006. வாழ்க்கைத் துணைநலம் - 06. தற்காத்து




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்

     இந்த அதிகாரத்தின் ஆறாம் திருக்குறள், கற்பிலிருந்து தன்னை வழுவாமல் காத்து, தன்னைக் கொண்ட கணவனையும் உணவு முதலானவைகளால் உபசரித்து, இவளைக் கொள்ளுதற்கு இவன் என்ன தவம் செய்தானோ என்று கணவனையும், அவளது கற்பு உடைமையைக் கண்டு அவனது மனைவியையும் ஊரவர் புகழுமாறு வாழ்ந்து, முன்னே சொல்லப்பட்ட துறந்தவரை உபசரித்தலும், விருந்தினரை உண்பித்தலும், வறியார் மாட்டு அருள் உடைமையும் ஆகிய நற்குணங்கள் பொருந்தியவளாய், இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை அறிந்து காப்பாற்றி வைத்தலும், உணவுகளைச் சுவைப்பட்டச் சமைத்தலில் வல்லமையும், உபகாரம் செய்தலும், வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்தலும் ஆகிய நற்செய்கைகளையும் உடையவளாய் இருப்பவளை பெண் ஆவாள் என்கின்றது.

இனி, திருக்குறளைக் காண்போம்.....

தன்காத்து, தன்கொண்டான் பேணி, தகை சான்ற
சொல் காத்து, சோர்வு இலாள் பெண்.        

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் காத்துத் தன் கொண்டான் பேணி --- கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி;

     தகை சான்ற சொல் காத்து --- இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து;

     சோர்வு இலாள் பெண் --- மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.

      (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய எழுந்த நூல்களில் ஒன்றான, சிவசிவ வெண்பா என்னும் நூலில், சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் என்பார் பாடிய பாடல் வருமாறு....

சத்தியம்தப் பாமல்அரிச் சந்திரற்குச் சந்த்ரமதி
சித்தம்ஒரு மித்தாள் சிவசிவா - புத்தியுடன்
தன்காத்துத் தன்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்வுஇலாள் பெண்.              

இதன் பொருள் ---

     உண்மை நெறி மாறாமல் வாழவேண்டும் என்று விரதம் பூண்டு, அவ்வாறே வாழ்ந்து, தான் சந்தித்த எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்ட அரிச்சந்திரன் என்னும் பேரரசனின் சித்தம் இயைய வாழ்ந்தாள் அவன் மனைவியாகிய சந்திரமதி. இல்லறம் சிறப்பது வாழ்க்கைத் துணை என்னும் நலத்தால். சந்திரமதியால் தான் அரிச்சந்திரனின் வாழ்வு சிறப்புற்றது என்பது உலகறிந்த உண்மை.

வருவாய்க்குத் தக்க வழக்குஅறிந்து, சுற்றம்
வெருவாமை வீழ்ந்து,விருந்து ஓம்பித் - திருவாக்குந்
தெய்வத்தையும் எஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு. ---  நான்மணிக் கடிகை.

இதன் பதவுரை ---

     வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து - தம் கணவரது வரும்படிக்கு, - தகுதியாகிய, - வழங்குதலை (செலவை)த் தெரிந்து (செய்து), சுற்றம் பந்துக்கள், வெருவாமை வீழ்ந்து - (தங்கள் கோபச் சொல்லால்) பயந்தொதுங்காமல், - (அவர்களை) விரும்பி,
விருந்து ஓம்பி - விருந்தினரைப் பேணி திரு ஆக்கும் தெய்வத்தையும் - செல்வத்தை மென்மேலும் உயரச்செய்கின்ற தெய்வத்தையும்எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு --- எப்பொழுதும் தெளிவாகிய வணங்குதலைச் செய்வதே, - மாதர்க்குரிய சிறப்புகளாம்.

         பொழிப்புரை --- தமக்குள்ள வருவாயின் அளவு அறிந்து அதற்குத்தக்க செலவினை அறிந்து, சுற்றத்தை வெருவாமைத் தழுவி, விருந்து புரந்தந்து, திருவினை ஆக்கும் தெய்வத்தை வழிபாடு செய்க. இவ்வைந்து தொழிலும் பெண்டிர்க்குச் சிறப்பாவன.

         இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவின் அளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றம் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.


கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை--விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போ டுணர்வுடையாள் பெண். --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

கொண்டாள் குறிப்பு ஒழுகல் --- கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், கூறிய நாணுடைமை --- மகளிர்க்குக் கூறிய நாணினை உடைமையும், கண்டது கண்டு விழையாமை --- எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், விண்டு வெறுப்பன செய்யாமை --- கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையும் ஆகிய, (இவற்றை) வெஃகாமை - விரும்பாமையாகிய தீக்குணத்தினை, நீக்கி --- விலக்கி (அஃதாவது விரும்பி மேற்கொள்ளுதலோடு), உறுப்போடு உணர்வுடையாள் பெண் ---உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.


கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.          --- நாலடியார்

இதன் பதவுரை ---

கட்கு இனியாள் காதலன் காதல் வகை புனைவாள் --- பார்வைக்கு இனிய இயற்கையழகு உடையவளாய்த் தன் காதலன் விருப்பப்படி செயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும்,  உட்கு உடையாள் ஊர்நாண் இயல்பினாள் --- தனது கற்பொழுக்கச் சீரினால் கண்டார் எவரும் அஞ்சும் மதிப்பு உடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ள மகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின் திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்கு உரிய மாட்சிமையுடையாளும், உட்கு இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் --- தன் கணவன்பால் உள்மதிப்புக் கொண்டு செவ்வியறிந்து ஊடியும், அஃது இனிது ஆம்படி அவ்வூடல் நீங்கியும் இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடைய பெண்ணே, பெண் --- இல்வாழ்க்கைக்குரிய வாழ்க்கைத் துணையாவள்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...