011. செய்ந்நன்றி அறிதல் - 01. செய்யாமல் செய்த





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "தனக்கு ஒருவர் ஒர் உதவியும் செய்யாது இருக்க, தான் பிறருக்குச் செய்த உதவிக்கு, இந்த மண்ணுலகத்தையும், அந்த விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் அது, அந்த உதவிக்கு ஈடு ஆகாது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....
  
செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செய்யாமல் செய்த உதவிக்கு --- தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு;

     வையகமும், வானகமும் ஆற்றல் அரிது --- மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது.
        
      (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாதரி என்னும் பெரியார் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரியபுராணத்துள் வரும் கணநாத நாயனாரின் வரலாற்றை வைத்துப் பாடியுள்ள பாடல்...

நாட்டில்அடி யாரைஎல்லாம் நாதன் பணிவிடையே
காட்டிவாழ் வித்தார் கணநாதர் - வேட்டுஇவர்தாம்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

         சோழமண்டலத்திலே சீர்காழியிலே அந்தணர் குலத்திலே கணநாத நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருத்தோணியப்பருக்கு மிகுந்த அன்பினோடு நாள்தோறும் திருப்பணிகள் செய்பவர். தம்மை விரும்பி வந்து அடைபவர்களைத் திருநந்தனவனம் வைத்தல், பூக்கொய்தல், திருமாலை கட்டல், திருமஞ்சனம் எடுத்தல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கு ஏற்றல், திருமுறை எழுதுதல், திருமுறை வாசித்தல் முதலாகிய திருத்தொண்டுகளுள் அவரவருக்கு ஏற்ற திருத்தொண்டுகளிலே பயில்வித்து அவர்களைச் சிவனடியார்கள் ஆக்குவார். இல்லறத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சைவசமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளைத் தினந்தோறும் முப்போதும் பேரன்போடு விதிப்படி பூசைசெய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கயிலாயமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

     தன்னை யாடி வந்தவர்கள் எல்லோரும் இதற்கு முன்னர் தனக்கு உதவியவர் தானா என்றும் பாராமல், நாட் வந்தவரை எல்லாம் நன்னெறியில் பயிற்றுவித்து, அவர்களைச் சிறந்த சிவனடியார்களாக, கணநாத நாயனார் செய்த பணிக்கு இந்த மண்ணுலகமும், அந்த விண்ணுலகமும் ஈடாகாது.

         தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது என்றார் திருவள்ளுவ நாயனார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதி சூடாமணி என்று வழங்கப்படும் "இரங்கேச வெண்பா" என்னும் நாலில் இருந்து ஒரு பாடல்...

நாடிச் சிறைக்கருடன் நாகக் கொடுங்கணையை
ஈடழித்தான் அன்றோ? இரங்கேசா! - நடுங்கால்
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

     சிறைக் கருடன் --- சிறகுகளை உடைய கருடன், நாடி --- (சீராமபிரான் தன்னை நினைத்ததை) ஆராய்ந்து, நாகக் கொடும் கணையை --- (இந்திரசித்தன் விட்ட) நாகபாசமாகிய கொடிய பாணத்தை, ஈடழித்தான் அன்றோ --- சின்னபின்னப் படுத்தினான் அல்லவா, (ஆகையால், இது) நாடுங்கால் --- ஆராயுமிடத்தில், செய்யாமல் செய்த உதவிக்கு --- நாம் ஓர் உபகாரமும் செய்யாமலிருக்க, ஒருவர் சமயத்தில் நமக்குச் செய்த உபகாரத்திற்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது --- இந்தப் பூலோகத்தையும் தெய்வ லோகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் போதாது (என்பதை விளக்குகின்றது).

      கருத்துரை --- நன்றி மறப்பது நன்று அன்று.

      விளக்கவுரை --- சீதா பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்றதனால், அவ் அம்மையாரை மீட்க, இராமபிரான் அவனோடு போர் செய்ய நேரிட்டது. இந்தப் போரில் இராவணன் மகன் இந்திரஜித்தன் என்பவன் நாகபாசத்தை விட்டு இளையபெருமாளையும் பிறரையும் மூர்ச்சை ஆக்கினான். அது கண்டு வருந்திய தாசரதி, கருட பகவானை நினைத்தார். அவர் நமக்கு என்ன என்று இருந்துவிடாமல், உடனே போர்க்களத்துக்கு வந்து ஆகாயத்தில் பறந்து திரிந்தார். அவருடைய சிறையடிக் காற்றால் நாகபாசத்தின் வேகம் அடங்கிச் சின்னபின்னப்பட்டுப் போயிற்று. இளையபெருமாள் முதலியோர் தூங்கி விழித்தவர்கள் போல் எழுந்து, பிறகு பெரும்போர் செய்து இராவணன் முதலியோரைக் கொன்று விளங்கினார்கள்.

     கருடபகவான் சீராமபிரானுக்குச் செய்த இந்த உதவியே செய்யாமல் செய்த உதவியாகும்.

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

பூடணம்போல் வீடணன்மேல் போனவே லேற்றநன்றி
தேடமுடி யாதே, சிவசிவா! - நாடினெதிர்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

         இராவணன் தன் தம்பியாகிய விபீடணன் மேல் விடுத்த வேல் எப்படிப்பட்டது என்றால்,  மயன் என்பவன் கொடுத்தது, விளங்குகின்ற வேள்வித் தீயில் நான்முகன் படைத்தது, திருமாலின் சக்கரப்படையையும், இந்திரனின் வச்சிரப் படையையும் நிகர்த்தது, மாற்றாரின் வெற்றியை மாற்றுவது, ஊழிக் காலத்தில் தோன்றும் தீயினுக்கு நிகரானது, செலுத்திய அளவில் ஒருவனை அழித்தே திரும்புவது, அது மேலே பட்டபோது படப்பெற்றவன் நான்முகனே ஆயினும் அவனையும் அழிக்கவல்லது. அந்த வேலை இராவணன் வணங்கி, தன் எதிரே போர்க்களத்தில் நின்ற தன் தம்பியாகிய விபீடணன் மேல் ஏவினான். அது தன் உயிரைப் போக்கியே தீரும் என்பதை உணர்ந்து அஞ்சிய விபீடணனை நோக்கி, "அஞ்சவேண்டாம், தடுக்கும் வழி அறிந்து போக்குவேன்" என்றான் இலக்குமணன்.

         "அடைக்கலமாக அடைந்த விபீடணனைக் காத்தல் காரணமாக என் உயிர் நீங்குமானாலும், அடைக்கலத்தைக் காத்த புகழ் நிலைத்திருக்கும். மேல் உலகத்திலும் அந்த அறம் என்னைத் தொடர்ந்து வரும். நல்லவர்கள் என் செயலைக் கண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பர். என் ஒப்பில்லாத மார்பில் அந்த வேலை ஏற்றுக் கொள்வேன்" என்று  இலக்குமணன் அந்த வேலுக்கு முன்னே நின்றான்.

         இலக்குவனுக்கு முன்பு விபீடணன், இராவணன் வீசிய வேலைத் தான் ஏற்கச் செல்ல முனைந்தான். அவ் இருவரையும் விலக்கி அங்கதன் முன் செல்கின்றான். அம் மூவரையும் விலக்கி, சுக்கிரீவன் முன் செல்கின்றான். சுக்கிரீவனையும் விலக்கி அனுமன் விரந்து செல்கின்றான். இலக்குவன் காற்றினும் கடியச் சென்று எல்லாரையும் விலக்கி, "நீங்கள் விலகுங்கள். நான் இதனை விலக்குகிறேன்" என்று சொல்லி தேவர்கள் எல்லாம் கண் புடைத்து அழும்படியாக, அந்த வேலைத் தன் முதுகில் ஊடுவிச் செல்லுமாறு மார்பில் ஏற்றான்.

         "அடைக்கலமாகத் தேடி அடைந்த என் பொருட்டால் என் நாயகனின் இளவல், வேல் ஊடுருவிப் பாய வாடியுள்ளார். இனி உன்னை அழித்து நானும் உயிர் துறப்பேன்" என்று விபீடணன் சினந்து இராவணனோடு பேரிட்டான்.

     பின் வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

உதவாமல் ஒருவன் செய்த
     உதவிக்குக் கைம்மா றாக
மதயானை அனைய மைந்த!
     மற்றுமுண் டாக அற்றே
சிதையாத செருவி லன்னான்
     முன்சென்று செறுநர் மார்பில்
உதையானேல் உதையுண்டு) ஆவி
     உலவானேல் உலகின் மன்னோ?" --- கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம்.

இதன் பதவுரை ---

     மதயானை அனைய மைந்த --- மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! உதவாமல் ஒருவன் செய்த --- (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த;  உதவிக்குக் கைம்மாறு ஆக --- உதவிக்கு மறு உதவியாக; சிதையாத செருவில் --- கெடுதல் இல்லாத போரில்; அன்னான்முன் சென்று --- (அவனுக்குத் துணையாக) முன்னே சென்று; செறுநர் மார்பில் --- (அவனுடைய) பகைவர்களின் மார்பில்; உதையானேல் --- படைக்கலங்களைச் செலுத்தவில்லை என்றால்; உதையுண்டு --- (அப் பகைவரின் படைக்கருவிகளால் தான்) அடிபட்டு; ஆவி உலவானேல் --- உயிரைப் போக்கவில்லை என்றால்; உலகில் மற்றும் --- உலகத்தில் வேறு கைம்மாறு; உண்டாகவற்றோ --- என்ன உள்ளது? (இல்லை).

     உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரை அழிக்கவேண்டும். அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால் அப்பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்.  இவை ஒருவாறு ஈடாகலாம்.  இவை அல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது வேறு என்ன உள்ளது? ஒப்புமை: 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' (குறள்:101) உதைத்தல்: அம்பைச் செலுத்துதல்.
    

'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும் - தன்மையோய்! --- கம்பராமாயணம், மீட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     தன்மையோய்! --- சிறந்த பண்புகளை உடையவனே!;  உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் --- நீ செய்த உதவிக்குக் கைம்மாறாக முன்று உலகங்களையும் உதவலாம் என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை
அறிந்தேன்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனன் --- அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும் --- உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.

     அனுமன் அசோகவனம் சென்று, சீதாபிராட்டியைத் தொழுது சோபனம் பாடி, இராமபிரானால் இராவணன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறுகின்றான். செய்திகேட்டு பிராட்டியின் உடம்பு மகிழ்ச்சியால் பூரிக்கின்றது. களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டி இருந்தாள், ‘ஒன்றும் பேசாதது ஏன்? ‘என அனுமன் வினவுதலும், பிராட்டியின் மறுமொழியாக மேற்குறித்த பாடல் எழுந்தது.

   'தொழவே தகும்'' என்னும் பாடம் சிறப்புடையது - 'தொழவும் தகும்' என்பதனுள் உம்மை பொருட்சிறப்பின்று ஆதலின். உலகம் அழிந்த பின்னும் நிலைத்து நிற்கும் பேருதவிக்கு அழிந்து போகும் 'நிலையிலா உலகங்கள் ஈடாகாமை நினைந்தாள் ஆயிற்று.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...