015. பிறனில் விழையாமை - 10. அறன்வரையான்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "ஒருவன் அறச் செயல்கள் புரிவதைத் தனக்கு இயல்பாகக் கொள்ளாமல், பாவங்களைச் செய்வான் ஆயினும், பிறனுடைய மனைவியை விரும்பாது இருப்பானாயின், அது நன்மையைத் தரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் வரையான் அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் வரையான் அல்ல செயினும் --- ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்,

     பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.

      (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே ஆயினும் ஆக –  சிறுவரையும்
நன்னலத்து ஆயினும் கொள்க, நலம்அன்றே
மெய்நடுங்க உள்நடுங்கும் நோய்.  ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     பிறன் வரை நின்றாள் --- பிறன் வரம்பில் நிற்பவள் (அஃதாவது பிறன் மனைவி), கடைத் தலைச் சேறல் --- அவள் இருக்கும் தலைவாயிலினிடத்துச் செல்லல், அறன் அன்று --- நற்செயலாகாது, ஆயினும் ஆக -- (அவ்வாறு அறனாகாது) ஆயினுமாகுக. சிறுவரையும் --- (அச்செயலில்) நொடிப் பொழுதாயினும், நல் நலத்தது ஆயின் --- தூய  இன்பம் உடையதாயின், கொள்க --- அதனைக் கைக்கொள்க ; நலம் அன்றே --- (அச்செயலால் வருவது) இன்பம் அல்லவே; (ஆனால் வருவது என்னை எனின்), மெய் நடுங்க --- உடல் நடுங்க, உள் நடுங்கும் நோய் --- மனமும் நடுங்குவதற்குக் காரணமாகிய வருத்தமேயாகும்.

         (வி-ம்.) பிறன்மனை புகுவான் புகுங்கால் மெய்ந் நடுங்கி  உள்ளொடுங்கிச் செல்வானாதலால் "மெய்ந்நடுங்க உண்ணடுங்க நோய்" என்றார்.

புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்?                              (நாலடியார்)
                 
காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்;
ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட
இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு.       (நாலடியார்)

 என்பன இங்கு நினைவு கூரற்பாலன. 

2 comments:

  1. நேரிசை வெண்பா
    (’ன்’ ’ந்’ மெல்லின எதுகை)
    (’ய்’ இடையின ஆசு)

    பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
    அறனன்றே ஆயினு மாக - சிறுவரையும்
    நன்னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே
    மெ’ய்’ந்நடுங்க வுண்ணடுங்கு நோய் 76

    அருமையான நேரிசை வெண்பா ஆகும்.

    ReplyDelete
  2. நேரிசை வெண்பா
    (’ன்’ ’ந்’ மெல்லின எதுகை)
    (’ய்’ இடையின ஆசு)

    பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
    அறனன்றே ஆயினு மாக - சிறுவரையும்
    நன்னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே
    மெ’ய்’ந்நடுங்க வுண்ணடுங்கு நோய் 76

    அருமையான நேரிசை வெண்பா ஆகும்.

    ReplyDelete

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...