012. நடுவு நிலைமை - 05. கேடும் பெருக்கமும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "தீவினையினால் பொருள் முதலியன கெடுதலும், நல்வினையானால் அவை பெருகுதலும், இந்த உலகத்தில் இல்லாதவை அல்ல. அவை முன்னமே அமைந்து கிடந்தவை. இதனை அறிந்து, கேடு, பெருக்கம் காரணமாக மனமானது நடுவுநிலையில் திரியாமல் இருப்பதே அறிவால் நிறைந்த சான்றோர்க்கு அழகு" என்கின்றது.

     கேடும் பெருக்கமும் பழவினையினாலே வந்துகொண்டு இருக்க, அவை இப்போது செய்யும் முயற்சியால் வருவனவாக நினைத்து, கேடு வராமல் இருப்பதைக் குறித்தும், பெருக்கம் வருவது வேண்டியும் செய்யும் செயல்களில் நடுவுநிலையில் இருந்து பிறழக் கூடாது.

திருக்குறளைக் காண்போம்...

கேடும் பெருக்கமும் இல் அல்ல, நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு  அணி.
        
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கேடும் பெருக்கமும் இல் அல்ல --- தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன;

     நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி --- அவ்வாற்றை அறிந்து, அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.

       (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.)

     பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்.....

ஆக்கமும், கேடும், தாம் செய்
      அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார்,
      பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்று
      தருக்குறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும்,
      பாவத்தைப் பற்றலாமோ?     ---  கம்பராமாயணம், அரசியல் படலம்.

இதன் பதவுரை ---

     ஆக்கமும் கேடும் --- செல்வமும் அதன் அழிவும்; தாம் செய் --- அவ்வவ் உயிர்கள் செய்யும்; அறத்தோடு பாவம் ஆய --- புண்ணிய, பாவங்களால் அமைவன. போக்கி --- அக்காரணங்களை விடுத்து; வேறு உண்மை --- பிறிதொரு காரணம் இருப்பதை; பொரு அரும் புலமை நூலோர் தேறார் --- ஒப்பற்ற அரிய புலமையுடைய அறிஞர்கள் தெளிய மாட்டார்கள். தக்கோய் --- (ஆகவே) தகுதி வாய்ந்தவனே! ஒன்றோடு ஒன்று தாக்கின --- (அவ் அறமும் பாவமும்) ஒன்றோடொன்று மோதி; தருக்குறும் செருவில் --- செருக்கடைவதற்கான போரில்; பாக்கியம் அன்றி --- நன்மைக்குக் காரணமான நல்வினையைச் செய்வதன்றி; பாவத்தை என்றும் பற்றலாமோ --- தீமையைத் தரும் தீய காரியத்தை மேற்கொள்ளலாமோ?

     ஆக்கத்திற்குக் காரணம் அறம். அதன் அழிவிற்குக் காரணம் பாவம்.

     ஆகவே கடைப்பிடிப்பதற்குரியது அறம், விடுதற்குரியது பாவம் எனக் கூறப்பட்டது. 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...