பொது --- 1079. இருந்த வீடும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இருந்த வீடும் (பொது)


முருகா! 

நிலையற்ற பொருளைச் சதம் என்று கருதாமல், 

தேவரீரை வழிபட்டு உய்ய அருள் புரிவீராக.


தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான


இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும்


இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும்


விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே


விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே


குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே


குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா


திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே


சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


இருந்த வீடும், கொஞ்சிய சிறுவரும், ...... உறுகேளும்,


இசைந்த ஊரும், பெண்டிரும், இளமையும், ...... வளமேவும்


விரிந்த நாடும், குன்றமும் நிலை என ...... மகிழாதே,


விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட ...... அருள்வாயே.


குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே!


குரங்கு உலாவும் குன்று உறை குறமகள் ...... மணவாளா!


திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு ...... புலவோனே!


சிவந்த காலும் தண்டையும் அழகிய ...... பெருமாளே.


பதவுரை

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே --- குருந்த மரத்தில் ஏறியவரும் மேகவண்ணருமான திருமாலின் திருமருமகரே!

குரங்கு உலாவும் குன்று உறை குறமகள் மணவாளா --- குரங்குகள் உலாவும் குன்றுகளால் ஆன வள்ளிமலையில் வாசம் செய்திருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு புலவோனே --- திருத்தமான முறையில் வேதங்களை இனிய தமிழ்மொழியில் தேவாரப் பாடல்களாக உலகவர் அறியத் (திருஞானசம்பந்தராக வந்து) தந்தருளிய புலவரே! 

சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே --- செம்மையான திருவடியும், அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமையில் மிக்கவரே!

இருந்த வீடும் --- அடியேன் வாழுகின்ற வீடும், 

கொஞ்சிய சிறுவரும் --- அடியேனுடன் கொஞ்சிப் பழகும் புதல்வர்களும், 

உறுகேளும் --- வினைவயத்தால் அடியேனோடு வந்து பொருந்திய உறவினரும்,

இசைந்த ஊரும் --- அடியேன் பொருந்தி வாழும் ஊரும்,

பெண்டிரும் --- அடியேனுடைய மனைவி முதலான பெண்களும்,

இளமையும் --- எனது இளமையும்,

வளம் மேவும் விரிந்த நாடும் குன்றமும் --- வளப்பம் நிறைந்து,  விரிந்து பரந்த எனது நாடும்,  நாட்டில் உள்ள மலைகளும், 

நிலை என மகிழாதே --- என்றும் நிலைத்து இருப்பவை என்று மகிழ்ச்சி கொள்ளாமல்,

விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே --- ஒளி விளக்கு ஏற்றி தேவரீரை வழிபட அருள்வீராக. 


பொழிப்புரை


குருந்த மரத்தில் ஏறியவரும் மேகவண்ணருமான திருமாலின் திருமருமகரே!

குரங்குகள் உலாவும் குன்றுகளால் ஆன வள்ளிமலையில் வாசம் செய்திருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

திருத்தமான முறையில் வேதங்கை இனிய தமிழ்மொழியில் தேவாரப் பாடல்களாக உலகவர் அறியத் (திருஞானசம்பந்தராக வந்து) தந்தருளிய புலவரே! 

செம்மையான திருவடியும், அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமையில் மிக்கவரே!

அடியேன் வாழுகின்ற வீடும், அடியேனுடன் கொஞ்சிப் பழகும் புதல்வர்களும், வினைவயத்தால் அடியேனோடு வந்து பொருந்திய உறவினரும், அடியேன் பொருந்தி வாழும் ஊரும், அடியேனுடைய மனைவி முதலான பெண்களும், எனது இளமையும், வளப்பம் நிறைந்து,  விரிந்து பரந்த எனது நாடும்,  நாட்டில் உள்ள மலைகளும் என்றும் நிலைத்து இருப்பவை என்று மகிழ்ச்சி கொள்ளாமல், ஒளி விளக்கு ஏற்றி தேவரீரை வழிபட அருள்வீராக. 


விரிவுரை


இருந்த வீடும், கொஞ்சிய சிறுவரும்......நிலை என மகிழாதே --- 

இத்திருப்புகழில் அநித்தமான பொருள்களை, நித்தம் என நினைத்து, மாந்தர் மயங்கித் தியங்குவதைப் பற்றி அடிகளார் கூறுகின்றார்.

வீடு, பொன், புதல்வர், அழகிய மகளிர், வலிமை, குலம், நிலைமை, ஊர், பேர், இளமை, சார்பு, துணிவு, அணிகலன், வளமை, வரிசை, சுற்றம் இவைகள் யாவும் நிலைபேறில்லாதவை; உள்ளவைபோல் இருந்து அழிகின்றவை.

மாயை - தோன்றி நின்று அழிவது. மாயம் - ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது. அதாவது துன்பத்தை இன்பம்போல் காட்டி மயக்கஞ்செய்வது. எனவே மாயையால் மயங்கி, நிலையில்லா இன்பத்தை தனக்குச் சொந்தமாக நினைப்பது பிழை. அது புறப்பற்று. பற்று அற்றவர்க்கே வீடுபேறு உண்டாகும். இதுபற்றி பரிமேலழகர் திருக்குறள் உரையில் கூறுமாறு காண்க.

ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழியுந் தன்மையுடைய இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை யுண்டாம்; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகளெல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம். அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்றாகிய எனதென்பதும், அகப்பற்றாகிய யான் என்பதும் விடும்.

எனவே, கனவு காண்பது போன்று நிலையில்லாதவற்றை நிலைத்தவையாக மாந்தர் கருதி மயங்கி மடிகின்றனர். அப்படி நினைப்பது அறிவின்மையின் சிகரம் என்கின்றார் திருவள்ளுவர்.

"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை." 

இறைவனையன்றி ஏனைய யாவும் அநித்தியமானவையே. ஆதலின், அவைகளை நமது சொந்தம் என்று கருதி உழலக் கூடாது.

         எண்ணில் கோடி உகங்களாக எண்ணில் கோடி பிறப்புக்களை மாறி மாறி எடுக்கின்ற ஆன்மாக்களுக்கு, ஒவ்வொரு பிறப்பிலும், மனைவி மக்கள் முதலியோர் மாறி மாறி வருகின்றனர். அந்தந்தப் பிறப்பில் அந்தந்த மனைவி மக்களுக்காக உழைத்து நல்வழியிலும் அல்வழியிலும் பொன்னையும் பொருளையும் ஈட்டி, அவர்களுக்கு அவைகளைத் தந்து மாண்டு ஒழிகின்றார்கள்.

ஊர்அனந் தம்,பெற்ற பேர்அனந் தம்,சுற்றும்

        உறவுஅனந் தம்,வினையினால்

      உடல்அனந் தம்,செயும் வினைஅனந் தம்,கருத்

        தோஅனந் தம்,பெற்றபேர்

சீர்அனந் தம்,சொர்க்க நரகமும் அனந்தம்,நல்

        தெய்வமும் அனந்தபேதம்,

      திகழ்கின்ற சமயமும் அனந்தம்,அத னால்ஞான

        சிற்சத்தியால் உணர்ந்து

கார்அனந் தங்கோடி வருஷித்தது எனஅன்பர்

        கண்ணும்விண் ணும் தேக்கவே

      கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநம்

        கடவுளைத் துரியவடிவைப்

பேர்அனந் தம்பேசி மறைஅனந் தம்சொலும்

        பெரியமௌ னத்தின்வைப்பைப்

      பேசஅரும் அனந்தபத ஞானஆ னந்தமாம்

        பெரிய பொருளைப் பணிகுவாம். ---  தாயுமானார்.


விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே --- 

"தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் கூறி உள்ளது காண்க.

"வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்

  உட்புகுந்து, வலமாய் வந்தே,

ஒருவிளக்கு ஆயினும்பசுவின் நெய்யுடன்,தா

      மரைநூலின் ஒளிர வைத்தால்,

கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!

      கைலாசம் காணி ஆகும்!

திருவிளக்குஇட் டார்தமையே தெய்வம் அளித்

      திடும்! வினையும் தீரும் தானே!"  --- தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

     வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து வலமாய் வந்து --- வேண்டிய பேறுகளை அருளும் திருத்தண்டலை நீள்நெறிநாதரின் திருக்கோயிலின் உள்ளே சென்று, வலமாக வந்து வணங்கி, ஒரு விளக்காயினும் --- ஒரு விளக்காவது, பசுவின் நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் ---பசுவின் நெய்யை விட்டு, தாமரை நூலிலே ஒளிரும்படி வைத்தால், கருவிளக்கும் பிறப்பும் இல்லை --- மறுமுறையும் கருவிலே ஊறி வரும் பிறவித் துன்பம் இல்லை, இறப்பும் இல்லை --- மரணமும் இல்லை, கைலாசம் காணி ஆகும் --- சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை உரிமை ஆகும். திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் --- திருவிளக்கு இட்டவர்வர்களையே தெய்வம் காப்பாற்றும், வினையும் தீரும் --- பழவினையும் நீங்கும்.

அக் காலத்திலே, திருக்கோயிலில் அகல் விளக்கு மட்டுமே இருக்கும். கருவறையில் எழுந்தருளி இருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வணங்கத் திருவிளக்குத் துணை புரியும். திருக்கோயில் வலம் வருவாருக்கும் இரவுக் காலங்களில் விளக்கொளி துணைசெய்யும். திருக்கோயில் வலம் வருதற்கும், இறைவனை வணங்குதற்கும் திருவிளக்கு இடுதல் என்பது ஒரு திருப்பணியாகச் செய்யப்பட்டது. இது பற்றியே நமிநந்தி அடிகள் திருவிளக்கு இட்டார் என்பதும் அறியப்படும்.

      அதன்றியும், புறத்து இருள் நீங்க ஒளிவிளக்கு ஏற்றுவது போல, அகத்து உள்ள ஆணவ இருள் நீங்க ஞான விளக்கினை, அருள் விளக்கினை ஏற்ற வேண்டும் என்பதும் குறிப்பு.

"இல்லக விளக்கு, அது இருள் கெடுப்பது. ...... நல் அக விளக்கு, அது நமச்சிவாயவே" என்னும் அப்பர் பெருமான் அருள் வாக்கின் உண்மைப் பொருளை உணர்ந்து தெளிதல் வேண்டும். வெறுமனே சொல்லுக்குள்ள பொருளை மட்டும் காண்பது சிறப்பு அல்ல. திருக்கோயிலில் மட்டுமல்ல, இல்லத்திலும் திருவிளக்கு ஏற்றுவதில், இந்த உண்மை பொதிந்துள்ளது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

புறத்து இருள் அகல விளக்கு பயன்படுவதுபோல, அகத்து இருள் அகல உள்ளத்தின் உள்ளே அருள்விளக்கு ஏற்றவேண்டும் என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது. புற இருளை ஞாயிற்றின் ஒளி போக்குவதைப் போல, மக்களின் அகஇருளைப் போக்குவது பெரியபுராணம் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியது சிந்தனைக்கு உரியது. "நீறுஅணிந்தார் அகத்து இருளும் நிறைகங்குல் புறத்து இருளும் மாறவரும் திருப்பள்ளி எழுச்சி" எனத் திருப்பள்ளி எழுச்சிக்கு தெய்வச் சேக்கிழார் பெருமான் அளித்துள்ள விளக்கம் நம் உள்ளத்தைக் கொள்ளை இன்பத்தில் திளைக்கச் செய்கிறது அல்லவா.

விதவிதமான மின் விளக்குகள் வந்துவிட்ட இக்காலத்திலும், விளக்கிடுவது புண்ணியம் என்று எண்ணி, விதவிதமான விளக்குகள், அகல், எலுமிச்சைப் பழத்தோல், உடைத்த தேங்காய் என்று என்னென்ன புதுமைகளைக் கற்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு இப்போது திருக்கோயிலில் விளக்கிடுவதும் திருக்கோயில் கறைபடுவதைப் பற்றிக் கவலை சிறிதும் இல்லாமல் நிகழ்கிறது. நமது இல்லத்தில் இப்படி விளக்கு ஏற்றுவோமா, நமது இல்லத்தைக் கறைபடிய விடுவோமா என்பதை எண்ணிப் பார்த்தல் நலம்.

புறவழிபாடு, அகம் செம்மைப்பட வேண்டும் என்பதற்காக உள்ள கிரியையே தவிர,  அக ஒழுக்கம் இல்லாமல் மனமாசு அகலாது. அறமும் தழைக்காது. அதனால்தான் அகவிளக்கு ஏற்றுவது குறித்து திருநாவுக்கரசு சுவாமிகள் பின்வரும் அருட்பாடல்களை நான்காம் திருமுறையில் அருளி உள்ளார்.


"நொய்யவர், விழுமியாரும், நூலின் நன்நெறியைக் காட்டும்

மெய்யவர், பொய்யும் இல்லார், உடல் எனும் இடிஞ்சில் தன்னில்

நெய்அமர் திரியும் ஆகி, நெஞ்சத்துள் விளக்கும் ஆகி,

செய்யவர், கரிய கண்டர், திருச்செம்பொன் பள்ளியாரே."


"பொள்ளத்த காய மாயப் பொருளினை, போகமாதர்

வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்

உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணருமாறு உணரவல்லார்

கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே."


"தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்

வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீர்ஆகில்

ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார்

ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே."


"பின்னுவார் சடையான்தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்

துன்னுவரா நரகம்தன்னுள், தொல்வினை தீரவேண்டின்

மன்னுவான் மறைகள்ஓதி, மனத்தினுள் விளக்குஒன்று ஏற்றி

உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடையகோவே."


"மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு உயரத் தூண்டி

உய்வதுஓர் உபாயம்தன்னால் உகக்கின்றேன் உகவாவண்ணம்

ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால,

செய்வது ஒன்று அறியமாட்டேன் திருப்புகலூர னீரே."


"உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் அட்டி, உயிர்எனும் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்புஅமர் காளை தாதை கழல்அடி காணல்ஆமே."


அகஇருளைப் போக்கும் விளக்காக அருட்பெருஞ்சோதி ஆண்டவர் விளங்குவதை, வள்ளல் பெருமானார் பின்வருமாறு பாடியுள்ளார்----


"வெருள் மனமாயை வினைஇருள் நீக்கிஉள்

அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்சோதி

சுருள்விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே

அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ்சோதி.

அருள்ஒளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்

இருள்அற என்உளத்து ஏற்றிய விளக்கே.

துன்புறு தத்துவத் துரிசு எலாம் நீக்கிநல்

இன்புஉற என் உளத்து ஏற்றிய விளக்கே.

மயல்அற அழியா வாழ்வு மேன்மேலும்

இயல்உற என் உளத்து ஏற்றிய விளக்கே.

வெம்மல இரவுஅது விடி தருணந்தனில்

செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செஞ்சுடரே."

"எனது உயிரில் அழுக்கைத் துடைத்து விட்டு, எழு கருணை மழைக்குள் குளிக்க விட்டு, இனி அலையாதே, அலையும் மனத்தைப் பிடித்து வைத்து, அதில் உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின் அழகு விளக்கைப் பதித்து வைத்ததும், அவியாதே அறிவை உருட்டித் திரட்டி வைத்து, அதின் அமிர்த குணத்தைத் துதிக்க வைத்து, எனை அடிமை படைக்கக் கருத்தில் முற்றிலும் நினையாயோ". இது அருணகிரிநாதப் பெருமான் அருள்வாக்கு.

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய்எனும்

தூய்மையில் குப்பை தொலைவுஇன்றிக் கிடந்ததை

அரிதின் இகழ்ந்து போக்கி, பொருதிறல்

மைஇருள் நிறத்து மதன்உடை அடுசினத்து

ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி, அருள் விளக்கு ஏற்றி,

துன்ப இருளைத் துரந்து, முன்புறம்

மெய்எனும் விதானம் விரித்து, நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்சிந்தைப்

பாழ்அறை உனக்குப் பள்ளியறை ஆக்கி,

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு,

எந்தை, நீ இருக்க இட்டனன், இந்த

நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்

அடையப் பரந்த ஆதிவெள்ளத்து

நுரைஎனச் சிதறி, இருசுடர் மிதப்ப,

வரைபறித்து இயங்கும் மாருதம் கடுப்ப,

மாலும் பிரமனும் முதலிய வானவர்

காலம் இது எனக் கலங்கா நின்றுழி,

மற்று அவர் உய்யப் பற்றிய புணையாய்,

மிகநனி மிதந்த புகலி நாயக,

அருள்நனி சுரக்கும் பிரளய விடங்க, நின்

செல்வச் சிலம்பு மெல்என மிழற்ற,

அமையாக் காட்சி இமயக்

கொழுந்தையும் உடனே கொண்டு இங்கு

எழுந்து அருளத் தகும் எம்பிரானே."

இது பட்டினத்தடிகள் பாடிய திருக்கழுமலமும்மணிக்கோவை. பதினோராம் திருமுறையில் உள்ளது. இதன் பொருளை அனுபவிப்போம்.

இதன் பொருள் ---

"என்றைக்கு நான் கருவில் புகுந்தேனோ, அதுமுதல் எண்ணற்ற பிறவிகளை எடுத்துவிட்டேன். எத்தனை பிறவி என்று என்னால் கணக்கிட்டுச் சொல்லவும் முடியாது. அவ்வளவு பெரிய கணக்கைப் போட்டு விடைகாணக் கூடிய அறிவு எனக்கு இல்லை. அதனால் இப்படிச் சொல்லி வைக்கிறேன் சுவாமி. எழுகடல் மணலை அளவு இடின் அதிகம் எனது இடர்ப்பிறவி அவதாரம். எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பலபிறவி எடுத்தே இளைத்து, இங்கு அவை நீங்கி, இம்மானிடத்தில் வந்து உதித்து, மண்ணில் வாழ்க்கை மெய்யாக மயங்கி உழன்றால், அடியேன் உன் மாறாக் கருணை தரும் திருவடித் தாமரை என்று அடைவேன். இந்த நினைவுகூட உமது அருளால் வந்ததுதான் சுவாமி. நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா என்னை நினைக்கவைத்த பரம்பொருளே நீர்தானே சுவாமி. இந்த உண்மையை இப்பொழுதுதான் நான் உணர்ந்தேன், இத்தனை பிறவிகளை நான் எடுத்து எடுத்து உழன்றதால், மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன், வேதா என்று சொல்லப்படும் பிரமனும் கைசலித்துவிட்டான். ஆதலால், நாதா, இருப்பைூர் வாழ் சிவனே நான் இன்னும் ஓர் அன்னை கருப்பையில் வாராமல் நீ கண்பார்க்க வேண்டும். அதற்கு ஏதுவாக நான் என்ன செய்தேன் என்பது உமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே சுவாமி. இருந்தாலும் எனது செய்கையை நான் விளக்கிச் சொல்லி உம்மிடம் நான்வேண்டுவதை என்பதை இதோ விளக்குகிறேன் சுவாமி."

"கருவுற்ற நாள் முதலாக இவ்வளவு நெடுங்காலமும், என் மனதில் காமம், வெகுளி முதலான குப்பை நிரம்பிக் கிடந்தது. கோடிய மனத்தால் வாக்கினால் செயலால் கொடிய ஐம்புலன்களால் நான் செய்த பாவம்தான் நரகமும் கொள்ளாது, செய்தவம் புரியினும் தீராதே சுவாமி. நிரம்பிக் கிடந்த அந்தக் குப்பையை எல்லாம் அகற்றியே ஆகவேண்டும் என்னும் நல்லறிவை எமக்கு நீர் உடனிருந்தே ஊட்டியதால், அடியேன் பெற்ற அறிவைக் கொண்டு, குப்பைகளை எல்லாம் மிகவும் முயன்று போக்கிவிட்டேன். அங்கே கிடந்த அஞ்ஞானத்திற்கு ஏதுவாகி துன்பத்தையே விளைவிக்கக் கூடிய ஐம்புல ஆசைகளாகிய முரட்டுக்குணம் கொண்ட எருமைக் கடாக்களையும் அவிழ்த்துத் துரத்திவிட்டேன். அறிவைக் கொண்டு குப்பைகளை அகற்றியபோதும், கொஞ்சம் கொஞ்சம் தூசு இருக்கத்தான் செய்தது. அதனால் அன்பாகிய நீர் அல்லது ஆப்பி நீரைக்கொண்டு மெழுகி விட்டேன். அஞ்ஞானமாகிய துன்பஇருளை ஓட்டுகின்ற ஞானவிளக்காகிய அருள்விளக்கை அங்கே எற்றிவைத்தேன். மெய்ம்மையாம் விதானத்தையும் அமைத்தேன். இவ்வாறு செய்ததால், இதுவரை அற்பமான கீழ்த்தனமான உணர்வுகளிலேயே இருந்த என்னுடைய சிந்தையாகிய பாழ் அறையானது இப்போது பள்ளிஅறை ஆனது அல்லவா. எம்பெருமான் எழ்ந்தருள, இதயத்தாமரையாகிய ஆசனத்தையும் இட்டுவைத்தேனே. பெருமானே மாலயனாதி வானவர் எல்லாம் உமது திருவடியைப் பற்றி அல்லவா உய்ந்தனர். பெருமானே உமது திருவடியில் அணிந்த சிலம்பு ஒலிக்க, அமையாக் காட்சி இமையக்கொழுந்தாகிய எம்பெருமாட்டியுடன் உடனே எழுந்தருள் வேண்டும்."


"சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா

நல் இடிஞ்சில் என்னுடைய நா ஆக – சொல்லரிய

வெண்பா விளக்கா வியன்கயிலை மேல் இருந்த

பெண்பாகற்கு ஏற்றினேன் பெற்று."      --- கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

புற இருளைப் போக்கும் விளக்குப் போல, அகஇருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியைத் தரும் விளக்காக வெண்பா.

எரிகின்ற திரிக்கு முதல் நெய்யாதல் போல, விளங்குகின்ற சொல்லுக்கு முதல் பொருள் ஆதல் பற்றி, அவற்றை முறையே திரி, நெய் என்றார்.

நெய்யில் பொருந்தி எரியும் திரிக்கு நிலைக்களன் அகல் ஆகும். பொருளை விளக்கும் சொல்லுக்கு நிலைக்களன் நாக்கு. திரி - சொல், நெய் - பொருள், அகல் - நாக்கு.

விளக்கு ஏற்றுதல் சிறந்த பணி. புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலினும், அக இருளை நீக்கும் ஞான விளக்கை ஏற்றுவது மிகச் சிறந்த பணி.


குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே --- 

கண்ணபிரானை மணந்துகொள்ளும் பொருட்டு ஆயர்பாடியில் சில இளங்கோபிகை மாதர்கள் யமுனை நதியில் கௌரி நோன்பு நோற்கும் பொருட்டு சென்றார்கள். தமது உடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினார்கள். புண்ணிய நதிகளில் நிர்வாணமாகக் குளிப்பது பெருங்குற்றம்.

"உடுத்து அலால் நீராடார், ஒன்றுஉடுத்து உண்ணார்,

உடுத்தஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்

ஒன்றுஉடுத்து என்றும் அவைபுகார் என்பதே

முந்தையோர் கண்ட முறை."        --- ஆசாரக் கோவை

கோபிகையரது குற்றத்தை உணர்த்துவான் பொருட்டு, அந்த ஆடைகளை யெல்லாம் எடுத்துச் சுருட்டி மூட்டையாகக் கட்டி, அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டார் கண்ணன். நீராடிய இளஞ் சிறுமிகள் கரையை அடைந்து தமது உடைமைகளைக் காணாது, பிறகு நாணிக் கோணி, மீளவும் நீரில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார்கள். மரத்தின்மீது நின்ற மணிவண்ணனைக் கண்டு நாண மீதூர்ந்தார்கள். “யசோதை பெற்ற இளஞ் சிங்கமே! எங்கள் ஆடையைக் கொடுத்தருளும்” என்று வேண்டினார்கள். பகவான், “சிறுமியர்களே! புண்ணிய நதியில் ஆடையின்றி நீராடுவது, குற்றம். ஆதலால் அப்பிழை தீரக் கும்பிட்டால் தருவேன்” என்று அருளச் செய்தார். அங்ஙனமே அவர்கள் தொழுது உடைகளைப் பெற்றார்கள்.

"மருமாலிகைப் பூங் குழல் மடவார்

வாவி குடைய, அவர் துகிலை

வாரிக் குருந்தின் மிசை ஏறி,

மடநாண் விரகம் தலைக்கொண்டு,

கருமா நாகம் செந்நாகம்

கலந்தது என, அவ் வனிதையர்கள்

கையால் நிதம்பத் தலம் பொதிந்து,

கருத்தும் துகிலும் நின்று இரப்ப,

பெருமா யைகள் செய்து, இடைச்சியர்கள்

பின்னே தொடர, வேய் இசைத்து,

பேய்ப்பெண் முலைஉண்டு உயிர் வாங்கி,

பெண்களிடத்தில் குறும்பு செய்யும்

திருமால் மருகன் அலவோ நீ?

சிறியேம் சிற்றில் சிதையேலே.

செல்லுத் தவழும் திருமலையில்

செல்வா! சிற்றில் சிதையேலே."    ---  திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்

ஆடைகளைப் பெருமான் கவர்ந்தான் என்ற வரலாற்றின் உட்பொருள் தேகாபிமானத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.


திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு புலவோனே --- 

ஆன்மாக்கள் யாவும் இறைநிலையை உணர்ந்து ஓதி உய்வு பெற, ஆகமங்களையும், வேதங்களையும், புராணம் முதலாகிய நூல்கள் பலவற்றையும் திருஞானசம்பந்தராக எழுந்தருளி வந்து திருப்பதிகங்களில் வைத்து ஓதியருளியவர் முருகப் பெருமான்.

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன.  ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து,  நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர்.  "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?.  தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.

தோடு உடைய செவியன் எனத் தொடங்கி, பல்லாயிரம் திருப்பதிகங்களை, வேதங்களின் பொருளை நிறைத்து, அருமையான தமிழால், பாடி அருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான்.  தொண்டர் மனம் களிசிறப்ப,  தூயதிரு நீற்றுநெறி எண்திசையும் தனிநடப்ப,  ஏழ்உலகும் களிதூங்க, அண்டர்குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக, வண்தமிழ்செய் தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப வந்து திரு அவதாரம் புரிந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.


"எல்லை இலா மறைமுதல்மெய்

         யுடன்எடுத்த எழுதுமறை

மல்லல்நெடுந் தமிழால்" இம்

         மாநிலத்தோர்க்கு உரைசிறப்பப்

பல் உயிரும் களிகூரத்

         தம்பாடல் பரமர்பால்

செல்லுமுறை பெறுவதற்குத்

         திருச்செவியைச் சிறப்பித்து.     ---  பெரியபுராணம்.


திருக்குறுக் கைப்பதி மன்னித்

         திருவீரட் டானத்து அமர்ந்த

பொருப்புவில் லாளரை ஏத்திப்

         போந்து, அன்னியூர் சென்று போற்றி,

பருக்கை வரைஉரித் தார்தம்

         பந்தணை நல்லூர் பணிந்து,

விருப்புடன் பாடல் இசைத்தார்

         "வேதம் தமிழால் விரித்தார்".        ---  பெரியபுராணம்.


எழுது மாமறையாம் பதிகத்து இசை

முழுதும் பாடி, முதல்வரைப் போற்றி, முன்

தொழுது போந்து வந்து எய்தினார் சோலைசூழ்

பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.      ---  பெரியபுராணம்.


"சுருதித் தமிழ்க் கவிப் பெருமாளே" என்று திருத்தணிகைத் திருப்பகழில் அடிகளார் முருகப் பெருமானைப் போற்றி உள்ளது அறிக.


கருத்துரை


முருகா! நிலையற்ற பொருளைச் சதம் என்று கருதாமல், 

தேவரீரை வழிபட்டு உய்ய அருள் புரிவீராக.





பொது --- 1078. பெருக்க நெஞ்சு

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பெருக்க நெஞ்சு (பொது)


முருகா! 

அடியேன் மனத் திருகலை ஒழித்து அருள்வாய்.


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்

     தனத்த தந்தனம் ...... தனதான


பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்

     ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும்


பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்

     றமைத்த பெண்தனந் ...... தனையாரத்


திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்

     திறத்தை யன்புடன் ...... தெளியாதே


சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்

     திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ


தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்

     தரித்த குன்றநின் ...... றடியோடுந்


தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்

     தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ்


சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்

     துணைச்செய் கின்றநின் ...... பதமேவும்


சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்

     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


பெருக்க நெஞ்சு உவந்து, உருக்கும் அன்பு இலன்,

     ப்ரபுத் தனங்கள் பண்பு ...... எணும் நாணும்


பிழைக்க ஒன்று இலன், சிலைக்கை மிண்டர் குன்று

     அமைத்த பெண் தனம் ...... தனை, ஆரத்


திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற, நின்

     திறத்தை அன்புடன் ...... தெளியாதே,


சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என்

     திருக்கும் என்று ஒழிந் ...... திடுவேனோ?


தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன்

     தரித்த குன்றம் நின்று ...... அடியோடும்


தடக்கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம்

     தறித்த கண்டன், எண் ...... திசையோரும்,


சுருக்கம் இன்றி நின்று அருக்கன், இந்திரன்,

     துணைச் செய்கின்ற நின் ...... பதம் மேவும்


சுகத்தில் அன்பரும், செக த்ரயங்களும்

     துதிக்கும் உம்பர் தம் ...... பெருமாளே.


பதவுரை

தருக்கி அன்று சென்று --- அகங்காரத்தோடு அன்று ஒரு நாள் போய்.

அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்றம் --- அருட்கண்ணோட்டம் பொருந்திய சிவபரம்பொருள் வீற்றிருக்கும் மலையாகிய திருக்கயிலாயத்தை,

நின்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன் --- அடிவாரத்தில் சென்று நின்று, அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனுடைய தலைகளை நெறித்தருளிய வீரராகிய சிவபெருமானும், 

எண் திசையோரும் --- அட்ட திக்குப் பாலகர்களும்,

சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் --- விரிந்த கிரணங்களை உடைய கதிரவனும்,

இந்திரன் --- இந்திரனும், 

துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் --- துணையாய் இருந்து காக்கின்ற தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்துள்ள அடியார்களும்,

செக த்ரயங்களும் --- மூவுலகில் உள்ளோரும்,

துதிக்கும் உம்பர் தம் பெருமாளே --- போற்றித் துதிக்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பு இலன் --- உள்ளம் நிரம்ப மகிழ்ச்சியோடு உருகுகின்ற அன்பு இல்லாதவனும்,

ப்ரபுத் தனங்கள் --- பெருமையில் சிறந்த நிலையோ,

பண்பு --- நற்பண்புகளோ,

எ(ண்)ணு(ம்) நாணும் --- மதிக்கத் தக்க நாணமோ, 

பிழைக்க ஒன்று இலன் --- உய்தி பெறும் வகைக்கு ஒன்றும் இல்லாதவனும் ஆகிய அடியேன்,

சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற --- வில்லை ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் அவதரித்த வள்ளிநாயகியின் மார்பகங்களை, திருக்கைகளால் ஆரத் தழுவும்பொருட்டுச் சென்ற

நின் திறத்தை அன்புடன் தெளியாதே --- தேவரீரின் அருட்திறத்தை உள்ளன்போடு தெளிந்து அறியாமல்,

சினத்தில் மண்டி --- உள்ளத்தில் (காமக்) குரோதம் (முதலாகிய குற்றங்கள்) நிரம்பியிருக்க,

மிண்டு உரைக்கும் வம்பன் --- இடக்கர் சொற்களைப் பேசித் திரியும் வீணன் ஆன அடியேன்,

என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ --- எனது சிந்தைத் திருகலை என்று ஒழியப் பெறுவேன்?

பொழிப்புரை

அகங்காரத்தோடு அன்று ஒரு நாள் போய். அருட்கண்ணோட்டம் பொருந்திய சிவபரம்பொருள் வீற்றிருக்கும் மலையாகிய திருக்கயிலாயத்தை, அடிவாரத்தில் சென்று நின்று, அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய இராவணனுடைய தலைகளை நெறித்து அருளிய வீரராகிய சிவபெருமானும், அட்ட திக்குப் பாலகர்களும், விரிந்த கிரணங்களை உடைய கதிரவனும், இந்திரனும், துணையாய் இருந்து காக்கின்ற தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்துள்ள அடியார்களும், மூவுலகில் உள்ளோரும் போற்றித் துதிக்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

உள்ளம் நிரம்ப மகிழ்ச்சியோடு உருகுகின்ற அன்பு இல்லாதவனும், பெருமையில் சிறந்த நிலையோ, நற்பண்புகளோ, மதிக்கத் தக்க நாணமோ,  உய்தி பெறும் வகைக்கு ஒன்றும் இல்லாதவனும் ஆகிய அடியேன், வில்லை ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் அவதரித்த வள்ளிநாயகியின் மார்பகங்களை, திருக்கைகளால் ஆரத் தழுவும்பொருட்டுச் சென்ற தேவரீரின் அருட்திறத்தை உள்ளன்போடு தெளிந்து அறியாமல், உள்ளத்தில் (காமக்) குரோதம் (முதலாகிய குற்றங்கள்) நிரம்பியிருக்க, இடக்கர்ச் சொற்களைப் பேசித் திரியும் வீணன் ஆன அடியேன், எனது சிந்தைத் திருகலை என்று ஒழியப் பெறுவேன்?

விரிவுரை

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பு இலன் --- 

பெருக்க - நிரம்ப, நீடித்த.

உள்ளம் நிறைய அன்று இருந்தால் அது நீடித்து இருக்கும். அன்பினால் உள்ளம் உருகும். இறைவனது பொருள்சேர்ந்த புகழை மகிழ்ச்சியுடன் திருவருளைப் பெறும் வழியாகும். அவனது புகழை விருப்பொடு படிப்பவர்க்குத் துன்பங்கள் நீங்கும். முடிவிலா ஆனந்தம் உண்டாகும். "அன்பினால் உருகி விழிநீர் ஆளாக வாராத முத்தியினது ஆவேச ஆசைக் கடற்குள் மூழ்கி......... மொழி தழுதழுத்திட உருகும் சன்மார்க்க நெறி" என்றார் தாயுமான அடிகளார்.

"இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

 இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”       ---திருப்புகழ்.

"உன்புகழே பாடிநான் இனி அன்புடன் ஆசார பூசைசெய்து

 உய்ந்திட வீணாள் படாதுஅருள்         புரிவாயே"    ---(கொம்பனையார்) திருப்புகழ்.

"பாதமலர் மீதில் போதமலர் தூவிப்

 பாடும் அவர் தோழத் தம்பிரானே”"    ---(ஆலவிழி) திருப்புகழ்.


ப்ரபுத் தனங்கள் --- 

பெருமையில் சிறந்த நிலை.


எ(ண்)ணு(ம்) நாணும் --- 

எண்ணுதல் - மதிக்கப்படுதல்,

நாணுதல் - பயபக்தி காட்டுதல், அஞ்சுதல், அடங்குதல், குவிதல்.

"நாண் உடைமை" என்று ஓர் அதிகாரத்தை வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார். நாணம் உடைமை ஒன்றே மனிதர்க்குச் சிறப்புத் தருவது. 

"ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல,

நாண் உடைமை மாந்தர்க்குச் சிறப்பு" --- திருக்குறள்.

உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மற்றவையும் வேறு வேறு அல்ல. அவை மக்களுக்கு எல்லாம் பொதுவானவையே. நல்ல மக்களுக்குச் சிறப்பினைத் தருவது நாண் உடைமையே.

"அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல்

பிணி அன்றோ பீடுநடை" --- திருக்குறள்.

மேலோர்க்கு நாணம் உடைமை ஒன்றுதானை ஒப்பற்ற அணிகலம் ஆகும். அந்த அணிகலம் இல்லையானால், அவரது வீறுநடை என்பது நோய் ஆகும்.


பிழைக்க ஒன்று இலன் ---

பிழைப்பு - உய்தி, தப்பிப் பிழைத்தல்.

"பிழைப்பு வாய்ப்பு ஒன்று இல்லா நாயேன்" என்பது மணிவாசகம்.  


சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே --- 

சிலை - வில். வில்லைக் கேயில் கொண்ட வேடர்கள்.

மிண்டர் - வலிமை பொருந்தியவர். அறிவில்லாதவர்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார், சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்து, தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார். தினைப்புனத்தைக் காவல் கொண்டது, வள்ளிநாயகியார் புரிந்த தவத்தைக் குறிக்கும்.

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

அடியார்கள் இறைவன் அடைய வேண்டித் தவம் புரிவார்கள். அவர்களால் இறைவனைத் தாமாகச் சென்று அடைய முடியாது. இறைவன் அடியார்களின் தவத்திற்கு இரங்கி, தான் இருக்கும் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆட்கொள்ள வேண்டும். நல்லடியார்களைத் தேடிச் சென்று இறைவன் ஆட்கொண்டு அருள் புரிவான் என்பதற்கு, திருக்கயிலாயத்தை விட்டு, திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்து ஆண்டகொண்ட வரலாறு சான்று. மணிவாசகப் பெருமானையும், திருக்கயிலாயத்தை விட்டு, திருப்பெருந்துறைக்கு வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார் சிவபரம்பொருள். "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே, திருப்பெருந்துறை உறை சிவனே" என்று மணிவாசகப் பெருமான் உள்ளம் உருகப் பாடி அருளியதை எண்ணுக. அருணகிரிநாதப் பெருமான், "மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே!" என்று பாடி அருளியதையும் சிந்தையில் வைத்துக் கொள்ளவேண்டும். 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு,  தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையை விட்டு, வள்ளிமலைக்கு எழுந்தருள் புரிந்தார். இது "வள்ளிச் சன்மார்க்கம்" ஆகும்.


மிண்டு உரைக்கும் வம்பன் --- 

மிண்டு உரைத்தல் - இடக்கர் சொற்களைப் பேசுதல். 

வம்பன் - வீணன்.

 

திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ --- 

திருக்கு - மாறுபாடு. உள்ளத்தில் உண்டாகின்ற மாறுபாடு.

"திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்,

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே" --- அப்பர் பெருமான்.

பொருள்களில் அழுக்குச் சேர்ந்தால் போக்குவதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவோம். புலன்கள் வழியே மனம் செல்லும்போது, காமம் என்னும் விருப்பு, வெகுளி என்னும் வெறுப்பு, மயக்கம் என்னும் அறியாமை ஆகிய மூன்றுவிதமான அழுக்குகளும் நீங்காமல் ஒட்டிக் கொண்டே இருக்கும். இவை மனம், மொழி, மெய் என்னும் மூவிதத்தால் நிகழும். மனத்தால் உண்டான அழுக்கு. வாக்கால் உண்டான அழுக்கு. செயலால் உண்டான அழுக்கு இந்த மூன்று விதமான அழுக்கினைக் களைவதற்கு ஓர் உபாயத்தை, சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்கின்றார்.

"திருக்கு உறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,

           தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

           அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

            அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

            வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

           விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து, மின்னொளி கடந்த

            ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

            ஈசனே, மாசிலா மணியே."       

      மனத்தால் உண்டாகும் அழுக்கு ஆகிய அழுக்காறு,  அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, இறைவன் திருவடித் தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.

வாக்கினால் உண்டாகும், பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்னும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.

பாவச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம்  காயத்தால்  உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.

      இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைப் போக்கி, இறைச் சிந்தனையில் திளைப்பது பற்றி சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.

      மனத்தை அடியாகக் கொண்டு நினைவும், அதனால், வாக்கைக் கொண்டு சொல்லும், உடம்பைக் கொண்டு செயலும் நிகழும். மனம் தூய்மையாக இருந்தால், நினைவு, சொல், செயல் ஆகியவையும் தூய்மையாக அமையும். இதனால், தனக்குக் கேடு வருவதில்லை. பிறருக்குக் கேடு விளைவதில்லை. மனம் தூய்மை அற்றுப் போனால், நினைவு, சொல், செயல் யாவும் தூய்மை இல்லாது போகும். அதனால், தனக்கும், பிறருக்கும் கேடு விளையும்.

 

தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்றம் சென்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறித்த கண்டன் --- 

தருக்கி - நான் என்னும் அகங்காரம் கொண்டு.

அருள் கண் ஒன்று அரன் --- அருளாகிய கண் பொருந்தி உள்ள சிவபரம்பொருள். (ஒன்றுதல் - பொருந்துதல்)

தரித்த குன்றம் - சிவபரம்பொருள் இருந்த திருக்கயிலாய மலை.

கண்டன் - வீரன்.

இராவணன் திக்குவிஜயம் புரிந்து வந்தபோது, திருக்கயிலை மலைக்கு மேல் பறக்க இயலாது, அவனுடைய புஷ்பக விமானம் தடைப்பட்டு நின்றது. திருக்கயிலை மலையைக் காவல் புரிகின்ற திருநந்தி தேவர் “ஏ தசக்ரீவனே! இது கண்ணுதற் கடவுள் உறையும் எண்ணுதற்கரிய புகழுடைய திருக் கயிலாய மலை. மதியும் கதிரும் வலம் வருகின்ற இம் மலைக்குமேல் உன் விமானஞ் செல்லாது. வலமாகச் செல்” என்றார். தோள் வலியால் தருக்குற்று நின்ற அவ்வரக்கன் சீறி, “குரங்குபோல் முகம் வைத்திருக்கின்ற நீ எனக்கு அறிவுரை பகிர்கின்றனையோ?” என்றான். திருநந்திதேவர் சிறுநகை செய்து, “திறங்கெட்ட தீயவனே, குரங்கினால் உன் நாடும் நகரும் அழிந்து உனக்குத் தோல்வி எய்தக் கடவது” என்று சபித்தருளினார்.

இதை வீடணன் இராவணனிடம் எடுத்துக் கூறுவதாகக் கம்பர் பாடியது காண்க.

"மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள்

நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,

கூலவான் குரங்கினால் குறுகும் கோள், அது

வாலிபால் கண்டனம் வரம்பில் ஆற்றலாய்.

"எல்லையில்லாத  வல்லமை உடையவனே! நீ, ஓங்கி, உயர்ந்த  திருக் கைலாய மலையைப் பேர்த்து எடுத்த அந்த நாளிலே, நான்கு தோள்களை உடைய நந்தி தேவன்  கூறிய சாபத்தினாலே, வால் உள்ள பெரிய குரங்கினால் தீங்கு என்ற  அதனை வாலியிடம் பார்த்தோமே" என்று இராவணனை விபீடணர் எச்சரித்தார்.

நந்தேவர் கூறியதற்கு வெகுண்டு, “இந்த நந்தியையும் நந்திக்குத் தவைனாகிய ஈசனையும் இவ்வெள்ளி மலையையும் பறித்துக் கடலில் எறிவேன்” என்று கூறி, இருபது கரங்களாலும் வெள்ளி மலையைப் பேர்த்துத் தோளில் வைத்து அசைத்தான். உமாதேவியார் இறைவனை நோக்கிப் “பெருமானே! மலை நிலை குலைகின்றதே” என்றாள்.

புரமெரித்த அரனார் புன்னகை புரிந்து, இடக் காலின் பெருவிரல் நக நுனியால் சிறிது ஊன்றி அருளினார். இராவணன் அப்படியே மலையின் கீழ் எலிக் குஞ்சுபோல் அகப்பட்டுத் தாளும் தோலும் நெரிந்து விரிந்து ‘ஓ’ என்று கதறிப் பதறி அழுதான். அதனால் இராவணன் என்று அவனுக்குப் பேர் ஏற்பட்டது.

"முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே

உந்திமா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்"    ---  திருஞானசம்பந்தர்.


எண் திசையோரும் --- 

அட்ட திக்குப் பாலகர்களும்.


சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் --- 

விரிந்த கிரணங்களை உடைய கதிரவன்.


துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும் --- 

இறைவன் திருவடியே உயிர்களுக்குக் காவலாய் அமைந்ததாகும். மேலான சுகத்தைத் தருவதாகும். திருவடி இன்பம் குறித்து, அப்பர் பெருமான் பாடியருளிய பாடலைக் காண்க.

"மாசில் வீணையும், மாலை மதியமும்,

வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,

மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே,

ஈசன் எந்தை இணையடி நீழலே."

"துணையாய்க் காவல் செய்வாய் என்று உணராப் பாவிகள்பாலும் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ?" என்று பிறிதோர் திருப்புகழில் அடிகளார் அருளியது காண்க.


செக த்ரயங்களும் --- 

செகம் - உலகம்.

த்ரயம், திரயம் - மூன்று. மூவுகமும் போற்றுகின்ற.


கருத்துரை


முருகா! அடியேன் மனத் திருகலை ஒழித்து அருள்வாய்.













பெரியோரை இகழ்வோர் அறிவில்லாத மூடர்

பெரியாரை இகழ்வோர் அறிவில்லாத மூடர்

-----

"பெரியாரைப் பிழையாமை" என்பது திருக்குறளிலும், நாலடியாராலும் கூறப்படும் ஓர் அதிகாரம்.  தம்மினும் பெரியவர்களை இகழாமல் போற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்பது அறிவுத்தப்படுகிறுது. பெரியவர்கள் என்றது ஆற்றலிலும், தவத்திலும் பெரியவர்களை. இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் நாயனார்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்." --- திருக்குறள்.

கற்று உணர்ந்த பெரியவர்கள் உலகத்தில் இருப்பதே மிக அருமையானது. கற்று உணர்ந்த பெரியவர்களின் தொடர்பு கிடைப்பது மிகமிக அருமையானது. நல்வாய்ப்பாகக் கிடைத்தாலும், அந்த நட்பை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை" என்று தள்ளி வைத்து விட்டு, "தாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்" என்று இகழ்ந்து,  அருமையான வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்று சொல்கிறது "நாலடியார்".

“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை, 

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, 

பயம்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல, 

நயம் இல் அறிவினவர்” 

இதன் பொருள் ---

தம்மிடத்து உள்ள பொன்னைக் கொடுத்தாலும் கிடைத்தற்கு  அரிய பெரியோர்கள் நட்புத் தமக்குக் கிடைக்கப் பெற்று இருந்தும், அவர்களின் அரிய நட்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, அந்தோ! நல்லறிவு இல்லாத கீழ்மக்கள் பொழுதை வீணாகக் கழிப்பர்.

செல்வத்தை முயன்று தேடினால் பெறலாம். பெரியவர்கள் நட்பு முயன்று தேடினாலும் கிடைக்கப் பெறாது. கற்று உணர்ந்த பெரியோர்கள் ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது என்றால், அது அவன் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயன் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைத்த அருமையான நட்பை உரிய முறையில் பயன்படுத்தி, தமக்கு உறுதியைத் (நன்மையைத்) தேடிக்கொள்ளமால், வாழ்நாளை வீணாக்குவோர் அறிவு அற்ற (நயம் இல்லாத) மூடர்கள் ஆவார். மூடர்களிடத்திலும் அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார். பொருளையும் புகழையும் தேடி அலவைதால் பயனில்லை. நன்னெறியில் நடவாமையால் புகழானது நாளடைவில் தேய்ந்து போகும். பொருள் நிலையில்லாமல் நீங்கும்.

வள்ளல்பெருமான் இப்படிப்பட்டவர்களைக் கண்கெட்ட குருடர் என்றும், பாழாகிப் போன குட்டிச்சுவர் என்றும் இகழ்ந்து கூறுகிறார்.

"கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்தமைக்

காண்பதே அருமை, அருமை;

கற்பதரு மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்

     கருணையால் அவர் வலியவந்து,


இற்புறன் இருப்ப அது கண்டும் அந்தோ! கடிது

எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு

இயல்உறுதி வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்

     ஏமாந்து இருப்பர், இவர்தாம்

     

பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்று,மேல்

     புல் ஆதி உ(ண்)ணும் உயிர்களும்

போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்

     புறச்சுவர் எனப் புகலலாம்;

     

வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா

     மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

     வளர் வயித்திய நாதனே."              --- திருவருட்பா.

இதன் பொருள் ---

     நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டி உயரும் தவத்தோர் சிகாமணியாகும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வைத்தியநாதப் பெருமானே! கற்பதற்கு உரிய நன்னூல்களைக் கற்று உணர்ந்து ஒழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன் இருக்கும் இடம் தேடி கற்பகமரம் வந்ததுபோல, அருள் மிகுதியால் பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப் புறத்தே நிற்பார்கள் என்றால்,  விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது, தங்களுக்கு உறுதியானவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்து ஒழிகின்றார்கள்.  இவர்கள் அழகிய சுவையை அறியும் அறிவு உடையவர் ஆகார். மேலும், புல் முதலியவற்றை மேய்ந்து உண்ணும் விலங்குகளுக்கும் இவர் ஒப்பாகார். இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். 

நல்ல நூல்களைக் கல்லாமல், பிற நூல்களைக் கற்போர் உலகத்தில் மிக உண்டு. அறிவு நூல்களைக் கல்லாமல், உலகநூல் கற்போர் குறித்து நாலடியார் கூறும் அறிவுரையைக் கொள்ள வேண்டும். 

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், --- கலகல

கூஉம் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார்இல்." ---  நாலடியார். 

இதன் பொருள் ---

ஆய்ந்து அறிந்து, நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு  உதவுமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் உண்டாகும் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவதற்குத் துணை செய்ய மாட்டா.

      எனவே, தடுமாற்றம் என்னும் துன்பத்தில் இருந்து ஒருவன் விடுபடுவதற்கே கல்வி பயன்பட வேண்டும் என்பது தெளிவாகும். மனமானது தெளிந்து, அடங்கி நின்றால் வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது இல்லாமல் போகும். உலகநூல்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழியைக் காட்டும். ஆனால், உள்ளத்தில் உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்க அறிவு நூல்களே உகந்தவை. நல்ல நூல்களைக் கற்றாலும், கற்றவற்றின் பொருளை உணர்ந்து, "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியதற்கு இணங்க, அவற்றின் வழி நிற்போர் மிகமிக அரிது. எனவே, “கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த பெரியோர் தமைக் காண்பதே அருமை அருமை” என்றார் வள்ளல்பெருமான்.  

கற்பதரு - கற்பக மரம். இது விண்ணுலகத்தில் உள்ளது என்று கூறுவர். தன்னை அடைந்தவர் விரும்பியதை அளிக்கும் வல்லமை வாய்ந்த மரம் இது என்று கூறுவர். இதனால் பயன் அடைய வேண்டுமானால், அது இருக்கும் இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். கற்கபக மரம் யாரையும் தேடி வராது. (மிடியன் - வறியவன், வறுமை நிலையில் உள்ளவன்) கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த மிக அருமை வாய்ந்த பெரியவர்களை அறிவில்லாத ஒருவன் தேடிச் சென்று, வலம் வந்து வணங்கி, அழைத்துப் போற்றவேண்டும். கற்பக மரமே இருக்கும் இடம் தேடி வறுமையாளன் ஒருவனிடம் வந்ததைப் போன்று, கற்ற பெரியோர் தாமே ஒருவன் இருக்கும் இடம் தேடி வலிய வருவாராயின், அது எவ்வளவோ உயர்ந்த பேறு என்பதை உணர்த்த, “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அப்படி வந்தவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது ஒருவனது கடன் என்பதை உணர்த்த,  “கடிது எழுந்து போய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளை அவர்களிடத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தங்கட்கு இயல் உறுதி வேண்டாது, கண் கெட்ட குருடர்போல் ஏமாந்து இருப்பர்" எனவும் அருளிச் செய்தார் வள்ளல்பெருமான்.

நயம் இல்லாத அறிவினை உடையவர், புலன் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அதையும் ஒழுங்காக அனுபவிக்க அறியாதவர்கள் இவர்கள். எனவே, சுவை அறியாத மக்கள் இனத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். புல்லை உண்ணுகின்ற ஆடு, மாடு முதலிய விலங்கினத்திலும் சேர்த்து எண்ணப்படுபவர்கள் அல்லர்.  இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்று எண்ணல் வேண்டும் என்பதை, “பொற்பினது சுவை அறியும் அறிவு உடையர் அல்லர்;  புல் ஆதி உண்ணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் காட்டுகின்றார். 

     எனவே, சால்புடைய பெரியோர்களைப் போற்றி வழிபடாத கீழ்மக்களின் கீழ்மை நீங்கவேண்டுமென இறைவனிடம் முறையிட்டு அருளினார் வள்ளல்பெருமான்.

‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' எனவும், ‘பிள்ளையின் அருமையை மலடி அறிவாளோ?'  எனவும், ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தது போல' எனவும் வழங்கப்படும் பழமொழிகளை வைத்து, பெரியோர்களின் அருமையை மூடர்கள் அறியமாட்டார் என்பதைக் கூறுகிறது குமரேச சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல். பாடலைப் பார்ப்போம்.

"மணமாலை அருமையைப் புனைபவர்களேஅறிவர்,

     மட்டிக் குரங்கு அறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,

     மலடிதான் அறிவது உண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள்,

     கணிகை ஆனவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை வரும்

     களவான நாய் அறியுமோ?


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,

     கொடிய பூனையும் அறியுமோ?

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்,

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர

     வனம் ஊடு தழுவும் அழகா!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

இதன் பொருள் ---

மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனம் ஊடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை பின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!, மயிலேறி விளையாடு குகனே - மயில்மதீது இவர்ந்து அருள் விளையாடல்களைப் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலைமீது எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே! 

மணம் மாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ - மணம் பொருந்திய மலர்மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களே அறிவர், அறிவற்ற குரங்கு அறியுமோ?? மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களே அல்லாமல், மலடியானவள் அறிவாளோ?  கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகை ஆனவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்;  விலைமகள் அறிவாளோ? கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர், கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர், கொடு மூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினை உடையவரே அறிவார்,  கொடிய கயவர்கள் அறிவார்களோ?

ஒருசந்தி - ஒருவேளை. நோன்பு இருக்கும் நாள் அன்று ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒரு சந்தி,  ஒருவேளை என்பது வழக்கம். நோன்பு நாளன்று ஒரு வேளைக்குச் சமைப்பதற்கு மட்டுமே பயன்படும் "பாண்டத்தை, ஒரு சந்தியின் பாண்டம்" என்று சொல்லப்பட்டது. நாய்க்கு  எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' என்று "தண்டலையார் சதகம்" என்னும் நூலிலும் சொல்லப்பட்டு உள்ளது.

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல்பெருமான் பிறிதோர் இடத்தில் பாடி உள்ளார். எனவே, கற்ற மேலோரைப் போற்றி, அவருடன் கூடி இருந்து, வாழ்நாளை வீணாகப் போக்காமல், நல்லறிவு பெற்று, குற்றம் அற வாழ்வதே வாழ்க்கை ஆகும். 

கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது.

கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது

-----

"துட்டனைக் கண்டால் தூர விலகு" என்னும் முதுமொழி உண்டு. பதர்களையும் துட்டர்களையும் இந்தக் கலியுகத்தில் அடையாளம் கண்டு,  அவர்களை நன்னெறிப்படுத்த வழியே இல்லையா என்று தோன்றும்.

    கிருதயுகத்தில் மக்கள் அறநெறியுடன் வாழ்ந்தார்கள். அறிவு, தியானம், தவம் என்பன சிறந்து இருந்த யுகம் அது. திரேதாயுகத்தில், நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். இராமாவதாரம் இந்த யுகத்தில் நிகழ்ந்தது என்று கூறுவர். துவாபரயுகத்தில், சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். மகாபாரதம் தோன்றியது இந்த யுகத்தில்தான் என்று கூறுவர்.  கலியுகத்தில், நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும், மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000  ஆண்டுகளைக் கொண்டதாகும். இந்தக் கலியுகத்தில் மக்கள் அவரவர் தமது சுயநலத்திற்காக அதர்ம வழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைமைக் குணமும், பொறாமைக் குணமும் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர். பிறரையும் சிரமத்துக்கு உள்ளாக்குவதில் மகிழ்ச்சி கொள்வர்.

"கலி" என்னும் சொல்லுக்கு, ஆரவாரம், துன்பம், செருக்கு, வஞ்சகம், வறுமை என்னும் பொருள்கள் உண்டு. எனவே, கலியுகத்தில் இவை எல்லாம் உண்டு. இவற்றோடு தான் நமது வாழ்நாளைக் கழிக்கவேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க, இறையருளைப் பெறுவது ஒன்றுதான் வழி.

யுகங்கள்தோறும் மக்களில் தீயவர்களும், கீழானவர்களும் இருந்தார்கள். தீயவர்களை - மூர்க்கர்களை - கீழ்மக்களை - கயவர்களை, அவர்களது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிட முடியாது. அவர்களது செயல்களை வைத்தே மதிப்பிட்டுக் கொள்ள முடியும். புறத் தோற்றத்தில் தீயவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிவார்கள்.  யாரிடத்தில் என்ன குணம் பொருந்தி உள்ளது என்பதை, அவர்களது செயல்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். விலங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். அவனிடத்தில் பிறவிகள்தோறும் பொருந்தி வந்த விலங்குத் தன்மை இருக்கும். அதில் இருந்து விடுபட்டு, தன்னை மனிதனாக்கிக் கொள்ள, நல்லறிவு பெற வேண்டும். நல்லறிவு பெறுவதற்கு அறிவுநூல்களைப் பயிலவேண்டும்.

"அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவரோடு, கல்லாதவரை ஒப்பிட்டு நோக்க, அவர் நன்மை உடைய மனிதர், இவர் தீமையை உடைய விலங்கு போல்பவர்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். மனிதர் யாவரும் உருவத்தால் ஒத்து இருக்கின்றனர். நன்மை உடையவர்கள் நூல்களைக் கற்று வல்லவர்கள். கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும், தீமை தரும் விலங்கு மனத்தை உடையவர் என்பதை அறிவுறுத்த,

"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்

கற்றாரோடு ஏனை அவர்".

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.

இரக்கம் கொள்ளாமல் இருப்பது மிருகங்களின் இயற்கையும் அல்ல. பறவைகளின் இயற்கையும் அல்ல. அவைகளுமே இரக்கம் கொள்ளுகின்றன. விலங்கு வடிவில் இருந்தாலும், எல்லா நன்னெறிகளையும் அறிந்து இருந்தவன் வாலி. அப்படி இருந்தும், அறநெறிக்கு மாறாக நடந்து கொண்டது வாலியின் குற்றம். இராமபிரானிடம் அவன் அறநெறிகளை எடுத்துக் கூறி, இராமனது செயலில் குற்றம் கண்டுபிடித்ததில் இருந்து, அறநெறிகளை அறிந்து இருந்தவன் வாலி என்பது தெளிவாகும். இராமபிரானிடத்தில் அவன்  கூறிய சொற்களே அவன் அறநெறி எது, அல்லாத நெறி எது என்பதை நன்கு அறிந்தவன் என்பதைப் புலப்படுத்தி விட்டது. தன்பால் குற்றம் இல்லை என்று வாலி கூறிய சொற்களை மறுத்து, அவனுடைய செயல் குற்றம் உடையதே என்கிறார் இராமபிரான். நல்லது எது? தீயது எது? பகுத்தறியும் அறிவு இல்லாமல் வாழ்வதுதான் விலங்கின் தன்மை என்பது ஆகும்.                                 

"நன்று, தீது, என்று இயல் தெரி நல் அறிவு

இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்?

நின்ற நல்நெறி, நீ அறியா நெறி

ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால்". --- கம்பராமாயணம், வாலிவதைப் படலம்.

இதன் பொருள் ---

விலங்கின் இயல் - விலங்குகளின் இயல்பாவது; நன்று தீது என்று - நல்லது இது, தீயது இது என்று; இயல் தெரி - அதனதன் இயல்புகளை உள்ளபடி உணர்கின்ற;  நல் அறிவு இன்றி - நல்ல அறிவில்லாமல்; வாழ்வது அன்றோ - (மனம் போனவாறு) வாழ்வது அல்லவா?  நின்ற நல் நெறி - நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்; நீ அறியா நெறி - நீ ஆராய்ந்து உணராத அறவழி;  ஒன்றும் இன்மை - ஒன்றும் இல்லை என்பதை; உன் வாய்மை உணர்த்தும் - இப்பொழுது நீ பேசிய உனது வாய்மொழியே உணர்த்தும்.     

"தக்க இன்ன, தகாதன இன்ன, என்று

ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள

மக்களும் விலங்கே; மனுவின் நெறி

புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே"  --- கம்பராமாயணம், வாலிவதைப் படலம்.

இதன் பொருள் ---

தக்க இன்ன, தகாதன இன்ன என்று - தகுதியானவை இவை,  தகுதியில்லாதவை இவை என்று தெளிந்து; ஒக்க உன்னலர் ஆயின் - நீதிநூல் முறைமைக்கு ஏற்ப எண்ணாதவர்களானால்; உயர்ந்துள மக்களும் விலங்கே - உருவத்தாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும் விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்; மனுவின் நெறி புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே - மனுதர்மம் வகுத்த நன்னெறியில் நடக்குமாயின், அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும் தேவர்களுக்கு ஒப்பானவையே.

     ஐம்பொறி உணர்வும், உணவு, உறக்கம் போன்ற செயல்களும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவை, தீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும், மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால், மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் வைத்தே எண்ணப்படுவர். விலங்காய்ப் பிறந்தும் நீதிநெறியோடு வாழுமாயின் விலங்கும் தேவர்கட்குச் சமமாக மதிக்கப்படும் என்பதால், 'விலங்கும் புத்தேளிரே' என்றார்.

இதனை, பின்வரும் திருக்குறளால், நாயனார் நம்மைத் தெளிவுபடுத்துகின்றார்.

"கணை கொடிது, யாழ்கோடு செவ்விது, ஆங்கு, அன்ன

வினைபடு பாலால் கொளல்".

இதன் பொருள் ---

அம்பு வடிவில் நேராக இருப்பினும், செயலால் தீங்கு விளைவிப்பது. கழுத்தில் வளைந்து யாழ் இருப்பினும், அது தரும் இனிமையான இசை இன்பத்தைத் தரும். 

அதுபோலவே,  ஒருவரை நல்லவர் தீயவர் என்பதை அவருடைய புறத்தோற்றத்தால் கூற இயலாது. ஆகவே, ஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும், பிற நிலைகளாலும் மதிப்பிடக் கூடாது. அவர் செய்யும் செயலைக் கொண்டே நல்லவரா, தீயவரா என்பதை அறிந்து கொள்ளவேண்டும். புறத்தோற்றத்தில் எல்லோரும் மனித வடிவில்தான் உள்ளனர். அவர் சொல்லும் சொல் கூட மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், அவரது சொல் வேறு, செயல் வேறாக இருக்கும் என்பதை வாழ்வியலில் நாம் அறிந்து கொள்ள முடியும்.  காட்டில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் வடிவத்தாலும், செயலாலும் வேறுபட்டு இருப்பவை. அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கு உபாயங்கள் உள்ளன. ஆனால், கயவர்களும் மனித வடிவில்தான் இருக்கின்றனர். செயல்களை வைத்தே கயவர்களை அறிந்து கொள்ள முடியும். கயவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான உபாயத்தை, அறிவு நூல்களை ஓதுவதன் மூலமாகவும், கற்ற பெரியோர்கள் சகவாசத்தாலுமே அறிந்து கொள்ள முடியும்.

எந்த விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.

"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்ப வசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம். கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் - மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் அதிகாரத்துள், 

"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"

என்னும் திருக்குறளின் வழி, கயவர்கள் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார்.

"தேவர் அனையர் கயவர், அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"

என்னும் திருக்குறளின் வழி,  கயவர்கள் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார். 

மனிதர்களை முதல் இடை கடை என்று மூன்றுவகைப் படுத்தலாம். முதல் வகையினர் பக்குவர்கள். இவர்கள் உள்ளும் புறமும் தூய்மையானவர். உள்ளேயும் வெளுப்பு, புறத்தேயும் வெளுப்பு. "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பக்குவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் எழாது. இடைப்பட்டவர்கள் பக்குவாபக்குவர்கள். அதாவது, பக்குவப்பட்டவர்களும் அல்லர், பக்குவப்படாதவர்களும் அல்லர். இவர்கள் அகத்தே கறுத்து, புறத்தே வெளுத்து இருப்பவர்கள். இவர்களைத் திருத்தவே இந்த உலகத்தில் இறைவன் அருளால் தாம் வருவிக்கப்பட்டதாக வள்ளல்பெருமான் பாடுகின்றார்.

"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து

இருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருந்தி, சன்மார்க்க

     சங்கத்து அடைவித்திட, அவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்

     திடுதற்கு என்றே எ(ன்)னை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க

     உற்றேன் அருளைப் பெற்றேனே."      --- திருவருட்பா.

இதன் பொருள் ---

     மனத்தில் தீய எண்ணங்களால் அழுக்குற்றுப் புறத்தே தூயவர் போல ஒழுகுகின்ற மக்கள் அனைவரையும் திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் சேர்க்கவும், அவர்களும் இவ்வுலக வாழ்க்கையிலேயே மேலுலக இன்பத்தைப் பெறுவித்திடுதற்கும் என்றே என்னை இந்தக் காலத்தில் இறைவன் வருவிக்க வந்து அவனது திருவருளைப் பெற்றுள்ளேன். 

கடைப்பட்டவர்களாகிய கயவர்களிடத்து அஞ்ஞானம் நிறைந்து இருக்கும். இவர்கள் உள்ளும் புறமும் கறுத்தவர்கள். கடவுள் உண்டு என்பதையும், பாவபுண்ணியங்கள் உண்டு என்பதையும், வினையின் பயன் உண்டு என்பதையும் நம்பாதவர்கள். இவர்களைப் பீடித்து உள்ள இந்தத் தீராத நோயைத் தீர்த்து, அவர்களை நல்வழிப்படுத்த மருந்து அருளி உதவுமாறு வயித்தியநாதப் பெருமானை வேண்டுகின்றார். கயமைத் தனத்தைத் தொழில்படுத்துகின்ற அஞ்ஞானம் என்னும் நோய் உயிரைப் பற்றியது. அது தீராத பிணியாகிய பிறவிப்பிணிக்குக் காரணமாக அமைகின்றது. உடல்நோய், உள்ளநோய், உயிர்நோய் ஆகியவற்றைத் தீர்த்து அருள் புரிகின்ற மருத்துவராக இறைவன் உள்ளான். வயித்தியநாதப் பெருமான் மீது வள்ளல்பெருமான் பாடி அருளிய பாடலைக் காண்போம்.

"கல்லையும் உருக்கலாம்; நார் உரித்திடலாம்;

கனிந்த கனியாச் செய்யலாம்;

கடுவிடமும் உண்ணலாம்; அமுது ஆக்கலாம்; கொடும்

     கரடிபுலி சிங்கம் முதலா

வெல்லும் மிருகங்களையும் வசம் ஆக்கலாம்;அன்றி

          வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம்; மணலை

          மேவுதேர் வடம் ஆக்கலாம்;

இல்லை ஒரு தெய்வம், வேறு இல்லை, எம் பால்இன்பம்

          ஈகின்ற பெண்கள் குறியே

எங்கள்குல தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்

          எத்துணையும் அரிது அரிதுகாண்;

வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா

          மணி உலக நாதவள்ளல்

     மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

          வளர் வயித்தியநாதனே."                        --- திருவருட்பா.

இதன் பொருள் ---

     மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரான் ஆகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) கோயில் கொண்டு அருளும் வைத்தியநாதப் பெருமானே!  கருங் கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்து எடுக்கலாம்; அக் கல்லைப் பழுத்த பழமாகவும் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப் போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்களுக்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை உடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும். அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்தினை அருள்வீராக.

     எரிமலைகளில் கற்கள் உருகி நெருப்புக் குழம்பாய் வெளிவருவதைப் பார்க்கின்றோம். எனவே,  “கல்லையும் உருக்கலாம்” என்றார்.  சிற்பத்தொழில் வல்லவர், கல்லில் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண,  "கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் “கல் நார் உரித்து என்னை ஆண்டு கொண்டான்" எனவும், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்” என்று பாடி உள்ளதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வள்ளல்பெருமான் பாடுகின்றார். கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால்,  அவனுக்கு அடியவராகிய அப்பர்பெருமான், சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டு, சாவாது இருந்தார். “வஞ்சனை பால்சோறு ஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே” அப்பர்பெருமானே பாடி உள்ளார். இதனை, "நஞ்சு அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு" என்றே சேக்கிழாரும் பாடி உள்ளார். எனவே, “கடல் விடமும் உண்ணலாம், அமுது ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான்.  "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்" என்று தாயுமான அடிகளார் பாடி உள்ளார்.  அதனை ஒட்டியே, "கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்" என்றார் வள்ளல்பெருமான். வாழைத் தண்டை விறகு ஆக்கினார் பட்டினத்தார்.  உலகவர், வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் பேசுவர். எனவே, “மிக்க வாழைத் தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். கயவர்கள் காம இன்பத்தையேபெரிதும் விரும்பி இருப்பர். காம இன்பம் தரும் பெண் அல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளால் அன்றி இத்தகு கயவர்க்கு அறிவு விளக்கம் பெறாது என்பது பற்றி, அவர் கொண்டு உள்ள “உணர்வு அற மருந்து அருள்க” என வேண்டுகிறார்.

அறிவின் பயன் உயிர் இரக்கமே

 அறிவின் பயன் உயிர் இரக்கமே

-----

உலகில் பசியினாலும் நோயினாலும் பகையினாலும் உயிர்கள் படும் துயரங்களைக் கேட்டு இருந்தும், நேரில் கண்டிருந்தும் அவற்றைப் போக்கும் வழிகளை ஒரு சிறிதும் நினையாது தமது உயிர்வாழ்க்கை ஒன்றனையே இனிது எனக் கருதி வாழ்வார் மிகப்பலர். நாம் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்று, தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, எவ்வகையிலும் பிறர்க்குப் பயன்படாது வாழ்வோர் தமக்கு அறிவு உள்ளதாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். அறிவு இல்லாதவர் என்று தம்மை  யாரும் சொல்வதை விரும்பமாட்டார்கள். பெறுதற்கு அரிய மானுடப் பிறவியைப் பெற்றுவிட்டு, எத்துணைப் பேரறிவும் பேராற்றலும் பெருஞ்செல்வமும் உடையவராக இருந்தாலும், அவர்கள் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும் செல்வமும் முதலாயின, மக்கள் பண்பு ஆகிய அன்பு இல்லையானால், அவை யாவும் பயனற்றவையே என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய்

தன் நோய்போல் போற்றாக் கடை" --- திருக்குறள்.

திருக்குறள் வகுப்பு நடத்தியவரும், திருக்குறளைப் பதிப்பித்தவரும் ஆன வள்ளல்பெருமான், திருவள்ளுவ நாயனாரின் கருத்தை அடியொற்றி, அறங்கள் பலவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது சீவகாருண்ணிய ஒழுக்கமே என்கிறார். பிறவுயிர்கள் படும் துன்பத்தினைக் கண்டால் அறிவுடைய மக்கள் உள்ளத்திலே இயல்பாகத் தோன்றும் இரக்க உணர்வு காரணமாக அவைகளின் துயரங்களைப் போக்குதற்கு முற்பட்டு முயலும் கருணைத் திறம் சீவகாருண்ணியம் ஆகும். கொல்லாமை, புலால் உண்ணாமை; ஏழைகளின் பசிதீர்த்தல் என்னும் மூவகை அறங்களையும் உள்ளடக்கியதே சீவகாருண்ணிய ஒழுக்கமாகும்.

காணா மரபினவாகிய உயிர்களுக்குக் காணுதற்குரிய உடம்புகள் இறைவனால் படைத்து அளிக்கப் பெற்றதன் நோக்கம், எல்லா உயிர்களும் தம்மை ஒத்த மன்னுயிர்களை உணர்ந்து அன்பு செலுத்துதற் பொருட்டே என்பதும், அவ்வாறு உயிர்கள்பால் அன்பு செலுத்தும் உணர்வுரிமை மனவுணர்வு பெற்ற மக்கள் குலத்தார்க்கே நன்கு அமைந்துள்ளது என்பதும் ஆகிய உண்மையினை "ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை" என்ற சொற்றொடரால் வள்ளல்பெருமான் தெளிவாகப் புலப்படுத்தி உள்ளார். நன்றும் தீதும் பகுத்து உணர வல்ல மனிதர்கள், தம் இனத்தார் படும் துயரங்களையும் தம்மினும் தாழ்ந்த விலங்கு பறவை முதலிய உயிர்கள் படும் துன்பத்தையும் கண்டு, அத்துன்பங்களைக் களைதற்கு உரிய அருள் முயற்சியாகிய இரக்க உணர்வினைப் பெறுதல் வேண்டுமென்பது வள்ளல்பெருமான் அறிவுறுத்திய ஒழுக்க நெறியின் குறிக்கோளாகும். இத்தகைய அருளுணர்வு உயிர்க்கு உயிராகிய தெய்வத்தின் திருவருள் பெற்றோர்க்கே உள்ளத்தில் கருணையாக நிறைந்து, பிற உயிர்கள் படும் துன்பத்தைத் துடைக்கவல்ல பேராற்றலை மக்களுக்கு வழங்குவதாகும்.

"எவ்வுயிரும் என்உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே"

"எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள்

செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்பது எந்நாளோ?"

எனத் தாயுமான அடிகளார் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி, அவ்வுயிர்கள் படும் துயர்த்துக்கு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களைத் துடைக்க முற்படும் கருணைத் திறமாகிய உயிர் இரக்கவுணர்வினை இறைவனது திருவருளால் பெறுதல் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இத்தகைய உயிர் இரக்க உணர்வு என்பது இறைவனது திருவருள் ஒன்றினாலேயே பெறுதற்கு உரியது என்பதனை "கருணை நிறைந்து, அகம்புறமும் துளும்பி வழிந்து, உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித் தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண் உடையோய்"  என இறைவனைப் போற்றும் முகத்தால் வள்ளல்பெருமான் அறிவுறுத்தி உள்ளார்.

உயிர்க்கு உயிராகிய கடவுளின் இயற்கை விளக்கமே அருள் எனப்படும். "அருள் என்பது தொடர்பு பற்றாது (உறவு முறை கருதாது) இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை" என விளக்கம் தந்தார்  பரிமேலழகர். செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறப்புடைய செல்வமாவது அருளால் வரும் செல்வமே.  ஏனைப் பொருளால் வரும் செல்வங்களோ இழிந்தாரிடத்தும் உள்ளன. மன்னுயிர்களை ஒம்பி அவ்வறத்தினால் மேம்படுதலாகிய அருட்செல்வம், அறிவு ஒழுக்கங்களால் சிறந்த உயர்ந்தோரிடத்திலேயே நிலைத்து நிற்கும் ஆதலால், அவ்வருளால் வரும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் சிறப்புடைய செல்வமாகும் என்பதை,

“அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள”

எனவரும் திருக்குறளால் அறியலாம்.

தன் ஆருயிர்த் தலைவியைப் பிரிந்து மன்னனுக்குத் துணையாய்ச் சென்ற தலைவன், அத்தொழில் நிறைவேறிய நிலையில், தலைவியின் பிரிவுத் துன்பத்தை நீக்குதற் பொருட்டுத் தேரில் ஏறி விரைந்து வருகின்றான். அவ்வாறு வரும்போது வழியிடையில் உள்ள காடுகளிலே மலர்களில் உள்ள தேனைப் பருகி ஆணும் பெண்ணுமாகக் கூடி இன்புற்றிருக்கும் வண்டுகளின் அன்பின் நிலையை எண்ணிப் பார்க்கின்றான. மணிகள் கட்டிய தன் தேர் அக்காட்டின் வழியே விரைந்து செல்லுமானால், தன் தேரில் கட்டிய மணிகளின் பேரொலியின் அதிர்ச்சியினால் அவ்வண்டுகள் துன்புறுமே எனச் சிந்திக்கின்றான். தன்னுடைய தேரின் ஆரவாரம் காட்டில் உள்ள வண்டுகளாகிய சிற்றுயிர்களுக்கு அதிர்ச்சியைத் தந்து துன்பம் விளைக்காதவாறு தன் தேரில் கட்டிய மணியின் நாவினை ஒலி எழாதபடி கயிற்றால் பிணித்துக் கட்டிக் காட்டின் வழியே செல்கின்றான். இவ்வாறு வண்டுகளாகிய சிற்றுயிர்க்கும் துன்பம் விளையாதவாறு உயிரிரக்க உணர்வு உடையோனாய்த் தேரில்வரும் தலைமகனது அருள் விளக்கத் தோற்றப் பொலிவினைத் தோழி அவனது ஆருயிர்த் தலைவிக்குப் புலப்படுத்தும் நிலையினை

"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாது உண் பறவை பேதுறலு அஞ்சி,

மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன்

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்"

எனவரும் அகநானூற்றுப் பாடற்பகுதி எடுத்துக் கூறும்.

பறம்புமலைத் தலைவனாகிய பாரிவள்ளல் மலைவளம் காணத் தேரில் சென்று, தன் தேரினை ஓரிடத்தே நிறுத்திவிட்டு உலவச் சென்றான். சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து தன் தேரினைப் பார்த்தபோது அவ்வழியிலே, படர்வதற்கு உரிய கொழுகொம்பு இல்லாமல் தளர்ந்து அசைந்த முல்லைக்கொடி ஒன்று தன் தேரினைப் பற்றிச் சிறிது படர்ந்திருந்த காட்சியைக் கண்டான். தன் தேரைப் பற்றிய ஒரறிவு உயிராகிய அந்த முல்லைக் கொடியின் தளர்ச்சியை நீக்கக் கருதிய அருளுள்ளம் படைத்தோனாகிய பாரிவள்ளல், தான் ஊர்ந்து வந்த தேரினையே அக்கொடி படர்தற்குரிய கொழுகொம்பாக நிறுத்திவிட்டு நடந்து சென்றான் என்பது புறநானூறு கூறும் வரலாற்றுச் செய்தியாகும். 

“பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும்பு இருப்பப் பாடாது, ஆயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்க எனத் கொடுத்த

பரந்து ஓங்கு சிறப்பின் பாரி" --- புறநானூறு.

இதன் பொருள் ---

பூக்களைத் தலையிலே நீங்காது சுமந்து இருந்தாலும், வாய் திறந்து பரிசில் வேண்டும் எனப் பாடாத முல்லைக் கொடிக்கு, மணி ஒலிக்கும் தனது தேரினைத் தந்துவிட்டுச் சென்று பரந்து விளங்கும் பறம்புமலைத் தலைவனான பாரி"

வளைந்த சிறகினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவினது வருத்தத்துக்கு அஞ்சி, தனது துயரத்தைப் பொருட்படுத்தாது, புறாவினைத் தொடர்ந்த பருந்தினது பசியை அடக்குதல் வேண்டிப் புறாவின் நிறை அளவிற்கு ஈடாகத் தனது உடம்பினைத் தராசில் நிறுத்துத் தந்தவன் சிபிச் சக்கரவர்த்தி. அவனது பெருமையினை.

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன்"

என்று பாடுகிறது புறநானூறு. "நிலவுலகில் வாழ்வோர் துயரம் தீர, சுடுகின்ற சூரியனின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு, காற்றையே உணவாகக் கொண்டு, காலையும் மாலையும் தவம் புரியும் முனிவர்களும் கண்டு மயங்க, கூரிய நகமும் வளைந்த சிறகும் உடைய பருந்தினிடம் இருந்து தப்ப, தன்னை வந்து வந்து தஞ்சம் அடைந்த புறாவினை அழிவில் இருந்து காப்பாற்ற எண்ணி, தனது அழிவிற்கு அஞ்சாது, துலாத் தட்டில் ஏறி அமர்ந்த வரையாது கொடுக்கும் வள்ளல்" என்பது இதன் பொருள்.

பேகன் என்னும் வள்ளல், குளிரால் நடுங்கிய மயிலின் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காது, தான் அணிந்திருந்த பொன்னாடையைப் போர்த்தி அதன் குளிரைப் போக்கினான் என்ற செய்தியும் புறநானூற்றில் போற்றப்பட்டு உள்ளது.

"மடத்தகை மாமயில் பனிக்கு மென் றருளிப்

படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக!"

இதன் பொருள் ---

மென்சாயல் உடைய மயிலானது குளிரால் வருந்தும் என்று எண்ணி, தன் மேல் அணிந்திருந்த போர்வையை எடுத்து, அந்த மயிலுக்குப் போர்த்தி அருளிய, மதயானையும் எனச் செருக்கு உடைய குதிரையும் உடைய பேகன்.

"உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்"

இதன் பொருள் ---

மயிலானது எப்போதும் தன்மேல் போர்த்திக் கொண்டு இராது என்பதை அறிந்தும், மயிலுக்குத் தன் மேலாடையை அணிவித்த மேன்மையாளன், மதம் மிக்க யானைகளும், வலிமை மிக்க குதிரைகளும் கொண்ட அந்தப் பேகன்.

இவ்வாறு, உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் இரங்கி அவற்றின் துன்பங்களை விரைந்து நீக்க முற்படும் உயிரிரக்க உணர்வு ஆறறிவு படைத்த மனிதகுலத்துக்கு இன்றியமையாதது. பிற உயிர்கள் படும் துயரத்தைக் கண்டு இரங்கும் அருளொழுக்கம் (சீவகாருண்ணிய ஒழுக்கம்) வாய்க்கப் பெறாதார் பெற்றுள்ள அறிவினால் சிறிதும் பயனில்லை என்பதையே மேற்குறித்த திருக்குறளின் வழி அறிவுறுத்தினார் நாயனார். 

தனக்குப் பிறர் செய்யும் துன்பங்கள் தன்னுயிர்க்கு வருத்தம் தருதலைத் தன் அனுபவத்தால் அறிந்த ஒருவன், பிற உயிர்கட்குத் தான் துன்பம் செய்தல் என்ன காரணத்தாலோ?  என அவனது பேதைமையை நினைந்து இரங்கிய திருவள்ளுவ நாயனார், 

"தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான், என்கொலோ 

மன்னுயிர்க்கு இன்னா செயல்?"

என்றார். தன் உயிர்க்குத் துன்பம் என்பதை அறிந்த ஒருவன், அவ்வாறே துன்பங்களை உணரும் பிற உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் ஏனோ? என்கிறார்.

இதுவரை எடுத்துக்காட்டியவற்றால், தமிழ் மக்கள் பண்டைக் காலம் தொட்டே எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி இரங்கும் சீவகாருண்ணிய உணர்வு உடையராய் வாழ்ந்தார்கள் என்பது புலனாகும். தமிழ் முன்னோர் கொண்டொழுகிய உயிரிக்கம் என்னும் சீவகாருண்ணிய ஒழுக்கத்தை மீண்டும் வற்புறுத்தி எல்லோரும் பின்பற்றுமாறு செய்த பெருமை வள்ளல்பெருமானுக்கு உரியது.

எல்லா அண்டங்களையும் எல்லாப் புவனங்களையும் எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும் எல்லாப் பயன்களையும் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம இலாபமாகும். சீவகாருண்ணிய ஒழுக்கத்தினால் கடவுளின் அருளைப் பெறக் கூடும். அல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது. அருள் என்பது கடவுள் தயவு, கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருண்ணியம் என்பது சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.

இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும். வேறொன்றினால் பெறக் கூடாமை அனுபவம். ஆதலின் சீவகாருண்ணியத்தைக் கொண்டு இறைவனது அருளைப் பெறுதல் கூடும். வேறொன்றினாலும் பெறுதல் இயலாது. கடவுள் அருளைப் பெறுதற்கு உயிரிரக்கமாகிய சீவகாருண்ணியமே வழி. உயிர் இரக்கமாகிய சீவகாருண்ணியம் மக்கள் உள்ளத்தே விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் பிறவுயிர்க்கு உதவி செய்யத் தோன்றும். அந்த ஆற்றலால் எல்லா நன்மைகளும் தோன்றும். மக்கள் உள்ளத்தில் உயிரிரக்கம் மறையும் போது அறிவும் அன்பும் உடனே மறைந்துவிடும். அதனால், பிற உயிர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆற்றல் மறையும். அது மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆதலின், புண்ணியம் என்பது சீவகாருண்ணியமே என்றும் பாவமென்பது சீவகாருண்யம் இல்லாமையே என்றும் அறிதல் வேண்டும்.

உயிர்கள், பசி, தாகம், இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாகிலும், கேட்டபோதாகிலும், இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாகிலும், உயிர்களின் தொடர்பாக ஆன்ம உருக்கம் உண்டாகும்.  உலகில் பலர் பசி தாகம் பயம் முதலியவற்றால் மிகவும் துன்புறக் காண்கின்றோம். இவர்கள் முன்னைப் பிறப்பில் சீவகாருண்ணிய ஒழுக்கத்தை விரும்பாமல், வன்னெஞ்சத்தவராய்த் தீது நெறியில் நடந்தவர். ஆகையால் கடவுளின் ஆணைப்படி பசி தாகம் பயம் முதலியவற்றால் துன்பப்படுகிறார்கள் என்று அறிய வேண்டும்.

சீவகாருண்ணிய ஒழுக்கம் சிறிதுமில்லாத புலி சிங்கம் முதலிய விலங்குகள் திரியும் காட்டிலே இவ்வுலகியல் ஒழுக்கம் நிலைபெறாது. அதுபோல் சீவகாருண்ணியம் இல்லாத மனிதர்கள் வாழும் இடத்திலும் இவ்வுலகியல் ஒழுகலாறு செவ்வையாக நடைபெறாது. சீவகாருண்ணியம் இல்லாத போது மக்கள் உள்ளத்தே அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது, கடவுள்நிலை கைகூடாது. அது கைகூடாத போது, வீடுபேற்று  இன்பத்தினை ஒருவரும் அடைய மாட்டார்கள். ஆகவே பரலோக ஒழுக்கமும் சீவகாருண்ணியத்தாலேயே கைகூடும் என்று அறிதல் வேண்டும், சீவகாருண்ணியம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கமாதலால், அந்த இயற்கை விளக்கம் இல்லாத உயிர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது. 

உயிர்கள் எல்லாம் இயற்கை விளக்கமாகிய கடவுளது அருள் அறிவுக்கு அறிவாய் விளங்குவதற்கு ஒத்த உரிமையுடைய இடங்களாக அமைந்துள்ளன. அவ்வுயிர்கள் உடம்புடன் கூடி அன்புடையராய் வாழ்தற்குப் பூதகாரியமான உடம்புகளே உரிமையாக உள்ளன. அவ்வுடம்புகளில் ஆன்மாக்கள் நிலைபெறாவிடில் ஆன்மவிளக்கமாகிய இரக்கம் மறைபடும்; அதனால், கடவுளின் அருள்விளக்கம் வெளிப்படாது. அப்போது அறியாமையே மிகுந்து தோன்றும். 

ஊழ்வினையாலும் விழிப்பின்மையாலும் வரும் இடர்களை நீக்கிக் கொள்ளமாட்டாமல் வருந்துகின்ற பிற உயிர்களின் வாழ்க்கையில் நேரும் இடர்களை நீக்கத் தக்க ஆற்றல் பெற்ற மக்கள், அவ்வுயிர்கள் படும் துன்பத்தை நீக்குவித்தல் வேண்டும்.  இவ்வாறு மன்னுயிர்களுக்கு நேரிடுகின்ற அல்லல்களைப் போக்குவதற்கு உரிய வல்லப சுதந்திரமும் அறிவும் இருந்தும், அல்வாறு செய்யாமல், தமது ஆற்றலை வஞ்சித்து ஒழுகும் மாந்தர்க்கு இவ்வுலக இன்பத்தோடு முத்தியின்பத்தையும் அனுபவிக்கின்ற உரிமை இறையருளால் இல்லாது ஒழிந்தது. இன்னோர் இக்காலத்தில் நுகருகின்ற புவனபோகங்களையும் இழந்து விடுவர் என அருள் நூல்கள் விதித்திருக்கின்றன. உயிரிரக்க ஒழுகலாறாகிய இதன்கண் உண்மையாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கவும். கொலைப்படும் சீவர்களுக்கு உரிய காலத்தில் வந்து தடுக்கும் செயல் வகையால் கொலைத் துன்பத்தை நீக்கியும், இவ்வாறு மனநிறைவாகிய இன்பத்தை உண்டு பண்ணுவதே அறிவறிந்த மக்கட் பிறப்பினால் அடைதற்குரிய மேலான நற்பயனாகும், என வள்ளல்பெருமான் தமது "சீவகாருண்ய ஒழுக்கம்" எனனும் நூலின் முற்பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அருட்பிரகாச வள்ளலார் இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றிய 'பிள்ளைப் பெரு விண்ணப்பம்' என்னும் பாடல் தொகுதியில் 'சீவகாருண்ணியம்' என்ற வடமொழித் தொடர்ப் பொருளை உயிரிரக்கம் எனத் தமிழ்த் தொடராக்கி விளக்கம் தந்துள்ளார்கள். இந்நுட்பம்:

"வரும் உயிர் இரக்கம் பற்றியே உலகவழக்கில்

⁠என் மனம் சென்ற தோறும்

வெருவி நின்அடிக்கே விண்ணப்பித்து இருந்தேன்;

⁠விண்ணப்பம் செய்கின்றேன் இன்னும்;

உருவ என்னுயிர்தான் உயிரிரக்கம் தான்

⁠ஒன்றதே, இரண்டு இலை; இரக்கம்

ஒருவில் என் உயிரும் ஒருவும்; என்உள்ளத்து

⁠ஒருவனே நின்பதத்து ஆணை"

என்று வள்ளல்பெருமான் அருளிய பாடலால் விளங்கும்.

உண்மையான ஞானம் என்பது உயிர்களிடத்திலும் உயிர்க்கு உயிராகிய இறைவனிடத்திலும் செலுத்தும் அன்பே ஆகும். இவ்வுண்மையை,

"ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர்

ஞானம் உண்டார்" --- பெரியபுராணம்.

எனவரும் சேக்கிழார் அருள்மொழியால் நன்கு தெளியப்படும். அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தை உடைய உருகும் மனத்து அடியார்கள் பிறவிவேர் அறுக்கும் இறைவனைக் கண்டு இன்புறுவர். எவ்வுயிர்க்கும் இரங்குதலாகிய அன்பினை உடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடியினைக் கண்டு மகிழ்வார்கள் என்னும் உண்மையினை,

"ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை,

ஈரம் உடையவர் காண்பார் இணையடி"

எனவரும் தொடரில் திருமூலநாயனார் தெளிவித்து உள்ளார்.

"அன்பினில் விளைந்த ஆரமுதே" என்பதும், "நேயத்தே நின்ற நிமலன்" என்பதும் மணிவாசகப் பெருமான் அருள்வாக்குகள்.  இதன் பொருளை மக்கள் எல்லோரும் உணர்ந்து உயிரிரக்கம் உடையவராய், அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் போற்றி உய்தி பெறுதல் வேண்டும் என்னும் பெருவேட்கையினாலேயே வள்ளல்பெருமான் சீவகாருண்ணிய ஒழுக்கத்தினை வற்புறுத்தி அருளினார். 


பொது --- 1077. புரக்க வந்த

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புரக்க வந்த (பொது)

முருகா! 

உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்

     தனத்த தந்தனம் ...... தனதான


புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்

     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்


புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்

     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே


செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்

     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்


த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்

     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ


குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்

     குவட்டி லங்கையுந் ...... துகளாகக்


கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்

     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்


துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்

     துரத்த னும்பிறந் ...... திறவாத


சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்

     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புரக்க வந்த, நம் குறக் கரும்பை, மென்

     புனத்தில் அன்று சென்று ...... உறவாடி,


புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண்

     புதுக் குரும்பை, மென் ...... புயம் மீதே


செருக்க நெஞ்சகம் களிக்க, அன்புடன்

     திளைக்கும் நின் திறம் ...... புகலாது, இந்-


த்ரியக் கடம் சுமந்து, அலக்கண் மண்டிடும்

     தியக்கம் என்று ஒழிந் ...... திடுவேனோ?


குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும்

     குவட்டு இலங்கையும் ...... துகளாக,


கொதித்த கொண்டலும், த்ரி அட்சரும், கடம்

     கொதித்து மண்டு வெம் ...... பகை ஓட,


துரக்கும் விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்-

     துரத்தனும், பிறந்து ...... இறவாத


சுகத்தில் அன்பரும், செக த்ரயங்களும்

     துதிக்கும் உம்பர் தம் ...... பெருமாளே.

பதவுரை

குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும்,

திரி அட்சரும் --- (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும்,

கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், 

விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும்,

பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும்,

செக த்ரயங்களும் --- மூவுலகங்களும் துதிக்கின்றவரும்,

துதிக்கும் --- துதிக்கின்ற

உம்பர்தம் பெருமாளே --- தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

புரக்க வந்த நம் குறக் கரும்பை --- உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி

மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி,

புடைத்து --- பக்கங்களில் பருத்து விளங்கி,

அலங்க்ருதம் படைத்து எழுந்த ---  அலங்காரத்தோடு எழுந்துள்ளதும்,

திண் புதுக் குரும்பை --- வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய மார்பகங்களின் மீதும், 

மென் புய(ம்) மீதே --- மென்மையான தோள்களின் மீதும்,

செருக்க நெஞ்சகம் களிக்க --- மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய,

அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது --- அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல்,

இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

பொழிப்புரை

குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும், சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும், மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும்,  ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும், பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும், மூவுலகங்களும் துதிக்கின்றவரும், தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி, அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி, பக்கங்களில் பருத்து விளங்கி, அலங்காரத்தோடு எழுந்துள்ளதும், வலிமையும் எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய அவரது மார்பகங்களின் மீதும், மென்மையான தோள்களின் மீதும், மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய, அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல், ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

விரிவுரை


புரக்க வந்த நம் குறக் கரும்பை --- 

புரத்தல் - ஆண்கொண்டு காத்து அருளுதல்.

குறக் கரும்பு என்பது குறமகளாகிய வள்ளிநாயகியைக் குறிக்கும்.


மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- 

மென்மை - அமைதி. மென்புனம் - அமைதி வாய்ந்த தினைப் புனம்.


புடைத்து --- 

"புடை பரந்து ஈர்க்கு இடை போகா இளமுலை" என்பது மணிவாசகம். 


அலங்க்ருதம் ---

அலங்காரம். 


திண் புதுக் குரும்பை --- 

திண்மை - வலிமை.

புது - அழகு பொருந்திய,

குரும்பை - இளநீர்.

"மிருகமத புளகித இளநீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்" என்பது தேவேந்திர சங்க வகுப்பு.

செருக்க நெஞ்சகம் களிக்க ---

செருக்கு - மகிழ்ச்சி. 


அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- 


நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக

     நாயக மாமயில் ...... உடையோனே.     --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்து, உரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

 

மார சரம் பட, மோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும், தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.  --- (பாரநறுங்) திருப்புகழ்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

  தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கைதொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.


வள்ளி என்பது ஜீவான்மா;

முருகன் பரமான்மா;

நாரதர் வள்ளியினது தவ வலிமை.

தவ வலிமை ஆண்டவனை அருள்புரிய அழைத்துவரும்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே! நின் பெயர் யாது? நின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   இவ்வாறு பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.


"தாய்துயில் அறிந்து, தங்கள்

     தமர்துயில் அறிந்து, துஞ்சா

நாய்துயில் அறிந்து, மற்றுஅந்

     நகர்துயில் அறிந்து, வெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப்

     பெரும்பொழுது அதனில், பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி

     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்."

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி,  எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

அருள்வள்ளல் ஆகிய முருகப் பெருமானின் அருள்திறத்தைப் பேசிப் பணிந்து வழிபடுவதால் நற்கதி அடையாலம், அதை விடுத்து, பொறிகளின் வழியே மனதைச் செலுத்தி, ஆசைக் கடலில் விழுந்து, அறிவு மயங்கி அல்லல் படுதல் கூடாது என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.


குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- 

குரக்கினம் - குரங்கு இனம்.

தண்டம் - படை.

குவடு - மலை. குவட்டு இலங்கை - மலைகளால் சூழப்பட்டுள்ள இலங்கை.

இலங்கையர் கோனை வெற்றி கொண்ட, மேக நிறத்தவர் ஆன திருமால்.


திரி அட்சரும் --- 

அட்சம் - கண். திரி அட்சம் - முக்கண். 

சூரியன், சந்திரன், அக்கினி என்பதையே தமக்கு மூன்று கண்களாக உடைய சிவபெருமான். 

முக்கண்ணன். திரியம்பகன்.


கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- 

கடம் - மதநீர்.


விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- 

விம்பம் - ஒளி.

கிம்புரி - யானையில் கொம்பில அணியப்படும் பூண். பிரசண்டம் - வேகம்.

சிந்துரம் - யானை. அயிராவதம் என்னும் யானை.

சிந்துரத்தன் --- சிந்துரம் எனப்படும் யானையை வாகனமாக உடைய இந்திரன்.


மூம்மூர்த்திகளும் இந்திரனும் முருகப் பெருமானைத் துதிக்கின்றனர்.

படைத்து அளித்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே --- திருப்புகழ்.

மூவர் தேவாதிகள் தம்பிரானே - திருப்புகழ்.


பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- 

பிறப்பும் இறப்பும் துன்பத்திற்கு இடமானவை. துன்பத்தைத் தருபவை. 

அற்ப இன்பத்தை உடையது மானிடப் பிறவி. பிறவாத பேரின்பத்தை அடையத் துணையாக வாய்த்தது. இறையருளால் அரிதாகப் பெறப்பட்டது. பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, நன்னெறியில் வாழ்ந்து, பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலையை அடைந்தால் பேரின்பம் வாய்க்கும். அந்தப் பெருநிலையை உடம்பு உள்ளபோதே பெறுகின்ற நிலை சீவன் முத்த நிலை எனப்படும். சீவன் முத்தர்களாக உள்ள அடியார்கள் இறைவனைப் போற்றுவதை அடிகளார் இங்கே குறிக்கின்றார்.


செக த்ரயங்களும் --- 

செகம் - உலகம. திரயம் - மூன்று.  

மூவுலகங்களிலும் உள்ளவர்கள் முருகப் பெருமானைத் துதிக்கின்றார்கள்.


கருத்துரை

முருகா! உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.








வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...