015. பிறனில் விழையாமை - 10. அறன்வரையான்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "ஒருவன் அறச் செயல்கள் புரிவதைத் தனக்கு இயல்பாகக் கொள்ளாமல், பாவங்களைச் செய்வான் ஆயினும், பிறனுடைய மனைவியை விரும்பாது இருப்பானாயின், அது நன்மையைத் தரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் வரையான் அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் வரையான் அல்ல செயினும் --- ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்,

     பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.

      (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே ஆயினும் ஆக –  சிறுவரையும்
நன்னலத்து ஆயினும் கொள்க, நலம்அன்றே
மெய்நடுங்க உள்நடுங்கும் நோய்.  ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     பிறன் வரை நின்றாள் --- பிறன் வரம்பில் நிற்பவள் (அஃதாவது பிறன் மனைவி), கடைத் தலைச் சேறல் --- அவள் இருக்கும் தலைவாயிலினிடத்துச் செல்லல், அறன் அன்று --- நற்செயலாகாது, ஆயினும் ஆக -- (அவ்வாறு அறனாகாது) ஆயினுமாகுக. சிறுவரையும் --- (அச்செயலில்) நொடிப் பொழுதாயினும், நல் நலத்தது ஆயின் --- தூய  இன்பம் உடையதாயின், கொள்க --- அதனைக் கைக்கொள்க ; நலம் அன்றே --- (அச்செயலால் வருவது) இன்பம் அல்லவே; (ஆனால் வருவது என்னை எனின்), மெய் நடுங்க --- உடல் நடுங்க, உள் நடுங்கும் நோய் --- மனமும் நடுங்குவதற்குக் காரணமாகிய வருத்தமேயாகும்.

         (வி-ம்.) பிறன்மனை புகுவான் புகுங்கால் மெய்ந் நடுங்கி  உள்ளொடுங்கிச் செல்வானாதலால் "மெய்ந்நடுங்க உண்ணடுங்க நோய்" என்றார்.

புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்?                              (நாலடியார்)
                 
காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்;
ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட
இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு.       (நாலடியார்)

 என்பன இங்கு நினைவு கூரற்பாலன. 

015. பிறனில் விழையாமை - 08. பிறன்மனை நோக்காத





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "பிறனுடைய மனையாளைத் தனது மனத்தாலும் கொள்ளாத, பெரிய ஆண் தன்மையானது, பல நல்ல குணங்களாலும் நிறைந்த சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்" என்கின்றது.

     புறப்பகையை அடக்குகின்ற வல்லமை உள்ளவர்களுக்கும், உட்பகை ஆகிய காமத்தை அடக்குவது அரிது. உட்பகையை அடக்குபவரே சிறந்த ஆண்மை உள்ளவர் ஆவார். அது பேராண்மை எனப்பட்டது. பிறன் மனைவியை விரும்பாமையே, சிறந்த அறமும், செயற்கு அரும் செய்கையும் ஆகும்.

திருக்குறளைக் காண்போம்...

பிறன்மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை,

     சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.

      (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பல வாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


எந்தை பலிக்கு என்று இயங்கும் நாள், பின்தொடர்ந்த
மென் தொடியார் தேத்தும் விழைந்திலார் ---  என்ப
பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு.              

         எந்தை --- சிவபெருமான். பின்தொடர்ந்த மென் தொடியார் தேத்தும் --- தாமாகப் பின் தொடர்ந்து வந்த தாருகாவனத்து முனிவருடைய பத்தினிமாரிடத்திலும்,  விழைந்திலர் ---  விருப்பத்தைச் செய்திலர். ஒரு காலத்தில் தாருகா வனத்தில் நடந்த வரலாற்றை இது குறிக்கும். தாருகாவனத்தில் இருந்த முனிபத்தினிகள், சிவபெருமான் மீது இச்சைகொண்டு தொடர்ந்த போதும், அவர் விருப்பம் கொள்ளவில்லை.
        
         அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு --- அறமும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.  

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

அம்பிகையை நோக்கி அளகேசன் கண்ணிழந்தான்,
இம்பர் பரவும், இரங்கேசா! - நம்பிப்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற வொழுக்கு.  

இதன் பதவுரை --- 

     இம்பர் பரவும் இரங்கேசா --- இவ் உலகோர் போற்றும் திருவரங்கநாதக் கடவுளே!

     அம்பிகையை நோக்கி --- பாரவதி தேவியைக் கூர்ந்து பார்த்ததனால், அளகேசன் --- குபேரன், கண் இழந்தான் --- குருடன் ஆனான், (ஆகையால் இது) பிறன் மனை --- அன்னியன் மனைவியை, நம்பி --- சேரலாம் என்று நிச்சயித்து, நோக்காத --- பார்க்காத, பேர் ஆண்மை --- பெரிய உறுதியானது, சான்றோர்க்கு --- பெரியோர்க்கு, அறன் ஒன்றோ --- தருமம் ஒன்றுதானா, ஆன்ற ஒழுக்கு(ம் ஆகும்) --- மிகுந்த நல்லொழுக்கமும் ஆகும் (என்பதை விளக்குகின்றது).   

         திருக் கயிலாய மலையில் பார்வதி தேவியை வேறு எண்ணத்தோடு விவேகமின்றிப் பார்த்ததனால் குபேரன் குருடன் ஆனான். ஆகையால், 'அம்பிகையை நோக்கி அளகேசன் கண்ணிழந்தான்' என்றார். 'நாம் அவள்மீது இச்சை வைத்தது போலவே இவளும் நம்மீது இச்சை வைப்பாள் என்று ஒருவன் எண்ணிப் பிறன் மனைவியை நம்பி' என்று பொருள் விரித்துக் கொள்க. சாதாரண இல்லற தருமம் ஒன்று மட்டுமன்று. பிறன்மனை புகாத பேராண்மை நல்லொழுக்கங்களிள் சாலச் சிறந்ததுமாகும். இவ் ஆண்மையில் குறைந்து ஒழுகிய இராவணன் பட்டபாடு யாவரும் அறிவர்.

     இந்தச் செய்யுளின் முதல் ஈரடிக்கு 'அந்தகன் தேவிதனை அக்கினி தான் அணைந்தே, இந்தில் இழிவுற்றான் இரங்கேசா' என்றும் பாடபேதம் உண்டு.

     இதற்கு, அந்தகன் --- இயமனுடைய, தேவிதனை --- மனைவியை, அக்கினிதான் --- அக்கினி தேவன், அணைந்து - சேர்ந்து, இந்தில் --- இவ் உலகத்தில், இழிவுற்றான் --- மற்ற தேவரால் அவமானம் அடைந்தான்' என்பது பதவுரை.

இந்த வரலாறு

     சுவாகாதேவி என்பவள் மிக்க அழகு உடையவளாக இருந்தாள். ஆகவே, எமன் அவள் மீது காதல் கொண்டு, அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுடைய அழகை விரும்பி, அவளை யாராவது கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய எமன், அவளைச் சிறிய எலுமிச்சம்பழம் ஆக்கி உள்ளே விழுங்கி வைத்து இருந்தான். தனக்கு அவள் மீது விருப்பம் உண்டான போது மட்டும் எலுமிச்சம்பழத்தைக் கக்கி, பெண்ணாக்கி இன்பம் அனுபவித்து இருப்பது வழக்கம். இந்திரவனம் என்னும் இடத்திற்குச் சென்று, எமன் தன் மனைவியாகிய எலுமிச்சம்பழத்தைக் கக்கிப் பெண்ணாக்கி அவளோடு இன்பம் அனுபவித்து, இனிது மகிழ்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான். பிறகு களைப்பால் மறந்து, தன் மனைவியை எலுமிச்சம் பழமாக்கி விழுங்காமலே விட்டு விட்டு உறங்கிவிட்டான். அப்பொழுது அந்த இடத்திற்குத் தீக் கடவுள் வந்தான். எமன் சுவாகாதேவி மீது காதல் கொண்டு இருந்தானே அல்லாமல், சுவாகாதேவிக்கு எமன் மீது காதல் சிறிதும் கிடையாது. ஆகவே, அவள் தீக் கடவுளைக் கண்டவுடன், அவன் மீது காதல் கொண்டு அவனைச் சேர்ந்தாள். எமன் விழிப்பதற்குள், தீக் கடவுளை ஒரு எலுமிச்சம்பழமாக்கி உள்ளே வைத்து இருந்தாள். எமன் விழித்ததும், மனைவியை எலுமிச்சம்பழமாக்கி விழுங்கி வைத்துக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குப் போய்விட்டான். பிறகு தேவர்களும் முனிவர்களும் தீக் கடவுளைத் தேடத் தொடங்கினார்கள். பல இடங்களிலும் தேடியும் அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. திருமால் இடத்திலே சென்று முறையிட்டார்கள். அவர் தனது மெய்யறிவுப் பார்வையினால், தீக் கடவுள் இருக்கும் இடத்தைப் பார்த்து அறிந்தார். எமனை அழைத்து, அவன் வயிற்றில் இருந்து சுவாகாதேவியைக் கக்குவித்தார். பிறகு அவளுடைய வயிற்றிலே இருந்து தீக் கடவுளைக் கக்குவித்தார். தீக் கடவுள் வெளிப்பட்டதும், எமனுக்குத் தன்னுடைய ஒருதலைக் காமத்தின் உண்மை தெரிந்தது. சுவாகாதேவிக்குத் தன் மீது சிறிதும் காதல் இல்லை என்பதே அறிந்து அவளை விட்டுவிட்டான். ஒருதலைக் காமத்தால் நன்மை ஏதும் இல்லை என்பது எமனிடத்தில் விளங்கியது.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அறனும், அறன் அறிந்த செய்கையும், சான்றோர்
திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பிறன்இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்குஆம் ஒருங்கே இவை.           ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறன் இல் பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல் --- அயலான் மனைவியை விரும்பினான் என்று, மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும் --- அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும் --- அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே --- இவை முழுவதும், இழுக்கு ஆம் --- பழியாம்.


பொருளும், காமமும் என்று இவை போக்கி, வேறு
இருள் உண்டாம் என எண்ணலர், ஈதலும்
அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஒர்
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.
              ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

இதன் பதவுரை ---

     சீரியோர் --- அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்; பொருளும் காமமும் என்று இவை போக்கி --- செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று நினையார்; ஈதலும், அருளும் --- வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும் கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது --- அப்பொருளினிடத்தும் சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்; ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறு ஒரு நல்லறிவு உள்ளது என்று நினையார்.

     பொருளும் காமமும் இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும் தெளிவு தருவன.                                            

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

இதன் பதவுரை ---

     இச்சைத் தன்மையினில் --- ஆசையின் இயல்பினால்; பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற --- அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து --- வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு (காம தாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூ உம் கொச்சை ஆண்மையும் --- பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ? --- சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி).

     பிறன்மனை நயத்தலின் இழிவு கூறப்பட்டது. 'எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்ற திருக்குறளின் கருத்தை அடியொற்றியது. 

பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.
                                                       --- கம்பராமாயணம், மாயாசனகப் படலம்.

இதன் பதவுரை ---

     பெண் எலாம் நீரே ஆக்கி --- நான் விரும்பும் பெண் எலாம் நீரே என்று ஆக்கி;  பேர் எலாம் உமதே ஆக்கி --- யான் விரும்பி அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி;  கண் எலாம் நும் கண் ஆக்கி --- என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி;  காமவேள் என்னும்  நாமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி --- காமவேள் என்று பெயர் கொண்ட தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத்  தொடுப்பவன் என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி --- அக் காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து;  விபரீதம் புணர்த்து விட்டீர் --- என்னிடம்  மாறுபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர்.

     ஐங்கணை -  தாமரை.  அசோகு,  மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து மலர் அம்புகள். விபரீதம் - மாறுபாடு.


'அறம் என நின்ற நம்பற்கு
     அடிமை பெற்று, அவன்தனாலே
மறம் என நின்ற மூன்றும்
     மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை
     இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை
     உறவு எனப் பெறுதி போலாம்?
                                  ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     அறம் என நின்ற நம்பற்கு --- அறத்தின் மூர்த்தி எனச் சொல்லுமாறு நின்ற தலைவனுக்கு;  அடிமை பெற்று --- அடிமையாகப் பெற்று; அவன் தனாலே --- அவனது கருணை வள்ளல் தன்மையாலே; மறம் என  நின்ற மூன்றும் ---  பாவத்துக்குக் காரணம் என்னுமாறு நின்ற காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும்; மருங்கு அற மாற்றி --- முழுதும்  இல்லாமல் போக்கி; மற்றும் --- மேலும்; திறம் என நின்ற தீமை --- வலிமையுடையதாக இருந்த பிற தீய பண்புகளையும்; இம்மையே தீர்ந்த செல்வ --- இப்பிறவியிலேயே போக்கிய செல்வனே; பிறர் மனை நோக்குவேமை --- அயலவரது மனைவியை அறம் துறந்து நோக்கும் எங்களை; உறவு எனப் பெறுதி போலாம் --- உறவு என இனிமேலும் கொள்வாய் போலும் என்றவாறு.

     மறம் என நின்ற மூன்றும் --- அறியாமை,  திரிபு உணர்ச்சி, ஐய உணர்வு எனினும் ஆம். இப்பிறவியில்  பெறவரும் பதம்  பெற்ற நீ, அதை விட்டு இங்கு மீண்டு வந்தது என்னையோ என்றவாறு. பிறர் மனை நோக்குவேமை, என்றது இராவணனுக்குத் துணையாய் நின்று போருக்கு வந்தமையால் உளப்படுத்திக் கூறியதாம்.
 

015. பிறனில் விழையாமை - 07. அறன்இயலான்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "பிறன் ஒருவனுக்கு உரிமையான மனையாளின் தன்மையை விரும்பாதவன், அறநெறியில் நின்று இல்லறத்தை நடத்துபவன் என்று சொல்லப்படுவான்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்,

     பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.

         (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறம் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

சீலம் குலம் அடியாள் தீண்டின் கெடும், கணிகை
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும், --- நூல்இழந்த
வல்லி தழுவக் குறையும் வாழ்நாள், பிறர்தாரம்
புல்லினர்க்கு எல்லா நலமும் போம்.     ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

     வேலைக்காரப் பெண்ணைக் கூடினால் ஒழுக்கமும் குலமும் கெட்டுப் போகும். பரத்தையரைக் கூடினால் செல்வம் அழிந்து போகும். தாலி இழந்த விதவையைக் கூடினால் வாழ்நாள் குறைந்து போகும். பிறர் மனைவியரைக் கூடினவர்களுக்கு மேற்சொன்ன ஒழுக்கம், குலம்,செல்வம், ஆயுள் என்பவகைளும் பிறவும் ஆகிய எல்லா நன்மைகளும் அழிந்து போகும்.

(சீலம் - ஒழுக்கம்.  அடியாள் - பணிப்பெண்.  கணிகை - வேசி.  ஆலிங்கனம் - தழுவுதல்.  தனம் - செல்வம்.  நூலிழந்த வல்லி - கைம்பெண்.  தாரம் - மனைவி.  புல்லுதல் - தழுவுதல்.)

பெண்மை வியவார் பெயரும் எடுத்துஓதார்
கண்ணோடு நெஞ்சுஉறைப்ப நோக்குறார் - பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார்.  ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     வீடு இல் புலம் பகையினார் --- புலன்களுக்குப் பகைவராகிய கெடுதலில்லாத துறவிகள்; பெண்மை வியவார் --- பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெயரும் எடுத்து ஓதார் --- பெண் என்னும் பெயரையும் எடுத்து உரையார். நெஞ்சு உறைப்ப கண்ணோடு நோக்கு உறார் --- நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப் பார்க்கமாட்டார்கள்; பண்ணொடு பாடல் செவி மடார் --- தம்மை வயப்படுத்தும் பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: பண்பு அல்ல --– குணமற்றனவான பிறசெயல்களையும் , பாராட்டார் --- பாராட்டமாட்டார்கள்.

015. பிறனில் விழையாமை - 06. பகை பாவம்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "நீதிமுறை தவறி, பிறனுடைய மனையாளிடத்தல் இன்பம் வேண்டிச் செல்வோனிடத்து, பகையும், குடிப் பழியும், அச்சமும், பாவமும் என்னும் இந் நான்கு குற்றங்களும் என்றும் நீங்காமல் இருப்பன" என்கின்றது. அவன் இம்மை மறுமை நலன்களை இழப்பான் என்றது.

திருக்குறளைக் காண்போம்...

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்கண்.

         இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இல் இறப்பான்கண் --- பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து,

     பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் --- பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.

         (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இதனால் இல் இறப்பான் குற்றம் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளம்மகா, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

ஆன்றஎழிற் சீதையைவேட்டு ஐந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே, சோமேசா! - ஏன்ற
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.

      பிறனில் விழையாமையாவது காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாம்.

இதன்பொருள்---

      சோமேசா!

     இல் இறப்பான் கண் --- பிறன் மனைவியினிடத்து நெறி கடந்து செல்வானிடத்து, ஏன்ற பகை பாவம் அச்சம் பழி என நான்கும் --- பொருந்திய பகை பாவம் அச்சம் பழி என்று இழித்துக் கூறப்படும் இந்நான்கு குற்றங்களும், இகவா ஆம் --- ஒருகாலும் விட்டு நீங்காவாம், 

      ஆன்ற எழில் --- மிக்க அழகுடைய, சீதையை வேட்டு --- சீராமன் மனைவியாகிய சீதாபிராட்டியாரை விரும்பி, ஐந்நான்கு திண் கரத்தான் --- வலிய இருபது தோள்களை உடைய இராவணன், தோன்று பழி --- அன்று தோன்றிய பழியினின்று, மாறிலன் ஏ --- இன்றளவும் நீங்கினானில்லையே ஆகலான் என்றவாறு.

         எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம்.

         ரகுகுல உத்தமனான இராமபிரான் தனது சிற்றன்னையாகிய கைகேசி செய்த சூழ்வினையால் நாடு இழந்து, காடு அடைந்து நின்ற நிலையில், இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை என்னும் அரக்கி, சீதையை இராமனில் பிரிக்க எண்ணி, தன் தமையனாகிய இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்க, அவ் வருணனை கேட்ட இராவணன் சீதைபால் மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதாராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து தன் மாமனாகிய மாரீசனைப் பொன்மானாகப் போக்கி, இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்து, இலங்கைக்கண் அசோகவனத்தில் சிறை வைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்க, இராமபிரான் சுக்கிரீவன் நட்புப் பெற்று அனுமானை நாடவிட்டுச் சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்து, வானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்து, முடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு இலக்காக்கினான்.
                                            
     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
பார்க்கவனார் பன்னிஅத்தம் பற்றிஅலி ஆயினான்முன்
மூர்க்கனாம் தண்டன், முருகேசா! - வேர்க்கும்
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.

இதன் பதவுரை ---

         முருகேசா - முருகப் பெருமானே,

     முன் --- முன்னாளிலே, மூர்க்கனாம் தண்டன் --- மூர்க்கத் தன்மை உடையவனாகிய தண்டன் என்னும் அரசன், பார்க்கவனார் பன்னி அத்தம் பற்றி --- பார்க்கவ முனிவருடைய மனைவியின் கையைப் பற்றி இழுத்து, அலி ஆயினன் --- ஆணும் பெண்ணும் அல்லாத தன்மையை அடைந்தான். வேர்க்கும் --- வருத்தத்தை உண்டாக்குகிற, பகை பாவம் பழி அச்சம் என நான்கும் --- பகை பாவம் பழி அச்சம் என்று சொல்லப் பெறுகிற நான்கும், இன் இறப்பான்கண் --- பிறன் மனைவியிடத்திலே நெறிகடந்து நடப்பவன் இடத்திலே, இகவாவாம் --- விட்டு நீங்கமாட்டாவாம்.

         முன்னாளிலே தண்டன் என்னும் அரசன் பார்க்கவ முனிவருடைய மனைவி கையைப் பிடித்து இழுத்து, அம்முனிவருடைய தீமொழியினாலே ஆணும் பெண்ணும் அல்லாத அலித்தன்மையினை அடைந்தனன். பகை பாவம் பழி அச்சம் என்னும் நான்கும் பிறன் மனைவியிடத்திலே தீமை புரிவோனை விட்டு நீங்கமாட்டா என்பதாம்.

     பன்னி --- மனைவி.  அத்தம் --- கை.  இறத்தல் --- நெறிகடந்து நடத்தல்.

                                             தண்டன் கதை

         முன்னாளிலே தொண்டை நாட்டை தண்டன் என்னும் அரசன் அரசாட்சி செய்துகொண்டு இருந்தான். அவன் வேட்டை ஆடுதற்கு ஒருநாள் காட்டிற்குச் சென்றான். நீர்வேட்கையால் மெலிந்து பார்க்கவ முனிவருடைய இருப்பிடத்திற்குச் சென்றான். முனிவருடைய மனைவி, அரசனுடைய நீர்வேட்கையை உணர்ந்து தண்ணீர் கொடுத்து அவனுடைய துன்பத்தைப் போக்கினாள். தண்டன் அவளுடைய அழகைப் பார்த்துக் காமவேட்கை கொண்டான். அவளுடைய கையை வலிந்து பற்றினான். இச்செய்தியை உணர்ந்த பார்க்கவமுனிவர் தண்டன் அலியாகுமாறு தீமொழி புகன்றார். அரசன் தண்டனும் ஆணும் பெண்ணும் அல்லாத அலித்தன்மையை அடைந்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானான்.  தம்டனிடத்தில் பகை பாவம் பழி அச்சம் என்னும் நான்கும் என்றும் நீங்காதனவாய் நிலைபெறல் ஆயின.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.        ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     அச்சம் பெரிதால் --- உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் --- அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவே ஆதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் --- நாடோறும் நினைக்குமிடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை ஆதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் --- நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாணுடையார் --- பழிபாவங்கட்கு அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமல் இருப்பாராக !

         பிறன் மனைவியை விரும்பி ஓழுகுவார்க்கு எந்நாளும் இருமையிலும் துன்பமே ஆகும்.

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா, - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.      --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் --- புண்ணியம், புகழ், தக்கார் நேயம், ஆண்மை என இந் நான்கும்; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா --- பிறன் மனைவியை விரும்புவாரிடத்தில் சேரமாட்டா; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் --- பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் --- பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.

         பிறன் மனைவியை விரும்புவார்க்குப் புண்ணியமும் புகழும் தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா.

புக்க இடத்து அச்சம், போதரும் போது அச்சம்,
துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம்,
எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     புக்க இடத்து அச்சம் --- புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் --- திரும்பி வரும்போது அச்சம் ; துய்க்கும் இடத்து அச்சம் --- இன்பம் நுகரும்போது அச்சம்; தோன்றாமல் காப்பு அச்சம் --- பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் --- இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும்; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் --- ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதல்?

         பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதலில் முழுதும் அச்சமே அல்லாமல் இன்பம் இல்லையே.


காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;
ஆண்இன்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.   --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     காணின் குடிப்பழியாம் --- பிறர் கண்டு விட்டால் குடிக்குப் பழிப்பாம்; கையுறின் கால் குறையும் --- கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் --- ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் --- நெடுங்கால் நரகத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி --- தீயொழுக்கம் உடையவனே!;     நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு --- நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.

         பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலும் இன்றி இன்பம் சிறிதும் இல்லை.


"ஓவியம் அமைந்தநகர் தீ உண உளைந்தாய்,
கோஇயல் அழிந்தது என, வேறொரு குலத்தோன்
தேவியை நயந்துசிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ?".
                                             --கம்பராமா. யுத்த. மந்திரப்படலம்,

இதன் பதவுரை ---

     கோ இயல் அழிந்தது என --- நமது ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த  நகர் --- சித்திரங்களால்  அலங்கரிக்கப்பட்ட இலங்கை  மாநகரத்தை;  தீ உண உளைந்தாய் --- (அனுமன்  வைத்த) தீ உண்டமைக்கு மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் --- அரக்கர் இனம் அல்லாத வேறு ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய; தேவியை  நயந்து ---  மனைவியான சீதையை விரும்பி; சிறை வைத்த செயல் நன்றோ --- (கவர்ந்து வந்து) சிறையில் வைத்த  உனது   செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி  --- பாவம் செய்தவர்   அடையும் பழிகளிலே;   இதின்  பழியும் உண்டோ ---  இதை விடவும் கொடிய பழி வேறு  உள்ளதோ?

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன்றே யயினு மாக - சிறுவரையும்
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். --- நீதிநெறி விளக்கம்.             

இதன் பதவுரை ---

     பிறன்வரை நின்றாள் --- பிறனது எல்லைக்கண் நின்றவள்; பிறன்மனைவி;  (“பிறன்வரையாள்” (குறள். 150) என்றார் திருவள்ளுவரும்). கடைத்தலைச் சேறல் --- அவளது இன்பத்தை விரும்பி அவள் வீட்டு வாயிலிடத்தே சென்று நிற்றலை. சிறுவரையும் --- சிறிது பொழுதாயினும். நல் நலத்தது --- நல்ல இன்பத்தைத் தருவது. நலம் அன்று --- இன்பம் அன்று. அது மெய்ந் நடுங்க மனம் நடுங்க வருவதோரு நோயாகும்.

          பிறர் மனை நயப்பவர் அறம் அல்லாததைச் செய்தவராவதோடு எப்போதும் அச்சத்தை அடைதலால், தாம் கருதிய இன்பமும் பெறாதவர் ஆவர் என்பது கருத்து.


கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவபட் டார்.       

இதன் பதவுரை ---

     காமம் கதுவப்பட்டார் --- காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் --- கொலை புரியப் பயப்படார், பொய் நாணார் --- பொய் சொல்லக் கூசார், மானமும் ஓம்பார் --- தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ --- களவு செய்தலொன்றோ ! (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இஃது ---  இந்தக் காமம், பழியொடு பாவம் என்னார் --- பழியொடு பாவமாம் என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்) பிறிது என் செய்யார் --- வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளுஞ் செய்வார்.


இன்பமோ சிறிது ஆகும், இதில்வரும்
துன்பமோ கரை இல்லாத் தொடுகடல்
என்பது, ரும் இவனால் அறிய, இவ்
வன்பது அன வினையால் வருந்துவான். --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

இதன் பதவுரை ---

     இன்பமோ சிறிது ஆகும் --- (காமத்தால் வரும்) இன்பமே
அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரை இல்லாத் தொடு கடல் --- இதனால் விளையுந் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது --- என்னும் உண்மையை, ஆரும் இவனால் அறிய --- யாவரும் இப்பாவியினால் அறிந்து கொள்ள, இவ்வன்பது ஆனவினையால் வருந்துவான் --- இக் கொடுமையான தீவினையால் வருந்துவானாயினன்.

மையல் நாகம் மதியை விழுங்க, அக்
கையன் ஆயைக் கலந்து ஒழுகுஞ் செயல்
ஐயன் தான் குறிப்பால் கண்டு, யல்செவிக்கு
உய்ய லாவண்ணம் உள்ளத்து அடக்கினான். 
                                              --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

இத்ன பதவுரை ---

     மையல் நாகம் மதியை விழுங்க --- காம மயக்கமாகிய இராகுவானது அறிவாகிய மதியை விழுங்கலால், அக் கையன் ஆயைக் கலந்து ஒழுகும் செயல் --- அந்தக் கீழ்மகன் தாயைக் கூடியொழுகுஞ் செயலினை, ஐயன் குறிப்பால் கண்டு --- அவன் தந்தையானவன் குறிப்பாலறிந்து, அயல் செவிக்கு உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான் --- பிறர் செவிக்குச் செல்லாவாறு அதனை மனத்தின்கண் அடக்கியொழுகினான்.


வேற்றோர் வைகல் வெளிப்படக் கண்டு, அறம்
சாற்று நாவினன் வேறு ஒன்றும் சாற்றிலன்,
சீற்றம் மேல்கொடு செல்வன் கொல்வேன் என
ஏற்று எழுந்தனன், ஈன்றாள் விலக்குவாள்.
                                            --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

இதன் பதவுரை ---

     வேறு ஓர் வைகல் --- மற்றொரு நாளில், வெளிப்படக் கண்டு --- புலப்படக் கண்டு, அறம் சாற்றும் நாவினன் --- அறநெறியைக் கூறும் நாவினையுடையனாய், வேறு ஒன்றும் சாற்றிலன் --- பிறிதொன்றும் கூறானாயினன்; (அங்ஙனமாகவும்), செல்வன் --- அவன் புதல்வன், சீற்றம் மேல்கொடு --- சினத்தை மேற்கொண்டு, கொல்வேன் என ஏற்று எழுந்தனன் --- அவனைக் கொல்வேனென்று எதிர்ந்து எழுந்தான் ஈன்றாள் விலக்குவாள் --- பெற்றவள் விலக்குவாளாய்.

     அறம் கூறியது அன்றி, அவனை இகழ்ந்து உரைத்திலன் என்க.

தாயில் இன்பம் நுகர்ந்தனை, தந்தையைக்
காயில் என்பெறுவாய் எனக் காமுகர்க்கு
ஆயில் அன்னையில் அப்பனில் என்பயன்,
ஏயில் இன்னருள் என்?, அறம் என்? என்றான்.
                                           --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

இதன் பதவுரை ---

     தாயில் இன்பம் நுகர்ந்தனை --- தாயினிடத்துக் காம இன்பத்தினை நுகர்ந்தாய், தந்தையைக் காயில் என் பெறுவாய் என --- (இன்னும்) தந்தையைக் கொன்றனை ஆயின் என்ன பயனை அடைவாயோ என்று கூற, காமுகர்க்கு --- காமுகர்களுக்கு, ஆயில் --- ஆராய்ந்து பார்க்கில், அன்னையில் அப்பனில் என் பயன் --- தாயாலும் தந்தையாலும் என்ன பயன், இன் அருள் ஏயில் என் அறம் (ஏயில்) என் என்றான் --- இனிய அருளைப் பொருந்தில் என்ன பயன்? அறத்தைப் பொருந்தில் என்ன பயன்? என்றனன்.


மண் தொடும் கருவிப் படை வன்கையில்
கொண்டு, தாதை குரவன் என்று ஓர்கிலான்,
துண்ட மாகத் துணித்தனன் ஆய்முகத்து
உண்ட காம நறவால் உணர்விலான்.
                                       --- தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.

இதன் பதவுரை ---

     மண் தொடும் கருவிப் படை வன் கையில் கொண்டு --- மண் வெட்டுங் கருவியாகிய படையினைத் தனது வலிய கையிலேந்தி, தாதை குரவன் என்று ஓர்கிலான் --- தன் தந்தையை ஐங்குரவருள் ஒருவனென்று அறியாதவனாய், ஆய் முகத்து உண்ட காம நறவால் உணர்வு இலான் --- தாயினிடத்துப் புணர்ந்து நுகர்ந்த காமமாகிய கள்ளினால் அறிவிழந்த பாவி, துண்டமாகத் துணித்தனன் --- (அவனைத்) துண்டு பட வெட்டினான்.

     மண்டொடுங் கருவி --- மண் வெட்டி. கருவிப்படை : வன்கை - கொலை செய்யுங் கை.

ஐங்குரவர் இவர் என்பதனையும், அவரை வழிபட வேண்டும் என்பதனையும்,

"அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி"

என்னும் ஆசாரக்கோவையால் உணர்க.


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...