்டது என்று  சொல்கிறார். அந்த அனுபவத்தில் மலர்ந்த பாடல் கந்தர் அலங்காரத்தில் வருகிறது.

 

"தாவடி ஒட்டும் மயிலிலும்தேவர் தலையிலும்என் 

பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோபடி மாவலிபால் 

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்

சேவடிநீட்டும் பெருமான்மருகன்தன் சிற்றடியே!" 

 

இதன் பொருள் ---

 

            அந்நாளில்மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண்ணை யாசித்துபெரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும்படியாகத் தனது சேவடியை நீட்டி அளந்த பெருமையை உடைய திருமாலின் திருமருகர் ஆன முருகப் பெருமானுடைய சிறிய திருவடியானதுஅவர் செலுத்துகின்ற மயிலை வாகனத்தின் மீதும்,தேவர்களுடைய தலையின் மீதும்அடியேன் திருவருள் துணைக் கொண்டு பாடிய பாடல்களின் அடிகளை உடைய ஏட்டின் மீதும் பட்டது அல்லவா? (இது என்ன ஆச்சரியம்!)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...